“நமது குரலை இன்னொருவர் செவிமடுப்பார் என்றால் நமது ஆயுதங்களை எடுத்துக் கொள்வ தற்கு இன்னொருவர் கை நீட்டுவார் என்றால் நமது இறுதி ஊர்வலத்தின் சோக கீதத்தை இயந்திரத் துப்பாக்கியின் ஓசையினாலும் புதிய யுத்தம், புதிய வெற்றியின் ஓசையினாலும் இசை அமைத்துப் பாட மற்றவர்கள் முன்வருவார்கள் என்றால் எங்கு வேண்டுமென்றாலும் மரணம் நம்மை திடீரென்று தழுவட்டும். மகிழ்ச்சியுடன் நாம் அதை வரவேற்போம்!”-சே. தென்னமெரிக்க லத்தீன் நாடான அர்ஜென்டினா வின் இரண்டாவது பெரிய நகரமான ரோசேரியாவில் திருமிகு எர்னஸ்டோகோரோ - திருமதி சீலியாடீலா தம்பதியின் மூத்த மகனாக 1928 ஜூன் 14அன்று மருத்துவர்கள் குறித்த ஒரு மாதத்திற்கு முன்பாக பிறந்தவர் தான் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த புரட்சி நாயகன் சே குவேரா. இளம்பிள்ளை சே-வை தாய் ஸெலியா அருகில் இருந்த கடற்கரைக்கு அழைத்து சென்றார். மெல்லிய கடற் காற்று பட்டவுடன் குழந்தை சே வின் உடல் சிலிர்த் தது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நடுங்கத் துவங்கி யது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோ தித்த போது குழந்தை சே-விற்கு ஆஸ்துமா இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். அது முதல் மாத்திரை, மருந்து, ஊசி என்று வாழ்ந்து வந்தார். பள்ளி - கல்லூரிப் படிப்பை முடித்து 1954 ஜூலை யில் மருத்துவத்தில் மாஸ்டர் பட்டம் பெற்று மருத்து வரானார். ஆனால் மருத்துவரா அல்லது புரட்சிக் காரரா என்று வந்த போது ஆயுதம் தாங்கிய மருத்துவ புரட்சிக் காரரானார்.
ஸ்பெயின் படையெடுப்பு
உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் என்று போற்றப் படும் நாடு கியூபா. பல தீவுகளை இணைத்த கரீபியன் தீவின் பெரிய தீவு நாடு. 12.10.1492 அன்று கொலம்பஸ் கால்பதிக்கும் முன்பு வரை அத்தீவின் பூர்வகுடி பழங்குடியின மக்களே தங்களுக்குள் ஆண்டு வந்தனர். ‘ஆயிரம் தச்சர் கூடி அழகான மாளிகை கட்டி ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம்’ என்ற விடுகதையைப் போன்று, அத்தீவின் இயற்கை வளம், தாது வளங்களைக் கண்ட கொலம்பஸ், நாடுகளை கண்டு பிடிக்கும் தன்னுடைய விருப்பத்திற்கு உதவிய ஸ்பெயின் நாட்டு மகாராணிக்கு தகவல் கொடுக்க, படை பரிவாரங்களுடன் கீயூபத் தீவில் இறங்கி ஈவு இரக்க மின்றி பூர்வகுடி பழங்குடியின மக்களை கொன்றும் விரட்டி அடித்தும் அத்தீவைத் தங்களின் கட்டுப்பாட்டில் 1511 ல் முழுமையாக கொண்டு வந்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1762 இல் ஸ்பெயின் மீது இங்கிலாந்து போர் தொடுத்து, கியூபத் தலைநகர் ஹவானாவை கைப்பற்றி யது. பின்னர் ஸ்பெயினிடமே அது வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கா வில் கொடி கட்டிப் பறந்தது. பின்னர் 1898 ஆம் ஆண்டு ஸ்பெயின்- அமெரிக்கா போருக்குப் பின்னால் வெற்றி பெற்ற அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கியூபா வந்தது. ஒரு கட்டத்தில் அமெ ரிக்கா தங்களுக்கு ஆதரவான பொம்மை ஆட்சியை அமைத்து ஆட்டுவித்து வந்தது. இதை எதிர்த்து அவ் வப்போது கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.
புரட்சியாளர் ஜோஸ் மார்ட்டி
தங்கள் மண்ணில் இருக்கும் அந்நிய ஆட்சியை எதிர்த்து மக்களைத் திரட்டி, “காலனியாதிக்கத்தில் நாம் இரண்டாந்தர குடிமக்களாக அடிமைகளாக இருக்கின்றோம். நமது நாட்டின் கனிமவளங்கள் ஏகாதி பத்தியத்தால் சுரண்டப்படுகிறது” என்று மக்களை - மாணவர்களை விவசாயிகளைத் திரட்டி போர்ப் பயிற்சியும் அரசியல் பயிற்சியும் கொடுத்து ஸ்பெயி னுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட செய்த மாபெரும் புரட்சிப் போராளி ஜோஸ் மார்ட்டி. அவர் 1895 மே மாதம் ஸ்பெயின் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ட்டியைத் தனது வழிகாட்டியாகக் கொண்டு அவரிடம் மார்க்சியத்தையும் கொரில்லா போர் முறையையும் ஏற்றுக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து போராட்டக் களத்திற்கு வந்தவர் தான் வழக்கறிஞர் பிடல் காஸ்ட்ரோ.
ஜூலை 26இயக்கம்
ஜோஸ் மார்ட்டி, ஏகாதிபத்திய ஸ்பெயினை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை ஜூலை 26 அன்று தொடங்கி இருந்தார். அந்த நாளைத் தான் பிடல் காஸ்ட்ரோ, தான் உருவாக்கிய இயக்கத்திற்கு ஜுலை 26 இயக்கம் என்ற பெயர் வைத்து இளைஞர்களை, விவசாயிகளை ஒன்றிணைத்து அரசுக்கு எதிராக போராட்டங்களை- கொரில்லா தாக்குதலை நடத்தி னார். கியூபாவின் ராணுவக் கிடங்கு மன்கடாவில் இருந்தது. சாண்டியாகோ நகரின் எல்லையில் இருந்த அதன் மீது 135 கொரில்லா வீரர்களுடன் முற்று கையிட்டு தாக்குதலை 1953 ஜூலை 26 அன்று நடத்திய போது இராணுவத்தினர் கடுமையாக எதிர் தாக்குத லைத் தொடுத்து புரட்சிப் படையைச் சேர்ந்த 70 போராளிகள் கொல்லப்பட்டு வீரச்சாவைத் தழுவி னார்கள். காஸ்ட்ரோ உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’
பாடிஸ்டா அரசின் நீதிமன்றத்தில் தனக்காக தானே வாதிட்டார். “இதுவரை யாரும் அனுபவித்திராத வகையில் எனது சிறைவாசம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதையும் கோழைத்தனமான அடக்கு முறைகளும் மிருகத்தனமான கொடுமைகளும் அதில் நிறைந்திருக்கும் என்பதையும் நான் அறிவேன். இருந்த போதிலும் எனது உயிரினும் இனிய 70 தோழர்களை பலி வாங்கிய அந்த கொடுங்கோல னின் கோபத்தைக் கண்டு நான் எவ்வாறு அஞ்சவில்லை யோ, அதைப் போன்றே இந்த சிறைவாசத்தைக் கண்டும் நான் அஞ்சப்போவதில்லை; என்னைத் தண்டி யுங்கள்; அது எனக்கு பொருட்டல்ல; ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று வழக்காடு மன்றத்தில் முழக்கமிட்டார் பிடல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோவின் கைதைக் கண்டித்து நாடு முழு வதும் மக்கள் போராடியதன் விளைவாக பாடிஸ்டா அரசு காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. தலை நகர் ஹவானா திரும்பிய காஸ்ட்ரோ, கூடுதல் வலி மையுடன் பாடிஸ்டா அரசை எதிர்த்துப் போராட ரகசிய திட்டமிட மெக்சிகோவிற்கு 1955 ஜுலை 8இல் போய்ச் சேர்ந்தார்.
காஸ்ட்ரோ - சே சந்திப்பு
இக்காலகட்டத்தில் தான் மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோவை கியூபாவின் மாணவர் தலைவரான ரால் காஸ்ட்ரோ உதவியுடன் சே குவேரா முதன் முத லாக சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே சே தன்னை முழுமையாக பிடல் காஸ்ட்ரோ அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். “பிடல் காஸ்ட்ரோ என்னை வசீகரித்துக் கொண்டார். அவரது புரட்சிகரப் பயணத்தில் என்னை ஒப்புக் கொடுத்து விட்டேன். வெற்றியோ தோல்வியோ வாழ்வோ சாவோ இனி பிடலுடன்தான் என் வாழ்க்கை” என்று 1955 இல் புரட்சிப் படையின் உறுப்பினராகி இறுதிவரை பயணித்தார் சே.
கியூபா பயணம்
கியூபாவில் நடைபெற்று வந்த பாடிஸ்டாவின் எதேச்சதிகார அரசை அகற்ற பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா நோக்கி பயணம் செய்தார். எதிர்பாராத விபத்துக்களும் எதிர்பாராத உடல் உபாதைகளும் அழகிய பயணத்தின் ஒட்டிப் பிறந்த அழையா விருந்தாளிகள். இவரின் கடல் பய ணத்தில் இவருக்கு ஆஸ்துமா வந்தது. அப்போது நல்ல துப்பாக்கியை கொடுத்து விட்டு பழுதான துப்பாக் கியைப் பெற்றுக் கொண்டார். காரணம், தன்னால் ஒரு நல்ல துப்பாக்கி வீணாக வேண்டாம் என்பதற்காக. கியூபாவின் கொரில்லா யுத்தத்தில் இரண்டு தலைமைகள் இருந்தன. ஒருவர் பிடல் காஸ்ட்ரோ; மற்றொருவர் சே குவேரா. ஆனால் எதிரிகளைக் குழப்பும் வகையில் நாலாவது படையின் மேஜராக சே குவேரா அறிவிக்கப்பட்டு இருமுனையிலிருந்தும் கடும் தாக்குதலை அரசுப் படைகளின் மீது தொடுத்து, இராணுவம் பின்வாங்கி ஒன்றன் பின் ஒன்றாக கியூபாவின் நகரங்கள் புரட்சிக்காரர்களிடம் வந்து கொண்டே இருக்க, இறுதியாக முன்னேறி தலைநகர் ஹவானாவிற்குள் நுழைந்து லாகபானா கோட் டையை கைப்பற்றியது புரட்சிப்படை. 01.01.1959 கியூபாவை விட்டு ஸ்பெயின் சர்வாதிகாரி பாடிஸ்டா செல்வங்களை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓட்டமெடுக்கின்றார். புரட்சி வெற்றி பெறு கிறது. வெற்றி பெற்ற கியூபா, சோசலிச குடியரசு நாடாக விளங்கும் என்று பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
கியூபக் குடிமகன்
விடுதலை அடைந்த புரட்சிகர கியூபா அரசின் குடிமகன் அந்தஸ்து சே -குவேராவுக்கு 1959 பிப்ரவரி 9 அன்று வழங்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசில் சே குவேரா, கியூபா தேசிய வங்கியின் ஆளுனராகவும் தொழில் துறை அமைச் சராகவும் பொறுப்பேற்கிறார். அரசு முறைப் பயணமாக 01.07.1959 அன்று இந்தியா வந்து பிரதமர் ஜவஹர் லால் நேரு அவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் ரஷ்யா, வியட்நாம், எகிப்து என்று உலக நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகிறார். தான் கனவு கண்ட புரட்சிகர புதிய சமுதாயம் கியூபா வில் மலர்ந்த பிறகு தன் வேலை முடிந்து விட்டது என்ற உணர்வு சே-வுக்கு ஏற்பட்டது. 1965 ஏப்ரல் 1 அன்று காங்கோ புரட்சிக்கு தலைமையேற்க அமைச்சர் மேஜர், கியூபாவின் குடிமகன் என்று எல்லாவற்றிலும் இருந்து விட்டு விலகி, புதிய போராட்டக் களங்கள் காத்து இருக் கின்றன என்று தன் தலைவன் தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார் சே.
‘வெற்றி அல்லது வீரமரணம்’
“புரட்சியின் முன் தனிமனித உயிர் என்பது ஒரு பொருட்டல்ல. கடந்த காலத்தில் நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா தோழர் பிடல்... ஒரு நாள் புரட்சிப்படையினர் வந்து உங்கள் முன்னிலையில் என்னிடம் கேட்டார்கள், நீ இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று; அப்போது தான் புரிந்தது புரட்சியின் முடிவு வெற்றி அல்லது வீரமரணம் என்று. அப்போது நீங்கள் இயங் கியதைப் பார்த்து உங்களைத் தயக்கம் இன்றி பின் பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.” “எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். எனது வீடு என்பது என் இருகால்கள் தான். என் கனவுகளுக்கு எல்லையோ முடிவோ இல்லை; அல்லது துப்பாக்கித் தோட்டாக்கள் வேறொன்றை முடிவு செய்யும் வரை. ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் உங்களை விட்டுப் பிரிந்து என் பயணத்தைத் தொடர்கின்றேன்.” -இதுதான் பிடலுக்கு சே எழுதிய கடிதம். “என் மனைவி மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை அதற்காக நான் வருத்தப்பட வும் இல்லை. அப்படி இருப்பதில் மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கும் குழந்தைகள் கல்வி பயில்வதற்கும் தேவையானவற்றை செய்வதற்கும் கியூப அரசு இருக்கிறது. நமது முன்னேற்றம் எப்போ தும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம் புரட்சிகரமான உணர்வுடன் விடைபெறுகி றேன்” என்று கூறி, கியூபாவை விட்டு வெளியேறினார்.
பொலிவியாவில் ...
பின்னர் டிசம்பர் மாதம் கியூபா திரும்பி, 1966 ஜுலையில் புரட்சி வீரர்களை தேர்வு செய்து, பொலி வியா சர்வாதிகாரி பாரியண்டோஸ் தலைமையிலான ஆட்சியின் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆட்பட்டு சொல்லொண்ணா துயரங்களை அனுப விக்கும் பொலிவியா மக்களுக்கு ஆதரவாக, 1966 நவம்பர் 7 அன்று பதினேழு கியூபத் தளபதிகளுடன் பொலிவியா வந்தடைந்து திட்டங்கள் வகுத்து 1967 மார்ச் 23 அன்று பொலிவியா ராணுவத்தை எதிர்த்து மீண்டும் ஒரு புரட்சியாளராக கொரில்லாப் போராளிக ளுடன் களம் கண்டு முதல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு பொலிவியாவின் புரட்சிப் படையைத் தொடர்ந்து வழி நடத்தினார். உடன் இருந்த பொலிவியா போராளி மரியோ மோஞ்சேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அமெரிக்க உளவுப்பிரிவு பயன்படுத்திக் கொண்டது. சே குவேரா இருப்பிடத்தை அமெரிக்க உளவு பிரிவு கண்டறிந்து 08.07.1967 அன்று அமெரிக்கா படையினரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
விசாரணை ஏதும் இன்றி அவரை சுட்டுக் கொல்ல லெப்டினன்ட் கர்னல் மரியோ டெரான் என்பவருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1967 அக்டோபர் 9 ஆம் நாள் சேகுவேரா தன்னை மரணத்திடம் ஒப்புக் கொடுக்கும் நேரம் நெருங்கியது. மரியோ டெரான் என்ற இராணுவ அதிகாரியைப் பார்த்து சேகுவேரா சொன்னார்: “கொரில்லாப் புரட்சிப் போரில் நான் உயிருடன் பிடிபட்டு இருக்கக் கூடாது. இது புரட்சி யின் தோல்வி அல்ல. அது நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறும். நீ சுடப்போவது புரட்சியாளன் சே - வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான். சுடு...” என்று சொன்ன மாத்திரத்தில் 6 தோட்டாக்கள் சே குவேரா வின் இதயத்தைத் துளைத்தது. உயிர் பிரிந்து வீரச்சாவைத் தழுவிய பின்னர் புரட்சிக்கு அங்கமான அவரின் இரண்டு கரங்கள் வல்லேகிராண்ட் பள்ளி யில் வைத்து வெட்டப்பட்டன. உடலை காட்டுப் பகுதியில் ஆழக்குழித் தோண்டி புதைத்தனர். அவரின் கைகள் வெட்டப்பட்ட இடம் மரியாதைக்குரிய இடமாக பிற்காலத்தில் மதிக்கப்படக்கூடாது என்ப தற்காக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அந்த மகத்தான புரட்சியாளன் இன்றும் வாழ்கிறான் உலகெங்கிலும். முற்போக்கு மாணவர்களும் புரட்சி யாளர்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் தங்களின் அடையாளமாக சே குவேரா உருவத்தை தனதாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 17 அன்று இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை வந்த சே குவேரா வின் மகள் அம்மையார் டாக்டர் அலெய்டா குவேரா அவர் களிடம் பத்திரிகை நிருபர் கேட்டார்: நீங்கள் உங்கள் தந்தையைப் போல் இருக்க விரும்புகிறீர்களா? என்று. “ஆம், நான் மட்டுமல்ல; கியூபாவில் உள்ள ஒவ்வொருவரும்” என்று பதில் அளித்தார்.
‘விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்கு வதில்லை.’ இது சே குவேரா அவர்களின் தத்துவ மொழி.
வாழ்க சே குவேரா!
கட்டுரையாளர் : துணை பொதுச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக, தலைவர், மல்லைத் தமிழ்ச் சங்கம்.