வலுவான உளவுத்துறையை வைத்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை ஏன் கணிக்க முடியவில்லை?
பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தனது ராணுவ வலிமை குறித்து இஸ்ரேலுக்கு இருந்த இறுமாப்பு. அமெரிக்கா தன் பக்கம் எனும் மூர்க்கத்தனமான நம்பிக்கை. மேற்கு பாலஸ்தீனத்தில் மக்களை விரட்டிவிட்டு குடியேற்றம் மூலம் யூதர்களை நிலைநிறுத்திய பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பு தர ராணுவம் அங்கு சென்றது. இஸ்ரேல் உளவு அமைப்புகள் கள தகவல்களை சேகரிப்பதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை அதீதமாக சார்ந்து இருந்த நிலை. ஹமாஸ் தனது செல்லப்பிள்ளை எனும் நெதன்யாஹுவின் நம்பிக்கை. மேலும் ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டு வானொலி மற்றும் தகவல் ஊடகங்களில் இஸ்ரேலை தாக்கும் எண்ணமில்லை என அடிக்கடி திசை திருப்பப் பேசியது- என பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன
முட்டாள்தனமானது
இஸ்ரேலை பொறுத்தவரை இது எதிர்பாராத தாக்குதலா?
முட்டாள்தனமான தலைவர்கள்தான் இதனை எதிர்பாராதது எனக்கூறுவர். காசா பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக மக்கள் அதீத துன்பங்களில் இருக்கின்றனர். காசா பகுதி ஒரு “திறந்த வெளி சிறைச்சாலை” எனவும் அது “வதை முகாம்” எனவும் மேற்கத்திய பத்திரி கைகளே வர்ணித்துள்ளன. அத்தகைய துன்பங்களில் வாழும் மக்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என எவராவது எதிர்பார்க்க இயலுமா?
மேற்கு கரையில் தினம்தோறும் பாலஸ்தீன மக்களின் வீடுகளும் சொத்துக்களும் பறிக்கப்பட்டு அந்த இடத்தில் இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்படுகின்றனர். இது அந்த மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாதா?
ஜெருசலேமில் உள்ள முஸ்லீம்களின் மூன்றாவது புண்ணியத் தலமான அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டு அங்கு யூதக்கோவில் கட்ட வேண்டும் என இயக்கம் உருவாக்கப்பட்டு அந்த மசூதி பலமுறை தாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேலில் அமைச் சர்களாகவும் உள்ளனர். அக்ஸா மசூதிக்கு உள்ள ஆபத்து அனைத்து பாலஸ்தீன மக்களிடமும் கடும் கோபத்தை உருவாக்கியது.
எல்லாவற்றுக்கும் மேலாக நெதன்யாஹூவின் அரசாங்கம் பாலஸ்தீனம் இல்லாத வரை படத்தை உருவாக்குவோம் என ஐ.நா.சபை யிலேயே பகிரங்கமாக கர்ஜிக்கிறது. இதுவெல்லாம் பாலஸ்தீன மக்களிடம் எதிர்வினை உருவாக்காது என இஸ்ரேல் அல்லது அமெ ரிக்க ஆட்சியாளர்கள் நினைத்தால் அது அவர்களின் முட்டாள் தனமாகவே இருக்கும்.
அரேபிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் உருவாகிவரும் உறவை சீர்குலைக்கவே ஹாமாசின் தாக்குதல் என்பது உண்மையா?
ஹமாஸ் அந்த அளவுக்கு நுணுக்கமாக ஆய்வு செய்ததா என்பது எவருக்கும் தெரியவில்லை. ஆனால் ஹமாசின் தாக்குதல், இஸ்ரேலின் எதிர்த்தாக்குதல் காரணமாக சவூதி அரசு இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தைகளை நிறுத்திவைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.
இஸ்ரேலுக்கு ஆதரவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவும் எப்படி உள்ளது?
இஸ்ரேலை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகள் மட்டும்தான் ஆதரிக்கின்றன. சீனா/ரஷ்யா உட்பட பிரிக்ஸ் நாடுகளும் பல ஆசிய/ஆப்பிரிக்க/லத்தீன் அமெரிக்க தேசங்களும் பாலஸ்தீன மக்கள் பக்கம் நிற்கின்றன. முதலாளித்துவ நாடுகளிலே கூட கணிச மான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கவில்லை. துரதிர்ஷ்ட வசமாக இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கும் நாடு எனும் மோசமான பெயரை பெற்றுவிட்டது.
அரேபிய மக்களின் நம்பிக்கை இழப்பு
இந்தியாவின் தவறான நிலையால் என்ன விளைவுகள் ஏற்படும்?
1933-இல் காந்திஜி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வலுவான குரலை கொடுத்தார். அன்றிலிருந்து இந்தியா பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே நின்றுள்ளது. வாஜ்பாய் உட்பட அனைத்து தலைவர்களும் பாலஸ்தீன ஆதரவு நிலையே எடுத்துள்ளனர். ஆனால் மோடி அரசாங்கம் அந்தர்பல்டி அடித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வளரும் நாடுகள் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளன. அரேபிய மக்களின் நம்பிக்கையை இந்தியா இழந்துள்ளது. இந்தியா விஸ்வகுரு எனும் தகுதி பற்றி பேசினால் எந்த தேசமாவது இனி மதிக்குமா?
சீனாவின் பிஆர்ஐ (BRI) திட்டத்தில் இந்தியா சேரவில்லை. இந்தியா-அரேபியா-ஐரோப்பா என அமெரிக்க உருவாக்கிய ஒரு முதலீடு திட்டத்தில் இணைய இந்தியா திட்டமிட்டது. ஆனால் இன்று இஸ்ரேல் நடவடிக்கை காரணமாக அந்த திட்டம் சீர்குலையும் நிலை யில் உள்ளது. ஒரு வேளை எதிர்காலத்தில் அரேபிய நாடுகள் இத்தகைய திட்டத்தில் இந்தியாவை இணைக்குமா எனும் ஒரு நிலையற்ற பொருளாதாரச் சூழலை மோடி அரசாங்கம் உருவாக்கிவிட்டது.
வெட்கக் கேடான செயல்
நெதன்யாஹுவின் ராஜினாமாவை இஸ்ரேல் மக்கள் வலுவாக கோரும் சூழலில் சங்கிகள் அவரை பாராட்டி சமூக ஊடகங்களில் செயல் படுவது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள் ளது. பாலஸ்தீன மக்களை இழிவுபடுத்தும் பதிவுகளையும் சங்கிகளே அதிக மாக சுற்றுக்கு விடுகின்றனர். பாலஸ்தீன பிரச்சனையை முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சனையாக மோடி அரசாங்கம் பார்த்ததன் விளைவுதான் இது!
ஐரோப்பிய ஒன்றியம் கூட இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித் துள்ளது. ஸ்பெயின் பகிரங்கமாக கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெ ரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சரியல்ல என கூறியுள்ளார். சின்னஞ்சிறு நாடான கொலம்பியா, இஸ்ரேல் செய்வது இனப் படுகொலை என கண்டித்துள்ளது. ஆனால் “விஸ்வகுரு” தடம் மாறியது மிகவும் வெட்கக் கேடான செயல்
விரும்பத்தகாத ஆபத்துள்ளது
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கு பகுதி மோதலாக மாறுமா? உலகம் முழுவதும் பதற்றம் ஏற்படுமா?
அவ்வாறு ஏற்படாது என நிச்சயமாகச் சொல்ல முடியாது. காசா பகுதியில் எங்களது ராணுவம் நுழையும் என இஸ்ரேல் கூறியுள்ளது. அப்படி நடந்தால் தாங்களும் போரில் ஈடுபடுவோம் என லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அமைப்பிடம் சுமார் 1,00,000 ஏவுகணைகள் உள்ளதாக ராணுவ நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அவை இஸ்ரேல் நோக்கி பாயும். ஹெஸ்புல்லாவுக்கும் ஈரானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு வேளை ஈரான் போரில் ஈடுபட்டால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானை தாக்கினால் இந்த போர் உலகம் முழுவதும் விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது.
அரேபிய நாடுகளின் நிலை என்ன?
அரேபிய நாடுகளின் ஆதரவின்மை என்பது பாலஸ்தீன மக்களின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம். அரேபிய நாடுகளின் ஆதரவு வார்த்தையில் மட்டுமா? அல்லது செயலிலும் இருக்குமா என்பது பொறுத்துதான் பாலஸ்தீன மக்களுக்கு நியாயம் கிடைக்குமா எனும் கேள்விக்கு பதில் அடங்கியுள்ளது.
சவால்கள், பின்னடைவு உருவாகும்
காசாவை முற்றிலும் இஸ்ரேல் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதா?
இஸ்ரேல் ராணுவத்தில் ஏற்கெனவே 1,50,000 வீரர்கள் உள்ளனர். மேலும் 3,00,000 பேரை ராணுவத்துக்கு அழைத்துள்ளது இஸ்ரேல்! காசாவில் உள்ளே நுழைந்தால் இரு பக்கமும் மிகப்பெரிய உயிர்ச் சேதம் விளையும். எனினும் இஸ்ரேல் வெல்லும் வாய்ப்பு கேள்விக்குறி தான் என ராணுவ நிபுணர்கள் சிலர் மதிப்பிடுகின்றனர். அதற்கு காரணம் ஹமாஸ் அமைப்பு காசா முழுவதும் பூமிக்கு கீழே உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புதான்! இஸ்ரேல் பூமிக்கு மேலே போரிடும்! ஆனால் ஹமாஸ் அமைப்போ பூமிக்கு அடியில் ஒளிந்திருந்து கொரில்லா முறையில் போரிடும். இஸ்ரேல் ராணுவத்துக்கு “நகர்ப்புறப் போர்” அனுபவம் இல்லை. மேலும் இஸ்ரேல் தாக்கு தலில் கோபமடைந்துள்ள பல சாதாரண பாலஸ்தீனர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் ஹமாஸ் பக்கம் இணையலாம்; அல்லது அவர்களுக்கு உதவலாம்! இவையெல்லாம் இஸ்ரேலுக்கு பல சவால்களை உருவாக்கும். ஹெஸ்புல்லாவோ அல்லது ஈரானோ அல்லது ஏமனின் ஹவுத்தி அமைப்பினரோ இரண்டாவது போர் முனையை இஸ்ரேலுக்கு எதிராக தொடங்கினால் அதுவும் இஸ்ரே லுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
ஒரு வேளை ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் ஒழித்தாலும் பாலஸ்தீன பிரச்சனை தீராது! சுதந்திர பாலஸ்தீனம் என்பது மட்டும்தான் நிரந்தர தீர்வு!
இஸ்ரேல் பிரச்சனை காரணமாக உக்ரைனை அமெரிக்கா கை விட்டுவிடுமா?
ஆம்! உக்ரைனை பொறுத்தவரை உதவியின் கடைசி கட்டத்தில் உள்ளோம் என அமெரிக்கா பகிரங்கமாகவே கூறிவிட்டது. அதுதான் ஏகாதிபத்தியம்! அத்தகைய ஏகாதிபத்தியத்தை நம்பிய உக்ரைனின் நிலை பரிதாபமான ஒன்றுதான்!
அ.அன்வர் உசேன்