articles

img

இலட்சுமண அய்யர் எனும் மகத்தான போராளி - யூ.கே.சிவஞானம்

தனது குடும்பத்திற்கு என்று சொத்து எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் தங்களது பரம்பரைச் சொத்துகள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நலன்களுக்காகவும், பொதுப்பயன்பாட்டுக்காகவும் ஒதுக்கீடு செய்து வாழ்ந்த இலட்சுமண அய்யர் 2.1.2011-ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு  இளைஞர் வார்தா ஆசிரமத்தில் தேசத்தந்தை  காந்தியடிகளை சந்திக்கிறார். நான் என்ன செய்ய இந்த தேசத்திற்கு என வினவு கிறார். அந்த இளைஞரை ஊடுருவி, நீ எந்த வகுப்பு  என காந்தி வினவுகிறார். நான் பிராமணன் என்று பதில் அளித்தான் அந்த இளைஞன். ‘‘நான் சொன்னால் செய்வாயா’’- காந்தி . ‘‘அது என் கடமை’’ - அந்த இளைஞன். ‘‘போ போய் அரிஜன  மக்களுக்கு சேவை செய்... அவர்களின் குழந்தை களுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து... இந்த  தேசத்திற்கு நீ செய்யப்போகும் சேவை இது தான்’’. காந்தி சொன்னவாறே உருவானது, ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை கொண்டும் முதல்  பிராமண தாளாளரை கொண்டும் தாழ்த்தப் பட்டோருக்கான உண்டு உறைவிடப் பள்ளி. அதை உருவாக்கியவர் தான் இலட்சுமண அய்யர். இன்றும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்து கம்பீரமாய் நிற்கிறது அப்பள்ளி. ஈரோடு மாவட்டம் ஸ்ரீராமபுரம்-கோபி நகரத்தில் வடக்கு புரத்தில் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட நஞ்சை பூமி  பரம்பரைச் சொத்து. இதில் நான்கு ஏக்கர் நிலத்தினை  அரிஜன மக்கள் குடியேறி வாழ இலவசமாக இலட்சுமண அய்யர் குடும்பம் தானம் அளித்தது. மேலும் 2 ஏக்கர் நிலத்தினை அரிஜன விடுதி, அரிஜன பள்ளிக்கு அளித்தார்கள். இவ்விடத்தில் தான் சுமார்  80 வருடங்களுக்கு மேலாக இப்பள்ளி இயங்கு கிறது. தனது இறுதி மூச்சு உள்ளவரை இப்பள்ளி யை பராமரித்துச் சிறப்பாக நடத்தினார் இலட்சுமண அய்யர், இப்பள்ளியில் தங்கிப்படித்த ஆயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தமிழகம்  முழுவதும் அரசுப் பணியில் பல்வேறு துறைகளி லும் இலட்சுமண அய்யரின் மாணவன் என்ற பெருமையுடன் பணியாற்றி வருகிறார்கள்.

சாதிப் புறக்கணிப்பு

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இலட்சுமண அய்யர் நான்கரை ஆண்டு காலம் கோவை, பெல்லாரி, அலிப்பூர் ஆகிய சிறைகளில் சிறைவாசம் அனுபவித்தார். சிறைச் சாலைகளில் மலம், ஜலம் உள்ளிட்ட மனிதக் கழிவுகளை அகற்ற கழிவுச்  சட்டிகள் தரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அவர் களாகவே எடுத்துச் சென்று மலத் தொட்டிகளில் போட வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையால் நோயாளி கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இலட்சுமண அய்யர் சிறைச்சாலைகளில் கழிவுச் சட்டிகளை தூக்கும் பணியினை விரும்பி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது சகோதரர் வேணு கோபால் காலமானதற்கு பின்பு அவரது மனைவி நாகரத்தினம் அவர்களுக்கு விதவை மறுமணத்தை அக்காலத்திலேயே நடத்தி வைத்தார். அதன் விளைவாக அக்ரஹாரத்தில் இலட்சுமண அய்யர் குடும்பத்தை சாதிப் புறக் கணிப்புச் செய்தார்கள். 

ஆலய நுழைவு

மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஒட்டி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்த 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியன்றே, இலட்சுமண அய்யரும். ஸ்ரீகண்டப்பா என்பவரும் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து கொண்டு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்கள். இதன் விளைவாக இலட்சுமண அய்யர் மற்றும் ஸ்ரீகண்டப்பா குடும்பங்கள் அக்ரஹாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். கோபியில் உள்ள 26 பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்க சாதி ஆதிக்க  சக்திகள் தடை விதித்து இருந்ததை எதிர்த்து மக்களை  திரட்டிப் போராட்டம் நடத்தினார். போராட்டத்திற்கு அரசு தடை விதித்தது. இலட்சுமண அய்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை உத்தரவினை ரத்து செய்ததோடு, 26 பொதுக் கிணறுகளிலும் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்த வழி செய்து சாதிய நீர்க்கோட்டையைத் தகர்த்து எறிந்தார்.

நகராட்சித் தலைவர்

1952 முதல் 1955 ஆம் ஆண்டு வரை கோபி நகராட்சித்  தலைவராக இருந்த போது மனிதக் கழிவை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்டிட முயற்சிக்கும் போது இலட்சுமண அய்யரின் பதவி  காலம் முடிந்து விட்டது. மீண்டும் 1986- இல் கோபி  நகராட்சித் தலைவராக பொறுப்பு ஏற்றவுடன் உலக வங்கி உதவியுடன் மாநில அரசிடம் போராடி ரூ.57 லட்சம் நிதி பெற்று அனைத்து பொதுக் கழிப்பிடங் களையும் நீரடி கழிப்பிடமாக மாற்றினார். மேலும் தனி வீடுகளில் உள்ள பழைய கழிப்பிடங்களை அரசிட மிருந்து மானியம் பெற்றுக்கொடுத்து நீரடி கழிப்பிடங் களாக 2 ஆண்டுகளில் மாற்றி அமைத்தார்.

பி.எஸ்.ஜி. கல்லூரியில்... 

இலட்சுமண அய்யரின் இளைய மகன் சுந்தர வடிவேல் பியூசி படிப்பினை முடித்து பொறியாளர் படிப்பினை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க  விரும்பினார். நல்ல மதிப்பெண் பெற்று இருந்தும் சிபாரிசு இருந்தால் சீட் கிடைக்கும் என்ற நிலை,  தனது தந்தைக்கு நிர்வாகத்தில் இருந்த செல்வாக்கி னை உணர்ந்து அவரது மகன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிபாரிசு செய்ய இலட்சுமண அய்யரிடம் நிர்ப்பந்திக்கிறார்கள். வேறு வழியின்றி பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி செல்கிறார் இலட்சுமண அய்யர்.  மாலையில் வீட்டில் அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சீட் எல்லாம் அன்னைக்கே முடிஞ்சிருச்சாம், சீட் எதுவும் இல்லேனுட்டா என  தனது குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டார். வேறுவழி யின்றி பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார் அவரது மகன். இரண்டு ஆண்டுகள் கழித்து  பிஎஸ்.ஜி குழும கல்லூரிகளின் ஆண்டு விழா. இலட்சு மண அய்யர் தான் சிறப்பு விருந்தினர். மேடைக்கு வரு கிறார். பார்வையாளர் அரங்கில் அவரது  மகன் சுந்தரவடிவேல் அமர்ந்திருக்க,

அவரது அருகில் உள்ள ஓரு மாணவர் அய்யரை மேடையில் கண்ட வுடன் எழுந்து வணங்கி கண்ணீர் மல்க சில நிமிடம்  கழித்து அமர்கிறார். அய்யரது மகன் அம்மாணவனை பார்த்து ஏன் அவரைப் பார்த்து வணங்கி கண் கலங்கு கிறீர்கள் என கேட்க, நான் மதுரை மேலூருக்கு அருகில் உள்ள குக்கிராமத்தை சார்ந்த தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்தவன்; பியூசியில் நல்ல மதிப்பெண் பெற்றேன்; இக்கல்லூரியில் படிக்க ஆசை; ஒட்டுப் போட்ட ஆடையோடு நான் இருக்க செல்வந்தர்கள் படிக்கும் இக்கல்லூரியில் கற்க முடியுமா என விக்கித்து நின்ற வேளையில், இலட்சு மண அய்யர் ஆதரவாக எனது தோளில்  கை வைத்து, என்னைப் பற்றி விசாரித்து, நீ நம்ம பையன் தான் உன்னை பார்த்தவுடன் தெரிந்துகொண்டேன் எனக்கூறி நிர்வாகத்திடம் பேசி எனக்கு சீட்டு வாங்கி கொடுத்தவர் என உணர்ச்சிப் பெருக்கோடு கூறியிருக்கிறார்.  இலட்சுமண அய்யர் குடும்பம் வைரவிழா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், வேளா ளர் விடுதி, பழனியம்மாள் பள்ளி, ஸ்ரீராமபுரம் அரிஜன  காலனி, தோட்டிகள் அரிஜன காலனி, விவேகானந்தர் ஐடிஐ,கரட்டிபாளையம் அரிஜனகாலனி உள்ளிட்ட கல்வி மற்றும் பொதுப் பணிக்காக சுமார் 300 ஏக்கர் நிலத்திற்கு மேல் தானம் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வழிகாட்டிய தந்தை

இலட்சுமண அய்யரைப் போலவே அவரது தந்தை டி.சீனிவாச அய்யரும் சாதிய, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய காந்தியவாதி. 1930களில் சாதியக் கொடுமை தலைவிரித்து ஆடிய காலம். தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் கேட்டால் மண்டியிட்டு கையேந்தி உட்கார வைத்து சாதி இந்துக்கள் தண்ணீர் ஊற்றும் நிலை. இதனைக் கண்டு  கொதித்த சீனிவாச அய்யர் தன் சாதி பிராமணர் களையும், சாதி இந்துக்களையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது வீட்டு கிணற்று மேட்டில் மண்டியிட்டு அமர்ந்து தாழ்த்தப்பட்ட ஒருவரை தண்ணீர் ஊற்ற வைத்து சாதி இந்துக்களுக்கு அவர்களின் வழியிலேயே பாடம் புகட்டினார். 1940-ஆம் ஆண்டு வாக்கில் மனிதக் கழிவை வீடு தோறும் சென்று எடுத்து பொதுக்குழிக்கு கொண்டு செல்கிற இழிவான பணியினை செய்து வந்த பன்னியாண்டிகள் என அழைக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றைய ஸ்ரீவித்யாலயா பள்ளி அருகில் உள்ள தனது குடும்பத்திற்கு சொந்த மான நாலரை ஏக்கர் நிலத்தை வீடு கட்டிக் கொள்ள  தானமாக அளித்ததோடு, கட்டுமானச் செலவினங் களுக்காக தனது டி.எஸ்.வங்கியில் தலா ஒருவருக்கு  என ரூ.50 வீதம் கடனாகக் கொடுத்து உதவி செய்த தோடு மட்டுமல்லாமல், மேற்படி கொடுத்த கடனில் ரூ.25-ஐ தள்ளுபடியும் செய்து அம்மக்களுக்கு உதவினார்.

தனது குடும்பத்திற்கு என்று சொத்து எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் தங்களது பரம்பரைச் சொத்துகள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களின்  கல்வி நலன்களுக்காகவும், பொதுப் பயன்பாட்டுக்காக வும் ஒதுக்கீடு செய்து வாழ்ந்த இலட்சுமண அய்யர் 2.1.2011-ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். டி.சீனிவாச அய்யர், எஸ். இலட்சுமண அய்யர் போன்ற சமூகப் போராளிகளின் இலட்சியங்களை முன்னெடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதிய, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதி ராக எண்ணற்ற களப்போராட்டங்களை நடத்து வதோடு தமிழகம் முழுவதும் டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் நூற்றுக்கணக்கான பட்டியலின இளைஞர்கள், இளம் பெண்களை ஒன்றிய, மாநில அரசு பணி யிடங்களில் அமர வைத்துள்ளது. தமிழகத்திலேயே அவர் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு பணிகளை முன்னெடுப்பதில் முதன்மையான இயக்கமாக உள்ளது. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு தோழர்., பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் சத்தியமங்கலம் ராஜன் பகுதியில் பட்டியல் இன மக்களுக்காக தொடர் போராட்டத்தின் மூலம் 38.88 ஏக்கர் விவசாய நிலம் 23 பயனாளிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. சத்தியமங்கலம் உக்கரம் பகுதியில் நிலவி வந்த இரட்டைக் குவளை முறை, உணவகங்களில் சமமாக  உணவு அருந்த முடியாத நிலை, சலூன்களில் முடிவெட்ட முடியாத நிலை என இருந்ததை தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி உரிமைகளை உறுதி செய்தது.

கட்டுரையாளர்: மாநில துணை பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி