articles

img

மனிதன் பாதி; எந்திரன் பாதி - கணேஷ்

அன்று, ஆசிரியர் மாணவரின் இருக்கை யில் அமர்ந்துவிட, மாணவர்கள் வகுப்பு எடுக்கும் நாள். முன்னால் அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவர், “நீ என்ன எடுக்கப் போற?” என்றவுடன், “சார் மாதிரி நானும் கேள்வி கேக்கப் போறேன்” என்றார் வகுப்பு எடுக்க வேண்டிய மாணவர். அப்போது பக்கத்து வகுப்பு ஆசிரியர் எட்டிப் பார்த்து, “என்னடா, சார் வரலையா?” என்றார். “இதோ இங்க உங்காந்துருக்கேன். இன்னிக்கு பசங்களே வகுப்பு எடுப்பாங்க..” என்றவுடன், “வித்தியாசமா இருக்கே” என்று அவரும் வந்து அமர்ந்தார். “கேள்வி கேட்கட்டுமா?” என்றவுடன், கேக்க லாம் என்று உற்சாகமாகத் தலையாட்டினார்கள். என்ன இவ்வளவு உற்சாகமாக சரினு சொல் றாங்கனு பக்கத்து வகுப்பு ஆசிரியர் கேட்டதற்கு, அவருக்குப் பக்கத்துல உக்காந்திருந்த மாணவர் “நான் சொல்றேன் சார்” என்று எழுந்தார்.

“ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு சிறந்த பதில் என்னன்னா, “தெரியாது” என்பதுதான்.”  பக்கத்து வகுப்பு ஆசிரியரின் கண்கள் விரிந்தன. “அது எப்புடி?” என்றார். “அப்பதான, தெரிஞ்சுக்க முடியும். தெரியாதுனு சொன்னா, தெரிஞ்சுக்குறதுக்கு தயாராவும் ஆயிடுவோம்..” யார் சொல்லிக் கொடுத்தாங்க.. என்று அவர் கேட்கவில்லை. அவரது கண்கள் வகுப்பாசிரியரைப் பார்த்து விட்டு நகர்ந்தன.   “உலகத்துலயே கஷ்டமான வேலை எது?” “ராணுவம்”, “சுரங்கம்”, “டீச்சர்”, “போலீஸ்”, “ஐ.ஏ.எஸ்”, “நடிகர்”, “முதலமைச்சர்” என்று பட்டியல் நீண்டது. கேட்ட மாணவருக்கோ திருப்தியில்லை. ஒரு மாணவர், “சும்மா இருக்குறது” என்ற வுடன் வகுப்பறையில் சிரிப்பு.

“அதோ அவன மாதிரி இருக்குறது...” என்று மற்றொரு மாணவரைக் காட்டி ஒரு மாணவர் சொன்னார். பக்கத்து வகுப்பு ஆசிரியர், “அவன்கிட்ட அப்புடி என்ன இருக்கு?” “எப்பப் பாத்தாலும் படிச்சுட்டே இருப்பான். என்ன கேள்வி கேட்டாலும் டக்கு, டக்குனு பதில் சொல்லிடுவான்.... எந்திரன் மாதிரி சார்..” “உண்மையிலேயே எந்திரன்லாம் இருக்காங்களா..?”  உதட்டைப் பிதுக்கினார் மாணவர்.  “ஆங்கிலத்துல cyborgனு சொல்லுவாங்க... பாடத்திட்டத்தைக் குடுத்துட்டா, வகுப்பு எடுத்துரு வாங்க.. வீட்டுல டியூசன் வெச்சப் படிக்குறவங்க, ஒரு cyborg வெச்சுக்கலாம்... சீக்கிரமா வரப் போறாங்க..”

ஒரு மாணவர் குறுக்கிட்டார், “உங்க வேலைக்கு ஆபத்துனு சொல்லுங்க, சார்..”. மாணவர்களோடு ஆசிரியர்களும் சிரித்தனர். “2030ல உலகம் முழுசும் உற்பத்தித்துறைல 2 கோடி வேலைகள் இந்த எந்திர மனுசங்களுக்குப் போயிருமாம்..” “ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைஞ்சுட்டுதான வருது சார்..” “ஆமாம்... ஆனா இப்பவே நல்லா படிச்சுக் கிட்டீங்கன்னா,  வேலைக்கு தேர்வு எழுதுறது கஷ்டமா இருக்காது..”  வகுப்பாசிரியர், “ஒரு நிமிடத்துல 180 வார்த்தை கள கணினித்திரைல நம்மால கவனிக்க முடியும். காகிதத்துல எழுதியிருந்தா 200 வார்த்தைகள் வரைக்கும் ஒரு நிமிடத்துல கவனிச்சுருவோம்.. 1,500 வார்த்தைகள் வரைக்கும் நம்மால கவனிக்க முடியுமாம்... இதுதான் நல்லாப் படிக்குறது..” அவரே தொடர்ந்தார், “கேள்வியக் கேட்டுட்டு வேற எங்கயோ போயிட்டோமே..? உன்னோட பதில் என்னப்பா?”

“சார்... தூய்மைப் பணியாளர்தான்.. சார்... நம்மளோட இயற்கை வைத்தியர் அவங்க.. காலைல நாம் வெளில வர்றதுக்கு முன்னாடி சுகாதார சூழலை நன்றாக மாத்துறாங்க... நாம சுத்தமா இருக்க, அவங்க அசுத்தத்தோட வாழ்றாங்க..”  மற்றொரு மாணவர் எழுந்து, “நம்ம ஸ்கூல்ல படிக்குற பையனோட அப்பா இறந்துட்டாரு... சாக்கடை அடைச்சுருக்குனு முதல்ல ஒருத்தர் உள்ள போயிருக்காரு... அவரக்காணும்னு அடுத்து ஒருத்தரு... அவரும் வரலைனு இவரு போனாரும்... மூணு பேரும் இறந்துட்டாங்க..”  “தினமும் இந்த இறப்பு நடக்குதுன்னு செய்தித் தாள்ல படிக்கறோம் சார்.. இதுக்கு cyborg வருவாங் களா..?” என்றார் கேள்வி கேட்ட மாணவர். பக்கத்து வகுப்பு ஆசிரியர் எழுந்தவாறே, “அது மட்டுமில்ல... உலகத்துலயே கஷ்டமான இந்த வேலைக்குதான் உலகத்துலயே குறைஞ்ச சம்பளம்..” என்று சொல்லிவிட்டுத் தனது வகுப்புக்கு சென்றார்.