இந்திய வரலாற்றில் உலகத் தொழிலாளர் உரிமை தினமான மே தினத்தை முதன்முதலில் கொண்டாடிய பெருமை தமிழகத்தைச் சாரும். சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் அவர்கள் 1923ஆம் ஆண்டு மே மாதம் முதல்நாளன்று சென்னை, கடற்கரையில் தொழிலாளர் ஊர்வலத்தை நடத்தி கொடியேற்றி மே தினக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். இதோடு தொழிலாளர்களுக்கும் - விவசாயிகளுக்கும் விடிவு காலத்தை ஏற்படுத்த பொதுவுடமைச் சமூகத்தை அமைத்திட இந்திய தொழிலாளர் - விவசாயிகள் கட்சி என்கிற அமைப்பையும் உருவாக்கி அறிவித்தார். சிங்காரவேலர் துவக்கி வைத்த மே தின கொண்டாட்டத்தின் 100வது மேன தின நாள் என்ற சிறப்பினை இம்மே தினம் பெறுகிறது. சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய நாட்டை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். மகாத்மா காந்தி மற்றும் விடுதலைப் போராட்டத் தலைவர்களோடு நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த இவர் நாளடைவில் காங்கிரஸ் கட்சியின்பாலும், காந்தி கடைப்பிடித்த பல்வேறு நிலைபாடுகளிலும் கருத்து வேறுபாடு கொண்டார்.
இந்திய விடுதலை என்பது உழைப்பாளி மக்களுக்கும், விவசாய மக்களுக்குமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டிருந்த சிங்காரவேலர் ஆரம்பம் முதலே தொழிலாளர் உரிமைகள் பிரச்சனைகள் மீதும், அவர்களுக்கான போராட்டங்களை நடத்துவதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். காங்கிரஸ் கட்சி பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை உணர்வு கொண்டு பணியாற்றி தோழர் சிங்கார வேலர் 1921ஆம் ஆண்டிற்கு பிறகு முழுமையான பொதுவுடமைச் சிந்தனையாளராகவும், அவ்வியக்கம் இந்திய நாட்டில் வேரூன்றுவதற்கும் மூல காரணமாகத் திகழ்ந்தார். இதனாலேயே இவர் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி என பாராட்டைப் பெற்றார். கொடும் சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். சென்னையில் பி அன்ட் சி மில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை உயர்த்தவும், வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைப்பதற்கும் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். போராட்டத்தை உடைக்க நிர்வாகத்தினர் இந்துக்களுக் கும், பட்டியலின மக்களுக்கும் சாதிக் கலவரத்தை தூண்டிவிட்டனர். அதனை எதிர்த்து தொழிலாளர்களை ஒன்று திரட்டி 13 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் போராட்ட மாக சுமார் 6 மாத காலம் அப்போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ ராஸ்கல்
இதே காலத்தில் சர்க்கரைச் செட்டியார் தலைமையில் நடைபெற்ற டிராம் தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தம், சென்னை நகரசுத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இரண்டாவது உலகப்போருக்கு அடுத்து கரக்பூர் ரயில்வே தொழிலாளர் போராட்டம், தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் போராட்டம் என பல உழைப்பாளர் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமை சிங்காரவேலரைச் சாரும். இத்தகைய போராட்டங்களின் வழியாக பொதுவுடமை சித்தாந்தத்தையும், மார்க்சிய - லெனினியக் கொள்கையையும் இந்திய மண்ணில் நிலைநாட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக தொழிலாளர் - விவசாயி கட்சி அமைக்கப்பட்டு பொதுவுடமைக் கொள்கைகளை முன்னெடுத்தார். “இப்போதெல்லாம் பொதுவுடமைக்காரர்களை மாஸ்கோ ராஸ்கல் என்று கூறுவது பேசனாகி விட்டது. அந்த வகையில் நான் மாஸ்கோ ராஸ்கல் என்று அழைக்கப்படுவதில் பெருமைப்படுகிறேன்” என ஒருமுறை சிங்காரவேலர் கூறியுள்ளார். மனித குலம் அனைத்திற்கும் சமவாழ்வு அளிக்கும் பொதுவுடமைக் கொள்கைகளை தனது வாழ்நாள் லட்சியமாக சிங்காரவேலர் மேற்கொண்டார். சிங்காரவேலர் ஏற்றிவைத்த மே தினக் கொடி இந்திய நாடு முழுவதும் பட்டொளி வீசி பறக்கும் காட்சியைப் பார்க்க முடிகிறது. வரலாறு முழுவதும் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கங்களும் கணக்கற்ற போராட்டங்களை நடத்தி தங்களது வாழ்வாதார உரிமைகளை பெற்றுவந்துள்ளனர். எண்ணற்ற அடக்குமுறைகள், சிறைக்கூட சித்ரவதைகள், உயிரிழப்புகள் போன்ற ஆளும் வர்க்க தாக்குதல்களை சந்தித்து தொழிலாளிகள் இயக்கம் சாதனைகளைப் படைத்துள்ளது அறிந்ததே.
சந்திக்கும் சவால்கள்
இந்த ஆண்டு மே தினத்தைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் நாடு முழுவதும் உள்ள தொழிலாளிகளும், உழைப்பாளிகளும் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டுள்ளனர். போராடிப் பெற்ற உரிமைகளை படிப்படியாக வெட்டிக் குறைப்பது, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவது, பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பது, சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு அரசியலை உசுப்பி விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அனுதினமும் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் இந்திய நாட்டு மக்களை முன்னெப்போதும் கண்டிராத சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் நோயினால் பாதிக்கப்பட்டோர் 4.30 கோடி மற்றும் மரணமடைந்தவர்கள் 5.23 லட்சம் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் கூட முழுஉண்மையை மோடி அரசு வெளியிடவில்லை. இந்தியாவில் ஏற்பட்ட பெருந்தொற்றினால் ஒட்டுமொத்த சமூகமும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பல கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த சிறு,குறு நடுத்தர தொழில்களில் அழிவை நோக்கிச் சென்றுள்ளன. பழைய உற்பத்தி நிலைக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றிய அரசு இந்தத் தொழில்களை மீண்டும் செயலூக்கப்படுத்த உருப்படியான திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. ஆறு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துவிட்டது. 75 சதவிகித வீடுகளின் மாத வருவாய் ரூபாய் 5 ஆயிரம் என்ற அளவிலேயே இருப்பதாக ஆய்வு கூறுகிறது. உலகில் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியல் அண்மையில் வெளியிட்ட போது, மகிழ்ச்சியற்ற சோக நிலையில் மக்கள் வாழும் 10 மோசமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சென்ற ஆண்டில் உலகிலேயே கடும் பட்டினி கிடக்கும் 15 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை உலக பட்டினி குறியீடு ஆய்வு வெளிப்படுத்தியது.
அதானிக்கு இலவசம்
இவ்வளவு கடும் நெருக்கடிக்கு நாடும், மக்களும் ஆட்பட்டுள்ள நேரத்தில் இந்திய முதலாளிகளின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து 124 சதவிகிதமும், கவுதம் அதானியின் சொத்து 480 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. இந்தியாவில் அதிக வருமானம் வருகிற ஒரு கோடிப் பேர் இந்தியாவின் மொத்த செல்வத்தில் 73 சதவிகிதத்திற்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இத்தகைய கார்ப்ப ரேட் முதலாளிகள் வாங்கியுள்ள வங்கி கடன் கடந்த 8 ஆண்டுகளில் 10.5 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், விவசாயிகள், மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் கிடுக்கிப்போட்டு வசூல் செய்யப்படுகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை அனுதினமும் ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது. இப்பொருட்கள் மீதான வரியினை கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு 200 சதமானம் உயர்த்தியுள்ள நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரியினை 15 சதமானமாக குறைத்துள்ளது.
உலகிலேயே மிகக் குறைவான கார்ப்பரேட் வரி உள்ள நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அரசின் வருவாயை ஈடுகட்ட பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையினை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறையில் கட்டப்பட்ட விமான நிலையங்களை 12,770 கோடி ரூபாய்க்கு அதானி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த முழுத்தொகையையும் அதானி நிறுவனம் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கி செலுத்தியது. அடுத்த ஓராண்டில் இந்த மொத்த கடனையும் ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது. பல லட்சம் கோடி பெருமானமுள்ள விமான நிலையங்கள் அதானிக்கு இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 144 விமானங்களை டாட்டாவுக்கு வெறும் 18 ஆயிரம் கோடிக்கு விற்றுவிட்டார்கள். பி.எஸ்.என்.எல் என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கிய ஆயிரக்கணக்கான டெலிகாம் கோபுரங்களை இலவசமாக ரிலையன்ஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், ஒன்றிய அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5 ஜி வசதியை வழங்க மறுத்து வருகிறது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் வரலாற்றுச் சாதனை படைத்தது இன்சூரன்ஸ் நிறுவனமாகும். 5 கோடி ரூபாய்க்கு துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் மொத்த சொத்து தற்போதைய மதிப்பில் 34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு தனது பங்கீடாக பல ஆயிரம் கோடிகள் கொடுப்பது மட்டுமல்லாமல், மத்திய அரசின் பல துறைகளுக்கு மூலதனக் கடனாக இன்சூரன்ஸ் நிறுவனம் அளவற்ற தொகையினை வழங்கி வருகிறது. இத்தகைய அட்சயப்பாத்திரமான இன்சூரன்ஸ் நிறுவன பங்குகளை விற்பதற்கான அறிவிப்புகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
பணமயமாக்கல் என்ற பயங்கரம்
இன்னொரு பக்கம் பணமயமாக்கல் நடவடிக்கை என்ற பெயரில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு ஒன்றிய அரசுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்குமான சொத்துக்களை நீண்ட கால குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. இதன்படி 26,700 கி.மீ. நெடுஞ்சாலைகள் 28,698 கி.மீ. நீளமுள்ள மின்கோபுரங்கள் மற்றும் கம்பி வழித்தடங்கள், 8,154 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்கள், 3,930 கிலோ மீட்டர் நீளமுள்ள பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள், 2,10,00,000 மெட்ரிக் டன் பொருட்களை வைக்கக் கூடிய மத்திய கிடங்குகள், ரயில்வே நிலையங்கள், ரயில்வே குட்ஷெட்டுகள், பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு விலை பேசப்படுகின்றன. மறுபக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைச் சட்டங்களை வெட்டிச் சுருக்குவதற்கு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
44 தொழிலாளர்கள் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மோடி அரசு சுருக்கியுள்ளது. இதன் மூலம் தொழிற்சங்கங்கள் அமைப்பது, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வது, தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது அனைத்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக 100 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர வேலைக்கும் தற்போது ஆபத்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களையும், விவசாய உற்பத்தி மற்றும் வியாபாரத்தையும் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஒப்படைக்கும் வகையில் மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவசாயத் துறையின் சட்டங்களை கொண்டு வந்து கேள்விகள் விவாதங்கள் இல்லாமலேயே மோடி அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக இச்சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள் ளன. விவசாயிகள் மற்றும் தொழி லாளர்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் மோடி அரசின் தாக்குதல்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. விவசாயிகளது போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களும், தொழிலாளிகளும், நாடு தழுவிய ஆதரவு இயக்கங்களை மேற்கொண்டது புதிய வரலாறாகும். இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களும் பேராதரவு அளித்து 25 கோடி பேருக்கு மேல் பங்கேற்ற பெரும் போராட்டமாக இப்போராட்டம் நடந்துள்ளது புதிய வரலாறாகும்.
சூளுரைப்போம்
தங்களது ஆட்சியின் விளைவாக ஏற்படும் நெருக்கடி சுமை தாங்க முடியாமல் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய இத்தருணத்தில், மதவெறி, அரசியலை பாஜக அரசு முன்னெடுக்கிறது. சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் மற்றும் தாக்குதல்களை தூண்டி வருகிறது. தனது குருபீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, திட்டங்களை வேக வேகமாக நடைமுறைப்படுத்திட முனைப்புக் காட்டி வருகிறது. அரசியல் சாசனத்தின் ஆணிவேராக திகழும் மதச்சார்பின்மை, இந்தியாவின் பன்முகத் தன்மை, கூட்டாட்சித் தத்துவம், நாடாளுமன்ற ஜனநாயகம் அனைத்தும் சுட்டெரிக்கப்படுகின்றன. மாநிலங்களின் உரிமைகள் படிப்படியாக வெட்டிக் குறைக்கப்படு கின்றன. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியை ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசு கபளீகரம் செய்ய எத்தனித்துள்ளது. பெண்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் - இந்துத்துவ மதவெறி என்ற இரட்டைத் தாக்குதலை எதிர்த்து கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் உழைப்பாளிகள் அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க இந்த மே தின நன்னாளில் சூளுரைப்போம்!