articles

img

“ரெண்டுனா, ரெண்டா... ரெண்டு இட்லியா?” - * கணேஷ்

“சார்... எங்கப்பா உங்களப் பாக்க வருவாங்க”
“எதுக்கு”
“நேத்து நைட்டு லேட்டா வந்தாரு... வந்தவுடன என்னடா, இன்னிக்குப் படிக்கலையானு கேட்டார்”
“சரி... நீ என்ன சொன்ன”
“எங்க சார் மாதிரி கேக்கப் பழகிக்குங்கனு சொன்னேன்”
“என்ன வித்தியாசம்”
“என்ன படிச்சீங்கன்னு நீங்க கேப்பீங்க. ஒரு வேளை படிக்கலீன்னா கூட படிக்கலைனு நாங்கதான் சொல்வோம், சார்”
“உங்க அப்பாவுக்கும், எனக்கும் சண்டை மூட்டி விட்டுருக்குற”
“சார்... இன்னிக்கு நான் ஒரு கதை சொல்லட்டா”
“ஓ... சொந்தக்கதையா.. அதுல அப்பா வருவாரா..?”
“அப்பா வந்த கதையும் இருக்கு சார்... நான் சொல்றது வேற”
“முதல்ல அப்பாவோட கதையச் சொல்லு... அவர் வர்றப்ப பேசுறதுக்கு ஈசியா இருக்கும்.. முன்னாடி வா.. எல்லாருக்கும் சொல்லு”
“அன்னிக்கும் எங்கப்பா லேட்டாதான் வந்தாரு.. உள்ள வந்தவுடன ‘டாக்டர் என்ன சொன்னாரு’னு அம்மா கேட்டாங்க”
“இரும்புச் சத்து டானிக் குடுத்துருக்காரு”
உடனே வீட்டுப் பாடம் எழுதிட்டுருந்த எங்க அக்கா தலை நிமிர்ந்து “இரும்புச் சத்து குறைஞ்சா ரத்த சோகை வரும்பா”
“அப்பா கண்டுக்காம நகர்ந்தாங்க... அதனால அம்மாவப் பாத்து, கீரை வெச்சுக் கொடுக்கலாம். அதுல இரும்புச்சத்து இருக்குனு அக்கா சொன்னாங்க”
“பரவாயில்லயே”
“சார்... அவங்க பாடத்துல இது இருக்கு சார்... அன்னிக்கு வீட்டுப்பாடமே அதுதானாம்”
“சரி... நீ சொல்ல வந்தது என்ன?”
“எங்க அக்காவோட ஸ்கூல்ல ஒரு சார் பேசுனத அவங்க என்கிட்ட சொன்னாங்க”
“நம்ம ஸ்கூல் மாதிரியே ஒரு ஸ்கூல்... அங்க ஒரு ஆசிரியர் கைல வெச்சுருந்த படத்தக் காட்டி இது என்ன என்று கேட்டார்”
“மாணவர்கள், இது யானை என்றிருக்கிறார்கள்”
“ஒரேயொரு மாணவி மட்டும், இது யானையோட படம் என்றார். அந்த மாணவியை எழுப்பி, மற்ற மாணவர்களைக் கைதட்டிப் பாராட்டச் சொன்னார்”
“அந்தப் படத்தை மேசையிலேயே விட்டு விட்டுச் சென்றார். அடுத்து உள்ளே வந்தது தமிழ் ஆசிரியர்”
“அவர் படத்தைப் பார்த்து விட்டு, இது என்ன என்று கேட்டிருக்கிறார். மாணவர்கள் யானையின் படம் என்றார்கள். ஒரு மாணவன் மட்டும் யானை என்றார். அந்த மாணவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தார்கள்”
“ஏன் சிரிக்கிறீர்கள் என்று தமிழ் ஆசிரியர் கேட்டார்”
“தாங்கள் அது யானை என்று சொல்லி, ஒரு மாணவி மட்டும் யானையின் படம் என்று சொன்னதால், அவரை மட்டும் எழுப்பி ஆசிரியர் பாராட்டியதை விளக்கினார்கள்”
“இரண்டுமே சரிதான்”
“அது எப்படி என்று மாணவர்கள் புருவங்களை உயர்த்தினார்கள்”
“யானை என்று சொன்னாலே, யானையின் படம் என்ற பொருளும் சேர்ந்தே வரும். இதத்தான் தமிழ்ல ஆகு பெயர்னு சொல்றோம்” 
“அதோடு நிற்காத தமிழ் ஆசிரியர், வீட்டுல அம்மா இட்லி வைக்க வர்றாங்க. ரெண்டு வைம்மா என்று சொல்வோம். அம்மா ரெண்டுங்குற எண்ணை வைப்பாங்களா... இல்லேனா ரெண்டு இட்லிய வைப்பாங்களா..?”
“ரெண்டு இட்லி என்றனர் கோரசாக. ஒரு மாணவன் மட்டும் நான் நாலு வைம்மானு சொல்வேன் என்றார்”
“படத்தை அங்கேயே விட்டு விட்டுத்தான் தமிழ் ஆசிரியரும் சென்றார்”
“அடுத்து வந்தது சமூகவியல் ஆசிரியர்”
“அவரும் படத்தைக் கையில் எடுத்து இது என்ன என்றார்”
“ஒரு பகுதி மாணவர்கள் இது யானை என்றும், மற்றொரு பகுதியினர் இது யானையின் படம் என்றும் கூறினார்கள். சில மாணவர்கள் அம்மா இட்லி வைத்த கதையையும் விட்டு வைக்கவில்லை”
“முழுமையாகக் கேட்ட சமூகவியல் ஆசிரியர் வீட்டில் இட்லியை அம்மா ஏன் வைக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்”
கதையை சொல்வதை மாணவன் நிறுத்தினான்.
“அவ்வளவுதானா..?”
“இல்ல சார்... பெண்களுக்கு அதிகாரமளித்தல் பாடம் அங்கருந்து தொடங்குச்சுனு அக்கா சொன்னாங்க”