“தகுதியுள்ள மாணவர்களுக்குப் பண வசதி இல்லையென்றாலும் கூட மருத்துவ சீட் கிடைக்க வேண்டும். வணிகமயமாக்கப்பட்ட மருத்துவக் கல்வி சூழலில் இத்தகைய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எந்த நோக்கத்திற்காக ரஞ்சித் ராய் சௌத்ரி கமிட்டியும், நாடாளுமன்ற நிலைக்குழுவும், உச்ச நீதிமன்றமும், நுழைவுத் தேர்வைத் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவச் சேர்க்கைக்கு வலியுறுத்தினார்களோ, அது நிறைவேறவில்லை. மாறாக நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சீட்டுகள் வணிகமயமாவது (கேபிடேசன்) சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 நடை முறைக்கு வந்தபின், தன்னாட்சி நிறு வனமாக இயங்கி வந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) கலைக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில், அதன் கைப்பாவையாக இயங்கு கிற தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. ‘மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்’ என்று சொல்லப்பட்டாலும், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் குறித்த விசயங்களில், மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்க ளை பறிப்பதும் ‘‘தடையற்ற தனியார்மயத்தைப் புகுத்து வதும், பணம் படைத்த – நகர்ப்புற, மேல்தட்டு மாண வர்களுக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பை அளிப்பதும்’’ உள்ளது. மோடி அரசின் காவிமயம் மற்றும் கார்ப்பரேட் மயத்திற்கு ஆதரவான. தேசிய கல்விக் கொள்கை யின்படி, மருத்துவம் மற்றும் துணை மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு பிற்போக்குத் தனமான விசயங்களை இந்த ஆணையம் செயல்படுத்தி வரு கிறது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019, நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதன் உள்ள டக்கமாக உள்ள ‘நீட்’, தேர்வைக் கட்டாயப்படுத்தி 2016 முதல் ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டு 3 வருடங்களுக்குள் ‘நெக்ஸ்ட்’ (NEXT) தேர்வு வரை முறைகள் வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 2024 முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இரு தேர்வுகள்
I.நீட் தேர்வு (UG NEET)
மருத்துவக் கல்வி/கல்லூரி சேர்க்கை குறித்து தத்தம் கொள்கைகளையும், சேர்க்கை வழிமுறை களையும் பாடத்திட்டத்தையும் உருவாக்க அந்தந்த மாநிலங்களே அதிகாரம் பெற்றவை. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதிலும் நிர்வகிப்ப திலும், உயர்நிலை, மேல்நிலைப் பாடத்திட்டம் மற்றும் மருத்துவக் கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதி லும் மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பாதித்துள்ளது. ‘ஆயூஷ்’ மற்றும் செவிலியர் படிப்புகளுக்கும், ‘நீட்’ தேர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒட்டு மொத்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளையும் ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரும் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் ‘கார்ப்பரேட்’ மருத்துவ மனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலி யர் போன்றோரைத் தயார் செய்யும் அதே வேளை யில், பொது சுகாதார மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளை சீரழிக்கிறார்கள். 2016 முதல் ‘நீட்’ தேர்வை ஆதரித்தவர்கள், “இதன் மூலம் மருத்துவக் கல்வி யில் ஊழலை ஒழிக்கவும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும்” என்று கூறினார்கள். ‘நல்ல மதிப் பெண் வாங்கும் மாணவர்களுக்கு மருத்துவ சீட் உத்தர வாதம்’ என்றும் சொன்னார்கள், ஆனால் கடந்த 6 வருட அனுபவம் அதற்கு மாறாக இருக்கிறது.
நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. கடந்த 6 வருடங்களாக நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட சேர்க்கையின் புள்ளி விவரங்கள் அதைத் தவறு என்று நிரூபித்துள்ளன.
2016-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்ப டையில் நடத்தப்பட்டது. (85% இடங்கள்) மருத்துவப் படிப்பில் சேர உயிரியல், இயற்பியல் மற்றும் வேதி யியல் பாடங்களில் 50%-க்கு குறைவாக எடுத்த மாணவர்கள் எம்பிபிஎஸ் சேர முடியாது. மேலும் 2016 வரை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படை யில் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றவர்க ளின் குறைந்தபட்ச மதிப்பெண்கள் (cut off marks) சராசரியாக 200-க்கு 180-க்கு மேல் இருந்தி ருக்கிறது. எனவே குறிப்பிட்ட 3 பாடங்களிலும் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) 180 மதிப் பெண்களுக்கு மேல் (அதாவது 90%) எடுப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றனர்.
ஆனால் ‘நீட் தேர்வில்’ ‘Precentile’ முறையில் குறைந்தபட்சம் 40 முதல் 50 Precentile மதிப்பெண் எடுப்பவர்கள் கூட எம்பிபிஎஸ் சேர முடியும். இதனால் பணம் இருந்தால் நீட் தேர்வில் 16 சதவீதம் முதல் 25 சதவீதம் மதிப் பெண் பெற்றவர்கள்கூட தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரமுடியும் என்ற நிலை உருவாகி யுள்ளது. அதே நேரத்தில் 40 சதவீதம் அல்லது 50 சதவீதம் மதிப்பெண் பெறும் ஏழை மாணவன், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்குக் கேட்கப்படும் கட்ட ணத்தை செலுத்த முடியவில்லையென்றால் எம்பிபிஎஸ் சேரமுடியாது. (நிர்வாக இடங்கள் வரு டத்திற்கு ரூ.20- 25 லட்சம்).
தகுதியுள்ள மாணவர்களுக்குப் பண வசதி இல்லையென்றாலும் கூட மருத்துவ சீட் கிடைக்க வேண்டும். வணிகமயமாக்கப்பட்ட மருத்துவக் கல்வி சூழலில் இத்தகைய மாணவர்களுக்கு இடம் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும் என்று எந்த நோக்கத் திற்காக ரஞ்சித் ராய் சௌத்திரி கமிட்டியும், நாடாளு மன்ற நிலைக்குழுவும், உச்ச நீதிமன்றமும், நுழைவுத் தேர்வைத் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவச் சேர்க்கைக்கு வலியுறுத்தி னார்களோ, அது நிறைவேறவில்லை. மாறாக நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சீட்டுகள் வணிகமயமாவது (கேபிடேசன்) சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
தகுதிப் பாடத்தில் “O” வாங்கினால் கூட...
நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்கள் (180 கேள்விகள் - ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள்’; தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழியும்). உயிரியல் பாடம் 360 மதிப்பெண்கள்/ இயற்பியல் 180 மதிப்பெண்கள் /வேதியியல் 180 மதிப்பெண்கள். மருத்துவம் பயிலத் தேவையான மூன்று பாடப்பிரிவுகளில், ஒன்று அல்லது இரண்டு பாடப்பிரிவுகளில் ‘0’ மதிப்பெண் பெறுபவர் கூட நீட் தேர்வு முறையில், எம்பிபிஎஸ் படிப்பில் சேரு வதற்கு தகுதி பெற முடியும். உதாரணமாக உயிரி யல் பாடத்தில் ‘0’ மதிப்பெண் வாங்கிய ஒரு மாண வன் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் சேர்த்து 119 குறைந்தபட்ச (CUT OFF) மதிப் பெண்ணிற்கு மேல் எடுத்தால், ஒரு மருத்துவ சீட்டை விலைக்கு வாங்கமுடியும். அதுபோல, இயற்பி யல் அல்லது வேதியியல் பாடத்தில் ‘0’ அல்லது நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர் கூட மருத்துவம் படிக்க முடியும். (பார்க்க அட்டவணை)
(ரேமா நாகராஜன்/டிஎன்என்/
ஜூலை 16,2018 டைம்ஸ் ஆப் இந்தியா)
‘நீட் தேர்வில்’ தகுதி பெற்றாலே (கட் ஆஃப் மார்க் வாங்கினாலே) ‘தேர்ச்சி’ என்று கூறுவதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் கிராமப்புற, ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் கட் ஆஃப் மார்க்கிற்கு மேல் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ‘அரசு மருத்துவக் கல்லூரிக ளில் ஒதுக்கீடு’ கிடைக்காதபோது தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகிறது. நீட் தேர்வு (NEET UG) நடைமுறைக்கு வந்தது முதல், +2 (மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்சி), +2 பயிலும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று அனைத்துப் பாடங்களையும் படிப்பது என்ற நிலை மாறி, ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்விமுறையில்(Intergrated Schooling System)குறிப்பிட்ட 3 பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பது நடைமுறைப்படுத்தப் படுகிறது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் நேரம் முடிந்து தனியாக, பயிற்சி (கோச்சிங்)மையங்களுக்கு செல்வதற்கு பதிலாக, ‘கோச்சிங் நிறுவனங்கள் தனி யார் பள்ளிகளுடன் கைகோர்த்து “கோச்சிங் மையங்க ளையே”பள்ளிகளாக மாற்றிவருகின்றனர். இதன் மூலம் “பள்ளிச் சூழல் மற்றும் கல்வி கற்றல் சூழலும் புறக்கணிக்கப்பட்டு, +2 இறுதியாண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மதிப்பிழந்து வருகின்றன”
II. பிஜி - நீட் தேர்வின் பாதிப்பு (PG NEET)
1250-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ இடங்களுடன் (எம்டி., எம்.எஸ்.,) தமிழ்நாடு அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. 2012-க்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்த 15 சதவீதம் இடங்களை மட்டுமே அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கி வந்தனர். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு பட்ட மேற்படிப்பு நீட் தேர்வினால் மாநில அரசின் கட்டுப் பாட்டில் 50 சதவீதம் இடங்களும், அகில இந்தியத் தொகுப்பிற்கு 50சதவீதம் இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் (SUPER SPECIALITY COURSES) 100 சதவீதமும் அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப் படுகிறது. இதனால் தமிழக அரசு, தமிழக மக்க ளின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பிய சுகாதாரக் கட்ட மைப்பைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மருத்துவர்கள் பயன்பெறுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் தமிழக மருத்துவ மாணவர்க ளுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்காமல் போகலாம். மேலும் தற்போது இளம்நிலை மற்றும் முது நிலைப்படிப்பில் 100 சதவீதம் இடங்களுக்கும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மருத்துவ ஆணையமே ‘கவுன்சிலிங்’ நடத்துமென அறிவித்துள் ளது. இதனால் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட எம்பி பிஎஸ்-இல் 85 சதவீதம் இடங்களுக்கும், முதுநிலை படிப்பில் 50சதவீதம் இடங்களுக்கும் ‘கவுன்சிலிங்’ நடத்த முடியாமல் போவதுடன், உள் ஒதுக்கீட்டை (சாதி வாரி மற்றும் அரசுப்பணிக்கான உள் ஒதுக்கீடு) இழக்க நேரிடும்.
கடந்த காலங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு இருந்த காரணத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ ஆசிரியர்களும் (Super Specialists & Me dical Teachers) கிடைத்து வந்தார்கள். தமிழகத்தில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும் அதற்கு இணையான எண்ணிக்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் ‘நீட் தேர்வு முறையில்’ முதுநிலை படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒதுக்கப் பட்டதன் விளைவாக மருத்துவ ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, அரசு மருத்துவக் கல்லூரி/மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சுகாதாரப் பணிகளைப் பெருமளவு பாதிக்கிறது. நாளடைவில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற காரணம்கூறி, அரசு மற்றும் பொது சுகாதாரக் கட்டமைப்புகளும் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். ‘நீட்’ தேர்வுகளின் அடிப்படை நோக்கமே பொது சுகாதாரக் கட்டமைப்பைத் தகர்த்து தனியார்மயத்தைப் புகுத்துவதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
‘நீட் கோச்சிங்’ ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் தனியார் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் தோன்றின. பல லட்சங்களைச் செலவு செய்து பயிற்சி எடுத்தால் மட்டுமே ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நிலையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் ‘குழந்தைகள்’ மீது, முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் முறை தேர்வு பெறவில்லையென்றால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். கடந்த வருடம்(2022) தேர்ச்சி பெற்றவர்களில் 60 சதவீதம் மாணவர்கள் ‘மீண்டும்’ (Repeaters) எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள். எனவே, நீட் பயிற்சிக்கு பிளஸ் 1-இல் தொடங்கி, மொத்தம் 2 முதல் 5 வருடங்க ளுக்குப் பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டிய துள்ளது. இத்தகைய ‘நிதி’ ஆதாரங்கள் சாதாரண, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை’ என்பதால், அத்தகைய மாணவர்க ளின் ‘மருத்துவக் கனவு’ வெறும் கனவாகவே கடந்து போகிறது. இவ்வாறு நீட் தேர்வு, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது.
நெக்ஸ்ட் (NATIONAL EXIT TEST I) / வெளியேற்றும் தேர்வு?
‘‘நீட் தேர்வின் மூலமாக அனுமதிக்கப்படும் மருத்துவ மாணவர்களின் தரம் உயர்ந்திருக்கும்’’ என்று ‘நீட்’ தேர்வுக்கு ‘வக்காலத்து’ வாங்கிவிட்டு, “பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் மருத்து வக்கல்வியின் தரம் சரியில்லை, அதனால் மருத்து வராகப் பட்டம் பெறும் மருத்துவ மாணவனுக்கு தரம் குறைந்திருக்கிறது” என்று கண்டுபிடித்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது. ‘இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் தேர்வை நெக்ஸ்ட் முதல்படி (NEXT-Step I) என்ற பெயரில் அகில இந்திய அளவில் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும்’ என்று அது கூறுகிறது.
சட்டப்படி அதிகாரம் இல்லை
மாநில அரசுக்கு ‘மருத்துவக்கல்வி’யின் மீதுள்ள அதிகாரத்தையும், மாநில அரசுகளால் உரு வாக்கப்பட்ட, பல்கலைக்கழகங்களின் மாண்பையும் ஒரு சேர சூறையாடும் நோக்கம் இது. இது அரசி யலமைப்புச்சட்டத்தை துச்சமாக நினைத்து, தன் வரம்பு மீறிச் செயல்படுகிற ஒன்றிய அரசின் சர்வாதிகாரத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனெனில் அரசியல் சாசனப்படி பல்கலைக்கழ கங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ ஒன்றிய அரசுக்கு அதிகாரமில்லை. இவை மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளவை. மேலும் இறுதியாண்டு தேர்வுக்கு முன் “நடத்திய தேர்வுகள் தரமற்றவை” என்று கூறி மருத்துவப் பல்கலைக்கழகங்களை சிறு மைப்படுத்துவதோடு, தான் நடத்தாத ‘நெக்ஸ்ட்’ முதல் படி (NEXT Step I) தேர்வுக்கும் சேர்த்து மருத்துவப் பட்டங்களை மருத்துவப் பல்கலைக்கழ கங்கள் வழங்கவேண்டிய நிலை ஏற்படும். போட்டித் தேர்வான “பிஜி நெக்ஸ்ட்” (மேற் படிப்பிற்கான போட்டித் தேர்வு) தேர்வை, தகுதித் தேர்வான “இறுதியாண்டுத் தேர்வுடன் இணைப்பது” ஒன்றுக்கொன்று முரணானது. பிஜி நீட் தேர்வில், அதிகம் மதிப்பெண் பெறுபவருக்கு, “பிஜி சீட்” என்பது அடிப்படை. “இறுதியாண்டு தேர்வு”, குறைந்த பட்ச மதிப்பெண் பெறுபவர் அனைவரும் தேர்ச்சி பெறுவார் என்ற அடிப்படையில் நடத்தப்படுவது. யுஜி நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவராக முயற்சித்தாலும்,‘நெக்ஸ்ட்’தேர்வின் மூலம் மேலும் வடிகட்டுவதே’இதன் நோக்கமாகும்.
நெக்ஸ்ட் கோச்சிங் மையங்கள் பெருகும்
ஒருபுறம், ‘தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாமே மருத்துவ சீட்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்துகொள்ளலாம்’ என்று கூறி, போதிய அடிப்படை, உள்கட்டமைப்போ, நோயாளிகள் மற்றும் மருத்துவ ஆசிரியர்களோ இல்லாத தரமற்ற தனியார் கல்லூ ரிகளில் படிக்கவைத்துவிட்டு, மறுபுறத்தில் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுதித் தன் “தரத்தை’’ நிரூபிக்க வேண்டுமென்று தே.ம.ஆணையம் கூறுகிறது.
‘நெக்ஸ்ட்’ முதல்படி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை யென்றால் பயிற்சி மருத்துவராக முடியாது. ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருந்து தேர்வு க்குத் தயாராகி மீண்டும் ஒரு ‘பெருந்தொகையைக் கல்வி, தேர்வு மற்றும் விடுதிக்கட்டணங்களாக செலவு’ செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நெக்ஸ்ட் ‘கோச்சிங்’ மையங்கள் பல உருவாகும், ‘கல்வி வியாபா ரம்’ கொடிகட்டிப் பறக்கும். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர் இதனால் ஏற்படும் ‘மன அழுத்தத்தைத் தாண்டியே’ மருத்துவராக வேண்டும்.ஏற்கனவே கிராமப் புறங்களில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையை இது மேலும் மோசமாக்கும். தற்போது, பயிற்சி மருத்துவ ராக ஒரு ஆண்டு பயிற்சி பெற்ற பிறகு, நெக்ஸ்ட் இரண்டாம் படி (NEXT Step 2) தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராக பதிவு செய்யமுடியும். பயிற்சி மருத்துவராகப் பணியாற்றுவதற்கே தற்காலிகப் பதிவு (Provisional Registration) செய்யும் நடை முறை தற்போது உள்ளது. பிராக்டிகல் அல்லது கிளினிக்கல் (செய்முறை தேர்வு அல்லது செயல் முறை தேர்வுகளில்) தேர்ச்சி பெறாத ஒருவர், தற் காலிகப் பதிவு செய்வதை எப்படி அனுமதிக்கமுடியும்? ஜனநாயகத்திற்கு எதிரான, கூட்டாட்சித் தத்துவத்தை புறந்தள்ளுகிற, மக்களுக்கும் மருத்துவ மாணவர்க ளுக்கும் எதிரான இத்தகைய தேசிய மருத்துவ ஆணை யத்தையும் நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளையும் மக்கள் மன்றங்களில் தொடர்ந்து எதிர்ப்பதே – நம் முன் உள்ள முக்கிய கடமையாகும்.
கட்டுரையாளர்: பொதுச் செயலாளர்,
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்.