articles

img

இந்தியாவில் சாதி வேரும் விளைவும்! - பி.சம்பத்

 கம்யூனிஸ்ட்டுகள் இந்திய சாதியமைப்பு குறித்து போதுமான புரிதல் இல்லாதவர்களாகவும், அதற்கு எதிரான போதுமான தலையீடுகள் செய்யாதவர்களாகவும் உள்ளனர் என்ற விமர்சனம் சில அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் தவறானதாகும். இந்தியச் சாதியமைப்பு அதன் உள்ளடக்கம் குறித்து கம்யூனிஸ்ட் இயக்கம் ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, சாதியமைப்பு மற்றும் அதன் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் போராடி வந்துள்ளனர் என்பதோடு இப்போராட்டங்களை பொருத்தமான முறையில் வர்க்கப் போராட்டங்களுடன் இணைத்து ஒரே காலத்தில் நடத்தி வந்துள்ளனர். சாதியம் இந்திய சமூகத்தில் மிக ஆழமாக வேரூன்றியுள்ள பிரச்சனையாகும். நீண்ட நெடுங்காலமாக இந்திய நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் வேதனை தரும் பிரச்சனையாகவும் இருந்து வந்துள்ளது. இன்றும் ஜனநாயக அமைப்பிற்கு அது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்தியச் சாதியமைப்பின் தோற்றுவாய் குறித்து ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னமும் கூட நடந்து வருகின்றன. இருப்பினும், மார்க்சிய கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படைகளை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்த பல சமூக ஆர்வலர்கள் - அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

தோற்றுவாய்

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் சாதியத்தின் தோற்றுவாயாக அமைந்த வர்ணாசிரம அமைப்பு முறை இந்தியாவில் உருவாயிற்று. இந்த வர்ணாசிரம அமைப்பு முறை தான் இந்தியச் சமூகத்தில் வர்க்கச் சுரண்டலுக்கு அடிப்படையாக அமைந்தது. இதுகுறித்து இந்திய வரலாற்று - சமூக ஆய்வாளர் டி.டி. கோசாம்பி, “சாதிய அமைப்பு என்பது இந்திய உற்பத்தி முறையில் துவக்கக் கட்டத்தில் வர்க்க அமைப்பாகவே இருந்தது” என்கிறார். மார்க்சிய அறிஞரான இ.எம்.எஸ். இவ்வாறு கூறுகிறார்: “கிரீஸில் அடிமை முறை உருவானது போல இந்தியாவில் வேறொரு வடிவத்தில் வர்க்கச் சமுதாயம் உருவானது. ஆனால், அடிமைகள், எஜமானர்கள் என்னும் கிரேக்க வர்க்க வேற்றுமைக்கு மாறாக, இங்கே உருவானது தாசர்கள் (சூத்திரர்கள்) ஆரியர்கள் என்ற வடிவிலான வர்ண வேற்றுமை தான். இது தான் பிற்காலத்தில் நால்வர்ணத்தின் மூலமாக அனைத்துச் சாதிகளும், உப சாதிகளும் உள்ள அமைப்பாக மாறியது. பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று பிரிவுகளைச் சாந்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு இரையாகி அடக்கப்பட்டவர்களாக சூத்திரர்கள் (தாசர்கள்) மாறினர். இதில் மூன்று பிரிவினர்கள் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நான்காவது பிரிவினர் ஆளப்படுவோர். இதுதான் இந்தியாவின் வர்க்க - வருண வேற்றுமையின் முதல் வடிவமாகும். சுரண்டல் அமைப்பு முறையின் கவசமாகவே சாதிய அமைப்பு முறை இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை”.

வர்ணாசிரம முறையே இந்தியாவில் சாதிய அமைப்பு உருவானதின் ஆரம்ப அடிப்படை. துவக்க காலத்தில் இந்திய உற்பத்தி முறையில் நான்கு வித உழைப்பு பிரிவினைகள் இருந்தன. (வேதம் ஓதுதல், யுத்தம் செய்தல், வாணிபம் செய்தல், உடலுழைப்பு செய்தல்) இந்த அடிப்படையில் வர்ணாசிரம அமைப்பு உருவானது. பிற்காலத்தில் புதிய உற்பத்திக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்ட போது ஏராளமான உழைப்புப் பிரிவினைகள் உருவாகின. அதனடிப்படையில் வர்ணாசிரம முறையின் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டது. எண்ணற்ற சாதிகளும், உப சாதிகளும் உருவாகின. இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகளும், உபசாதிகளும் உள்ளன என்றாலும் இதன் ஆரம்பகால சமூக அடிப்படை வேதகாலத்திய வர்ணாசிரம முறையே.

தோழர் இ.எம்.எஸ். மேலும் கூறுகிறார்: “படிப்படியான தொழில் நுணுக்கத்திலும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து சூத்திரர்களிலும், அதே போல மேல்சாதி வருணங்களான பிராமணர், சத்திரியர், வைசியர் வருணங்களிலும், பல்வேறு கிளைகள் தோன்றி வளர்ந்தன. அடிமை வேலை, போர்முறை, கடவுள் வழிபாடு - சடங்குகள், வாணிபம் முதலிய ஒவ்வொரு படியிலும் ஏராளமான பிரிவுகள் - உப பிரிவுகள் உருவாயின. இவ்விதமான தொழில் வேறுபாடுகள் பரவலான போது ஆரம்ப காலத்தில் இருந்து வந்த நான்கு வருணத்தவர்களும் நூற்றுக்கணக்கான சாதிகளாகவும், உபசாதிகளாகவும் மாறினர். இந்திய சமுதாய வளர்ச்சியில் ஒரு பிரத்யேகத் தன்மை இது.”  சமூகத்தில் மிகவும் கடுமையான உடலுழைப்பு செய்பவர்களையும், இழிவான சுகாதாரக் கேடு விளையும் பணிகளைச் செய்யக் கூடியவர்களையும் முறையே பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும், தலித் சாதிகளாகவும் வைக்கப்பட்டுள்ள வரலாற்று பின்னணி இது தான். இன்று பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் மிகக் கணிசமான பகுதியினர் எவ்வித உடமையுமின்றி நகர்ப்புற, கிராமப்புற உடல் உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது தற்செயலான நிகழ்ச்சிப் போக்கல்ல. மேற்கண்ட வரலாற்று போக்கின் விளைவேயாகும். வருணாசிரமம்...  கடவுளின் படைப்பாம் மிகக் கொடூரமான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான வருணாசிரம சாதி அமைப்பு முறையை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் வரலாற்றுப் பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆதிக்க வர்க்கமாக இருந்த ஆளும் வர்க்கத்தினர் ஒருபுறம் தத்துவார்த்த ரீதியாக மக்களை இதற்கு தயார்ப்படுத்தினர். மறுபுறும் ஏதேனும் எதிர்ப்புகள் வெளிப்பட்டால் மிகக் கடுமையான அடக்குமுறைகளையும் பிரயோகித்தனர்.

ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த வருணாசிரம முறை கடவுளின் படைப்பு என்றும் அதனை மாற்ற முயலுவது கடவுளை நிந்திப்பதாகும் எனவும் வேதங்கள் வலியுறுத்தின. பிற்காலத்தில் வருணாசிரமத்தை மேலும் பலப்படுத்த உபநிஷத்துக்குள், மனுஷ்மிருதிகள் உருவாக்கப்பட்டன. இதனை நியாயப்படுத்த புராணங்கள், இதிகாசங்கள் எழுதப்பட்டன. புராணங்களில் வரும் கதைகளும், பாத்திரங்களும் வருணாசிரம வேறுபாட்டை நியாயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. மனுஷ்மிருதியின் கூற்றுப்படி, வருணாசிரம முறையை மீறுவது கடவுளின் சித்தத்தை மீறுவதாகும் - இந்த ஜென்மத்தில் கடவுளின் சித்தப்படி செயல்படுபவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் மேலான பிறவி கிடைக்கும் என போதிக்கப்பட்டது. இதனால், சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள் ஆன்மீக ரீதியில் கடும் அச்சத்துடன் வருணாசிரம ஒடுக்குமுறைக்கு அடி பணிந்தனர்.

இருப்பினும், வருணாசிரம ஒடுக்குமுறைக்கு இத்தகைய தத்துவார்த்த கண்ணோட்டத்தையும் மீறி எதிர்ப்புகள் வராமல் இல்லை. சுரண்டலும், ஒடுக்குமுறையும் கடுமையான போது அதற்கு ஆளான சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் தங்களது எதிர்ப்புகளை கடுமையாக வெளிப்படுத்தினர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த போது அவர்கள் மீது கொடூரமான தண்டனைகளும், அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. இவையும் கடவுளின் பெயராலேயே செய்யப்பட்டன. வீரம் செறிந்த போராட்டங்கள்  ஆக, சித்தாந்த ரீதியாக ஒருபுறமும், அதற்கு பணிந்து சுரண்டலுக்கு அவர்கள் ஆட்படாத போது கடுமையானத் தாக்குதல்கள் மறுபுறமுமாக வருணாசிரம சாதிமுறையை ஆதிக்க சக்திகள் அமல்படுத்தின. இத்தகைய பல நூற்றாண்டு கால அடக்குமுறைகள் மூலமே இந்தியாவில் சாதிய அமைப்பும், சுரண்டல் முறையும் நிலைநிறுத்தப்பட்டன. எனவே, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தோடு இணைத்தே நடத்தப்பட வேண்டும் என்பது கம்யூனிஸ்ட்டுகளுடைய அடிப்படையான நிலைபாடாகும். இந்நிலைபாட்டைத் தான் தெலுங்கானா, புன்னப்புரா- வயலார், தேபாகா, வோர்லி போராட்டங்களில் மட்டுமல்ல தமிழகத்தின் கீழத்தஞ்சை போராட்டத்திலும் அமல்படுத்தினோம். தஞ்சை மண்ணில் பி. சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களின் போர்க்குணத்தை வரலாறு என்றென்றும் பறைசாற்றும்.

 வர்க்கப் போராட்டமும், சாதிய ஒடுக்குமுறைகள் - சாதி ஒழிப்புக்கான போராட்டமும் இணைந்த போராட்டங்களே இவை. இந்தியச் சாதியமைப்பில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆட்பட்டவர்கள் என்ற முறையில் தலித்துகளின் உரிமைகளை நிலைநாட்ட வரலாறு நெடுகிலும் முக்கியத்துவம் கொடுத்து போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்துத்துவா - வர்ணாசிரம கோட்பாடுகளின் உறைவிடமாக அமைந்துள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக பரிவாரம் கும்பல் தற்போது ஒன்றிய அரசின் அதிகாரத்தில் உள்ள நிலையில் இப்போராட்டங்களை மேலும் வலுப்படுத்தி நடத்திட வேண்டும்.

சமூகச் சீர்திருத்த இயக்கங்கள்

 மேற்கண்டவாறு போராட்டங்கள் நடத்தும் போதே சமூகச் சீர்திருத்த இயக்கங்களையும் கணக்கில் எடுக்க வேண்டும். சாதி ஒழிப்பிற்காகவும், சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்தும், சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் பாத்திரம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்துள்ளன. இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை அமலாக்கப்பட்ட முறை குறித்து டாக்டர் அம்பேத்கர் ஆவேசத்துடன் குறிப்பிடுகிறார்:  “எவ்வளவு வன்முறையைப் புகுத்தி சமூகத்தில் சாதியை நிலைபெறச் செய்து விட்டார்கள். என் கைகளில் மட்டும் மனு கிடைத்திருப்பானால் அவனை அப்படியே கடித்துக் குதறியிருப்பேன். ஆனால் அவனுடைய ஆவி வடிவம் அல்லவா சாதி அமைப்பை இன்றளவும் பாதுகாத்து வருகிறது.”  இடதுசாரி இயக்கப் போராட்டங்களாலும், சமூகச் சீர்திருத்த இயக்கங்களாலும் உணர்வூட்டப்பட்டுள்ள தலித் மக்களிடையே சமீப காலமாக எழுச்சி வலுவடைந்து வருகிறது. இந்த எழுச்சியை பலப்படுத்துவதும், பொருத்தமான முறையில் அதனை வர்க்க, ஜனநாயகப் போராட்டங்களில் இணைப்பதும் இன்றைய பிரதான தேவையாகும். அப்பாதையில் நடைபோடுவது காலத்தின் கட்டாயமாகும்.