சென்னை, மே 2- அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட முன்வர வேண்டும் என்று வட சென்னையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். 137ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு, ஏஐடியுசி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் சென்னை ஆர்.கே.நகரில் சிஐடியு துணைச்செய லாளர் ஆர்.லோகநாதன் தலைமையில் திங்களன்று (மே 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில் உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாப்பதற்காக சாதி, மதம், மொழி கடந்து அனைவரும் மே நாளை கொண்டாடுகிறார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளன்று 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக கடந்த 24ஆம் தேதி மசோதாவை நிறுத்தி வைப்ப தாக மாநில முதல்வர் அறிவித்தார். மே தின விழா வில் கலந்து கொண்ட முதலமைச்சர் அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள் ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களில் 15 சட்டங்களை முழுமையாக ரத்து செய்துவிட்டது. மீத முள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக சுருக்கி சட்டம் இயற்றியிருக்கிறது. இது தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல். வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட உ ள்ளது. வேலை நேரத்தை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள். தொழிற்சங்கம் அமைக்க முடியாது, போராட முடியாது என போராடி பெற்ற உரிமைகளை பறிக்கக் கூடிய மோசமான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதை எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்றார்.
மகத்தான தலைவர்களின் போராட்டம்
சென்னையில் 1923ஆம் ஆண்டு சிங்கார வேலர் மே தின விழாவைக் கொண்டாடினார். ஆனால் அதற்கு முன்பே 1920ஆம் ஆண்டு பின்னி மில் தொழிலாளர்களின் மகத்தான வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. சிங்கார வேலர், திரு.வி.கல்யாணசுந்தரம், வாடியா, அன்னிபெசன்ட் அம்மையார் அவர்களோடு சர்க்கரை செட்டியாரும் அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த நிறுவனம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அந்த போராட்டத்தை சட்ட விரோத போராட்டம் என்று கூறி, அதற்கு தலைமை தாங்கிய சர்க்கரை செட்டியாருக்கு 4 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. தீர்ப்பைக் கேட்ட சர்க்கரை செட்டியார் என்னிடம் சொத்து, பணம் எதுவும் கிடை யாது. நான் அணிந்திருக்கக் கூடிய கோட்டையும், சட்டையையும் கழற்றி கொடுத்து விடுகிறேன் என் றார். மேலும் கோவணம் கட்டிக் கொண்டாவது தொழிலாளிகளுக்காக போராடுவேன் என்று அவர் கூறினார். அதன் பிறகு 1926ஆம் ஆண்டுதான் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி னால், தலைமை தாங்கும் தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கக் கூடாது, அபராதம் விதிக்கக் கூடாது என்று இந்திய டிரேட் யூனியன் சட்டத்தை ஆங்கிலேயே அரசு கொண்டு வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் பறிக்கக் கூடிய வகையில் மோடி அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. நாம் நமது பொருளாதார கோரிக்கைகளுக் காக மட்டும் போராடினால் போதாது. அரசின் தவ றான கொள்கைகளை எதிர்த்தும் போராட வேண்டும். 1902ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் மன்னருடைய கொடுங்கோல் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், மேதினம் பற்றி பேசுகிறபோது மே தின விடுமுறையின் உலக முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவது மட்டும் போதாது; மிக முக்கியமான தேசிய அரசியல் கோரிக் கைகளுக்கான போராட்டத்துடன் இணைத்திட வேண்டுமென்று லெனின் வற்புறுத்தினார். இந்தியாவில் இன்றைய சூழலில், ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, கூட்டாட்சிக் கோட்பாட்டை, இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் தொழிலாளர்கள் போராட முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மே தினத்தை பேசாத மனதின் குரல்
ஞாயிறன்று (ஏப். 30) மோடி மனதின் குரல் என்ற பெயரில் அவர் ஆற்றிய உரையை உலகம் முழு வதும் 4 லட்சம் மையங்களில் ஒலிபரப்பு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அதை ஒலிபரப்பு செய்து, அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆர். என்.ரவி பரிசு வழங்கியதாக செய்தி வெளியாகி யிருக்கிறது. உலகமே கொண்டாடக் கூடிய மேதினம் குறித்து, தொழிலாளர்கள் பிரச்சனை கள் குறித்து மோடி பேசவில்லை. மே தின வாழ்த்து கூட அவர் கூறவில்லை. மே தினத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆர்எஸ்எஸ் தலைமை யிலான பாரதிய மஸ்தூர் சங்கம் மே தினத்தை கொண்டாடுவதில்லை, மாறாக செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி என்ற நாளைத்தான் கொண்டாடுவார்கள்.'
பிஎம்எஸ் முழக்கம் என்ன?
உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங் கங்கள் கூறினால், ஆர்.எஸ்.எஸ்., பி.எம்.எஸ். உலகத் தொழிலாளர்களே உலகை ஒன்றிணை யுங்கள் என்று கூறுவார்கள். தொழிலாளர்களை யும், முதலாளிகளையும் ஒன்று சேருங்கள் என்பது அதன் பொருள். இத்தகைய கொள்கையுடைய மோடி மேதினம் குறித்து, உழைப்பாளி மக்கள் குறித்து பேசுவாரா, பேசமாட்டார். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை அழைத்து பாராட்டுவேன் என்று பேசுகிறார். ஆனால் ஜந்தர்மந்தரில் மல்யு த்த வீராங்கனைகள் போராடி வருவது மோடிக்கு தெரியாதா ? பதக்கம் வென்றால் பாராட்டுவார், மகள் என்று கூறுவார். பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் பிரிஜ் பூஷன் சரன்சிங்தான் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக உள்ளார். அவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் ஒரு சிறுமி உட்பட 4 பேர் ஜனவரி மாதம் புகார் அளித்தனர். ஆனால் புகார் கிடப்பில் போடப்பட்டது. வீராங்கனைகள் தொடர் போராட்டத்தின் விளைவாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு இப்போது இரண்டு முதல் தகவல் அறிக்கை அவர் மீது பதியப்பட்டுள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. தற்போதும் அவர் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நீடிக்கிறார். வீரங்கனைகள் பதக்கம் பெறும் போது பாராட்டும் மோடி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி நீக்கம் செய்யவில்லை. இதுகுறித்து மனதின் குரலில் ஏன் பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
பரிணாம வளர்ச்சி பாடம் நீக்கம்
சிறந்த கல்விக் கொள்கையை உருவாக்கி இருக் கிறோம் என்று கூறும் மோடி அரசு, பாடத்திட்டத்தில் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார் என்ற பகுதியையும், ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட பகுதியும் நீக்கியுள்ளது. மாணவர்களிடையே, மக்களிடையே அறிவியல்பூர்வமான பார்வையை முன்வைக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறு கிறது. ஆனால் டார்வினுடைய பரிணாம வளர்ச்சி என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. இதை குறித் தெல்லாம் மோடி பேச மறுக்கிறார். இதை தொழி லாளி வர்க்கம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பொருளாதார கோரிக்கைகளுக்கு போராடும் அதே நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்திலும் தொழிலாளர்கள் இணையவேண்டும். மக்கள் விரோத, தொழிலா ளர் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த மே நன்னாளில் சபதமேற்போம் என்று ஜி.ராம கிருஷ்ணன் கூறினார்.
சி.எச்.வெங்கடாசலம்
ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் சி.எச்.வெங்கடாசலம் பேசுகையில், 100 ஆண்டு களுக்கு முன்பு சிங்காரவேலர் வலியுறுத்திய பல்வேறு கோரிக்கைகளுக்காக இன்றும் நாம் போராட வேண்டிய நிலை நீடிக்கிறது. இந்தியாவில் இன்றும் பல மாநிலங்களில் மே தினத்திற்கு விடு முறை அளிக்கப்படுவதில்லை. நாடு சுதந்திர மடைந்த பிறகு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தொழிற்சங்கங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக பல உரிமைகளை பெற்றிருக்கிறோம். அதை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. தொழிலாளி வர்க்கம் அரசியலை, அரசின் கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. உலகத் தொழிலாளர்கள் ஒன்று படுவதில் பலவீனம் உள்ளது. ஆனால் உலக முதலாளிகள், தொழிலாளர்களை சுரண்டுபவர் கள் ஒன்றாகி வருகிறார்கள். தொழிலாளிகளை எப்படி தாக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஆளும் அரசுகள் உள்ளன. எனவே இவற்றை எதிர்த்துப் போராட தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம் என்பதை உணர வேண்டும். வளர்ச்சி இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஆனால் அந்த வளர்ச்சியின் பயன் யாருக்கு செல் கிறது. வளர்ச்சியின் 95 விழுக்காடு பயன் வசதி படைத்தவர்களுக்கு செல்கிறது. இதை எப்படி வளர்ச்சி என்று கூற முடியும். மக்களுக்கு எதிராக, தொழிலாளிகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களு க்கு எதிராக, நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு எதிராக, முதலாளிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அர சின் நிதிநிலை அறிக்கை உள்ளது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்த்து வருகிறது ஒன்றிய அரசு. அனை த்தும் தனியார் மயமானால் நாடு எப்படி வளர்ச்சி அடையும். ஒருபுறம் கோயிலை கட்டுகிறார்கள். மறுபுறம் உண்மையான பொதுத்துறை எனும் கோயிலை இடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வங்கிகளில் மக்களின் 185 லட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் தனியார்மயமானால் மக்கள் பணத் திற்கு என்ன பாதுகாப்பு இருக்கும். இவ்வாறு ஆபத்தான கொள்கைகளை ஒன்றிய பாஜக அரசு கடைபிடித்து வருகிறது. முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை மாற் றிக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்வொன்றாக பறித்துக் கொண்டி ருக்கிறார்கள். எனவே பொருளாதாரக் கொள்கை களுக்காக போராடும் அதே நேரத்தில் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்து பகுதி மக்களின் வளர்ச்சிக்காக போராட வேண்டும் என்று வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயராமன், ஆர்.மணிமேகலை, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, செயலாளர் ஏ.அருள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, ஆ.ரேணுகா ஆகியோரும் பேசினர். முன்னதாக ஏஐடியுசி துணைத் தலைவர் எஸ்.குப்பன் வரவேற்றார். கே.சுந்தரம் நன்றி கூறினார்.