ஜான்சிராணி,
5 வகுப்பு ‘அ’ பிரிவு.
டாக்டர் டி. திருஞானம் துவக்கப்பள்ளி,
மதுரை -9.
ஒரு கிராமத்தில் கேசவன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். கேசவன் தனது பெற்றோர்களுடன் வீட்டில் வசித்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் வயதானவர்கள். பற்கள் இல்லாமல் இருந்தனர். அவர்கள் பேசுவது அரைகுறையாக வெளிப்படும். கேசவனின் மகள் மீனாவுக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். அவர்கள் பேசுவதை ரசிப்பாள். ஆனால், கேசவனின் மகன் தருணுக்கு அவர்களைப் பிடிக்காது. ஆகவே, தாத்தா பாட்டியிடம் பேச மாட்டான். ஏதாவது சொன்னால் எரிந்து விழுவான். அவர்கள் சிலநேரங்களில் படுக்கையிலேயே சிறுநீர் போய்விடுவார்கள். அதனால், அவர்கள் அறை துர்நாற்றம் வீசும். அது தருணுக்குப் பிடிக்காது. அவன் அழுவான். கேசவன் அவர்களுக்கு வீட்டுக்கு வெளியே தனியாக குடிசை அமைத்துக் கொடுத்தார். அங்கு அவர்கள் தங்கி வாழ்ந்தனர். சாப்பிட மட்டும் வீட்டிற்கு வந்து சென்றனர்.
ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் வீட்டிற்குள் வந்தான். திருடன் கத்தியை வைத்து மிரட்டினான். பீரோவில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்கச் சொன்னான். சத்தம் கேட்டு தருண் எழுந்தான். அவன் கழுத்தில் கத்தியை வைத்து திருடன் மிரட்டினான். வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்கிறது என்பதை அறிந்தாள். பாட்டி உடனே 100 என்ற எண்ணிற்கு ஃபோன் செய்தாள். போலீஸ் சைரன் சத்தம் கேட்டது. திருடன் ஓடி விட்டான். வீட்டிற்கு வந்த போலீஸ் விசாரித்தது. பாட்டிதான் போன் செய்தது என்பதை அறிந்து கொண்டனர். மகனை காப்பாற்றியதற்கு கேசவன் நன்றி கூறினான்.
போலீசார் பாட்டியின் தைரியத்தைப் பாராட்டினார்கள். தருண் அதனை கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் எல்லோரும் வேலைக்குச் சென்று விட்டனர். தருண் மட்டும் வீட்டில் இருந்தான். அவன் விளையாட வெளியே வந்தான். அப்போது, மரத்தின் மேல் அமர்ந்து ஒரு காகம். அது கூடு கட்ட கொண்டுவந்த முள் வாயில் இருந்து கீழே விழுந்தது. தருணின் காலில் முள் குத்தியது. அவன் வலியால் துடித்தான். இரத்தம் வழிந்தது. உடனே, குடிசையில் இருந்த தாத்தாவும் பாட்டியும் ஓடி வந்து தூக்கினர். தாத்தா ஈரத் துணியால் இரத்தத்தைத் துடைத்தார். பாட்டி மஞ்சள் பத்து போட்டார். அவனால் நடக்க முடியவில்லை. தாத்தாவும் பாட்டியும் கை தாங்கலாகப் பிடித்தனர். அவனை மெல்ல நடக்க வைத்தனர். படுக்கையில் படுக்க வைத்து உறங்கச் செய்தனர். அவன் தந்தை வந்தவுடன் நடந்ததைக் கூறினான். தாத்தா பாட்டியிடம் பேசத் தொடங்கினான். பெற்றோரை மதிக்க தொடங்கினான். நாட்கள் நகர்ந்தன. “தாத்தாவும் பாட்டியும் நம்முடன் வீட்டில் இருக்கட்டும் அப்பா!” என்றான்.
கேசவன் சிரித்தார்.