articles

காசா: முடிவின்றி தொடரும் யுத்தம்

2024 முழுவதும் காசாவில் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேல் ராணுவம் அறி வித்திருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை, காசாவில் யுத்தம் தொடரும் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

அவர் மேலும், இஸ்ரேல் எகிப்துடனான காசா எல்லையைத் தன் கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவரும் என்றும் கூறியிருக்கிறார். இதன் பொருள், காசாவின் முழுப் பகுதியையும் இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்பதேயாகும். காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும், கடல் வழியாக வும் கடந்த மூன்று மாதங்களாக போரிட்ட பின்னரும், இஸ்ரேல் ராணு வத்தினரால் ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அழிக்க முடிய வில்லை அல்லது ஹமாஸ் போராளிகளால் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முடிவு காண முடியவில்லை. எதார்த்த நிலை என்னவெனில், இஸ்ரேல் ராணுவம் ஹமாசை ஒழிக்கமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். ஹமாஸ் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அது ஏதோ ஒரு வடிவத்தில் மீண்டும் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.  

இன அழிப்பில் இஸ்ரேல்
இஸ்ரேலின் முடிவில்லா யுத்தத்தின் உண்மையான நோக்கம், இந்தக் குறுகிய நிலப்பரப்பில் வாழும் மக்களைக் கொன்றும், பட்டினி போட்டும், பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடித்தும், அவர்களை வாழத் தகுதியற்றதாக்குவதன் மூலம், காசாவில் இனச் சுத்திகரிப்பை உறுதி செய்வதேயாகும்.

பாலஸ்தீன மக்களைப் பொறுத்தவரை 1948இல் தொடங்கிய நக்பா (பேரழிவு) இன்றும் தொடர்கிறது. அக்டோபர் 7இலிருந்து டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் வரையிலும், இஸ்ரேல் சுமார் 29 ஆயிரம் குண்டுகளை வீசியிருக்கிறது. அமெரிக்கா, ஈராக்கின் மீது 2004க்கும் 2010க்கும் இடையே வீசிய 3,678 குண்டுகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கவும். டிசம்பர் 12 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தியின்படி, காசாவில் 85 விழுக்காட்டு மக்கள் தங்கள் இல்லங்களை இழந்து புலம் பெயர்ந்துள்ளார்கள்.

மருத்துவ மனைகளில் 77 விழுக்காடும், பூங்காக்கள், நீதிமன்றங்கள், நூலகங்கள் உட்பட பொதுக் கட்டிடங்களில் 72 விழுக்காடும், தகவல் உள்கட்ட மைப்பு வசதிகளில் 68 விழுக்காடும் மற்றும் அநேகமாக தொழில் மையங்கள் முழுமையாகவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் காரணமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலைத் தாக்குதலில் கடந்த 88 நாட்களில் 22 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அதாவது, சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 250 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்க ளில் 90 பேர் குழந்தைகளாவார்கள். இவ்வாறு உலகம், பாலஸ்தீன மக்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவத்தால் மேற்கொள்ளப் பட்டுவரும் இனப் படுகொலைகளை பார்த்துக்கொண்டு வருகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

வலதுசாரி அமைச்சர்களின் பகிரங்க மிரட்டல்
தீவிர வலதுசாரி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் இது குறித்து  பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். யூத தீவிரவாத தேசிய பாதுகாப்பு அமைச்சர், பென்-க்விர் (Ben-Gvir) மற்றும் நிதி அமைச்சர் ஸ்மோட்ரிச் (Smotrich) ஆகியோர் இந்த மோதலுக்குத் தீர்வு, பாலஸ்தீனர்கள் புலம் பெயர்ந்து செல்வதேயாகும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். பென்-க்விர், “இப்பொழுது நடைபெற்று வரும் யுத்தம், காசாவாசிகள் புலம்பெயர்ந்து செல்வதை ஊக்கு விப்பதில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது,” என்று  கூறியிருக்கிறார்.  இதை எதிரொலித்திடும் விதத்தில், ஸ்மோட்ரிச்சும், காசாவில் குடியிருப்போர் தாமாகவே புலம்பெயர்ந்து செல்வதை ஊக்கு விப்பதைப் பற்றி பேசியிருக்கிறார். யூதர்களின் குடியேற்றங்களை நிறுவுவது உட்பட, காசா பகுதியை முழுமையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்று அவர் கணித்திருக்கிறார். இஸ்ரேல் ஊடகங்களில் அருகில் எகிப்தில் உள்ள வடக்கு சினாய், பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைவதற்கு சிறந்த இடமாக இருக்கக்கூடும் என்று விவாதங்களை மேற்கொண்டிருக்கின்றன.

நேதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலை ஒரு விரிவான பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவ தற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ள விதத்தில் இருந்து இது தெளிவாகிறது. மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலிலும், குடியேறியவர்கள் நடத்திய  தாக்குதலிலும், 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார் கள். 4700 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன விவசாயிகள் விவசாய வேலைகளைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் ஓலிவ் மரங்களை அறுவடை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டி ருக்கிறார்கள். அவர்களுடைய நிலங்கள் மற்றும் வீடுகள் அப்புறப்படுத் தப்படுகின்றன. மேற்குக் கரை முழுவதும் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களால் பாலஸ்தீன மக்கள் நிறவெறி பாணியிலான ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

யுத்தவெறிக்குத் துணை போகும் அமெரிக்காவின் பாசாங்கு
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான ஆதரவை இஸ்ரேல் பெற்றிருப்பதால், அது பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்திடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இனசுத்திகரிப்பு செய்திடும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதை மிக எளிதாகச் செய்துகொண்டிருக்கிறது. ஐ.நா. பொது மன்றத்தில் 150 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்க ளித்திருந்த போதிலும், இந்தத் திசைவழியில் எவ்வித இயக்கமும் நடைபெறவில்லை. ஏனெனில் இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வந்த அனைத்து தீர்மானங்களையும் அமெரிக்கா தன்னு டைய வெட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற முடியாமல் செய்துள்ளது.  அமெரிக்கா, காசாவில் பொது மக்களின் உயிரிழப்புக ளைக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதாக பாசாங்குத்தனம் செய்திடும் அதே சமயத்தில், இஸ்ரேலுக்கு பாலஸ்தீனர்களைக் கொல்வதற்காக ஆபத்தான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அளித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கான 106 மில்லியன் டாலர் உதவித் தொகுப்பு, அமெரிக்க காங்கிரஸ் சபையில் நிறுத்தப்பட்டபின்னர், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு டிசம்பர் மாதத்தில் இரண்டு தடவை அவசர ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 106 மில்லியன் டாலர்களுக்கும் மேல் மதிப்புள்ள 14 ஆயிரம் ரவுண்டுகள் டேங்க் வெடி மருந்துகளை விற்பனை செய்திட முதன்முறையாக ஒப்பு தல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது அவசர விற் பனையாக 147.5 மில்லியன் டாலர்களுக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியுள்ளது. இவற்றின் மூலமாகத்தான் ஐ.நா. நடத்தும் பள்ளிக ளிலும், மருத்துவமனைகளைச் சுற்றிலும் தஞ்சமடைந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப் பட்டார்கள். இவ்வாறு காசாவில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு அமெரிக்கா முழு உடந்தையாக இருந்து வருகிறது. இஸ்ரேலுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை முழுமையாக புரிந்துகொள்ளாவிட்டால், இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இன அழிப்பு செய்திடும் செயல்முறையைப் புரிந்துகொள்ள முடியாது. இஸ்ரேல், ஒரு குடியேற்ற-காலனித்துவ நாடாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவுடன் பல பத்தாண்டு களாக இருந்து பலப்படுத்தப்பட்டது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவந்த நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளவிற்கு வேறெந்த நாடும் வழங்கிடவில்லை. அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாகத்தான், எகிப்தில் தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாக பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இஸ்ரேலு டன் ஒத்துழைக்கத் தொடங்கின.

பாலஸ்தீனர்களை தனிமைப்படுத்தும்  சூழ்ச்சி பலிக்காது
மதச்சார்பற்ற அரபு தேசியவாத சக்திகளை எதிர்ப்பதற்காகவும், இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை எளிதாக்குவதற்காகவும், அமெரிக்கா பிற்போக்கு மன்னராட்சிகளுக்கும், ஷேக்குகளுக்கும் முட்டுக் கொடுத்தது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு ஆப்ரகாம் ஒப்பந்தங்களாகும். ஆனால், அரபு நாடுகளின் ஆட்சியாளர்களால் பாலஸ்தீன மக்கள் கைவிடப்பட்டபோதிலும், அரபு மக்கள் பாலஸ்தீன மக்களுக்கான தங்கள் ஆதரவையும்,  ஒருமைப்பாட்டையும் எப்போதும் கைவிட்டதில்லை. அரபு நாடுகள் முழுவதிலும் உள்ள மக்கள் காசா மக்களுக்காக அளித்துவரும் ஆதரவின் எழுச்சி, அமெ ரிக்கா-இஸ்ரேல் அச்சு என்னசெய்த போதிலும், பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி, நசுக்கிட முடியாது என்பதைக் காட்டுகிறது. லெபனான் எல்லையில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹெஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதல்களும், செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹௌதீகளின் (Houthi) தாக்குதல்களும் மற்றும் பல குறியீடுகளும் இப்பிராந்தியத்தில் மோதல்கள் விரிவடைந்து வருவதையே காட்டுகின்றன. இவை தற்போ தைய புவிசார் அரசியல் சக்திகளின் சமநிலையை சீர்குலைக்கலாம்.

ஜனவரி 3, 2024, 
தமிழில்: ச.வீரமணி