தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு மே-17 அன்று கொடைக்கானல் பண்ணைக்காட்டில் நடைபெறவுள்ளது. தமிழ் நாட்டின் 7 மலைகளிலிருந்து 500 காபி விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். ‘‘உலக அளவில் குரூட் ஆயிலுக்கு அடுத்து காபி இரண்டாவது அதிக லாபம் தரும் பொருளாக உள்ளது. விவசாயிகளிடம் காபியை வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் காபி கம்பெனிகள் அதிக லாபம் ஈட்டுகின்றன. இதன் பலன் காபி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சென்று சேருவதில்லை. காபி கம்பெனிகள் (இன்ஸ்டென்ட்) காபியை விற்பனை செய்து வரும் தொகையில் பத்து சதவீதம் தான் விவசா யிகளுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள 90 சதவீதம் கம்பெ னிகள், வர்த்தகர், இடைத்தரகர், விளம்பரதாரர் மற்றும் அரசுக்கு வரியாகச் செல்கிறது.
நுகர்வோருக்கு காபித்தூள் விற்கும் விலையில் 30 சதவீதம் அளவிற்கு காபி விவசாயிகளுக்கு விலை கிடைத்திட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி காபி உற்பத்தி செலவை முறையாக கணக்கிட்டு அத்துடன் ஐம்பது சதவீதம் கூடுதலாக சேர்த்து காபிக்கு விலை வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் ஒன்றிய அரசி டம் வலியுறுத்துகிறது. உலக அளவில் பிரேசில் மூன்றில் இரண்டு பங்கு காபியை உற்பத்தி செய்கிறது. இந்தியா காபி உற்பத்தி யில் ஆறாவது இடத்தில் உள்ளது. 2021-22இல் இந்தி யாவில் 3.48 லட்சம் டன் காபி உற்பத்தியானது. நாடு முழுவதும் 11.65 லட்சம் ஏக்கரில் காபி சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தான் காபி சாகுபடி அதிகம். 80 சதவீதம் காபி சாகுபடி நிலங்கள் தென் னிந்திய மாநிலங்களில் உள்ளன. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் நாட்டின் மொத்த காபி உற்பத்தியில் 96 சதவீதம் உற்பத்தியா கிறது. காபி உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அடுத்து கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்தில் 25,000 ஏக்கரில் காபி பயிரிடப்படுகிறது. 2030க்குள் ஒரு லட்சம் ஏக்கராக உயர்த்திட திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரி (கூடலூர்), ஏற்காடு (சேர்வராயன்), கல்வராயன் மலை, கொல்லி மலை, போடி பகுதி, வால்பாறை ஆகிய மலைகளில் 1,05,000 ஏக்கரில் காபி பயிரிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் - 34,000 ஏக்கர், நீலகிரி (கூடலூர்) - 30,000 ஏக்கர், ஏற்காடு, கல்வராயன் - 16,500 ஏக்கர், கொல்லிமலை - 12,500 ஏக்கர், போடி பகுதி - 9,000 ஏக்கர், வால்பாறை - 3,000 ஏக்கர். இந்தியாவில் காபி விவசாயிகளில் 98 சதவீதத்தி னர் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளாவர். கணிச மான எண்ணிக்கையில் பழங்குடி மக்களும் காபி சாகு படி செய்துள்ளனர்.
இந்தியாவில் 1942இல் காபி சட்டம் கொண்டு வரப்பட்டது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசாங்கம் காபி வாரியம் உருவாக்கப்பட்டது. காபி தொழில்வளர்ச்சி, நுகர்வு ஊக்குவிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை வாரியம் மேற்கொண்டது. காபி போர்டு காபியை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தியது. காபி விவசாயிகளுக்கு குறிப்பிட்ட விலை கிடைப்பதை காபி போர்டு உறுதிப்படுத்தியது. 1947க்கு பிறகு 1990 வரை இந்த நிலைமை நீடித்தது. 1990களில் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்கு பின்பு காபி வாரியம் காபி கொள்முதல் செய்வதை முற்றாக நிறுத்திக் கொண்டது. உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்பந்தங்கள் காரணமாக ஒன்றிய அரசு காபி கொள்முதலை கைவிட தீர்மானித்து, தனியார் கொள்முதல் செய்து கொள்ள முழுமையாக அனுமதிக்கப்பட்டனர்.
1274 விவசாயிகள் தற்கொலை
தனியார் கொள்முதல் துவங்கிய துவக்கத்தில் சில ஆண்டுகள் கூடுதல் விலை கிடைத்தது. பின்னர் காபி யின் விலைவீழ்ச்சியடைந்து காபி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 1996க்கு பிறகு சில ஆண்டுகளில் 1274 காபி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நெருக்கடிமிக்க தருணத்தில் கேரள அரசு காபி விவசாயிகளை பாதுகாத்திட ஆக்கப்பூர்வமான சில முயற்சிகளை மேற்கொண்டது. பிரம்மகிரி: கேரள மாநிலத்தில் காபி விவசாயி களை பாதுகாத்து மேம்படுத்திட மாநில இடது ஜன நாயக முன்னணி அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தற்போது ஒரு கிலோ காபிக்கு பத்து ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. கேரளாவில் வயநாடு பகுதியை மையமாக வைத்து கார்ப்பரேட் காபி கம்பெனிகளுக்கு மாற்றாக பிரம்மகிரி வயநாடு காபி கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காபி விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்ந்து காபியை பிரம்மகிரிக்கு விற்பனை செய்கிறார்கள். பிரம்மகிரி ஒரு காபி தூள் தொழிற்சாலையை இடது ஜனநாயக முன் னணி அரசின் உதவியுடன் உருவாக்கியுள்ளது. காபி தூள் தயாரித்து பிரம்மகிரி வயநாடு காபி என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. காபி விற்று வரும் லாபத்தில் ஒரு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படு கிறது. தற்போது இன்ஸ்டென்ட் காபி கம்பெனியை அமைத்து செயல்படுத்திடும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். கார்ப்பரேட்களுக்கு எதிராக விவசாயிகளால் கூட்டுறவு முறையில் பிரம்மகிரி உருவாக்கப்பட்டுள் ளது சிறந்த முயற்சி. நாமும் தமிழ்நாட்டில் துவக்க நடவடிக்கையாக இடைத்தரகர்கள் இன்றி விவசாயி கள் கூட்டுறவு விற்பனை மையத்தை அமைத்து காபி விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மாநாட்டில் விவாதித்து முடிவுக்கு வரலாம்.
காபி கம்பெனிகள் இடைத்தரகர்கள் மூலம் காபியை வாங்குகின்றனர். காபி கம்பெனிகள் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கும் நிலையில் காபியை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு அதன் பலன் போய்ச் சேருவதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக பிரேசில் நாட்டில் காபி உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி யின் காரணத்தால் இந்திய விவசாயிகளுக்கு சற்று கூடு தலாக விலை கிடைக்கிறது. நமது நாட்டில் ஆண்டு க்கு 3.48 லட்சம் டன் காபி உற்பத்தியாவதில் 70 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் 1.20 லட்சம் டன் காபி நுகர்வு இருக்கிறது. உள்நாட்டு நுகர்வு ஆண்டுக்கு 7 சதவீதம் உயர்ந்து வருவதாக தகவல்கள்கூறுகின்றன.
விலை பிரச்சனை
காபிக்கு கட்டுபடியாகிற விலை வழங்கப்பட வேண்டும். உற்பத்திச் செலவை முறையாக கணக் கிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை வழங்கிட வேண் டும். காபி கம்பெனிகள் ஈட்டும் லாபத்தில் காபி விவசாயி களுக்கு பங்கு வழங்கிட வேண்டுமென்பதற்கு காபி சட்டத்தில் திருத்தம் செய்திட வேண்டும். இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு காபியை விவசாயிகளிடம் வாங்கி வியாபாரிகள் மூலம் கம்பெ னிகளுக்கு விற்பனை செய்கின்றனர். பெரும் வர்த்த கர்கள் ஏற்றுமதி செய்கின்றனர். இதில் கொல்லிமலை உட்பட பல மலைகளில் எடை மிசினை பயன்படுத் தாமல் படிகளில் அளந்து காபியை வாங்கும் நிலமை உள்ளது. இடைத்தரகர்கள் இன்றி காபி விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு அமைப்பை (சொசைட்டி) உருவாக்கி அதன் மூலம் காபியை விற்பனை செய்தி டும் வகையில் கூட்டுறவு விற்பனை மையங்களை உரு வாக்கலாம். மாநில அரசு இதற்கு தேவையான இடம், மானியம் மற்றும் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். காபி போர்டு காபியை கொள்முதல் செய்திட வேண்டும்.
மகசூல் உயர்ந்திட
ஒரு ஏக்கரில் ஆயிரம் கிலோ வரை காபி மகசூல் எடுத்திட இயலும். நல்லமுறையில் செடிகளை பராம ரித்தால் 700 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை காபி மகசூல் எடுத்திட முடியும். அதிக அளவில் சிறு விவசாயி களாக குறிப்பாக பழங்குடி மக்களால் முதலீடு செய்து செடிகளை பராமரித்து அதிக மகசூல் எடுத்திட முடிவ தில்லை. காபி போர்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிடும் குறைந்தபட்ச நிதியை பெரிய விவசாயிகள் செல்வாக் குள்ளவர்கள் மானியமாக பெற்றுச் செல்கின்றனர். அரசு தரும் மானியம் அனைவருக்கும் கிடைப்ப தில்லை. காபி போர்டு அதிகாரிகளிடம் கேட்டுப் பார்த்து சாதாரண விவசாயிகள் சலிப்படைந்தது தான் மிச்சம். அனைத்து காபி விவசாயிகளுக்கும் மானியங்கள் வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும்.
காபி போர்டு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அரசு உரிய கவனம் செலுத்துவ தில்லை. 10,5,000 ஏக்கர் நிலப்பரப்பில் காபி சாகுபடி உள்ள தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளாக உள்ள காபி விவசாயிகளைப் பாதுகாத்திட காபியை மலைப்பகு திகளில் உலர வைத்து பதப்படுத்திட தேவையான வசதிகளை செய்து கொள்ள, உரம், பூச்சிமருந்து, நீர்பாசன ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு மாநில அரசு ஆண்டுக்கு பத்து கோடி ரூபாய் நிதி வழங்கிட வேண்டுகிறோம். உரிய முறையில் அரசுகள் உதவி யும், கவனமும் செலுத்தினால் தமிழ்நாட்டில் 2030ம் ஆண்டுக்கு காபி சாகுபடி பரப்பளவை 2 லட்சம் ஏக்கர்களாக உயர்த்திட முடியும். ஆண்டுக்கு 50,000 டன் காபி உற்பத்தி இலக்கை எட்ட முடியும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாத்திட வனத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். விவசாயிகள் சாகுபடி பயிரை காபியை குரங்கு, பன்றி, காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து சேதப்படுத்தி அழிப்பதை தடுப்ப தற்கு கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் வேலி அமைத்தால் வனத்துறையினர் தடுக்கின்றனர். மலைப்பகுதிகளில் காபி விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளே நிதி ஒதுக்கீடு செய்து விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வருவதை தடுத்திட வேலி அமைத்திட வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிர் இழப்புகளுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
கோரிக்கைகள்
1. காபி போர்டு காபியை விவசாயிகளிடம் கொள்முதல் செய்திட காபி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கார்ப்பரேட் காபி கம்பெனிகள் ஈட்டும் லாபத்தில் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவு பங்கு தர வேண்டுமென்பதற்கும் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
2. இடைத்தரகர்கள் இன்றி காபியை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து கொள்ளும் வகையில் கூட்டுறவு விற்பனை மையங்களை உருவாக்கி செயல்படுத்தலாம். இதற்கான இடம், நிதி உதவிகளை மாநில அரசு வழங்கிட வேண்டும்.
3. ஒன்றிய அரசு காபி விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும். அனைத்து காபி விவசாயிகளுக்கும் நீர்பாசனம், உரம், பூச்சி மருந்து, உபகரணங்கள் மற்றும் கடன் மானியத்தில் வழங்கிட வேண்டும். நிலப்பட்டா இல்லாத மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கும் அடங்கல் அடிப்படையில் மானியங்கள் வழங்கிட வேண்டும்.
4. தமிழ்நாடு மாநில அரசு மலை மக்கள் காபி விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கி, காபி போர்டுடன் இணைந்து செயல்படுத்திட வேண்டுகிறோம். மாநில அரசு ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.10 கோடி நிதி உதவி வழங்கிட வேண்டுகிறோம்.
5. வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் உயிர், பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு கூடுதலாக வழங்கிட வேண்டும். வனவிலங்கு கள் பயிர்களை அழிப்பதை தடுத்திட வனத்துறை நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
கட்டுரையாளர் : இணைச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்.