சிங்கார வேலர் என்றொரு மானுடன் சிங்காரச் சென்னையில் ஓங்காரக் குரலெடுத்து உரத்து முழங்கினான். “மே தினம் வாழ்க! உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” 100 ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு மே முதல் நாள் உலக உழைப்பாளர் தினத்தில் செங்கொடி ஏற்றப்பட்டு கடல் அலைகளோடு போட்டி போட்டு இந்த முழக்கம் எழுந்தது. அது பெரும் கூட்டமல்ல; அதே நேரத்தில் வெறும் கூட்டமும் அல்ல; ஆளும் வர்க்கத்தை அதிர வைத்த கூட்டம் அது. அன்று மே தின கொண்டாட்டத்திற்காக இரண்டு இடங்களைத் தேர்ந்தெடுத்தார் சிங்காரவேலர். ஒன்று, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் இருந்த கடலோரத்து மணற்பரப்பு, அன்று துறைமுகம், ரயில் போக்குவரத்து போன்றவை அந்த இடத்தில் இல்லை, இப்போது அந்த இடம் முழுவதும் துறைமுகமாகிவிட்டது, இங்குதான் சிங்காரவேலர் கொடியேற்றி முழக்கமிட்டார், இரண்டாவது இடம், திருவல்லிக்கேணி கடற்கரை, அந்த இடத்தில் கிருஷ்ணசாமி சர்மா தலைமை தாங்கி செங்கொடியேற்றினார். அந்தக் கூட்டத்தில் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா இடியென முழங்கினார். இவர் வ.உ.சியோடு இணைந்து வேலை நிறுத்தங்களை நடத்தியவர்.
சிங்காரவேலர் கொடியேற்றி உரையாற்றிய போது. “இந்துஸ்தான் தொழிலாளர் – விவசாயிகள் கட்சி” என்ற அமைப்பை அறிவித்தார். மே தினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும், வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே தீர்மானம் திருவல்லிக்கேணி கடற்கரை மே தினக் கூட்டத்திலும் படித்து நிறைவேற்றப்பட்டது.
சிங்காரவேலரின் சிந்தனைத் தெளிவு
தொழிலாளர்களின் நலனையும், விவசாயிகளின் நலனையும் காப்பாற்ற தனிக்கட்சி அவசியம் என்ற தோலைநோக்குப் பார்வையை சிங்கார வேலரின் செயல் காட்டுகிறது. தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்துதான் சமூக மாற்றம் நிகழ்த்தப்படும் என்கிற மார்க்சிய வரையறையில் அவருக்கு இருந்த தெளிவையும் இது காட்டுகிறது.
எல்லாவற்றிலும் அவர் முதல்வர்
1886க்குப் பிறகு மேதினம் உலகம் முழுவதும் படிப்படியாக அனைத்து நாடுகளின் கொண்டாட்டமாகியது. இந்தியாவில் முதன் முதலில் மேதினத்தைக் கொண்டாடிய. அறிமுகப்படுத்திய சிவப்பு மனிதன் சிங்காரவேலர். சிங்காரவேலர் அலங்காரத் தலைவராக அல்லாமல் ஆக்ரோசத் தலைவராக செம்மாந்து நின்றார். களப் போராளியாக இறுதி மூச்சுவரை வாழ்ந்தார். பின்னி தொழிற்சாலை, சூளைமில், அலுமினிய தொழிற்சாலை, ரயில்வே தொழிலாளர், டிராம்வே தொழிலாளர், அச்சகத் தொழிலாளர், முறைசாராத் தொழிலாளர் என அத்தனைப் பிரிவு தொழிலாளர் பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் அவர் தொழிலாளர்களோடு களத்தில் நின்றார், தடியடிகளும், துப்பாக்கிச் சூடும் நடந்த இடங்களில் இருந்து அவர் தொழிலாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியுள்ளார். 1918இல் முதலில் பதிவு செய்யப்பட்ட நவீன தொழிற் சங்கம் சென்னையில்தான் அமைக்கப்பட்டது. “மெட்ராஸ் லேபர் யூனியன்” என்று பெயர் சூட்டப்பட்ட அந்த தொழிற்சங்கம்தான் முதல் தொழிற் சங்கம். இந்தியாவின் இந்த அமைப்பில் பங்கெடுத்த அன்னிபெசன்ட், வாடியா, செல்வபதி செட்டியார், ராமனுஜலு நாயுடு, திரு.வி.க போன்ற தலைவர்களோடு சேர்ந்து பணியாற்றிய முன்னோடி அவர். இந்தியாவில் கான்பூர் நகரில் நடந்த முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கும் அவர்தான் தலைமை தாங்கினார்.
தொழிலாளர்களோடு எல்லாப் போராட்டங்களிலும் அவர் நிற்கிறார் என்பதால் அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு மேல் முறையீட்டில் குறைக்கப்பட்டது. மகாகவி பாரதியார், மாபெரும் தேசப் போராட்ட வீரர், வ.உ.சி, திரு.வி.க போன்றவர்களுக்கு இவர் வழியாக கம்யூனிச சித்தாந்தமும் நூல்களும் சென்று சேர்ந்துள்ளன. அன்று வீடுகளில் இருந்த பெரிய நூலகங்களில் இவர் வீடு முதன்மையானது. அவர் சிறையில் இருந்தபோது புரட்சியாளர்கள் மூலம் மார்க்சிய மூலவர்களின் நூல்களோடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரை முழு புரட்சிக் காரனாக உருமாற்றியது. அவர் சமூகம், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றோடு அப்போதைய விஞ்ஞான நூல்களைப் பயின்றுள்ளார். எல்லா விதமான மூடப்பழக்கங்களுக்கும் எதிரான அவரது விவாத ஆற்றலை அது கூர்மைப்படுத்தியது.
அவருக்கும் ஜீவாவிற்கும் பெரியாரோடு இருந்த தொடர்பு மிக நெருக்கமானது. பெரியார் தனது நாத்திக எண்ணத்திற்கு வலுசேர்க்கிற ஏராளமான தரவுகளை சிங்காரவேலரிடமிருந்து பெற்றிருக்கிறார். பெரியாரின் குடியரசு இதழில் சிங்காரவேலர் தொடர்ந்து எழுதிய விஞ்ஞானக் கட்டுரைகள் எண்ணி எண்ணி போற்றத்தக்கன. 100 ஆண்டுகளுக்கு முன்பு பாமரனுக்கு தெரிய வேண்டும், அவன் அறிவு விரிவு பெறவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளின் முன்னோடி அவர்தான். அவர் காலத்தில் எல்லாவற்றிலும் அவர் “முதலாமவர்” என்பதாகவே இருந்திருக்கிறார். பெரியாருடைய முற்போக்குக் கருத்துக்கள், ஜாதி எதிர்ப்பு, மூடப்பழக்க எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, பிற்பட்டோர் ஒடுக்கப்பட்டோரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் இணைந்து நின்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோட்டுப் பாதை என்று அறியப்படும் திட்டத்தின் வரைவாளர் சிங்காரவேலர்தான். எனினும் தேசவிடுதலை பொருளாதார விடுதலை போன்றவற்றில் பெரியாரோடு அவர் மாறுபட்டார். அன்றைய சென்னை ராஜதானியில் உருவான சமூக பொருளாதார, கருத்தோட்டங்களிலும் எண்ணப் போக்குகளிலும் சிங்காரவேலரின் முத்திரை நீக்கமற நிறைந்திருந்தது. இடதுசாரி நிலையிலிருந்து, தொழிலாளி, விவசாயி, ஏழை எளியோர் முன்னேற்றத்திற்காக மார்க்சிய சித்தாந்த தெளிவோடு, சிதைக்க முடியாத நெஞ்சுரத்தோடு செயல்பட்டவர்தான் சிங்காரவேலர்.
மே தினத்தின் முதல் கொடியை ஏற்றும் போது அவருக்கு வயது 63. கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பாக முளைவிடத் தொடங்கியதும் அப்போதுதான். கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டின் முதல் தலைவரும் சிங்கார வேலர்தான். கான்பூர் செல்வதற்கு தடைவந்தால் மாட்டு வண்டி கட்டிக்கொண்டாவது கான்பூர் செல்வேன் என்று கூறிய கொள்கைக் குன்று அவர். அந்த முதியவயதில் அவரை கான்பூர் சதி வழக்கில் இணைத்து பிரிட்டிஷ் அரசு கைது செய்து கொடுமை புரிந்தது. இந்த வழக்கு அவரை உலகம் முழுவதும் அறிந்த கம்யூனிஸ்ட் ஆக்கியது. இந்தியாவில் தொழிலாளர் நிலை பற்றி லண்டனிலிருந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விபரங்கள் தந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வாதத்திற்கு துணை சேர்த்தவர் அவர். சக்லத்வாலா போன்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தொழிலாளர்களுக்கு பிரிட்டனில் உள்ள தொழிற்சங்க உரிமையும், சட்டங்களும் வேண்டும் என்று பேசினார்கள். 1926ஆம் ஆண்டு வந்த இந்திய தொழிற் சங்க சட்டத்திற்கு இங்கு நடந்த எண்ணற்ற போராட்டங்களுக்கும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டுகளின் முயற்சிக்கும், சிங்காரவேலருக்கு பெரும் பங்குண்டு. சிங்காரவேலரின் உலகப் பார்வை வியந்து போற்றத் தக்கது.
அவரும் கலந்து கொண்டு நடந்த அனைத்து தொழிலாளர் போராட்டங்களும் ஒடுக்கப்பட்டன. துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள், கொத்துக் கொத்தாக வேலை நீக்கங்கள், ஜாதி, மதப் பிரிவினைகளை முதலாளிகள் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு மத்தியிலும் அவர் தளராது நம்பிக்கையோடு தொழிலாளர்களுக்கு துணிவை ஊட்டினார். போராட்டங்களின் தோல்வி குறித்து பேசிவிட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் இன்னும் வலிமையோடு ஒற்றுமையாக போராடினால் வெற்றி பெற முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார், அங்குதான் அவர் வேறு பல தலைவர்களிடமிருந்து வேறுபட்டு ஒளிர்ந்தார். உலகத் தொழிலாளர்களோடு இந்தியத் தொழிலாளியை இணைத்து ஒருமைப்படுத்தும் வெளிப்பாடாக சிங்காரவேலர் ஏற்றிய முதல் மேதினக் கொடியின் செய்தி ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்பதுதான். ஜாதி, மத, தேச, இன, மொழி, நிற வேறு பாடுகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட ஒற்றுமையில் இடமில்லை என்ற செய்திதான் அது.
வர்க்கப் போராட்டம் ஓயாது
இன்று உலகமயம் என்று கூறி மூலதனம் மேற்கண்ட எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது. மூலதனத்திற்கும் சுரண்டலுக்கும் தேச வேறுபாடுகள் இல்லை. வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை. தொழிலாளர் இயக்கம் உலகமயமாக வேண்டும் என்ற முழக்கத்தை 1848ஆம் ஆண்டிலேயே தனது கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும் ஏங்கெல்சும் முழங்கினார்கள்.
வேலை நேரக் குறைப்பு போன்ற எந்தனையோ வெற்றிகளை தொழிலாளர்கள் பெற்றிருக்கிறார்கள். எனினும் மூலதனத்தின், கார்ப்பரேட்டுகளின், அவர்களுக்காக நிற்கிற அரசுகளின் சுரண்டல் முயற்சியும், அடக்குமுறை முயற்சிகளும் ஒரு புறம் தீவிரப்பட்டே வருகிறது. 8 மணி நேர வேலை கூட இல்லாத நிறுவனங்கள் ஏராளம். இவற்றை எதிர்த்துப் போராட்டங்களும் நடந்த வண்ணமுள்ளன. இந்த வர்க்கப் போராட்டம் சோசலிசம் மலரும் வரை ஓயாது. சோசலிசம் தானாக வந்து விடாது. தொழிலாளிகள் விவசாயிகளை அச்சாணியாகக் கொண்ட அரசியல் இயக்கம் அதை புரட்சியின் மூலம் வென்றெடுத்தாக வேண்டும். சிங்காரவேலர் என்றொரு மானுடன் தென்னிந்தியாவில் முதன் முதலில் சோசலிசக் கருத்தை விதைத்து அதற்காக உழைத்தார். உழைப்பாளர்களுக்கான முதல் அரசியல் கட்சியை தோற்றுவித்தார். முதல் மே தினக் கொடியை ஏற்றி உலகப் பார்வையை உழைப்பாளிக்குப் போதித்தார். அதற்கான நூற்றாண்டில் அவர் புகழ்போற்றுவோம்! அவர் வழி நடந்து சோசலிசத்தை அரியணையில் ஏற்றுவோம்!!