“உயரமான மலைகள், எல்லையின்றிப் பரந்த சமவெளிகள், நெடிய வயல்கள், பிரம்மாண்டமான ஆறுகள், கண்ணுக்கு எட்டும் தொலைவுவரை அடர்ந்து மண்டியிருக்கும் காடுகள், வடக்கே உருகாத பனிப் பாறைகள், தெற்கே இதமான கடலும் வெப்பத்தின் ஆட்சியும். பசிபிக் மாகடலில் உதிக்கும் சூரியன்... இதுதான் சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் யூனியன்(USSR). உலகிலேயே எல்லாவற்றிலும் பெரிய அரசு. இதன் நிலப்பரப்பில் 25 கோடிக்கும் மேல் மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசுகிறார்கள். ஆனால், சோவியத் யூனியன் புகழ் பெற்றிருப்பது பரப்பின் விரிவுக்காகவும், தனது நிலத்தில் கொட்டிக் கிடக்கும் செல்வங்களுக்காகவும் மட்டுமே அல்ல. சோவியத் யூனியன் புதிய உலகின் தாயகம். மனிதனை மனிதன் சுரண்டும் வழக்கம் இல்லாத உலகம் இது. குடிமக்களின் அரசியல், நாட்டின் சமத்துவம் வாழ்க்கையின் தலைமைச் சட்டமாக விளங்கும் நாடு இது. குடிமக்களின் அரசியல், நாட்டின் இனசமத்துவம், வாழ்க்கையின் சட்டமாக விளங்கும் நாடு இது. உலக வரலாற்றில் ஆட்சி அதிகாரம் அனைத்தும், எல்லா செல்வ வளங்களும் அவற்றைப் படைப்பவர்களின், உழைப்பாளிகளின் கைகளில் இருக்கும் முதலாவது அரசு சோவியத் யூனியன்தான். இங்கே சோஷலிச சமூகம் நிறுவப்பட்டுவிட்டது. கம்யூனிசக் கட்டுமானச் செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.” - -சோவியத் நாட்டைப் பற்றிய ஓர் அழகான-மிகச் சுருக்கமான சித்தரிப்பு இது.
சோவியத் நாட்டின் கட்டுரையாளர்கள் செ.வெ.அலெக்ஸேயெவ், வி.கே.கார்த்ஸவ், அ.யா.திரோயித்ஸ்கி ஆகிய மூவர் கூட்டாக எழுதிய, சோவியத் நாட்டில் தமிழில் அச்சிடப்பட்ட, மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1977-ல் வெளியிட்ட “சோவியத் நாட்டின் சுருக்கமான வரலாறு” என்ற நூலின் முன்னுரையில்தான் இந்தச் சித்தரிப்பு. சோஷலிச சமுதாயம் நிறுவப்பட்டு நிறைவுற்று அடுத்த கட்டமான கம்யூனிச சமுதாயக் கட்டுமானச் செயல் திட்டம் நிறைவேற்றப்பட்டுவரும் காலத்தில்தான் 70 ஆண்டுகளாக நீடித்துவந்த சோவியத் யூனியனுக்கே ஆபத்து வந்துவிட்டது!
வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் கூறுவதைப் பார்ப்போம்: “சோவியத் மாற்றங்கள் குறித்து நம் நாட்டில் காணக்கூடிய கருத்துப் போக்கு என்பது அந்த மாற்றங்களை வாழ்த்தி வரவேற்பதாகும். இந்த வகையறாவைச் சேர்ந்தவர்கள் சோவியத் யூனியனின் ஒருமைப்பாடு சிதறுவதையும், அங்கே சோஷலிசம் கைவிடப்பட்டு முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் பார்த்து குதூகலம் அடைகிறார்கள். இந்த வகையறாவைச் சேர்ந்தவர்கள் ஏகபோக முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். இந்தியாவின் ஏகபோகப் பத்திரிகைகள் சோவியத் மாறுதல்களை ஒரே குரலில் வரவேற்கின்றன.” ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு 1991 அக்டோபரில் வெளியிட்ட“சோவியத் நாட்டில் நடப்பது என்ன?” பிரசுரம்)
மேன்மை மிக்க சோவியத் நாடு நம் இந்தியாவுக்குச் செய்த பேருதவிகளை அதே பிரசுரத்தில் நினைவூட்டுகிறார் தோழர் சுர்ஜித்:
“சுதந்திரத்துக்குப் பிறகும்கூட ஏகாதிபத்தியம் தனக்குத் தேவையான மூலப்பொருள்களை மலிவாக வாங்குவதற்கும், தனது தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை லாபகரமாக விற்பதற்கும் சந்தையாக இந்தியாவை வைத்துக் கொண்டு சுரண்டலை நீட்டிக்க விரும்பியது. அப்போது இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டியது சோவியத் யூனியன்தான். இந்தியாவில் கனரகத் தொழிற்சாலைகளை நிறுவவும், ஒரு தொழில் தளத்தை உருவாக்கவும், ஏகாதிபத்திய நிர்பந்தங்களை எதிர்க்கவும் உதவியது சோவியத் யூனியன்தான்.” கோர்பச்சேவ், யெல்ட்சின் ஆகியோர் தலைமையிலான சோவியத் நாட்டைக் காட்டித்தான் மார்க்சிய சிந்தாந்தமே தோற்றுவிட்டது என்று தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏடுகள் விடாது எழுதிவந்தன. உண்மை என்ன? சோவியத் நாட்டின் அன்றைய சோகமயமான நிகழ்வுகளுக்கு காரணம் மார்க்சிய - லெனினிய சித்தாந்தம் அல்ல; மாறாக அதிலிருந்து விலகிச் சென்றதே அதற்கு முதலும் முடிவுமான காரணம்.
“ஸ்ரீமான் லெனின்”
இனி நாம் நவம்பர் சோஷலிசப் புரட்சியின் நினைவுக்குச் செல்வோம்:
மகாகவி பாரதியின் வார்த்தையில் சொல்வதென்றால் “ஸ்ரீமான் லெனின்” தலைமையில், ரஷ்ய நாட்டு தொழிலாளி-விவசாயி உழைக்கும் வர்க்கம் மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாகப் புரட்சியின் மூலம் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி அதிகார பீடம் ஏறிய புரட்சிகர நன்னாள் நவம்பர் 7 (1917). இந்தியாவெங்கும் - உலகம் முழுவதிலும் கம்யூனிஸ்ட்டுகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் செங்கொடிகள் ஏற்றி, ஊர்வலங்கள் நடத்தி, புரட்சிகர முழக்கங்கள் எழுப்பி, உரை நிகழ்த்தி - புதுயுகமாய் எழுந்த ரஷ்ய சோஷலிசப் புரட்சிக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டாடும் ஒரு சர்வதேச நாள்!
லெனின் அறைகூவல்
இனி, 1917-ல் சோஷலிசப் புரட்சியை தலைமை வகித்து நடத்திய தோழர் லெனின் வெற்றி முழக்கத்துடன் விடுத்த வேண்டுகோளைக் கேட்போம். ரஷ்ய கட்சித் தோழர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் படையாட்களுக்கும் லெனின் வேண்டுகோள் விடுக்கிறார்: “தோழர்களே, தொழிலாளர்களே, படைவீரர்களே, விவசாயிகளே, அனைத்து உழைப்பாளி மக்களே! தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சி பெத்ரோகிராடிலும் மாஸ்கோவிலும் வெற்றி வாகை சூடிவிட்டது. புதிய அரசாங்கத்திற்கு போர்முனையிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் நாள்தோறும் மணிதோறும் வாழ்த்துரைகள் வந்தவண்ணமுள்ளன. பெரும்பான்மையான மக்கள் ஏற்கெனவே புரட்சியின் பக்கம் சேர்ந்துகொண்டுவிட்டதால் புரட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. “நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், அரசாங்க அலுவலர்கள் ஆகியோரின் மேல்மட்டத்துக் கோஷ்டிகளும் - சுருங்கக் கூறின் செல்வந்தர்களும் அவர்களை ஆதரிப்போரும் இந்தப் புதிய புரட்சியிடம் பகைமை கொண்டுள்ளனர்.
இதன் வெற்றியை எதிர்க்கின்றனர். வங்கிகளை மூடப்போவதாக அச்சுறுத்துகின்றனர். பிற அலுவலகங்களின் வேலைகளைச் சீர்குலைத்தும் தடுத்து நிறுத்தியும் வருகின்றனர். அவையெல்லாம் முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியவையே. இத்தகைய எதிர்ப்பு தவிர்க்க முடியாதபடி ஏற்படவே செய்யும் என்பது அரசியல் உணர்வு படைத்த ஒவ்வொரு தொழிலாளியும் நன்கு அறிந்ததுதான். உழைக்கும் வர்க்கங்கள் இந்த எதிர்ப்பைக் கண்டு கணப்பொழுதும் கலக்கமடையப் போவதில்லை. பெரும்பான்மையான மக்கள் நம் பக்கமே உள்ளனர். உலகெங்கும் உழைப்பாளரும் ஒடுக்கப்பட்டோருமான மக்களில் பெரும்பான்மையோர் நம் பக்கமே உள்ளனர். நமது இலட்சியம் நேர்மையானது. வெற்றி நமதே என்பது உறுதியாகிவிட்டது!” லெனின் தொடர்ந்து முழங்குகிறார்: “தோழர்களே! உழைப்பாளர்களே! அரசாங்கத்தை நீங்களேதான் நெறிப்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே உங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு அரசின் எல்லா விவகாரங்களையும் உங்கள் கையில் எடுத்துக் கொள்ளாவிடில் யாரும் உங்களுக்குத் துணைபுரியப் போவதில்லை. இப்போது முதல் உங்களின் சோவியத்துகள்தான் அரசு அதிகார உறுப்புகள். அவற்றைப் பலப்படுத்துங்கள். கடுமையான புரட்சிகரக் கண்காணிப்பை நிறுவிக் கொள்ளுங்கள். குடிகாரர்களும் குண்டர்களும் எதிர்ப்புரட்சி யூன்கெர்களும் கர்னீலவியர்களும் அராஜகத்தை உண்டாக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் ஈவிரக்கமின்றி நசுக்குங்கள்!”
உலகைக் குலுக்கிய நாட்கள்
மாமேதை லெனின் விடுத்த அறைகூவலை ஏற்று அங்கே என்ன நடந்தது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த நிருபர் ஜான் ரீடு, ரஷ்யப் புரட்சியின் நிகழ்வுகளை நேரில் கண்டறிந்து எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில் இப்படி வர்ணிக்கிறார்: “உலகிலேயே மிகக் கொடிய ஒடுக்குமுறையால் வதைக்கப்பட்ட பதினாறு கோடி மக்களைத் திடுமெனச் சுதந்திரம் அடையச் செய்த ஒரு மாபெரும் புரட்சியைத் தொடர்ந்து எழுந்த குழப்பத்தையும் மீறி, புதிய ஆட்சியின் ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு உள்நாட்டு நிலைமையும், சேனையின் போர் ஆற்றலும் மெய்யாகவே மேம்பாடுற்று வந்தன...” ஆட்சியதிகாரத்தை ஜாரிடமிருந்து பறித்துத் தங்களிடம் கொடுக்கக்கூடிய ஓர் அரசியல் புரட்சியை மட்டுமே சொத்துடைமை வர்க்கங்கள் விரும்பின. ரஷ்யாவானது பிரான்சு அல்லது அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற சட்டமுறைக் குடியரசோ, அல்லது இங்கிலாந்து போன்ற சட்டமுறைக் குடியரசோ ஆகவேண்டுமென விரும்பின. ஆனால் மக்கள் பெருந்திரளினர் இதற்கு மாறாக, மெய்யான தொழிலாளர், விவசாயிகளது ஜனநாயகத்தையே நாடினர்...இந்தப் புரட்சிக்குப் பின்னர் போல்ஷ்விக்குகளின் (கம்யூனிஸ்ட்டுகளின்) வரலாறு அவர்களது இடையறாத வளர்ச்சியின் வரலாறாகத் திகழ்கிறது.”
புரட்சியின் காலத்தில், ஜான் ரீடு குறிப்பிடும் ‘சொத்துடைமை’ வர்க்கங்களின் தலைவன் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சிபுரிய முயற்சித்து தோல்வியுற்றதைப் பற்றி ரஷ்யப் புரட்சிக் காலத்தில் வாழ்ந்த நமது மகாகவி பாரதி கூறுவதைப் பார்ப்போம்: “ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் சமத்துவக் கட்சியார்-அதாவது போல்ஸ்விஸ்ட் கட்சியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும், ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷ்விஸ்ட்டுகளின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம் முதலாளித்துவக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால், கெரன்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்கவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவிதங்களில் உதவி பெற்ற போதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரை தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய் நேச வல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுக நேரிட்டது.”
மகாகவி பாரதி வரவேற்று வாழ்த்திப் பாடிய “புதிய ருஷ்யா” கவிதை 1917 நவம்பர் 7 புரட்சியை அல்ல, பிப்ரவரி புரட்சியையாகும் என்று சிலர் தவறான புரிதலில் சொன்னது உண்டு. ஜார் ஆட்சி வீழ்ச்சியுற்று இடையில் அதிகாரத்திற்கு வந்த கெரன்ஸ்கி ஆட்சியைத்தான் பாரதி வாழ்த்தியதாக அவர்கள் கூறியது உண்டு. இப்படிச் சொன்னவர்கள் பாரதியின் மேற்கண்ட வாசகங்களை முழுமையாக வாசித்துப் பார்த்தால் புரட்சியின் உண்மை தெளிவடையும். கொடுங்கோலன் ஜார் மன்னனை எதிர்த்து 1905-07 ஆண்டில் ரஷ்ய மக்கள் ஆவேசத்துடன் பொங்கியெழுந்து கிளர்ச்சி செய்தது முதலாவது புரட்சி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புரட்சி தோல்வியுற்றாலும் இந்தப் புரட்சியின் மூலம் அடுத்த புரட்சிக்கான அனுபவத்தை மக்கள் பெற்றனர். இந்த முதல் புரட்சி முழுப் புரட்சிக்கான ஒத்திகையாக இருந்தது. “1905-ல் நடந்தது போன்ற இத்தகைய முழு ஒத்திகை இல்லாமல் 1917 பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சியும் சரி, 1917 நவம்பரில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியும் சரி சாத்தியமில்லாமல் போயிருக்கும்” என்றார் புரட்சிக்குத் தலைமை வகித்த மாமேதை லெனின்.
புரட்சி என்ன செய்தது?
உலகமே வரவேற்றுப் பாராட்டிய புதிய சோஷலிச சோவியத் அரசின் புரட்சிகரச் சீரமைப்பு நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதை 1960-ல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வெளியிட்ட “அரசியல் பாடங்கள்” எனும் நூலிலிருந்து பார்ப்போம்: “நிலம் சம்பந்தமான லெனினது பிரகடனத்தை அகில சோவியத்தின் இரண்டாவது காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் விவசாயிகளின் நீண்டகாலக் கனவு நனவாகியது. நிலப்பிரபுக்கள், முதலாளிகள், ஜார் மன்னன், மதக்குருக்கள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 80 கோடியே 50 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடையே பங்கிடப்பட்டது. நிலப்பிரபுக்களுக்கு ஆண்டுதோறும் விவசாயிகள் கொடுத்துவந்த 50 கோடி தங்க ரூபிள்கள் குத்தகை ரத்து செய்யப்பட்டது. தொழிலாளிகள் ஆலைகளில் 8 மணி நேரம்தான் வேலைசெய்ய வேண்டும் என சோவியத் அரசைப் பணித்தது. பொருள் உற்பத்தியில் தொழிலாளி வர்க்கம் ஆதிக்கம் வகிக்க வேண்டும் என்று தீர்மானித்தது. வங்கிகள், ரயில்வேக்கள், வியாபாரக் கம்பெனிகள் போன்ற பொருளாதார நிறுவனங்கள் முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்க உடைமைகளாக்கப்பட்டன. பெரிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டன. நிலம், ஆலைகள், வங்கிகள், ரயில்வேக்கள் ஆகிய நிறுவனங்கள் அரசாங்க உடைமைகளாக்கப்பட்டதானது முதலாளித்துவ சமுதாய அமைப்பைத் தகர்த்து சோஷலிச சமுதாயத்தை அமைக்க அடித்தளமாக விளங்கியது.” உலக வரலாற்றிலேயே முதன்முறையாக உருவான சமத்துவம் பூத்த தேசமாகிய ரஷ்யா சமூக, பொருளாதார, தொழில், விவசாயம், சுகாதாரம், அறிவியல், கல்வி, கலாச்சாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டது. இதற்கு உதவியது அந்த நாட்டின் திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரமும். ஐந்தாண்டுத் திட்டமும். பொதுத்துறைகளுமாகும்.
ஹிட்லரை வீழ்த்தி உலகைக் காத்த புரட்சி
“எத்தனை நாட்டின் சொத்துக் குவியல் எத்தனை நாட்டில் இருந்த காலாட் படைகள் அத்தனையும் சேர்த்து அலைஅலை யாக உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான் உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான் பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான் மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென, ஒக்க வாழும் உறுதி இதுவென முதிய பெரிய முழுநிலத் திற்கும் புதிய தாகப் புகட்டிய நாட்டில் செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!”
- இரண்டாம் உலக யுத்தத்தின்போது (1938-45) சோவியத் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றி அழிக்க நடத்திய பாசிஸ்ட் ஹிட்லரின் படையெடுப்பைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய கவிதை இது. சோஷலிசப் புரட்சியின் வெற்றியை வாழ்த்தி பாரதி “புதிய ருஷ்யா” கவிதை இயற்றினாரென்றால், அந்தப் புதிய ருஷ்யா தனக்கு எதிரான பாசிசப் படையெடுப்பை வென்றதை வாழ்த்தி பாவேந்தர் பாரதிதாசன் கவிதை இயற்றினார். என்னே ஒற்றுமை! முழு உலகமும் சமத்துவமாக மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழிகாட்டிய நாடு சோவியத் நாடு. அந்த “உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்”- என்கிறார் பாவேந்தர். சோவியத் நாட்டை ‘உலகின் உயிர்’ என்றார் பாவேந்தர். எவ்வளவு உயர்வான சொல்! உலகின் உயிரை ஒழிப்பதற்காகப் படையெடுத்த ஹிட்லரை ‘தீர்ந்தான்; முற்றிற்று’ என்று பெருமகிழ்ச்சியுடன் சொல்லி கவிதையை முடிக்கிறார் பாவேந்தர்.
பத்தே வாரங்களில் மாஸ்கோவைப் பிடிப்பேன். கிரெம்ளின் மாளிகை மீது நாஜிக் கொடியைப் பறக்கவிடுவேன் என்று கொக்கரித்தான் ஹிட்லர். ஆனால் நடந்தது என்ன? 1945 மே மாதம் செஞ்சேனை வீரர்கள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினைக் கைப்பற்றினர். செஞ்சேனை வீரர்கள் எம்.ஏ.எகரோவும், எம்.வி. காண்டாரியாவும் ஜெர்மன் நாடாளுமன்றமான ரீச்ஸ்டாக் கோபுரத்தின் உச்சியில் ஏறி வெற்றியின் அடையாளமாகச் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பொறித்த செங்கொடியை நாட்டிப் பறக்கவிட்டனர். பெர்லின் சரணடைந்தது. இத்தோடு பாசிஸ்ட் ஹிட்லர் இறுதியாக வீழ்ந்தான். ஐரோப்பாவும் உலக நாடுகளும் காப்பாற்றப்பட்டன! உலகம் நிம்மதியடைந்தது! உலகம் முழுவதையுமே அடிமைப்படுத்த புறப்பட்ட பாசிசத்தை அடித்து நொறுக்கி உலகில் சமாதானத்தை நிலைநாட்டிய அந்த மாபெரும் தேசபக்த யுத்தத்தின் முக்கியத்துவம் குறித்து தோழர் திமித்ரி உஸ்தினோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாகிய பிராவ்தாவில் கட்டுரையொன்று எழுதினார். உஸ்தினோவ் சோவியத் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினராகவும், சோவியத் யூனியன் இராணுவத் தளபதியாகவும் விளங்கியவர். அவர் தமது கட்டுரையின் இறுதியில் இவ்வாறு கூறினார்:
சோவியத் யூனியனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கான பலம் கிடைத்தது எப்படி? சோவியத் யூனியன் ஒரு சோஷலிசப் பொருளாதார அமைப்பாக இருப்பதனால்தான் கிடைத்தது. நாஜி ஜெர்மனியின் பொருளாதாரத்தைவிடவும் சோவியத் சோஷலிசப் பொருளாதாரமே உயர்ந்தது என்பது மெய்ப்பிக்கப்பட்டது. தன்னகத்தே உள்ள சக்திகள் அனைத்தையும் திரட்டி வெற்றியைச் சாதிக்கவும் அதை அதிகம் பயன்படுத்தவும் சோஷலிச அமைப்பினால்தான் முடிந்தது என்பது மெய்ப்பிக்கப்பட்டது. சோவியத் நாட்டில் தொழில் தளங்கள் ஜெர்மனியைவிடவும் குறைவாகத்தான் இருந்தன. நாஜிகள் கைப்பற்றியுள்ள ஐரோப்பிய நாடுகள் அனைத்தின் செல்வ வளமும் ஜெர்மனியிடம் இருந்தது. ஆயினும் சோவியத் யூனியன் யுத்த காலத்தில் ஜெர்மனியைவிடவும் வலிமைமிக்க ஆயுதங்களை இருமடங்கு உற்பத்தி செய்தது. சோஷலிச விவசாயமும் பலம் மிக்கது. படைவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிப்பதிலும், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களைச் சப்ளை செய்வதிலும் எத்தனையோ இன்னல்களுக்கிடையேயும் சோவியத் யூனியன் வெற்றி பெற்றது.
சோவியத் யூனியனின் ஆத்ம பலமும் எத்தகைய வலிமை மிக்கது என்பது தேசபக்த யுத்தத்தின்போது தெட்டத்தெளிவாக வெளிப்பட்டது. சோஷலிச சித்தாந்தமே அதன் வலிமை மிக்க ஊற்றாகும். போர்க்களத்திலும் தொழிற்கூடத்திலும் அரும்பெரும் சாதனைகளைச் சாதித்து வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கு மார்க்சிய-லெனினிய இலட்சியங்களே அவர்களை உத்வேகப்படுத்தின.” (செம்மலர்,1985 மார்ச் இதழிலிருந்து) ரஷ்யாவில் சோவியத் சோஷலிசக் குடியரசு மீண்டும் மலர வேண்டுமென்கிற கனவு இன்று ரஷ்ய மக்களிடம் உள்ளதை பல கருத்துக் கணிப்புகளில் காணமுடிகிறது. “கிருதயுகம் எழுக மாதோ!” என்று மகாகவி பாரதி உரைத்தது போன்று மீண்டும் ரஷ்யாவிலும், இப்பூவுலகிலும் ஒரு புரட்சிகரப் புதுயுகம் பொங்கி எழுவது நிச்சயம்!