articles

img

சாதிய, ஆணாதிக்க முடை நாற்றம் வீசும் ஹத்ராஸ் தீர்ப்பு - உ.வாசுகி

2020 செப்டம்பர் 14ஆம் தேதி, ஹத்ராஸ் என்ற ஊரில் தாக்கூர் வகுப்பை சார்ந்த 4 இளைஞர்கள், 19 வய தான ஒரு தலித் இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்து, உடல் முழுக்க, தண்டுவடம் உட்பட, பல எலும்பு முறிவுகளை ஏற்படுத்தி, நாக்கு துண்டிக்கப் பட்டு, 15 நாட்களில் மரணத்தை நோக்கித் தள்ளிய மன்னிக்க முடியாத குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தாக வெளிவந்த தீர்ப்பு மிகுந்த கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது. 

வழக்கின் பின்னணி

ஹத்ராசில்  என்ன நடந்தது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னதாக அந்த ஊர் அமைந்திருக்கக் கூடிய உத்தரப்பிரதேசம் எப்படிப்பட்ட மாநிலம் என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய குற்றப் பதிவு கழகத்தின் 2019 ஆண்டுக்கான புள்ளி விவரம், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் நிகழ்வதில் முதன்மை மாநிலமாக உத்தரப் பிர தேசம் இருப்பதாக குறிப்பிடுகிறது. இந்தியா முழுவ தும் நடக்கும் வன்கொடுமை குற்றங்களில் 25.8சத வீதம் உத்தரப்பிரதேசத்திலேயே நடக்கிறது. இதில் 95 சதவிகிதம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் குற்றங்களில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநில மாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது. மோடியின் அடுத்த வாரிசாக கருதப்படும் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் மாநிலத்தின் இலட்சணம் இதுதான். மேலும், ஹத்ராசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமான வால்மீகி குடும்பங்கள் நான்கு தான் உள்ளன. மீதி பெரும்பாலும் தாக்கூர் குடும்பங்கள் தான். இவர்களின் வாழ்வாதாரம் தாக்கூர் சமூகத்தை சார்ந்து தான் இருக்கிறது.  குற்றவாளிகள் சந்தீப், அவரது மாமா ரவி, நண்பர் கள் லவ் குஷ், ராமு ஆகியோர் ஆடு, மாடுகளுக்கு தீவனம் சேகரித்துக் கொண்டிருந்த பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கரடு முரடான தரையில் இழுத்துக் கொண்டே போயிருக்கிறார்கள். கொடூரமான கும்பல் பாலியல் வல்லுறவில் அந்தப் பெண் எழுப்பிய கூக்குரலில் பெண்ணின் தாயாரும் சகோதரனும் ஓடி வந்து பார்க்கும்போது உடைகளற்ற நிலையில் பிறப்புறுப்பில் ரத்தம் வழிய நிலை குலைந்து கிடந்திருக்கிறார். 

தொடர்ந்த கொடுமைகள்

அதற்குப் பிறகும் பயங்கரங்கள் தொடர்கின்றன. அப்பெண்ணின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரை காவல்துறை பெற மறுக்கிறது. அவர்களை ஏளனம் செய்து அனுப்பி விடுகிறது. உள்ளூர் மருத்துவமனை, அலிகார் மருத்துவமனை, இறுதியாக தில்லி மருத்துவ மனை என மூன்று இடங்களில் அந்தப் பெண் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார். மூன்றாவது வாக்கு மூலம், அவரது இறப்புக்கு ஒரு வாரம் முன்னதாக அளிக்கப்படுகிறது. நான்கு குற்றவாளிகளுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாலியல் பலாத்கா ரம் செய்தார்கள் என்பதும் அந்தப் பெண் தொடர்ந்து கூறிய விஷயம் தான்.  உத்தரப் பிரதேச போலீஸ் 8 நாட்கள் கழித்து தான் முதல் தகவல் அறிக்கை தயாரிக் கிறது, ஆனால் கும்பல் பாலியல் வல்லுறவு குற்றத்தை  அதில் இணைக்கவில்லை.  இந்த 8 நாட்களில் அந்தப் பெண்ணின் உடைகள் துவைக்கப்பட்டு, மருத்துவமனையில் அந்தப் பெண்ணின் உடலும் சுத்தம் செய்யப்பட்ட சூழலில் தடயவியல் பரிசோதனையில் என்ன கண்டுபிடித்து விட  முடியும்? பாதிக்கப்பட்ட பெண் சொன்னதை காதி லேயே வாங்காமல், மருத்துவர் தடயவியல் பரி சோதனை அறிக்கை வரட்டும் என்று சொல்லி விடுகிறார். தடயவியல் அறிக்கையில் பாலியல் வல்லுறவு நடக்கவில்லை, அதற்கான அடையாளம் எதுவும் இல்லை என வந்து விடுகிறது. உடனே காவல்துறை உயர் அதிகாரிகள் வல்லுறவு நடக்க வில்லை என அறிவித்து விடுகிறார்கள். 

சர்வதேச சதி

வல்லுறவு நடந்ததாகக் கூறுவது, சாதியப் பதற்றத்தை ஏற்படுத்தி உத்தரப்பிரதேசத்திற்கு களங்கம் விளைவிக்க நடைபெறும் சர்வதேச சதி என்கிற அளவுக்கு  பல்வேறு மட்டங்களில் ஜோடிக்கப் படுகிறது.  சதிகாரர்களை அம்பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் கூறுகிறார். மும்பை பொதுஜன தொடர்பு நிறுவனம் ஒன்றை உபி அரசு நியமித்து, சம்ப வத்தை மறைக்கப் பார்த்தது என பிபிசி குற்றம் சாட்டியது.  ஹத்ராசில்  சாதி பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட நால்வரும் அப்பாவிகள், இந்த பெண் தான் சந்தீப் பின்னால் போய் தொந்தரவு கொடுத்தார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. சிறுவய திலிருந்தே பெண்ணுக்கு பாரத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தால் தான், வல்லுறவு நடக்காமல் தடுக்க முடியும் என அறிவுரைகள் அள்ளி வீசப்படுகின்றன. சந்தீப், தானும் அந்த பெண்ணும் நண்பர்கள், அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம், இது பிடிக்காததால் பெண்ணின் பெற்றோர் அவளைக் கொலை செய்து விட்டனர் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். நரம்பில் லாத நாக்கு என்பது இதுதானோ?

ஆனால், போலீஸ் விசாரணை சந்தீப் சொன்ன  அடிப்படையிலேயே முடுக்கி விடப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தை திக்கு முக்காட வைத்துள்ளது.  மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. கலெக்டர் பெண்ணின் குடும்பத்திடம், பத்திரிகையாளர்கள் வேலையை முடித்துவிட்டு கிளம்பி விடுவார்கள், வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களோடு தான் இருக்க வேண்டும், எனவே உங்களுடைய புகாரை மாற்றி எழுதுங்கள் என கட்டாயப்படுத்துவது போன்ற வீடியோ வெளிவந்தது.  இதற்கு நடுவே தில்லி மருத்துவமனையில் 2020 செப்டம்பர் 29ஆம் தேதி அந்தப் பெண் மரணம் அடைகிறார் . அவருடைய உடலை கொண்டு வந்து விடியற்காலை 2.30 க்கு குடும்பத்திற்கு கூட தகவல் தெரிவிக்காமல், காவல் துறையினர் எரித்து தகனம் செய்கின்றனர். எந்தச் சட்டத்தில் காவல்துறைக்கு இந்த அதிகாரம் இருக்கிறது? ஒருவேளை உத்த ரப்பிரதேச ராஜ்யத்தில் மன்னர் போல இருக்கும் முதல மைச்சருக்கு சிறப்பு  அதிகாரம் இருக்கிறதோ என்ன வோ? வாழும் போதும் கண்ணியம் கிடைக்கவில்லை, இறந்த பிறகும் இறுதிச் சடங்கு கண்ணியமாக செய்யப் படவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்றம் இது ஒரு கடும் மனித உரிமை மீறல் என குற்றம் சாட்டியது.  “எங்களை தாக்கூர் குடும்பங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை” என அப்பெண்ணின் சகோதரன் சொன்னது எவ்வளவு உண்மை! தடயங்களை மறைப் பதற்கு தான் காவல்துறை அவசரம் காட்டியுள்ளது. 

சிபிஐ யார் கேட்டது? 

பல்வேறு அமைப்புகளும் ஊடகங்களும் தனி நபர்களும் போராட்டக் களத்துக்கு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க பலருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. செய்தி சேகரிக்க வந்த கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், உபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். பாதிக் கப்பட்ட குடும்பம் நீதி விசாரணை கோருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து பேசிய பிறகு நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என முன் வைக்கிறார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பிரச்சனையில் தலை யிடுகிறது.  சிபிஐ விசாரணை வேண்டும் என யாரும் கேட்க வில்லை. ஆனால் மாநில முதலமைச்சரே தன்னிச்சை யாக அறிவித்து விசாரணையை சிபிஐக்கு மாற்று கிறார். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த விசாரணையை நாங்கள் கண்காணிப்போம் என அறிவிக்கிறது. 

தீர்ப்பு என்கிற அராஜகம்

சிபிஐ 4 பேர் மீதும் தாக்கல் செய்த  குற்றப் பத்திரி கையில் கொலை, கும்பல் பாலியல் வல்லுறவு, எஸ்.சி/  எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்  என்ற குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எஸ்.சி./ எஸ்/டி சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சமீபத்தில் அளித்த தீர்ப்பில், கும்பல் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை என்பதிலிருந்து நான்கு பேரையும் விடுவித்து விடு கிறார். சந்தீப் என்கிற ஒருவனுக்கு மட்டும் கொலை அல்லாத மரணம் விளைவித்தல் மற்றும்   எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கிறார்.  பாலியல் வல்லுறவு நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி கூறுகிறார். 8 நாட்கள் கழித்து செய்யும் மருத்து வப் பரிசோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியாது என்பது அவருக்கு தெரியாதா? அந்தப் பெண்ணின் மரண வாக்கு மூலத்தையும், பெண்ணின் அம்மா எப்ப டிப்பட்ட நிலைமையில் அந்தப் பெண் கண்டெடுக்கப் பட்டார் என்று கூறியதையும் முற்றாகப் புறக்கணிக் கிறார். மரண வாக்கு மூலத்தை முக்கிய ஆதாரமாக கருத முடியும் என்பதற்கு பல தீர்ப்புகள் உள்ளன. அதே போல் கொலை செய்யும் நோக்கம் குற்றவாளிகளுக்கு இல்லை, ஏனெனில் குற்ற செயல் நடந்த பிறகும் அந்தப் பெண் உயிரோடு இருந்தாள் என நீதிபதி கூறு கிறார்.  நிர்பயா வழக்கில், அவர் கொடுத்த மூன்று வாக்கு மூலங்களும் கீழ் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டு, குற்றவாளிகள்  கொலை செய்தார்கள் என்பதும் நிறுவப்பட்டது. ஹத்ராஸ் வழக்கில் ஏன் இது  ஏற்றுக்கொள்ளப்படவில்லை?  சிபிஐ, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பு தொடர வேண்டும், வழக்கு விசாரணை வேறு ஒரு மாநிலத்தில் நடக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் உரத்து ஒலிக்கின்றன. பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றா லும் வெளியே போக முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு, பெரியவர்கள் வேலைக்கு போக முடியாத, சிறைக்குள் இருக்கும் சூழலும் மன நிலையுமே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இருக்கிறது. 

இந்துத்துவ ராஷ்டிரம் வந்தால்

படுபயங்கரமான கும்பல் பாலியல் வல்லுறவை செய்துவிட்டு, அப்பெண்ணின் மரணத்துக்கும் காரண மான 3  அயோக்கியர்கள், இனி சுதந்திரமாக ஊரில் உலவுவார்கள். தாக்கூர் சமூகம் அவர்களைக் கொண்டாடும். உத்தரப்பிரதேசத்தில் இன்னும் கூடுத லாக தலித் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாவார் கள். இதைத் தான் பாஜக அரசு எதிர்பார்க்கிறது. இந்துக் கள், இந்துக்கள் என பாஜக எவ்வளவு ஓங்கி பேசினா லும், உள்ளடக்கம் மனுவாத கோட்பாடுகள் தான்.  ஐபிசி, சிஆர்பிசி, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும் போதே இதுதான் நிலை என்றால் இந்துத்துவ ராஷ்டிரத்தினுடைய அரசியல் சாசனம், திரேதா  யுகம், துவாபர யுகத்தின் நீதி வழங்கும் முறையைக் கையாளும் என்கிறார்கள். எத்தனை ஏகலைவர்களின் கட்டை விரல்கள் காணிக் கையாக்கப்படுமோ? மீண்டும் தோள் சீலை போராட்டம் துவங்கப்பட வேண்டுமோ… மனுவாதம் சூத்திரர்கள், பெண்கள், தலித்துகளை தள்ளி வைக்கு மோ… நாட்டை எந்த நூற்றாண்டுக்கு திருப்புமோ .. மோடி, இது தான்  நவீன இந்தியா, நம்பித் தான் ஆக வேண்டும் என்கிறார்.  இடது ஜனநாயக சக்திகள் வலுப்படாமல் இந்த பேராபத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்? ஹத்ராஸ் தீர்ப்பைக் கண்டிக்கிற அத்தனை பேரும் இடது ஜன நாயக மதச்சார்பற்ற சக்திகளை பலப்படுத்த முன் வர வேண்டும். ஆர்எஸ்எஸ் - பாஜகவைப் பின்னுக்கு தள்ளும் ஒரே ஆயுதம் அதுதான்.

கட்டுரையாளர் : மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)