articles

img

மூலதனம் நூலை தமிழில் வழங்கிய தோழர் ஜமதக்னி : ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை - ச.வீரமணி

தோழர் ஜமதக்னி, காரல் மார்க்ஸின் “மூலதனம்” போன்ற ஒரு மாபெரும் தத்துவ நூலைத் தமிழில் மொழிபெயர்து, தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த பெருமைக்குரியவர். இந்தப் பணியை அவர் 75 வயதுக்குப் பின்னர், அயராது உழைத்து, நான்கு ஆண்டுகளில் பத்தாயிரம் பக்கங்களாக எழுதி முடித்தார். இது ஒரு வரலாற்றுச் சாதனை மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு அவர் செய்த ஒப்பற்ற தொண்டு.

ஒரு கடிதம், ஒரு வரலாறு

1980 மார்ச் 25ஆம் தேதி, தோழர் ஜமதக்னி தனது  நண்பர் ஷண்முகத்திற்கு எழுதிய ஒரு கடிதம், அவரது வாழ்க்கை, சிந்தனை மற்றும் பணியைப் பற்றி பல அரிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கடிதம், அவ ரது மொழிபெயர்ப்புப் பணியின் போது எழுதப்பட்டது. இதில் அவர் தனது வாழ்க்கைப் போராட்டங்கள், அர சியல் நம்பிக்கைகள் மற்றும் தமிழ் மொழி மீது அவர் கொண்ட பற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். அவர் எழுதியது:  “அன்புள்ள ஷண்முகம், அரசியலில் உழன்று 9 ஆண்டுகள் சிறைப்பட்டேன்.  குடும்பத்தைப் பராமரிக்கலாமே என்றுதான் உன்னோடு அரசியலில் புகவில்லை. அப்படிப் புகுந்திருந் தால் நான் சிபிஐ(எம்) இல்தான் இருந்திருப்பேன். அது  உனக்கு எதிராக இருந்திருக்குமல்லவா! இரண்டு  (கம்யூனிஸ்ட்) கட்சிக்கும், இலட்சியம் ஒன்று. வழி யில்தானே வேற்றுமை. நீங்கள் காங்கிரசை ஆதரித்தீர், சர்வாதிகார ஆட்சியிலே இந்திரா காந்தியுடன் ஒத்துழைத்தீர், அவர்கள் ஒத்துழைக்கவில்லை. வழியில் சில்லறை வேற்றுமையே. இப்போது இரண்டு (கம்யூனிஸ்ட்) கட்சிகளும் ஒற்றுமையாகப் பாடு பட முனைந்துள்ளன. நல்லதே. டாங்கே கொள்கையி லிருந்து பிரிந்தீர்கள். நல்லதே. இனி, இரண்டும் ஒன்று பட்டால்தான் நாட்டிற்கே நலம்.”

ஒரு மாபெரும் மொழிபெயர்ப்புப் பணி

தோழர் ஜமதக்னி தனது வாழ்நாள் முழுவதும் மார்க்சிய தத்துவத்தைப் பற்றி ஆழமாகப் படித்து, அதைத் தமிழ் மொழியில் வெளிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.அவர் தனது கடிதத்தில் இதைப் பற்றி எழுதியது: “நான் நாட்டிற்கு 1947இல் இருந்து ஒரு தொண்டும் புரியவில்லை என்று சொல்லற்க. தமிழிற்குச் செய்த தொண்டு நாட்டிற்கு நன்மையல்லவா! உடம்பு உழைப்பை கம்யூ னிசத்திற்குக் கொடுக்க வில்லை. உண்மைதான். உடம்பும் வளையாதது ஒரு காரணம். ஆனால், மார்க்சிய இலக்கியங்களைப் பயிலாமல் இல்லை. அதன் பயன்தான் மூலதனம் 6 புத்தகங்கள், 3600 பக்கங்கள், 600 பக்கம் இன்னும் பாக்கி.” இந்தப் பணியை அவர் தனது மருமகன் டாக்டர் மு. நாகநாதன் மற்றும் மகள் டாக்டர் சாந்தியுடன் இணைந்து மேற்கொண்டார். அவர்களின் உதவி யுடன், இந்த மாபெரும் நூல் தமிழில் வெளிவந்தது. தோழர் என். சங்கரய்யாவின் பாராட்டு தோழர் ஜமதக்னியின் பணியைப் பற்றி, மாபெரும்  மார்க்சிய தலைவரும், தியாகியுமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மிகவும் நெகிழ்ந்து பாராட்டி யுள்ளார். தோழர் ஜமதக்னியைப் பற்றி அவர் குறிப்பிடும் போது, “ஜமதக்னி அவர்கள் ஒரு மாபெரும் மார்க்சிய அறிஞர். 1941இல் வேலூர் சிறையில் அவர் நடத்திய மார்க்சிய வகுப்புகள், அந்தக் காலத்திய இளைஞர் களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர். அவரது மொழிபெயர்ப்புப் பணி, தமிழ் மொழிக்கு ஒரு புதையலை வழங்கியுள்ளது” என்று புகழாரம் சூட்டியுள்ளார். “ஜமதக்னி அவர்கள் தமிழ் மொழிக்கும், மார்க்சிய தத்துவத்திற்கும் செய்த தொண்டு, நம்மை எல்லாம் உந்துசக்தியாக இருக்க வேண்டும். அவரது பணி, தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல்கல்” என்றும் சங்கரய்யா குறிப்பிட்டுள்ளார்.

கலைஞரின் புகழாரம்

தோழர் ஜமதக்னியின் வாழ்க்கை, ஒரு தியாகியின் வாழ்க்கை. அவர் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழி மற்றும் மார்க்சிய தத்துவத்திற்காக உழைத்தார்.  அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டது போல்,  “ஒரு நொடியும் வீணாக்காமல் எழுதிக்கொண்டிருக் கின்றேன். இது தமிழ்நாட்டில் எவரும் செய்யாத தொண்டு.” அவரது இந்தப் பணியைப் பற்றி, முதலமைச்ச ராக இருந்த கலைஞர் கருணாநிதி பின்வருமாறு பாராட்டியுள்ளார்: “மார்க்சிய அறிஞர் க.ரா.ஜமதக்னி அவர்கள் தியாகத் தீயில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கமாக ஒளிவிட்டவர். “பிறநாட்டு நல்லறிஞர் சரித்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும்,” என்ற பாரதி யின் வாக்கை செயல்படுத்தும் வண்ணம் பொது வுடைமை சிற்பி காரல் மார்க்ஸ் படைத்திட்ட ‘மூலதனம்’ மற்றும் ‘மிகைமதிப்பு’ நூல்களை, இந்திய மொழிகளி லேயே முழுமையாகத் தமிழ் மொழியில் வழங்கி யுள்ளது கண்டு பேருவகை கொள்கின்றேன்.” தோழர் ஜமதக்னி, தமிழ் மொழிக்கு ஒரு புதை யலை வழங்கியவர். அவரது மொழிபெயர்ப்புப் பணி, தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல்கல். இன்றைய தலைமுறையினர் பலருக்கு இந்த மொழிபெயர்ப்பு இருப்பதே தெரியவில்லை. எனவே, இந்த நூலை மீண்டும் மறுபதிப்பு செய்து, அதை இன்றைய தலைமுறையினருக்கு வெளிக்கொணர வேண்டும்.