articles

img

பகுத்தறிவுப் பாதையில் பயணித்த மாரிமுத்து

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது வருச நாடு. இது தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி வட்டத்திற்கு உட்பட்டது. இங்குள்ள சின்னஞ்சிறிய மலை கிராமங்களில் ஒன்று பசுமலை தேரி. அரை நூற்றாண் டுக்கு முன்பு ஜூலை 12, 1967 ஆம் ஆண்டில் குப்புசாமி-  மாரியம்மாள் தம்பதிகளுக்கு பிறந்தவர் மாரிமுத்து.  நான்கு சகோதரிகள். இளைய சகோதரர் உட்பட மூன்று பேர். ஆக மொத்தம் குடும்பத்தில் 8 பேர். இளம் வயதில் தாய்மொழி மீதிருந்த காதல், பற்றுதல் திரைப்பட உலகில் வில்லனாக அறிமுகம் கொடுத்தது. கதாநாயகன், குணச்சித்திர கலைஞன் என 30 ஆண்டு களுக்கு மேலாக கோலோச்சிய மாரிமுத்து, இன்று நம்மோடு இல்லை.  மலைக் கிராமமான வருச நாட்டைச் சுற்றியுள்ள கிரா மங்களில் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 60 வருடங்களுக்கு முன்பாக காடுகளை பராமரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் பல்வேறு பகுதிகளில் இருந்து கூலி தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட இந்த மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். மேடு, பள்ளம், காடு என பலதையும் கடந்து சென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மொத்தமே 15 குடும்பங்களே வசித்த பசுமலை தேரி கிராமத்தில், அடிப்படையான மின்சாரம் கூட கிடையாது. இருள் சூழ்ந்து இருக்கும். குழந்தைகள் படிப்பதற்கும் போதிய வசதி கிடையாது. அவ்வளவு ஏன்? ஒரு டீ குடிக்க வேண்டும் என்றாலும் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வருசநாட்டுக்கு தான் செல்ல வேண்டும். அதுவும் கால் நடையாக சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்பதற் காகவே தனது சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து. மகன் எங்கு சென்றான்? எப்படி இருக்கிறான்? என்ன செய்கிறான்? என்பது கூட தெரியாமல் பரிதவித்தனர் பெற்றோர். வந்தவரை வாழவைக்கும் சென்னை மாநகரம் ஆரம்பத் தில் பெரிய பட வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்க வில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக ஓட்டல் ஒன்றில் வேலையில் சேர்ந்து தனது லட்சியத்தை நிறைவேற்றினார். கிராமம் சிறியதாக இருந்தாலும் மாரிமுத்து குடும்பம் மிகப்பெரியது. ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப் பட்டது. படிப்பு மட்டும் தான் வாழ்க்கையை மாற்றும் என்பது ஆழமாக மனதில் பதிந்ததால், அரசு உதவி பெறும் பள்ளியில் தொடங்கிய ஆரம்பக் கல்வி உயர்நிலை வரை சென்றது. ஒரு வழியாக கல்லூரி படிப்பு முடிந்ததும் சென் னைக்கு வந்தவர், தனது தாய் மாமன் மகளான பாக்கிய லட்சுமி 1994 செப்டம்பர் 2இல் கரம் பிடித்தார். அகிலன், ஐஸ்வர்யா என்கிற மகனும் மகளும் உள்ளனர்.

அறிமுகம் தந்த அரண்மனைக்கிளி...

இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், மண்ணின் மைந்தர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம்  உதவி யாளராகச் சேர்த்தது. 1993 ஆம் ஆண்டில் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றியபோது அரண்மனைக் கிளி திரைப்படம் அறிமுகத்தை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக, வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிகச் சிறந்த உதவி இயக்குநராக உயர்ந்தார். பிறகு, மூத்த இயக்குநரான மணிரத்தினம், சீமான், எஸ்.ஜே.சூர்யா என்று பலரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றினார். பிரசன்னா கதாநாயகனாகவும் உதயதாரா நாயகி யாகவும் நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படத்தை இயக்கிய தன் மூலம் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற தனது லட்சியத்தை கடின உழைப்பாலும் மன உறுதியா லும் நனவாக்கிக் கொண்டார். 2008 ஆம் ஆண்டில் வெளி வந்த இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக அனைவரது பாராட்டையும் பெற்றது.  திருப்புமுனை... சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்தபோது, மிஸ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படம் 2011 ஆம் ஆண்டு ‘ரீ எண்டரி’ கொடுத்து ‘புலிவால்’ படத்தை  இயக்கினார். பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் முதன் முதலாக இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சவாலான பாத்திரத்தில் எளிதாக நடித்து முத்திரை பதித்தார். சூர்யா நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், மருது, கொடி, பைரவா என்று பல்வேறு படங்களில் குணச்சித்திர கலைஞராக கலக்கினார். திரைப்பட உலகின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம், நெல்சனின் ஜெயிலர் ஆகிய படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தது ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றார். சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடர் தான் மாரிமுத்துவுக்கு மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது.  இந்த நாடகத்தில் “இந் தம்மா.. ஏய்” என இவர் பேசும் வசனத்தில் மூலம்  ஆதி குணசேகரன் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அந்த நாடகத்தில், மனதில் பட்டதை பட்டென பேசும் கதாபாத்தி ரம் தான் இவருக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல தான் தனது ‘ரியல் வாழ்க்கையிலும் இருந்தார்’ என்பதற்கு சான்றாக சில வீடியோக்களும் வைரலானது.

கடவுள் மறுப்பாளர்!

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் எனக்கு ஜோதிடத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை. ஜோதிடர்களை மன்னிக்கவே முடியாது, அந்த குற்றவாளிகளால் தான் நாடு இன்னமும் பின்னோக்கிச் செல்கிறது என்று வெளுத்து வாங்கினார். அவரது அந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் கடுப்பான இளம் ஜோதிடர் (செய்தியாளர்) வேலாயுதம், “ஜோதிடம் சொல்பவர்கள் வழிகாட்டிகள் என்று மழுப்பினார். இதற்கு பதிலடி கொடுத்த மாரிமுத்து, “எந்த ஜோசியனாவது சென்னை மாநகரை வெள்ளம் முங்கும்னு சொன்னானா?  சுனாமி மற்றும் கொரோனா வரும்னு சொன்னது உண்டா? என்றும்  கேட்டு ஜோதிடர் கள் வாயடைத்துப் போகும் அளவுக்கு வெளுத்து கட்டினார். இளமைப் பருவத்தில் இருந்து கடவுள் மறுப்புக் கொள்கையை கடைப்பிடித்து வந்த மாரிமுத்து, அதனை வெளிப்படையாகவும் பல்வேறு இடங்களிலும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி பாக்கிய லட்சுமி கடவுள் நம்பிக்கை கொண்டவர். அதில் அவர் தலையிடுவதில்லை. அதே நேரத்தில், இரண்டு குழந்தை களும் கடவுள் மறுப்பாளர்களாகவே மாறினர். பகுத்தறிவாளர் மாரிமுத்து மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் மொழிக்கும், கம்பீரமான குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் அவர். அவருடைய இழப்பு நிச்சயம் நடிப்புத் துறையில் மாபெரும் இழப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.