articles

img

புல்வாமா தாக்குதல்: மோடி அரசு தப்ப முடியாது!

2019 பிப். 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், சிஆர்பிஎப் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு வந்த  துணை ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் தொடுத்து நாற்பது வீரர்களைக் கொன்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய வெறியை கிளப்பி மக்களிடையே வாக்குகளை பெறுவதற்கான மலிவான அரசியலுக்கு நரேந்திர மோடி பயன்படுத்திக் கொண்டார். 

உண்மையில் இந்த பயங்கரம் நடக்கப் போகிறது என்று தெரிந்தும், அதைத் தடுக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக முற்றிலும் அலட்சியமாக பிரதமர் மோடி நடந்து கொண்டார் என நான்காண்டுகளுக்குப் பிறகு 2023 ஏப்ரல் 15 அன்று தி வயர் இணைய இதழில் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்த நேர்காணலில், ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மிக விரிவான முறையில் அம்பலப்படுத்தினார். ஆனால் முன்னதாக, புல்வாமா தாக்குதல் பற்றி விடை தெரியாத கேள்விகள் பல இருந்தன. தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல் புல்வாமா தாக்குதல் பற்றிய புலனாய்வை பிரண்ட் லைன் ஏடு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகள் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிவித்தன. அந்த விபரங்களைக் கொண்டு 2021 பிப்ரவரி 14 தேதியிட்ட பிரண்ட் லைன் ஏடு வெளியானது. தற்போது சத்யபால் மாலிக், மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியமே காரணம் என்று கூறியிருப்பதை, பிரண்ட் லைன் ஆய்வு அன்றைக்கே உறுதி செய்தது. 2021 பிப்ரவரி 14 பிரண்ட் லைனில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின் குறிப்புகள் தற்போதும் கட்சிதமாக பொருந்துகின்றன. மோடி அரசை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றன.

பிரண்ட் லைன் ஏடு நடத்திய ஆய்வின் படி, உள வுத்துறை தகவல்கள் அலட்சியப் படுத்தப்பட்ட தன் விளைவாகவே புல்வாமா தாக்குதல் நடை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசின் அலட்சியத்தின் விளைவாக 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் பாலக்கோடு தாக்குதல் நடந்தது. இறுதியாக மே 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. புல்வாமா தாக்குத லுக்கு பதிலடியாக பாகிஸ்தான்  மீது விமானப் படை தாக்குதல் நடைபெற்றது.

விடை தெரியாத கேள்விகள்

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற காலத்திலேயே எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. கடுமையான கண்காணிப்பையும்  மீறி சிஆர்பிஎப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு வெடி பொருட்கள் தீவிரவாதிகளுக்கு கிடைத்தது எவ்வாறு?  தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல்கள் ஏதும் பெறப்படவில்லையா? அல்லது உளவுத்துறை தகவல் கள் எதையும் சேகரிக்கவில்லையா? உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இக்கேள்விகளுக்கு எல்லாம் அரசிடம் பதில் இல்லை. அப்போது அரசும், அரசின் ஆதரவு சமூக ஊடகங்களும் உளவுத்துறை தோல்வி குறித்து கேள்வி எழுப்பியபோது ‘தேசபக்தி’ என்ற பெயரில் வெறிக் கூச்சல் எழுப்பப்பட்டது. கேள்வி எழுப்பிய வர்களை ‘தேசவிரோதிகள்’ என முத்திரை குத்தினர். ஒன்றிய அரசோ உளவுத்துறை தோல்வி ஏது மில்லை; புல்வாமா தாக்குதல் குறித்து என்ஐஏ  விசாரணை மேற்கொண்டு வருகிறது; விசாரணை யில் முழு உண்மைகள் தெரியவரும் என்று நாடாளு மன்றத்தில் பதிலளித்தது. புல்வாமா தாக்குதல் நடைபெற்று மூன்று வாரங்கள் கழித்து புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரி முடாசிர் அகமது கான் என்பவர் கொல்லப்பட்டார். அவரது கூட்டாளி அப்துல் ரசீது என்பவரும் தாக்குதல் நடந்த 100 மணி நேரத்தில் கொல்லப்பட்டார்.

உளவுத்துறை தகவல்கள் புறக்கணிப்பு தற்செயலானதுதானா?

ஃபிரண்ட்லைன் நடத்திய புலனாய்வில்  ஜனவரி 2, 2019 முதல் பிப்ரவரி 13, 2019 முடிய 12 முறை தீவிரவாத அமைப்புகள் பழிவாங்குதல் என்ற பெயரில் தாக்குதல் தயாரிப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதை உளவுத்துறைகள், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளுக்கு தொடர்ச்சியாக தகவல் அளித்து வந்துள்ளன.  தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பாக கூட (பிப்.13,2019) பாதுகாப்பு படையினர் வரும்  வழியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப் படக் கூடும் என்ற எச்சரிக்கை அனுப்பப்பட்டுள் ளது. இத் தகவல், ஜம்மு- காஷ்மீர் மாநில காவல் துறை இயக்குனர் வரையில் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் புல்வாமா- அவந்திப்பூர் நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான பகுதி என்ற தகவல் மட்டும் ஆறு முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப் பான பகுதி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இத்தனைக்குப் பிறகும்- வழக்கத்திற்கு மாறாக பிப். 14 ,2019  அன்று நீண்ட வரிசையில் 78 வாக னங்கள் 2547 சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிக் கொண்டு மரணத்தை எதிர்கொள்ளும் பயணத்தை மேற் கொண்டன.  புல்வாமா தாக்குதலை திட்டமிட்ட ஜெய்ஷ் இ  முகமது தீவிரவாத அமைப்பின் முடாசிர் அகமது கான் மிகப்பெரிய தற்கொலை தாக்குதலுக்கு திட்ட மிட்டு வருவது உளவு நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரது நடமாட்டத்தை அரசு அறிந்திருந்தது.  லால்டிரால் பகுதியில் முடாசிர் அகமது கானின் இருப்பிடமும் பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்  துறையினருக்கு தெரிந்திருந்தது. அவர் ஏற்கனவே லேத்பூரா முகாமில் தாக்குதல் தொடுத்து ஐந்து சிஆர்பிஎப் வீரர்களை கொன்ற நபர். ஆனால் அரசு உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் முற்றிலும் அலட்சியமாக இருந்துள்ளது.

உளவுத்துறை தகவல்கள், தீவிரவாதிகளின் அடை யாளம், அவர்களின் நோக்கம், இருப்பிடம் போன்றவை திட்டவட்டமானவை எனக் குறிப்பிடும் பட்சத்தில் அத்தகவல்கள் ‘விரைந்து செயல்பட்டாக வேண்டிய உளவுத் தகவல்கள் (actionable intelli gence)’ எனப்படும். நெருங்கி வரும் மரண தாக்குதல் குறித்து ஏராளமான தகவல்கள் குவிந்தன. உள வுத்துறையின் 12 தகவல்களும்  அரசின் அனைத்து அமைப்புகளுடனும் பகிரப்பட்டன. உளவுத்துறை வட்டாரத்தில் பெயர் தெரிவிக்க விரும்பாத சிலர், முடாசிர் அகமது கானை எளிதாக கைது செய்திருக்க முடியும் என்கின்றனர். இத்தகவல் கள் எல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டதற்கு யார்  பொறுப்பு என்பதற்கு பதில் இல்லை. தாக்குதல் நடக்கும் சில நாட்களுக்கு முன்பாக அவந்திப்புரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் மாறுதல் செய்யப்பட்டார். உளவுத்துறை தகவல்கள் கடுமையாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஏன் அவர் மாற்றம் செய்யப்பட்டார் என்பது புதிராக உள்ளது.

சந்தர்ப்பத்திற்காக   காத்திருந்த மோடி

புல்வாமா பயங்கரம் நடந்த அதே சமயத்தில் மோடி உத்தரகண்ட் கார்பெட் சரணாலயத்தில் டிஸ்கவரி சேனல் படப்பிடிப்பில் இருந்தார்.  சில மணி நேரம் கழித்து ருத்ராப்பூரில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில் பேசினார்.  அப்போ தும் புல்வாமா தாக்குதல் பற்றி பேசவே இல்லை. மோடி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.  அந்த வாய்ப்பு ஏப்ரல்- மே மாதத்தில் வந்தது.  புல்வாமா தாக்குதலுக்கு முன்பு ‘வளர்ச்சி, அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’  என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். நாடாளுமன்ற கருத்துக் கணிப்புகள் வெளியாக ஆரம்பித்தன. தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும் என்றெல்லாம் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘துல்லியத் ்தாக்குதல்’ என்று கூறிக் கொள்ளப் பட்ட பாலக்கோடு விமானப்படை தாக்குதல் நடத்தப் பட்டது.இது,1971 இந்திய- பாகிஸ்தான் போருக்கு பின்னர் நடைபெற்ற விமானப் படை தாக்குதலாகும். இந்திய விமானம் சுடப்பட்டு  விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப் பட்டார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தா னில் பதுங்கி இருந்த 300 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக மோடி அரசு அறிவித்தது.போதாக்குறைக்கு, பாகிஸ்தான் போர்  விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் கூறிக் கொண்டது. அணுகுண்டு வைத்துள்ள இரு நாடுகளும் போர் விளிம்பில் நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் தலையீட்டால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். ஆனால்,பாஜக அரசுக்கு பணிந்தே அவரை விடுவித்த தாக மோடியின் அரசு பறைசாற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில், உலக நாடுகளின் தலையீடு காரணமாகவே போர் பதற்றம் குறைத்தது.

கணிப்புகளை மாற்றிய புல்வாமா

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி மேற்கொண்ட வளர்ச்சி, “அச்சே தின்” (நல்ல காலம்) பிரச்சாரம் 2019 தேர்தலில் தொலைதூர நினைவாகிப் போனது. 2019தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் யாவும் மோடியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து விட்டதை அறிவித்தன.வாக்காளர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கே முன்னுரிமை அளிப்பதை ஆய்வுகள் உணர்த்தின. தில்லியில் செயல்படும் “ஜன நாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு” 2,73,000 வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வில் பெரும்பாலான வர்கள் வேலைவாய்ப்பு, குடிநீர், சுகாதாரம், மருத்து வத்திற்கே முன்னுரிமை அளித்திருந்தனர். வெறும் 3.6% வாக்காளர்களே தீவிரவாதம் முக்கிய பிரச்சனை  என்று கருத்து தெரிவித்திருந்தனர்.மோடியின் செல்வாக்கு பெரிதும் வீழ்ந்திருந்தது.

2019 ஜனவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை மோடி ஒடிசா, அசாம், உ.பி., ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பேசிய 23 கூட்டங்களிலும் வளர்ச்சி, அரசின் திட்டங்கள், முழு சுகாதார இயக்கம் என்பது பற்றியே பேசினார்.அதன் பின்னர் நடைபெற்ற 24 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் வளர்ச்சி,அரசு திட்டங்கள் எல்லாம் மோடிக்கு மறந்தே போய்விட்டது. தனது  பேச்சில், தன்னை ‘சௌக்கிதார்’ (காவலர்) என்று 106 முறையும், தீவிரவாதம் பற்றி 70 முறை யும் பாகிஸ்தான் பற்றி 37 முறையும், நாட்டின் பாது காப்பு, புல்வாமா தியாகிகள், பாலக்கோடு துல்லிய தாக்குதல் பற்றி 38 முறையும் பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தேசிய வெறி, போர் வெறி அலை நாடு முழுவதும் கிளப்பப்பட்டது. ‘அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்’ நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியர் சதீஷ் மிஸ்ரா தேர்தல் பிரச்சா ரத்தின் போதே கூறினார்:” புல்வாமா தாக்குதலுக்கும் மோடி இரண்டாம் முறையாக வென்று மத்தியில் ஆட்சி யைப் பிடிப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. புல்வாமாவில் 40 துணை ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்டது மோடிக்கு கிடைத்த பரிசாகும்.ஏனெனில் தலைகீழாக நின்றாலும் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர முடியாத நிலையே இருந்தது”.  வளரும் சமூகங்களுக்கான ஆய்வு நிறுவனம் (Centre for study of developing socties) 19 மாநிலங்க ளில் மேற்கொண்ட சர்வேயில் மோடிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டோம் என்று வாக்காளர்கள் தெரிவித்திருந்தனர். 2018 இல் நடைபெற்ற 21 சட்ட மன்ற இடைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. நாட்டின் பொருளா தாரம் மந்த நிலையில் இருந்தது. விவசாயிகளின் கொந்த ளிப்பு மிக்க போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.

ஆனால்,புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாஜக, தீவிரவாதத்தை மட்டுமே தேர்தல் பேசு பொருளாக்கியது. பாலக்கோடு தாக்குதலை அடுத்து, எடியூரப்பா, கர்நாடகத்தில் உள்ள 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றார். 40 துணை ராணுவ வீரர்களின் மரணத்தை பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சார பிரச்சனையாக மாற்றினர். இதில் மோடி முன்னணியில் நின்றார். அகமதாபாத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, ‘‘எதிரி யை அவர்களின் எல்லையிலேயே தாக்குவதற்கு நீண்ட நாள் காத்திருக்க மாட்டோம்’’ என்றார்.மோடி வலிமையான மனிதர் என்ற பிம்பம் மீண்டும் கட்டிய மைக்கப்பட்டது. மீரட் கூட்டத்தில், 1857 முதல் இந்திய  சுதந்திரப் போரில் கொல்லப்பட்ட வீரர்களை புல்வாமா தியாகிகளுடன் மோடி ஒப்பிட்டார். இளைஞர்கள் தங்களின் முதல் ஊதியத்தை அம்மா,தங்கைகளுக்கு அளிப்பது போல, இளை ஞர்கள் தங்களின் முதல் வாக்குகளை புல்வாமா வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்றார். 

போர் வெறிப் பிரச்சாரம்

போர் வெறிப் பிரச்சாரம் உ.பி.(73 தொகுதிகள்), மேற்கு வங்கம் (42தொகுதிகள்), ஒடிசா(21 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில் புல்வாமா பற்றி மட்டுமே பேசினார்.மோடி பேசிய 150 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் புல்வாமா, பலியான வீரர்கள், பாலக்கோடு தாக்குதல் பற்றியே பேசினார். ‘‘எதிரிக்கு பயந்து கொண்டு வீட்டி லேயே உட்கார வேண்டுமா? அல்லது எதிரியின் வீட்டிலேயே போய் தாக்க வேண்டுமா? தீவிரவா தத்திற்கு எதிராகப் போராடுவது யார்?’’  என்று தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்ற வகையில் தரம் தாழ்ந்து பேசினார்.

தங்களது ஆட்சியிலும் பாலக்கோடு போன்ற ‘துல்லிய தாக்குதல்கள்’ நடந்தன என்று காங்கிரஸ் சொன்ன போது காங்கிரஸ் சொல்வது வீடியோ கேம் ஆக இருக்கும் என்று எள்ளி நகையாடினார்.தனது பலமான அரசு, எதிரி நாட்டில்  பதுங்கி உள்ள தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக வும், ஆனால், எதிர்க் கட்சிகளோ பாகிஸ்தானிடமி ருந்து பணம் பெறுவதாகவும் கூறினார். எதிர்க் கட்சிகள் அப்போதுதான் ஆழமான சதியை உணர்ந்தன. தேர்தல் ஆணையத்தில் இது பற்றி புகார் அளித்தன. ஆணையமோ மோடிக்கு சாதகமா கவே இருந்தது. பாஜகவின் தொடை தட்டும் போர் வெறிப் பிரச்சாரம், விரும்பிய பலனைத் தந்தது. மீடியாக்கள் தேசப் பாதுகாப்பு பிரச்சனையை பாஜக வுக்கு சாதகமாக அரசியலாக்கின. போர்வெறி தேசியம்  மேலோங்கி இறுதியில், முன்பைவிட அதிகமான இடங் களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது பாஜக. இருப்பினும், வெற்றி பெற்ற பின்னர் நடை பெற்ற  பாஜகவின் முதல் கூட்டத்தின் போது மோடி, புல்வாமா  தாக்குதல் பற்றிப் பேசவேயில்லை. ஓராண்டு கழித்து  புல்வாமா தியாகிகள் தினத்தன்று தான் அவர்களை நினைவு கூர்ந்தார்.  புல்வாமா படுகொலை, பாலக்கோடு தாக்குதல்ஆகி யவை மக்களிடம் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு  விட்டன.கட்டுக் கதைகளையும், பொய்யான வரலாறையும் சொல்லி தேசியவெறி உணர்வைத் தூண்டியே தேர்தலில் வென்று விடலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த உடனே “நாம் வென்று விட்டோம்” என்று அர்னாப் கோஸ்வாமி கூச்சல் போட்டது வாட்சப்பில் கசிந்த பின்னணியில், புல்வாமா தாக்குதல் பற்றிய மர்மங்களை பிரண்ட்லைன் புல னாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

முழுமையான சதி

புல்வாமா படுகொலை இந்திய- பாகிஸ்தான் பகைமையில் மேலும் இன்னொரு ரத்தக்கறை படிந்த அத்தியாயமா? அல்லது ஆழமான சதிவேலைகள் உள்ளதா? பிரண்ட்லைன் ஆய்வு இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. வழக்கமாக கூக்குரலி டும் அரசு புல்வாமா படுகொலை விசயத்தில் மௌன மாக இருப்பது புதிராகவே உள்ளது. தேசம் அறிந்து கொள்ள விரும்புகிறது. புல்வாமா தாக்குதலில் நடந்தது என்ன?

ஃப்ரண்ட்லைன், பிப்.14,2021. 
தமிழில் : ம.கதிரேசன்