articles

img

உன்னதத் தலைவருக்கு ஊடகங்களின் புகழஞ்சலி - தொகுப்பு : எஸ்.ராமு

தோழர் சங்கரய்யாவின் சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை, நாட்டின் விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, சாதி மத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, இலக்கிய ஆர்வம், நேர்மை, தூய்மை, கொள்கையில் உறுதிப்பாடு என அவரின் தியாகத்தையும், போராட்ட வரலாற்றையும் அனைத்து செய்தித் தாள்களும் செய்தியாகவும் தலையங்கமாகவும் வெளியிட்டு தங்களது புகழஞ்சலியை செலுத்தியுள்ளன. தமிழ் நாட்டு ஊடகங்கள் மட்டுமல்லாமல் பிற மாநில ஊடகங்களும் புகழஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல், சிறப்பு செய்தியாகவும் ஒளிபரப்பினர். அவர் மரணித்த தருணத்தில் இருந்து தகனம் செய்யும் வரை நேரடி ஒளிபரப்பு செய்து கவுரவித்தனர். ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஈர்த்த, ஊடகங்களால் மதிக்கப்பட்ட  ஒரு தலைசிறந்த தலைவராக, ஆளுமையாக தோழர் என்.சங்கரய்யா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

                                                                                                                                                                                                                                                                               தொகுப்பு : எஸ்.ராமு

‘சிங்கத்தின் கர்ஜனை’

தி இந்து (ஆங்கிலம்)

1973ஆம் ஆண்டு என்.சங்கரய்யா, அரசியலின் கடினமான  காலகட்டத்தில் ஒரு அசாதாரண செயலைச் செய்தார்  என அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி யுள்ள தி இந்து ஆங்கில நாளிதழ், “சங்கரய்யா ஒரு சக்திவாய்ந்த பேச்சாளர்; மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவரது பேச்சை வயதான சிங்கத்தின் கர்ஜனைக்கு ஒப்பிட்டார்” என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

உறுதியான போராளி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

“மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் செயல்பாட்டல் ஈர்க்கப்பட்ட என்.சங்கரய்யா சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். அவரது தாத்தா விருப்பப்படி தனது  பிரதாப சந்திரன் என்ற பெயரை சங்கரய்யா என்று மாற்றிக் கொண்டார். மாணவர் சங்கத்தில் பணியாற்றும் போது காமராஜரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாக மாணவர் சங்க இயக்கங் களை தலைமையேற்று நடத்தினார். தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு சங்கரய்யா கைது செய்யப்பட்டார். திராவிட இயக்கங்களாலும் சங்கரய்யா ஈர்க்கப்பட்டார். காரணம் அவரது தாத்தா பெரியசாமி தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தின் செயற்பாட்டாளர்” என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

திசைவழியைத் தீர்மானித்தவர் 
டைம்ஸ் ஆப் இந்தியா

“தமிழகத்தில் 1964ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திசைவழியை  தீர்மானித்தவர்களில் ஒருவர் என்.சங்கரய்யா” என்று குறிப்பிட்டுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட போது அதை தோற்று வித்தவர்களில் ஒருவராக இருந்தார் என்று கூறியுள்ளது. மக்கள் பல்வேறு வடிவங்களில்  ஒடுக்கப்படுவதை எதிர்த்து உறுதியாக போராடியவர் அவர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.  தனது வாழ்நாள் முழுவதும் சாதி ரீதியான ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய  சங்கரய்யா தமிழக இடதுசாரி இயக்கத்தின் வலுவான குரலாக ஒலித்தவர் என்றும் அந்த நாளேடு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

ஒப்பற்ற கொள்கை மாவீரர்
விடுதலை

“தோழர் சங்கரய்யாவின் பொது வாழ்க்கை என்பது பொதுத் தொண்டாற்றுபவர் களுக்கு என்றென்றும் வழிகாட்டும் திறந்த பாடப் புத்தகமாகும். அவரது தெளிவும், துணிவு மிகுந்த லட்சிய உறவும், பழகுவதில் பாசத்தோடும், மனிதநேயத்தோடும் எவரிடமும் பழகும் பான்மையாளர் ”என்றும், அது இறுதிவரை என்றும் எடுத்துக்காட்டாகவே நிற்கும் என்பது  உறுதி என்றும் விடுதலை நாளேடு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

தோழர் சங்கரய்யா: தியாகப் பெருவாழ்வு 
இந்து திசை தலையங்கம்

“இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும்  தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர், தகைசால் தமிழர் என்ற பெருமிதங்களுக்கு உரிய என்.சங்கரய்யா மிக இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் நுழைந்து நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார்; அவரது வாழ்வும் தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கவை. சங்கரய்யா சாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் சாதி - மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ளக் காரணமாகவும் இருந்தார்.  2000ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வில் பேசிய சங்கரய்யா, வள்ளுவர் கூறியது போல கல்லாமை, இல்லாமை,  அறியாமை அறவே ஒழித்து, ஏற்றத்தாழ்வைப் போக்கிட வேண்டும் என்றார். சங்கரய்யா  விரும்பிய அத்தகைய நிலையை தமிழ்நாடு எட்டுவதற்குரிய உழைப்பைச் செலுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தனது இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் நெறிகளை கடை பிடித்த ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா” என்று இந்து திசை புகழாரம் சூட்டியுள்ளது.

தேசாபிமானி

மலையாள நாளிதழான தேசாபிமானி தோழர் சங்கரய்யாவின் மறைவுச் செய்தியையும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் மிக விரிவான முறையில் வெளியிட்டிருந்தது.  வங்கமொழி ஏடான கணசக்தி, திரிபுரா நாளிதழான தேசர்கதா, தெலுங்கு நாளிதழ்களான பிரஜாசக்தி, நவதெலுங்கானா மற்றும் சில தெலுங்கு நாளிதழ்களிலும் சங்கரய்யா மறைவுச் செய்தியையும், வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டன.  ஆங்கிலத்தில் வெளியாகும் டிடி நெக்ஸ்ட், நியூஸ் மினிட், நியூஸ் பஃப் உள்பட ஏராளமான ஊடகங்கள் சங்கரய்யா மறைவு மற்றும் இறுதி நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து படங்களையும் செய்திகளையும் வெளியிட்டன.

தோழர் சங்கரய்யாவுக்கு லால் சலாம் தினமணி தலையங்கம்

“பொதுவாழ்வில் தூய்மை, தனி வாழ்வில் எளிமை, அணுகு முறையில் நேர்மை ஆகிய பண்புகள் அரிதாகி வரும் காலத்தில் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்  என்.சங்கரய்யா. நூற்றாண்டைக் கடந்து நிறை வாழ்க்கை வாழ்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தோழர் சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டிருப்பது மெத்தச் சரியான முடிவு. விடுதலைப் போராட்ட வீரர்  தோழர் சங்கரய்யா, தனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதி யத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தேசத்துக்காகப் போராட எனக்குக் கிடைத்த வாய்ப்பைவிட பெரிய வெகுமதி இருந்துவிட முடியாது என்று சொன்ன அந்த ‘தகைசால் தமிழர்’, தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கிய ரூ.10லட்சத்தையும் கூட ஏழைகளுக்குக் கொடுத்தார் என்பதில் வியப்படைய என்ன இருக்கிறது? பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவருக்கான இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர்  என்.சங்கரய்யா” என தினமணி தனது தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.

மக்கள் மனதில் வீற்றிருக்கிறார் சங்கரய்யா  குமுதம் ரிப்போர்ட்டர்

“வாழ்வாங்கு வாழ்ந்த முதுபெரும் தோழர் சங்க ரய்யா மறைந்தார். சுதந்திரப் போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், பெரியாரியக்கம், திராவிடக் கட்சிகளின் ஆட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவு, உலகமயமாக்கல், இந்துத்துவ அரசியல் எழுச்சி, தலித் அரசியல் என இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நடை பெற்ற எண்ணற்ற அரசியல் நிகழ்வுகளைப் பார்த்த,  பங்கேற்ற, இடையீடு நிகழ்த்திய வாழ்க்கை அவருடையது. ‘‘ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே’ என்று இந்தியா  ஆனந்த சுதந்திர கீதம் இசைப்பதற்கு 12 மணிநேரத்துக்கு முன்புதான் அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை பெற்றுவிட்டோம் என்று சங்கரய்யா ஓய்வெடுக்கவில்லை. தவறிழைக்கும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகபோராடினார். நூறு வயதை கடந்த சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி மகிழ்ந்தது தமிழ்நாடு அரசு. கூடுதல் அங்கீகாரமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்க விரும்பி யது. பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். இதோ சங்கரய்யா மறைந்துவிட்டார். கவுரவ  டாக்டர் பட்டம் வழங்கப்படாததால் அவரின் பெருமை  குறையப் போவதில்லை. மாறாக அவரை புறக்கணித் தோர் களங்கப்பட்டு நிற்கிறார்கள். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் போயிருக்கலாம். ஆனால் மக்கள்  மனதில் அதைவிட மிகவும் உயரத்தில்  வீற்றிருக்கிறார் சங்கரய்யா” என்று அரிதினும் அரிதான மாமனிதர் சங்கரய்யா” என்று குமுதம் ரிப்போர்ட்டர் புகழாரம்சூட்டியுள்ளது.

தினத்தந்தி, தினகரனில் முதன்மைச் செய்தியாக...

சங்கரய்யா மறைவு குறித்தும் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டும் தினத்தந்தி, தினகரன்  நாளிதழ்கள்  முதன்மைச் செய்தியாக பிரதானப்படுத்தி யிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  தினமணி உள்ளிட்ட பல்வேறு ஏடுகள் மற்றும் ஊடகங்களின் டிஜிட்டல் பதிப்புகளில் சங்கரய்யாவின் வாழ்க்கைக் குறிப்புகள், தியாகங்கள் அவர் நடத்திய போராட்டங்கள் குறித்த விபரங்களை உடனடியாக பதிவு செய்யப்பட்டு பல லட்சக்கணக்கான வாசகர்களை அடுத்த கணமே சென்றடைந்தன. தினமலர் நாளேடு சங்கரய்யாவின் வாழ்க்கைக் குறிப்புடன் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது.

‘டாக்டர்’ சங்கரய்யா புகழ் வாழ்க!
முரசொலி தலையங்கம்

புரட்சியாளர்களின் மரணம் - புரட்சியாளர்களின் வீரத்தை மட்டும் அடையாளப்படுத்துவது இல்லை. அத்தோடு துரோகிகளின் துரோகத்தன்மையையும் அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கும். ‘சாதாரண’ சங்கரய்யாவாக இருந்தவர்  - மரணிக்கும் தருவாயில் - ‘டாக்டர்’ சங்கரய்யாவாக மறைந்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுக்க மறுத்ததால் கிடைக்காமல் போய்விடவில்லை அந்தப் பட்டம். சங்கரய்யாவை நினைப்பவர்கள் அனைவருக்கும், அந்த டாக்டர் பட்டமும் நினைவில் இல்லாமல் போகாது. அப்படியானால் அவர் ‘டாக்டர்’ சங்கரய்யாதானே! சங்கரய்யாவைப் பற்றிப் பேசும் போது, அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் கொடுக்க மறுத்தவர்களும் நினைவுக்கு வரத்தானே செய்கிறார்கள். அதனால்தான் புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளை யும் அடையாளம் காட்டிவிட்டே மரணம் அடைகிறார்கள் என்கிறோம்! அடிமை இந்தியாவில் நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்தவர் மட்டுமல்ல, ‘சுதந்திர’ இந்தியாவிலும் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தவர். தங்கள் இயக்கத்தின் தியாக வரலாற்றை ஒருமுறை தோழர் சங்கரய்யா சுருக்கமாக இப்படி எழுதினார். “இந்திய விடுதலைக்காக கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக் கொண்ட தியாகங்கள் இணையற்றவை யாகும். கப்பற் படை எழுச்சி, தெலுங்கானா போராட்டம், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் என சக்திமிக்க பல போராட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்நின்றது.

தமிழ்நாட்டிலும் இப் போராட்டங்களுக்கு ஆதரவாக வலுவான இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த சதி வழக்குகள் ஏராளம். ஆங்கிலேய ஏகாதிபத்தி யம் தொடுத்த பெஷாவர், மீரட், கான்பூர் சதி வழக்குகள் மட்டுமல்ல. திண்டுக்கல் அக்னீஸ்மேரி மதுரை சிறையில் மாண்டார். 1946ஆம் ஆண்டில் கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வர்க்கப் போராட்டத்தில் முன்நின்ற ராமய்யன். சின்னையன், ரங்கண்ணன், வெங்கடாசலம் ஆகிய நான்கு தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. சிறைச் சாலைக்குள்ளும் அடக்குமுறை தொடர்ந்தது. இக்காலகட்டத்தில் அரசின் அடக்குமுறைகளுக்கும், ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கும் பல கம்யூனிஸ்ட்கள் பலியாயினர். களப்பால் குப்பு, தஞ்சை  சிவராமன். வாட்டாக்குடி இரணியன், மதுரை மாரி, மணவாளன், தூக்குமேடை பாலு, தில்லைவனம், பொதும்பு பொன்னையா என பலரும் தம் இன்னுயிரை ஈந்தனர். சேலம் சிறை துப்பாக்கிச் சூட்டில் 22 கம்யூனிஸ்ட்கள் படுகொலை செய்யப்பட்டதும் இக்காலத்தில்தான். சிறைச்சாலைக் கொடுமைகளை எதிர்த்து அன்னை லட்சுமி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இக்காலம்தான். கடலூர் சிறையில் இதே காலத்தில் ராகவய்யா, உத்திராபதி, சீதாராமய்யா ஜோகய்யா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்....” என்று எழுதினார் சங்கரய்யா. இத்தகைய தியாக வாழ்க்கையோடு தியாக வாழ்க்கையாக வாழ்ந்தவர் அவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தியவர் என்.சங்கரய்யா. அமெரிக்கன் கல்லூரி மாணவராக அவர் அப்போது இருந்தார். அவர் அன்று உருவாக்கியதுதான் மதுரை மாணவர் சங்கம் ஆகும். தேச விடுதலைப் போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக அன்றே அடையாளப்படுத்தியவர் அவர். ‘இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டும்’  என்பதைவிட முக்கியமாக அது எத்தகைய இந்தியாவாக அமைய வேண்டும் என்பதை அடையாளப்படுத்துபவராகவும் அவர் இருந்தார். அத்தகைய மாணவர்களை உருவாக்கினார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் சங்கரய்யாவை போலீ சார் தாக்கி மண்டையை உடைத்தார்கள். கைது செய்யப்பட்டார். மாணவர் இயக்கத் தலைவராக சிறைக்குள் சென்ற சங்கரய்யா, வெளியில் வந்ததும் மதுரை மாவட்டச் செயலாளராக ஆனார். 1945 முதல் 2023 வரை போராட்ட வாழ்க்கை அவருடையது. மதவாதத்துக்கு எதிராக கடுமையாக இறுதிவரை பேசி வந்தார். அதனால்தான் அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்க மறுத்தது கிண்டி.மதுரை மக்களால் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்களால் வாழ்நாள் முழுக்க ‘தோழர்’ என்று அழைக்கப்பட்ட அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்ததால் அவர்கள் தங்களைத் தாங்களே கீழ்மைப்படுத்திக் கொண்டார்கள். தங்களது தகுதியை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ‘தகைசால் தமிழர்’ விருதை தோழருக்கு வழங்கி பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்காகத் தரப்பட்ட பத்து லட்சம் நிதியையும் முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார். 1972 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான நிதி வழங்கப்பட்டபோது அதனையும் மறுத்தார். ‘நாங்கள் சுதந்திரத்துக்காகத்தான் போராடினோம்,  பென்ஷனுக்காக அல்ல’ என்றார். கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அவர். ‘நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு ஏன் போகவில்லை?’ என்று கேட்கப்பட்ட போது, “நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல, விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று சொன்னவர் அவர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலமாக ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். அதை வழக்கம் போல ஆளுநர் ரவி தடுத்துவிட்டார். அதனை உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு  பொன்முடி அவர்கள் அறிக்கையாகவும், பேட்டிகள் மூலமாகவும் கண்டித்தார். அதன்பிறகும் ஆளுநர் மனம் மாறவில்லை. பட்டமளிப்பு விழாவையே புறக்கணித்தார் அமைச்சர். பல்கலைக் கழக செனட், சிண்டிகேட் உறுப்பினர்களும் புறக்கணித்தார்கள். பட்டமளிப்பு உரையே நிகழ்த்தாமல் தப்பித்து ஓடினார் ஆளுநர். “அதிகாரப்பூர்வமாய் ‘இந்திய’ தேசியக் கொடி உச்சி ஏறும் நிமிடம் வரை சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகச் செம்மல் சங்கரய்யா மறைந்தார். முனைவர் பட்டம் வழங்க முட்டுக்கட்டையிட்ட மூடர்களுக்கும் சேர்த்து அரைக்கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி” -– என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா. புரட்சியாளர்கள், எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே மரணம் அடைகிறார்கள்!