ரோமானிய வணிகர்கள் அரபிக்கடலில் வீசும் பருவக்காற்றை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி கேரள துறைமுகங்களுக்கு வந்து சென்றனர். எகிப்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து முசிறிக்கு 45 நாட்கள் பயணம் செய்யவேண்டும். இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானது. பின் முசிறியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடக்க வேண்டும் வைகை ஆறு, மருதாநதி, மஞ்சளாறு ஆகிய மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்திலிருந்து ஒரு பர்லாங் தொலைவில் குன்னுவாராயன் கோட்டையில் (திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது)பாண்டிய மன்னர்களால் சுங்கச்சாவடி கட்டப்பட்டது. குன்னுவாராயன் கோட்டையிலிருந்து வடகிழக்கே சுமார் ஆறு கி.மீ தூரத்தில் வைகை ஆறு ஓடுகிறது. பருவமழை பெய்யும்போது, இந்த ஆறுகளில் நுரைகளுடன் ததும்பி வரும் தண்ணீர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வளமான வண்டல் மண்ணை கொண்டு வந்து இந்தப் பகுதியில் சேர்த்துள்ளன.
இந்த வளமான பகுதியில் தென்னந்தோப்புகள் நிறைந்த வயல்கள் இருந்துள்ளன. ரோமானிய வணிகர்கள் மன்னர்களுக்கு செலுத்த வேண்டிய ஆறு சதவீத வரியைச் செலுத்தி இந்தப் பகுதியில் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரோமானிய வணிகர்கள் உள்ளூர் வணிகர்களால் “யவனர்கள்” என்று அழைக்கப்பட்டுள்ளனர். (யவனர்கள் என்ற சொல்பொதுவாக அந்நியர்களைக் குறிக்கும்). பெரும்பாலும் யவனர் என்ற சொல் கிரேக்க, ரோமானியர்களையே குறிக்கிறது. ரோமானியர்கள் தமிழ்நாட்டிலிருந்து மிளகை எடுத்துச் சென்று ரோம் நாட்டிலிருந்து தங்கத்தை கொண்டு வந்துள்ளனர். பாண்டிய நாடு ஆராய்ச்சி மையத்தின் வரலாற்றாசிரியர் சி.சாந்தலிங்கம், ரோமானியர்களின் முதல் பயணம் கம்பம் கணவாய் வழியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்கிறார். (பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது) இந்தப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் மார்பளவு சீசர் அகஸ்டஸின் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளன.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலும் இதே போன்ற நாணயங்கள் கிடைத்துள்ளன. என்கிறார். ரோமானிய வியாபாரிகள் தாண்டிக்குடி வழியாக சென்றிருக்கலாம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது குன்னுவரன்கோட்டையில் உள்ள சுங்கச் சாவடியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. வியபாரிகள் இந்தப் பகுதியை தேர்ந்தெடுத்தற்குக் காரணம் இப்பகுதியில் விளையும் மிளகின் மீதிருந்த மோகம் தான். மிளகு பயிரிடுவதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை இப்பகுதியில் இருந்துள்ளது. இப்பகுதியில் வசித்தவர்களும் கூட தங்கள் தேவைக்குப் போக அதிகமாக கைவசம் உள்ள பொருட்களை விற்பதற்கான இடங்களைத் தேடியுள்ளனர். நாகரீகம் எப்போதும் ஆற்றங்கரையில் செழிக்க வேண்டும் என்பதில்லை என்பதற்கு தாண்டிக்குடி ஒரு உதாரணம். இப்பகுதி இரும்புக் காலத்திற்கு முன்பே ஒரு செழிப்பான வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளது. தாண்டிக்குடியில் மிளகு விளைச்சல் பரவலாக இருந்ததால் அப்பகுதியில் வர்த்தக இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இங்கிருந்து மதுரைக்கு விளைபொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, தொண்டி, ஆலங்குளம், விழிஞ்ஞம், கொற்கை துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. கல்வெட்டுகள் இந்த வியாபாரத்திற்கு ஆதாரங்களாக உள்ளன.
இத்தகைய வணிகப் போக்குவரத்தின் மற்றொரு பகுதியாக செங்கோட்டையும் இருந்துள்ளது என்கிறார் சாந்தலிங்கம். செங்கோட்டை கணவாய் வழியாக விலைமதிப்பற்ற கற்கள் வியாபாரிகளால் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்கிறார். எல்லா வழிகளும் மதுரையை நோக்கிச் சென்றன இந்த வழிகள் அனைத்தும் ஒரே இடத்தில் முடிந்தது மதுரை நகரின் வைகையாற்றின் தென்கரையில் பாண்டியர்களின் தலைநகரில் தான். தலைநகரம் தாமரை வடிவில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டியர்களின் தலைநகரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைச் சுற்றிக் கட்டப்பட்டது, இது கிபி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். தாமரையின் இதழ்கள் விரிவதைப் போல, பல்வேறு தெருக்கள், வணிகத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. கோவிலின் மையத்திலிருந்து நகைக்கடை வீதி, எழுத்தானிக்காரத் தெரு, சித்திரை வீதிகள் இருந்தன. வணிகர்களின் இதயமாக மதுரை இருந்துள்ளது.
ரோமிற்கு பாண்டிய மன்னரின் தூதுவன் சென்றுள்ளான். மதுரையில் ரோமானியர்களுக்கென தனிப்பகுதி இருந்துள்ளது. ரோமாபுரி வணிகம் சிறந்து விளங்கிய காலத்தில் அரிக்கமேட்டில் பண்டகச் சாலையொன்றும், விற்பனைச் சாலையொன்றும் நடைபெற்றுதையும், ரோமானிய மட்கலங்கள் இங்கு கிடைப்பதையும் அகழாய்வுகள் மெய்ப்பித்துள்ளன. ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழரின் வாணிகத்திற்காகச் செலவாகியுள்ளது. ‘யவனர்கள்’ தங்களுடைய பளபளப்பான மட்பாண்டங்களை கொண்டு வந்தனர். இது மன்னர்களால் மிகவும் விரும்பப்பட்டது. தங்கத்தையும் உடன் கொண்டு வந்தனர். சில வரலாற்றாசிரியர்கள் திராட்சையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.
பேராசிரியர் என்.அய்யநாதன், மதுரையின் பழங்கால மசாலா பாதை என்ற புத்தகத்தில், கிபி 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தென் பிராந்தியத்தில் வர்த்தக சங்கங்கள் நிறுவப்பட்டதாகக் கூறுகிறார். பண்டைய தமிழ்நாட்டின் பிரபலமான வணிகக் குழுக்கள் ஐநூற்றுவர், மணி இலக்கணத்தார், பதினெண் விசயத்தார் மற்றும் அஞ்சுவண்ணம். இவர்களுடன் வணிகர்கள் மட்டுமின்றி தங்கள் சொந்தப் படை வீரர்களுடன் கப்பல்களை வைத்திருப்பவர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். மிளகை உற்பத்தியாகும் இடத்திலிருந்தே வாங்க, 13-ஆம் நூற்றாண்டிலேயே தாண்டிக்குடியில் ஒரு வணிக மையம் நிறுவப்பட்டது. இப்பகுதியில் தோண்டப்பட்ட கல்வெட்டு வடிவில் உள்ள தொல்பொருள் சான்றுகள், இப்பகுதியில் இயங்கி வந்த சங்கம் பற்றிப் பேசுகிறது என்கிறார் சாந்தலிங்கம்.