articles

img

குடும்பங்களை ஜனநாயகப்படுத்துவோம்! - உ.வாசுகி

ஊரெங்கும் ஜனநாயகம் வேண்டும், அனைத்து தலங்களிலும் சமத்துவம் வேண்டும், அரசியல் சாசனமும் அதைத்தான் சொல்லுகிறது, ஆனால் வீடு, குடும்பம் என்று வந்து விட்டால், அவை கேள்விக்கு அப்பாற்பட்ட ‘புனிதமான’ அமைப்புகள்… அவற்றில் இந்த முழக்கங்களுக்கெல்லாம் இடமில்லை என்கிற சமூகப் பார்வை இன்னும் வலுவாக இருக்கக்கூடிய சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அமைதியாக நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் இந்தக் கடமையின் மொத்த பொறுப்பும் பெண்களுக்குத் தான் என்பதை  ஏற்பதற்கில்லை. குடும்பம் என்று வந்துவிட்டால் பெண் சர்வபரித் தியாகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் அல்ல.  அனைவருக்கும் அதில் பங்கு உண்டு. உரிமையோ கடமையோ குடும்ப உறுப்பினர்கள் அவரவருக்குரிய பங்களிப்பினைச் செய்து விட்டால் பிரச்சனை இருக்காது.

உடமை கண்ணோட்டம்

சிறு வயதிலிருந்தே பெண்களை திருமணத்திற்கு தயார் செய்வது, எல்லாவற்றுக்கும் அனுசரிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பது, அந்தந்த குடும்பத்தில் அம்மா நடத்தப்படும் விதத்தை நேரடியாகப் பார்த்து  ஆணாதிக்கக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வது போன்றவை தான், வன்முறை வாழையடி வாழையாக தொடர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்குப் பின் மனைவி கணவனின் உடமை என்கிற பிற்போக்கு கண்ணோட்டம் குடும்ப வன்முறையை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தது.

சட்டம் பிறந்த கதை

இதைத் தடுப்பதற்கு சட்டம் வேண்டும் என பல ஆண்டுகளாக பெண்கள் இயக்கங்கள், ஜனநாயக இயக்கங்கள் கோரி வந்த சூழலில், வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் குடும்ப வன்முறை என்பது மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்தது. வன்முறை வாடிக்கையாக நடந்தால் தான் குடும்ப வன்முறை என்று கருதப்படும் என இடம்பெற்று இருந்தது. இது  முரளி மனோகர் ஜோஷியின்  புரிதல் பற்றாக்குறையால்  உருவானது அல்ல.  ஆர்எஸ்எஸ்சின் மனுவாத  சித்தாந்தத்தின் பகுதியாகவே பெண் அடிமைத்தனம் இருக்கிறது. அவர்கள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் பாடப் புத்தகங்கள் பிற்போக்குத்தனமாக திருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்கு பலத்த கண்டனக் குரல்கள் எழுந்த அடிப்படையில் அது சட்டமாக்கப்படவில்லை. அதே சமயம், வீட்டுக்குள் சட்டம் வரலாமா… அறைக்குள் அரசாங்கம் எட்டிப் பார்க்கலாமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. வீட்டுக்குள் கொலை நடந்தால் சட்டம் வராதா, பக்கத்து வீட்டுக்காரர் அடித்தால் போலீஸ் வராதா, மனைவியை அடித்தால் மட்டும் சட்டம் வரக்கூடாது என்பது ஆணாதிக்க நியாயம் அல்லவா..? பிறகு 2005ல் ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது,

இடதுசாரிகளின் வற்புறுத்தலும் சேர்ந்து குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2006 இல் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தன. உடல் ரீதியான துன்புறுத்தல், வார்த்தைகள் மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல், பொருளாதாரத் துன்புறுத்தல் என்று நான்கு வகையாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குடும்ப வன்முறை என்பது இந்த சட்டத்தில் விரிவாக வரையறுக்கப்பட்டது முக்கியமான அம்சம். மனைவியை மட்டுமல்ல, சேர்ந்து வாழும் பெண்ணைத் துன்புறுத்தினாலும் அது இச்சட்டத்தின் கீழ் வரும். குடியிருப்பு உத்தரவு, பாதுகாப்பு உத்தரவு, இழப்பீடு,  ஜீவனாம்சம், குழந்தை கஸ்டடி என்று பல்வேறு அம்சங்களையும் இச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து பெற முடியும். பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கும் சூழல் இல்லாத பட்சத்தில், யார் வேண்டுமானாலும்  நன்னம்பிக்கை அடிப்படையில் புகார் கொடுப்பதற்கு இச்சட்டத்தில் இடம் உண்டு. ஏற்கனவே இபிகோ 498 ஏ பிரிவில் கணவனோ, கணவன் வீட்டாரோ மனைவியை சித்திரவதை செய்வது குற்றம் என்பது இடம்பெற்று இருந்தது. ஆனால் இந்திய தண்டனை சட்டப் பிரிவு என்றால் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டி இருக்கும். மேலும் யதார்த்தத்தில் கணவன் சரி செய்யப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும், கைது செய்வது சிறையில் தள்ளுவது என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்காது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து தான், பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக நீதிமன்றத்தை நாடுகிற முறையை உள்ளடக்கி இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு மீறப்படும் போது அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

ஆற்றுப்படுத்துதல்

இந்த பிரச்சனையில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் வந்த உடனேயே, இருதரப்பையும் அழைத்து வைத்து கவுன்சிலிங் கொடுப்பது என்கிற பெயரில், புகாரை வாபஸ் வாங்க வைக்கும் ஏற்பாடு நடந்துவிடக் கூடாது என்பதற்காக வழக்கு நீதிமன்றத்திற்கு போன பிறகு வழக்கின் தன்மையை உத்தேசித்து தனியாகவோ கூட்டாகவோ கவுன்சிலிங் நடப்பதற்கு நீதிபதி உத்தரவிட முடியும். இதுவும் கூட, நடந்த வன்முறையை கணவன் நியாயப்படுத்துவதற்கு இடம் அளிக்காமல், வன்முறை கூடாது என்பதை உறுதியாகச் சொல்லுவதற்கான வாய்ப்பாக இருக்க வேண்டும் எனவும் சட்டம் கூறுகிறது.

ஊடகச் சித்தரிப்பு

குடும்ப வன்முறையை நியாயப்படுத்துகிற பல காட்சி அமைப்புகளை திரைப்படங்களிலும், மெகா தொடர்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கணவன் அடிப்பதை மனைவி பெருமையாக, ஆணின் உரிமையாகக் கருதுகிற காட்சிகள் எல்லாம் கூட கடந்த காலத்தில் வந்திருக்கின்றன. ஆண்மை குறித்த கற்பிதங்களில்  இதுவும் ஒன்றாக இருந்தது. இப்போதும் முழுமையாக மாறிவிட்டதாகச் சொல்ல முடியாது. தாங்கள் மிகவும் விரும்பி பின் தொடரும் கதாநாயகனின் லட்சணமாக இது காட்டப்படும் போது, இதை வன்முறை என்று பார்க்கிற பார்வை எப்படி வரும்?

குடும்பத்தில் ஜனநாயகம்

பெண்ணடிமைத்தனம் உருவான காரணிகள் குறித்து மாமேதை ஏங்கல்ஸ்  அவர்களால் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. உற்பத்தி, மறு உற்பத்தி இரண்டிலிருந்தும் பெண் அந்நியப்படுத்தப்படும் போது, தலைமைப் பொறுப்பில் இருந்தும் சம பங்காளி என்கிற நிலையிலிருந்தும் விலக்கப்படுகிறாள். இரண்டிலும் அவளது உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் நீட்சியாகவே குடும்பம் இருக்கிறது. எனவே குடும்ப கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கிறது. இத்தகைய பிரச்சனைகள் தனிப்பட்ட குடும்பத்தினுடைய பிரச்சனைகளாக கருதப்படக்கூடாது, இவை சமூக பிரச்சனைகள் என்கிற அடிப்படையில் அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகள் வலுப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. வீட்டுப் பணிகள் சமூகமயமாக்கப்பட்டு, பெண்கள் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அரசியலிலும் பொதுத்தளத்திலும் அவர்கள் முத்திரை பதிக்க முடிந்தது என்பதற்கு சோஷலிச சோவியத் யூனியன் ஓர் எடுத்துக்காட்டு. சட்டத்துறையில் மட்டுமல்ல, பண்பாட்டுத் துறை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சிந்தனை மாற்றங்கள்  ஏற்படுத்தப்பட்டன. பெண் சமத்துவமும், பெண் விடுதலையும் நிதர்சனம் ஆவதற்கு உகந்த பவுதீகச் சூழலை சோஷலிச முறைமையே உருவாக்க முடியும். குடும்ப வன்முறை ஒழுங்கு நடவடிக்கைக்குரிய குற்றம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதி கூறுகிறது. இது, குடும்ப வன்முறையை ஒரு முக்கியப் பிரச்சனையாகக் கட்சி கருதுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

என்ன செய்ய வேண்டும்

சட்டம் குறித்த விழிப்புணர்வை அனைத்து மட்டங்களிலும் உருவாக்க வேண்டும். பாடப் புத்தகங்களில் பெண் சமத்துவக் கருத்துக்களும், இத்தகைய சட்டங்களின் சாராம்சமும் இடம்பெற வேண்டும். ஊடகத்துறையினரோடு அரசு அவ்வப்போது கலந்துரையாடல் நடத்தி ஊடகச் சித்தரிப்பு முறையாக வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சமத்துவம் குறித்தும் சட்டங்கள் குறித்தும் சமூகச் செய்தி அடங்கிய விளம்பரங்கள் ஊடகங்களில் வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். சமூக சீர்திருத்தத் துறையின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் சமத்துவக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும். குடி போதை வன்முறைக்கு ஒரு முக்கியக் காரணியாக அமைவதால் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடிட வேண்டும். பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்கள் வருவதற்கான விவாதங்களை தொடர்ச்சியாக எழுப்பிட  வேண்டும். மனுவாதத்தை முன்வைக்கும் சங்பரிவாரங்களின் நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும். உயர் கல்வி, கண்ணியமான வேலை வாய்ப்பு, முறையான ஊதியம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். குழந்தை காப்பகம் போன்ற அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகள் பலப்பட வேண்டும். பலரும் பொதுவெளியில்  பேசத் தயங்குகிற இந்தப் பிரச்சனையை முன்வைத்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்து சமத்துவமும் நேசமும் நிறைந்த ஆரோக்கியமான குடும்பங்கள் உருவாக வேண்டும் என்கிற அறைகூவலை இந்த சிறப்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.