ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனை கையிலெடுக்கப்படும். போலீசோடு சமூக செயல்பாட்டாளர்கள் என்ற பெயரில், சிவில் போலீஸ் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தெருவில் இறங்கி அட்டூழியம் செய்வார்கள். எவ்வளவு பிரபலமானவர் என்றாலும் தப்பமுடியாது.
1992 டிசம்பர் மாதம் 6ஆம் நாள் உலகமே பார்த்துக்கொண்டிருக்க, நான்கு நூற்றாண்டு பழமையான தொழு கைக்கான பள்ளி, பாபர் மசூதி, கரசேவர்கள் என்ற பெயரில் மதவெறி ஊட்டப்பட்டவர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்படி ஒரு கட்டடம் இருந்த இடமே தெரியாத அளவு சில மணித்துளிகளில் இல்லா மல் ஆக்கப்பட்டது. அன்றைய காங்கிரஸ் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் நரசிம்மராவ் உச்ச நீதி மன்றத்தில் கொடுத்த, ‘மசூதி இடிக்கப்படாமல் பாது காக்கப்படும்’ என்ற வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு, கல்யாண்சிங் தலைமையிலான உ.பி.மாநில பா.ஜ.க அரசின் ஆசீர்வாதத்தோடு திட்ட மிட்டு நடத்தப்பட்டது. இந்தியாவின் புராதன சின்னத்தில் ஒன்று அன்றைய தினம் மரணமடைந்து விட்டது. அதிலிருந்து தெறித்த கற்கள் இந்தியா முழு வதும் இன்றளவும் விழுந்து கொண்டே இருக்கிறது. நாடு முழுக்க அதன் தூசிகள் படிந்து மூடியுள்ளது.
முடங்கிப்போன நட்புகள்
அன்றைய தினம் இந்தியாவின் தென்கோடியில் உள்ள நாகர்கோவில் நகரில் மாலை நான்கு மணிக்கு மேல் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் இருந்து வேலை பார்த்த இரண்டு நண்பர்களில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பெரும் களிப்புடன் வெளிப்படுத்திய உடல் மொழியை பார்த்த சிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சக நண்பர், தான் இதுவரை கொண்டிருந்த நம்பிக்கை தனது கண் எதிரே உடைந்து நொறுங்குவதைப் பார்த்து அதிர்ந்து போனார். இதுதான் இந்தியா முழுக்க ஏற்பட்டது. பல வடிவங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் இருந்தது. இது என் நாடு. நான் பிறந்த மண் என்பது பொய்யோ என எண்ணும் படி இருந்தது.
மன அழுத்தமும் அச்சமும்
அந்த நிறுவனத்தில் வேறு ஒரு இஸ்லாமிய ஊழியர் இருந்தார். அவர் ஒரு சிறந்த திறமையான வேலைக்காரர். கணக்கில் சூரப்புலி. காணாமல் போன அல்லது தவறாக பதிவு செய்யப்பட்ட காரணத்தால் சமன் படாத பணத்தை எளிதில் லாவகமாக விரைவில் கண்டறிந்து முடித்துவிடுவார். சிக்கலான பிரச்சனை களை தீர்க்க வல்லவர். மற்ற அனைத்து ஊழியர்க ளுக்கும் மிகவும் வேண்டியவர். எல்லாரும் அவரிடம் அன்பாக இருப்பர். அவரும் அப்படித்தான். அவர் ஒருநாள் ஐந்து வேளை தொழுகை மேற்கொள்பவர். வேலை நாட்களில் வீட்டிற்கு போய், பிறகு சேர்ந்தார் போல் தொழலாம். வெள்ளிக்கிழமைகளில் அனுமதி பெற்று சற்று முன்னதாக சென்று தொழுது விட்டு மதிய உணவு அருந்தி விட்டு வருவார். அதைப்பற்றி யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் 1992, மசூதி இடிப்பிற்குப்பிறகு அவர் வெள்ளிக்கிழமை விடுப்பெடுத்து விடுவார். மற்றவர்கள் இனி இதை கேள்வி கேட்பார்களோ என்ற தயக்கம். ஆனால் வெள்ளிக்கிழமை தான் அந்த வார கணக்கை மொத்தமாக எடுத்து சரிபார்க்கிற வேலை உண்டு. அதனால் அலுவலகத்தில் அது பிரச்சனையாயிற்று.
எல்லோரும் அவரிடம் மன்றாடிக் கேட்டும் வராதது மட்டுமல்ல, அவர் தொடர்ந்து நீண்ட விடுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் மனதளவில் தளர்ந்து விட்டார். ஆழமான இறை பக்தி கொண்டவர். மற்றவர் கள் இனி தன்னை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என சிந்திக்க ஆரம்பித்து விட்டார். அவரது நிலுவையி லுள்ள விடுப்புகள் தீர்ந்தபிறகு சம்பளமும் நின்று விட்டது. அன்றைக்கு ஓய்வூதியம் பெற, சில நாட்கள் பணிக்கு வந்து கையெழுத்து போட்டால் கூட போதும். அதற்கு கூட மறுத்துவிட்டார். அப்படி இருபதாண்டு முழுமை பெற்றால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும். பிறகு பல இடங்களில் தினக் கூலி வேலைக்குச் சென்று மிகவும் சிரமத்திற்குள்ளானார். ஏற்கனவே மிகவும் ஏழ்மையான குடும்பம்தான் அவரது குடும்பம். இருபதாண்டு நிறைவு செய்யாததால் அவருக்கு பி.எப் மற்றும் கிராஜூட்டி மட்டும்தான் கிடைக்கும். வறுமை காரணமாக அந்த தொகைக்காக அலைந் தார். குழந்தைகளின் படிப்பு பாதியிலேயே நின்று போனது. குடும்பம் முழுக்க நோயுற்று அல்லல்பட்டது. மனதளவில் ஒரு பயம் கொண்ட அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இந்த மனிதரைப்போல் இந்நாட்டில் 1992 பாபர் மசூதி இடிப்பிற்கு பின் மனதளவில் பாதுகாப்பின்மையை உணர்ந்து சுக்கு நூறாக நொறுக்கியவர்கள் ஏராளம் முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.
யார் கலவரக்காரர்கள்?
இந்த ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது, நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ‘குஜராத்தில் 2002 -ல் கலவரக்காரர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து விட்டோம்’ என்றார். யார் கலவரக்காரர்கள்?
1947 க்கு முன், பின் அதை ஒட்டிய காலங்களில் பரவ லாக மதக்கலவரங்கள் நடந்ததுண்டு. அது இந்த தேசத் தின் பிதாமகன் மகாத்மா காந்தியின் உயிரைக் குடிப்ப தில் முடிந்ததை நாம் அனுபவித்தோம். அதற்குப் பிறகு இந்த நாட்டில் நடந்த எண்ணிலடங்கா கலவரங்க ளும் ஒரு சார்பாகத் தானே நடந்தது. 1969 குஜராத் கலவரம் இந்த நாட்டில் புதிய வடிவம் பெற்றது. வெறியூட்டப்பட்ட இந்து இளைஞர்களைக் கொண்ட, பலதரப்பட்ட பெயர்களில் அறியப்படுகின்ற அமைப்பு கள் முதல் முறையாக அகமதாபாத்தில் வீடுகளில் அடையாளமிட்டார்கள். இது இந்து வீடு ‘இந்துக்களே இருக்கிறார்கள்’. இது இந்து வீடு, முஸ்லீம்கள் இருக்கிறார்கள்; இது முஸ்லீம் வீடு, இந்துக்கள் இருக்கிறார்கள்; இது முஸ்லீம் வீடு முஸ்லிம்களே இருக்கிறார்கள்- என தரம் பிரித்து லாரியில் பெட்ரோல் கொண்டு வந்து அடித்து எரித்தார்களே; பலர் உயிரோடு கொளுத்தப்பட்டார் களே; அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலவர இடங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குப் பிறகு மும்பை, பிவாண்டி, தலச்சேரி, மண்டைக் காடு வரையிலும்; உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் - குறிப்பாக முஸ்லீம் களின் தொழில் நகரங்களில் தொடர் கலவரங்களை இந்தியா பார்த்தது. இப்போதும் பார்த்துக்கொண்டி ருக்கிறது.
நம்பிக்கையின்மை
அண்மையில் போட்டித்தேர்வு எழுதிவிட்டு வந்த ஒரு முஸ்லீம் இளைஞன் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில், “நான் தேர்வு நன்றாகவே எழுதியுள்ளேன். ஆனால் நான் முஸ்லீம் என்ற காரணத்தால் வேலை கிடைக்காது’‘ என்று கூறினார். அவரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மற்றவர்கள் வெட்கப்பட வேண்டாமா? குழந்தைகளின் விளையாட்டுகள் கூட மதக்கலவரமாக மாறுகிறது. சாலை விபத்துகள் கூட ஒருவர் முஸ்லீம் என்றால், மற்றவர் இந்து என்றால் எங்கிருந்தோ ஒரு கூட்டம் எதிர்பார்த்து காத்திருப்பது போல் பஞ்சாயத்து பேசுகிறது. அண்மையில் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியில் நடந்த வாகன விபத்து ஒரு பெரும் போராட்டமாக மாற்றப்பட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக ஆக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிக ளில் சிறுபான்மை மக்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இஸ்லாமிய பெண் தனக்கு சென்னை நகரத்தில் வீடு கிடைக்காததால், அதிக தூரம் பயணம் செய்து தினமும் வேலைக்கு சென்று வருவதாக கூறினார். பல நகரங்க ளில், வெளியூரிலிருந்து வருபவர் முஸ்லிம் என்றால் தங்குமிடங்களில், லாட்ஜ்களில் அறை மறுக்கப்படு வதும் தற்போது தலைதூக்கியுள்ளது.
‘நீ முஸ்லீம் என்றால் கொல்லப்படுவாய்’
நீ முஸ்லீம் என்றால் உனக்கு வேலை மறுக்கப் படும். நீ முஸ்லீம் என்றால் சந்தேகப்படப்படுவாய். நீ முஸ்லீம் என்றால் ஆவணங்கள் ஆதாரங்கள் கேட்கப் படும். கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகைகள் தரப்பட மாட்டாது. உன் வாழ்க்கைமுறையின் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். உன் உணவு, உடை, வாழ்க்கை முறை பரிகசிக் கப்படும். பஸ், ரயில் பயணங்களின் போது முஸ்லீம் பயணிகள் அருவருக்கத்தக்கதாக பார்க்கப்படு கிறார்கள். உயர் அதிகாரிகள், ஏன் நீதிபதிகள் கூட நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். சென்ற மாதம் தென்தமிழகத்தில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி தனது கடமையை நிறைவேற்ற விடாமல் தடுக்கப்பட்டார். மாநில அளவிலான உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் அவர் சார்ந்த மதத்தின் காரணமாக மோசமாக விமர்சிக்கப்படுகிறார். அரசு கூட சில நிகழ்ச்சிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளையோ பிரமுகர்களையோ பெயர் போடுவதையோ அழைப்ப தையோ தவிர்க்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. பல மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் திட்ட மிட்டேஇதைச் செய்கின்றன.
நிரந்தர தாக்குதல்கள்
இஸ்லாமிய இளைஞர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள். போலீஸ் வலையில் நிரந்தர குற்ற வாளியாக; அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக; குற்ற வாளிகள் பிடிபடாத வழக்குகளில் இவர்களை சேர்ப்பது. பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், இளை ஞர்கள்- இவர்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிணை கிடைப்பதில்லை. பல வரு டங்களாக விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். தமிழக சிறைகளிலும்.தலைவர்களின் நூற்றாண்டுகளில் கூட இவர்கள் பெயர்கள் பரி சீலிக்கப்படுவதில்லை. தேசிய புலனாய்வு முகமை கள், கூட்டாட்சித் தத்துவத்தை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களில் நேரடியாக தலையிட்டு சிறுபான்மை யினரை கொடுமைப்படுத்துகின்றனர். எந்த விதமான தார்மீக உரிமைகளும் அமலாவதில்லை.
தினமும் செத்துச் செத்து...
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனை கையிலெடுக்கப்படும். போலீசோடு சமூக செயல்பாட்டாளர்கள் என்ற பெயரில், சிவில் போலீஸ் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தெருவில் இறங்கி அட்டூழியம் செய்வார்கள். எவ்வளவு பிரபலமா னவர் என்றாலும் தப்பமுடியாது. ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், ஓவியர் எம்.எப் உசைன், ரசூல் பூக்குட்டி, ஆஸ்கார் விருதுபெற்ற ஏ.ஆர்.ரகுமான் உட்பட எல்லா பிரபலங்களும் தான். மாட்டிறைச்சி, கூம்பு வடிவ ஒலிபெருக்கி, ஹிஜாப், ஹலால், லவ் ஜிஹாத் என இன்னும் புதிதாக பல வரும். இறைச்சி மடித்துக்கொடுத்த பத்திரிக்கையில் சாமி படத்துடன் கூடிய விளம்பரம் இருந்தாலும் அடி தான். வழக்கு, சிறைதான். இஸ்லாமிய பெண்களுக்கு இன்றைய நாட்களில் தன்னை பாதுகாப்பது, தனது பெண்குழந்தைகளை பாதுகாப்பது, மட்டுமல்ல, ஆண் குழந்தைகளை பாதுகாப்பதே சிரமம். வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். இந்தியா வில் ஏராளமான முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை காவல் நிலையங்களின் வாயில்களிலும், சிறை வாயில்களிலும், நீதிமன்ற வாயில்களிலும், வழக்கறி ஞர்களின் வீடு, அலுவலக வாயில்களிலும், உள்ளூர் தாதாக்களின் வீட்டு வாயில்களிலும் தான் பெரும்பா லும் கழிகிறது. அவர்களுக்கு என்ன காரணம் என புரிய வில்லை. ஏராளமான பணம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ‘எம்புள்ளய ஏம்பா திரும்ப திரும்ப புடிக்கிறாங்க?’ என காரணம் தெரியாமல் காவலர்களை சபிக்கிறார் கள். எவரையும் நம்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களில் பெற்றோர் இல்லாதவர்களின் பாட்டிக ளும் அடக்கம் சிலரது பெற்றோர்களும் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவில் ஒரு கல்லூரி பேராசிரியர் சர்வ சாதார ணமாக தனது மாணவனை முஸ்லீம் என்பதால் தீவிரவாதி என்கிறார். ஆனாலும் இந்நாட்டின் சாலைகளில் முஸ்லீம்க ளின் வாகனங்களில், அரபியில் ‘அல்லா’, தமிழில்கூட ‘அல்லா,’ ‘மாஷா அல்லா’, 786, பிறை, தப்பி, பர்தா, ஹிஜாப் அடையாளங்களை நம்பிக்கையோடு வெளிப் படுத்துவதற்கு காரணம், “இது என்நாடு. நான் இங்கு பிறந்தேன். இங்கே வாழ்ந்து இங்கே மடிவேன். என் சந்ததிகள் இங்கு தழைப்பார்கள். யாரும் கேள்வி கேட்க முடியாது” என்ற வைராக்கியம் தான்.
கட்டுரையாளர் : மாநில பொருளாளர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு