ஒடிசாவில் அண்மையில் நேரிட்ட கொடிய ரயில் விபத்து குறித்தும், இந்தப் பின்னணியில் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் வெளிப்பட்டுள்ள அக்கறை யற்ற தன்மை மற்றும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, ஒன்றிய மோடி அரசும், ரயில்வே நிர்வாகமும் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கடந்த 05.06.2023-ல் நியூஸ் கிளிக் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்:
நேர்காணல்: பிரக்யா சிங் (நியூஸ் கிளிக்) / தொகுப்பு & தமிழ் வடிவம்: கடம்பவன மன்னன்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற கோர ரயில் விபத்து சொல்லொணாத் துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் ரயில்வே துறைக்கான நாடா ளுமன்றக் குழுவில் பத்தாண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்துள்ள தாங்கள், இந்திய ரயில் வேயின் செயல்பாட்டோடு பின்னிப்பிணைந் துள்ள, அரசால் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சனையாக எதைக்கருதுகிறீர்கள்?
ரயில்வே என்றால் மிகமிக முக்கியமானதாக நாங்கள் கருதுவது ரயில் பயணிகளின் பாதுகாப்பு என்பதைத் தான். ஆனால், கடந்த பல ஆண்டு களாகவே பாதுகாப்பு பற்றிய அம்சங்கள் கண்டு கொள்ளப்படாமல், புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. ரயில்வே தனியார்மயம் குறித்தான பேச்சுகள் எழத் தொடங்கியவுடனேயே இத்தகைய அலட்சியப் போக்கு துளிர்விட ஆரம்பித்துவிட்டது. இந்தியா என்கிற இந்த மிகப்பெரிய நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருப்பதில் ரயில்வேக்கு முக்கியமான பங்கு உண்டு. தேசத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையிலுள்ள மக்களோடு தொடர்பை ஏற்படுத்தித் தருவதில் ரயில்வேயும், தபால் துறையும் ஆற்றி வருகிற பணி மகத்தானது. ஆனால், அதன் செயல்பாட்டில் அரசு காட்டி வரும் மெத்தனம் காரணமாக ஏராள மான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஒடிசா விபத்தைப் பற்றிப் பேசும்போது, ரயில்வே யில் கேங்மென் தொழிலாளர்கள் செய்துவரும் வேலையைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ரயில் வழித்தடங்களில் பகலிலும், இரவிலும் நெடுந்தொலைவு பயணித்து, ஒவ்வொரு ரயிலும் கடந்து சென்ற பிறகு, ரயில் டிராக்குகளைப் பரிசோதி த்து, சின்னஞ்சிறு பழுதையும் சரிசெய்திடும் கேங்மென் தொழிலாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், நாட்டின் எல்லா கோட்டங்களிலும் கேங்மென் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. செலவினத்தைக் காரணம் காட்டி புதிய ஊழியர் பணி நியமனம் மறுக்கப்படுவதோடு, குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பல மணி நேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய போக்கினால் ரயில்வே துறையின் ஒட்டு மொத்த செயல் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை அரசு உணர மறுக்கிறது.
இந்திய ரயில்வே துறையின் சார்பில், ரயில் பயண பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் நோக்கோடு 2017-ம் ஆண்டில் சிறப்பு பணிக்குழு (Task Force) நாடு முழுவதும் அமைக்கப்பட்டது. அந்த ஆண்டி லிருந்தே இந்தக் குழுவின் ஆய்வறிக்கைகள் சமூக ஊட கத்தில், பொது வெளியில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கைகளை வாசித்தோமானால், ரயில் பாது காப்பு அம்சங்களில் நிறைய குறைபாடுகள் இருந்து வருவதையும், பழுதடைந்த சிக்னல் கருவிகள் உட னுக்குடன் மாற்றப்படாமல் தற்காலிக ஏற்பாடுகள் மட்டும் செய்யப்பட்டு வருவது குறித்தும் அந்தக் குழு தொடர்ந்து எச்சரித்து வந்திருப்பதையும் உணரலாம். ரயில் தடங்கள் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள சிறப்புப் பணிக் குழு, இவையனைத்தும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்றும் நிர்வாகத்தை வற்புறுத்தியுள்ளது. ஆனால் பணிக்குழுவின் பரிந்துரைகள் கண்டு கொள்ளப்படவே இல்லை. பாதுகாப்பு குறித்த அலட்சி யப் போக்கே விபத்துகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீன கருவிகள் வழங்குவது, சிக்னல் முறைமைகளை பலப்படுத்துவது உள்பட பாதுகாப்பு தொடர்பான செல வினத்திற்கு நிதி ஒதுக்கீடு சென்ற 2022-ம் வருட பட்ஜெட்டில் 14 சதவீதம் குறைக்கப்பட்டது என்பதி லிருந்தே அரசின் முன்னுரிமைப் பட்டியலில் ரயில் பயணி களின் பாதுகாப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் ரயில்வே துறையின் நடைமுறைச் செலவுகளுக்கென்று கணிசமான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறதே, அந்தத் தொகையெல்லாம் எங்கே போகிறது? ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
எதற்குப் பயன்படுகிறது என்பதைவிட, ரயில்வே யின் எந்தெந்த பிரிவுகளுக்கு உண்மையான தேவை இருக்கிறதோ, அவற்றுக்குப் பயன்படுத்தப்பட வில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். பாது காப்பு உபகரணங்களை அதிகரிப்பது, ரயில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து நிலைகளிலும் புதிய ஊழியர்களைப் பணியமர்த்துவது, தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவாக்குவது ஆகிய அம்சங்களுக்குப் போதிய நிதி விடுவிக்கப்படுவது கிடையாது. ஆனால் அரசின் விழாக்களுக்கும், விளம்பரங்களுக்கும் கணிசமான தொகை செல விடப்படுகிறது. சிறிய, உள்ளூர் அளவிலான நிகழ்ச்சி கள் கூட, பெரிய விழாக்களாக மாற்றப்படுகின்றன. பெரும் பொருட்செலவில் புதிய ரயில்களுக்குக் கொடி யசைத்துத் துவக்க விழா நடத்துவதில் காட்டப்படும் அக்கறை, கோடானுகோடி ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு செலுத்தப்படுவதில்லை.
நாட்டின் பல பகுதிகளிலும் அதிவேக விரைவு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனவே. இவை யெல்லாம் பயணிகள் நலன் கருதித் தானே?
புதிய ரயில்கள் துவக்கம் என்பதைவிட, ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் ரயில்களின் வேகத்தை மட்டும் சற்று அதிகரித்து, கூடுதல் கட்டணத்துடன் அதிவேக சிறப்பு ரயில்களாக (High Speed Superfast Express) இயக்கப்படுகின்றன. இவை தவிர புல்லட் ரயில்களும் புழக்கத்திற்கு வந்துள்ளன. ஆனால் மிக அதிகமான வேகத்துடன் இயக்கப்படும் இந்த ரயில் களைத் தாங்கி நிற்கும் அளவுக்கு வல்லமை, நமது ரயில் தண்டவாளங்களுக்கு இருக்கிறதா என்பது தான் இன்று அடிப்படையான கேள்வியாக உள்ளது. தண்டவாளங்களைப் புதுப்பிப்பது, பராமரிப்புப் பணி களில் நவீன வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற வை பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்படவே இல்லை. மிகவும் அடிப்படையான இந்த அம்சத்தில் கவனம் செலுத்தாமல், புதிய அதிவேக ரயில்களை நிறைய இயக்குவதாகப் பெருமைப்பட்டுக் கொள்வதால் எவ்விதப் பயனுமில்லை.
ரயில்வேயில் ஊழியர் பற்றாக்குறை பெரு மளவில் இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறீர்கள். ஆனால் பொறியியல் பிரிவில் பல பணிகளுக்கு நவீன முறையில் தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்றும், அதனால் புதிய ஊழியர் களைப் பணியமர்த்த வேண்டிய தேவை எதுவும் எழவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் கூறி வருகிறதே?
ரயில்வேயில் 3,12,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகப் பல்வேறு தரவுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இவற்றில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான பொறியியல் பிரிவு பணிகள் மட்டுமே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானியங்கி சேவையாக வழங்க முடியும். சுமார் 2,90,000 பணியிடங்கள் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்ய வேண்டிய, உடலுழைப்பைக் கட்டா யம் செலுத்த வேண்டிய அடிப்படைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. கேங்மென் தொழிலாளர்கள் ஆற்றி வருகிற பணியின் முக்கியத்துவத்தை முன்னரே பார்த்தோம். ரயில் வண்டியின் வழித்தடத்தில் ஒரே யொரு போல்ட் சரியாகப் பொருத்தப்படாமல் இருந்தால் கூட, ரயில் தடம் புரளும் அபாயம் உள்ளது. இது போலத்தான் சிக்னல் கருவிகளைப் பொருத்து வது, அவற்றின் இயக்கத்தைக் கண்காணித்துச் சரி செய்வது உள்ளிட்ட பல வேலைகளுக்கும் ஊழியர் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து கூட சிக்னல் கோளாறி னால் தான் நேரிட்டிருக்கக் கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் சொல்லப்படுகிறது. பிரச்சனை என்ன வென்றால், நிரந்தரமாக ஊழியர்களை நியமிக்க வேண்டிய இத்தகைய பணிகள் அனைத்துக்கும் அவுட்சோர்சிங் முறையில் சமாளித்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசும், ரயில்வே நிர்வாகமும் தன்னிச்சையாகத் தீர்மானிக்கின்றன. இத்தகைய போக்கு ரயில்வேயின் செயல் திறனில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசும் நிர்வாகமும் ஒப்புக்கொள்ள மறுக்கின்றன.
ரயில் பெட்டிகளில் மிகவும் கூடுதலான எண்ணி க்கையில் மக்கள் பயணம் செய்வதும் இன்னொரு முக்கியமான பிரச்சனை. கோரமண்டல் எக்ஸ்பிர ஸில் கூட, விபத்து நேரிடுவதற்கு ஒருசில நிமிடங் களுக்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி யிலிருந்து ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கும், பொது மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் மின்னஞ் சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 72 பேர் முன்பதிவு செய்து அமர்ந்துள்ள கோச்சில் 200 பேர் ஏறியிருப்பதாகவும், அதிகாரிகள் உடனே தலையிட வேண்டும் என்று கோரியும் மின்னஞ்சல்கள் சென்றுள்ளன. இத்தகைய நிலைமைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்துவது, பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைப்பது உள்ளிட்டவை சரிவர நடைபெறுவதில்லை. இப்படிப்பட்ட பெட்டிகள் விபத்தில் சிக்கிக் கொண்டால் 72 பேர் பற்றிய விவரங் கள் தான் ரயில்வேயிடம் இருக்கும். மற்றவர்கள் கதி என்ன என்ற கேள்வியெல்லாம் இருக்கிறது. ஆகவே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன.
ஒருபுறம் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட சொகுசான பயணத்தை உறுதிப்படு த்தும் அதிவிரைவு வண்டிகள் பவனி வரு கின்றன. மறுபுறம் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் நிறுத்தம், விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகள் குறைப்பு என்று சாதாரண, எளிய மக்கள் ரயில் பயணத்தை அதிகம் பயன்படுத்த இயலாத சூழல். இந்த யதார்த்த நிலையை ஒன்றிய அரசும், நிர்வாகமும் உணர்ந்துள்ளனவா?
இந்திய ரயில்வேயின் விசித்திரம் என்னவென்றால் அது மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகள் முதல் சமூகத்தின் உயர் தட்டில் வீற்றிருக்கும் வசதிமிக்க செல்வந்தர்கள் வரை அனைவருக்கும் தனது கதவுகளைத் திறந்து சேவையாற்றி வருவது. அனைவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள் என்கிற வகையில் சமத்துவத்திற்கான ஒரு அம்சம் கூட இதில் இருப்பதாகக் கூறலாம். ஆனால் சமீப ஆண்டு களாக ரயில்வே நிர்வாகத்தின் கவனமும், கண்ணோட்டமும் வசதி படைத்த உயர் வருவாய் பிரி வினரை நோக்கியும், ஏழை, எளிய, சாமானிய மக்களை ரயில் பயணத்திலிருந்து அப்புறப்படுத்தும் தன்மை யிலும் இருந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கண க்கான விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரயில்வே பெரிதும் உதவி வந்துள்ளது. கூலித் தொழி லாளர்கள் வேலைக்குச் செல்வதற்கும், சிறு வியாபாரி கள் தங்கள் பொருளை விற்பனை செய்வதற்கும் குறைந்த கட்டணத்தில் ரயில் பயணத்தை மேற் கொண்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது அவர் களின் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நான் ஏற்கனவே கூறியது போல, பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவ தால் அவர்கள் முன்பதிவு பெட்டிகளில் ஏறு கிறார்கள். ரயில்வே போலீசார் தலையிட, அங்கே சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகிறது. இதிலெல் லாம் அக்கறை செலுத்த விரும்பாத அரசு, உயர் வருவாய் பிரிவினருக்கு மென்மேலும் வசதிகளைச் செய்து கொடுத்து, விளம்பரம் தேட விழைகிறது. அரசு இந்த நடைமுறைச் சூழலில் தனது கடமையையும், சமூகப் பொறுப்பையும் உணர்ந்துகொண்டு செயலாற்றிட முன்வர வேண்டும்.
இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்வான, பாது காப்பான ரயில் பயணத்தை ஏற்படுத்தித் தருவது இந்தியாவின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று நினைக்கிறீர்களா?
இல்லை. நான் அவ்வாறு கருதவில்லை. இந்திய ரயில்வேயைப் பொறுத்தமட்டிலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு கதை தான். என்னுடைய மாண வப் பருவத்தில் ரயில்களில் மூன்றாம் வகுப்பு பெட்டி கள் இருக்கும். இப்போதிருப்பதைப் போலன்றி, மரத்தினாலான இருக்கைகளே அதில் போடப் பட்டிருக்கும். கட்டணம் மிகமிகக் குறைவு. பயணச் சீட்டு 3 பிரதிகள் பேனாவால் எழுதப்பட்டு, ஒன்று பயணி யிடம் வழங்கப்படும். (மற்ற இரண்டும் ரயில்வே உள்ளூர் மற்றும் தலைமை அலுவலகங்களுக்கு). இத்தகைய ஆரம்ப கட்டத்திலிருந்து தான் இந்திய ரயில்வே தனது செயல்திறனை வளர்த்துக் கொண்டு படிப்படியாக வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்டியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியையும் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக, ரயில்வே துறையின் முன்னுரிமை மாறிவிட்டது. சேவை நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, லாப நோக்கம் முன்னே நுழைந்ததால் செல்வந்தர்களின் தேவைகளை மட்டும் கணக்கில் கொண்டு செயல்படத் துவங்கியுள்ளது அரசு. மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே இருக்கும் உயர் வரு வாய் பிரிவினரின் நலன்களுக்காகவே திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ப்படுகின்றன. பெரும் பொருட்செலவில் புல்லட் ரயில்கள் தயாராகி இயக்கப்படுகின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்காகச் செய்ய ப்படும் இந்த வசதிகள் யாவும் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனைகளாக விளம்பரப்படுத்தப்படு கின்றன. ஊடகங்களிலும் விலாவாரியாக விவாதிக்கப்படுகின்றன. இந்த உண்மை நிலையை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தற்போது ஒடிசா பாலசோரில் மிகப்பெரிய ரயில் விபத்து நேரிட்டுள்ள சூழலில், அரசின் உடனடி நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்?
அரசு இயந்திரம் முழுவதும் தற்போது நிவாரணப் பணிகளில் முழு அக்கறையும் செலுத்திட வேண்டும். அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. பலியானோர் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்குவது, உயி ரிழந்தோரில் விவரங்கள் கிடைக்கப் பெறாதவர்களின் அடையாளங்களைக் கண்டறிந்து அவர்தம் உறவினர்களிடம் உடல்களை ஒப்படைப்பது, காய மடைந்து மருத்துவமனைகளில் உள்ளவர்களின் சிகிச்சையை விரைவுபடுத்துவது போன்றவை முழுமூச்சுடன் தொடர வேண்டும். ஏற்கனவே துவங்கியுள்ள விசாரணைகளின் முடிவு கள் பெறப்பட்டு, அவ்வறிக்கைகளில் கூறப்படும் யோசனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பயணிகள் பாதுகாப்பு தொடர்பான, ரயில்வே சிறப்பு பணிக்குழு வின் பரிந்துரைகளும், ஆக்கப்பூர்வமான ஆலோசனை களும் விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டு, விரை வில் நிறைவேற்றப்பட வேண்டும். இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணமாகவுள்ள ரயில்வே தனியார்மய முயற்சி கைவிடப்படவேண்டும்.
நான் முன்னரே கூறியது போல, ரயில்வேயும் தபால் துறையும் தான், விரிந்து பரந்துள்ள இந்த நாட்டின் இணைப்புப் பாலங்களாக இருந்து வருபவை. ஆனால் இந்த இரண்டும் அரசின் தனியார்மயக் கொள்கை யினால் தத்தளித்து வருகின்றன. இந்தியாவின் எந்தவொரு இடத்திலிருந்தும் ஐந்து ரூபாய்க்குத் தபால் அனுப்பி மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். ஆனால் இன்று தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனங்களால் தபால் துறையின் சேவை நீர்த்துப் போகும்படி செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயின் அத்தனை பணிகளும், சேவைகளும் தனி யார் காண்ட்ராக்டர்களின் கைகளில் சிக்கி, கேள்வி யெழுப்ப முடியாத நிலைக்குக் கொண்டுசெல்லப் பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் மக்களிடையே நீண்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நாங்கள் தனியார்மயத்தில் ஈடுபட வில்லை; பணமாக்கல் கொள்கையைத் தான் நடைமுறைப்படுத்துகிறோம் (No Privatisation; only Monetisation) என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாகக் கூறுகிறாரே?
அவரது கூற்றுக்கே வருவோம். பணமயமாக்கல் என்பது என்ன? இந்தியா முழுவதும் ரயில்வே துறைக்குச் சொந்தமாக மிகக் கணிசமான அளவு நிலங்கள் உள்ளன. இவற்றை ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக, பயணி களின் நலனுக்காகப் பயன்படுத்தாமல், தனியார் கார்ப்ப ரேட் செல்வந்தர்களுக்கு வழங்குவதும், அவற்றைக் கொண்டு அவர்கள் தங்கள் செல்வச் செழிப்பை மேலும் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்து கொடுப்பதும் தான் பணமாக்கல் கொள்கையின் அடிப்படை நோக்கம். இதிலும் அரசின் முன்னுரிமை கார்ப்பரேட் நிறுவனங் களின் நலனாகத்தான் இருக்குமே தவிர, ரயில் பயணிக ளின் பாதுகாப்பு என்பது அரசின் முன்னுரிமைக்கு வரப்போவதில்லை. அரசின் இந்தப் போக்கு நிச்சய மாக ஏற்புடையதல்ல.
நிறைவாக, இந்திய ரயில்வேயில் இப்படிப்பட்ட விபத்துகள் நேராமல் தடுக்க இயலும் என்று தாங்கள் கருதுகிறீர்களா?
நிச்சயமாக. எப்போதும் மனிதநேய உணர்வுடன், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முழுவதுமான முன்னு ரிமை தரப்பட்டு, அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால் இத்தகைய கொடூர விபத்துகளை நிச்சயம் தவிர்க்க முடியும்; தடுக்கவும் இயலும். அரசு வெற்று விளம்பர நோக்கில் மேற்கொள்ளும் படாடோபச் செயல்களை அறவே கை விட்டு, மக்களின் உயிருக்கும், பயணிகளின் பாதுகாப்பு க்கும் முன்னுரிமை தருவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் செயல்பாடுகளில் ‘மனிதம்’ தென்பட வேண்டும்.