articles

இ-சேவை மையங்களுக்கு மூடுவிழாவும் இடைக்கால தடையும்! - சி.ஸ்ரீராமுலு

மனித குல வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமானது தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி.விரல் நுனியில் தகவல்கள், சொடுக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம், தேசங்கள் கடல் எல்லைகளை தாண்டி உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப் போனது. அதனால்தான் நாம் வாழும் யுகம் ‘தகவல் யுகம்’.  அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன் நேர விரையம் தவிர்க்கப்பட வேண்டும். அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இதற்காகவே ஒன்றிய அரசால் கொண்டுவரப் பட்டது E-governance in India (ஈ-கவர்னன்ஸ் இன் (இந்தியா). மின்னணு ஆளுமை. இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் வெளிப்படையாகவும் நம்பகத் தன்மை யுடனும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக, கிராமப்புற சாமானியர்களும் மிக எளிதில் அணுகக்கூடிய வகையிலும், மலிவு விலையிலும் கிடைக்க வேண்டும் என்கிற தொலை நோக்கு பார்வையுடன், வட்டாரத்திற்கு ஒரு மின்னணு சேவை (electronics service), இ-சேவை மையம் (e-savai centre) என்பதை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன் மூலமாக வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்று கள், சமூக நலத்திட்டங்கள், திருமண நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான சான்றுகள் பெறுவது எளிதானது.  அடுத்த கட்டமாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (Tamil Nadu e- governors agency) மூலமாக ஆதார், குடும்ப அட்டைகள், சொத்து மீதான வில்லங்கம், விளைநிலம் மற்றும் வீட்டு மனை பட்டா, சிட்டா, முத லமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டங்களுக்கான சான்றுகள் இ-சேவை மையங்களில் வழங்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் எல்காட் (electronics corporation of Tamilnadu limited -ELCOT) இ சேவை மையங்கள் மூலம் நடத்தி வந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்பட்டது.

தொடங்கியது ஆட்டம்...

எல்காட் நிறுவனத்தின் பொது சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு பயனளித்து வந்த இ சேவை மையங்கள் அனைத்தும் திடீரென மூடப்பட்டன. இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவன மான அரசு கேபிள் டிவி (டாக் டிவி) நிறுவனத்திடம் ஒப்ப டைத்தது தமிழ்நாடு அரசு. அதனைத் தொடர்ந்து, கிராம அளவிலான தொழில் முனைவோர் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் 9700 பொது இ-சேவை மையங்களும் திறக்கப்பட்டன. இந்த இ-சேவை மையங்களில் பணிபுரிவதற்கு ஊதியம் 8000 ரூபாய். குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும் என்று நேர்முகத் தேர்வு நடந்தது. ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த மையங்களில் வேலைப் பளு அதிகரித்ததால் குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் கோரிக்கை முன்னெழுந்தது. இதற்குக் காரணம், ஒப்பந்ததா ரர்கள் மூலம் ஊதியம் கொடுத்ததால் வெளிப்படைத் தன்மை இல்லை.  இந்த சூழ்நிலையில் ‘தமிழ்நாடு தரவு உள்ளீட்டா ளர்கள்’ என்கிற பெயரில் புதிதாக சங்கம் அமைத்தனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒப்பந்ததாரர்கள் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தனர். முதல் கட்டமாக, தினசரி ஐந்து முறை கை ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை கொண்டு வந்தனர். பணிச்சுமை காரணமாக கைரேகையை பதிவு செய்ய ஒரு முறை தவறினால் கூட அந்த ஊழியர் சம்பளத்தில் கை வைத்தனர். இப்படியாக 161 ஊழியர்களிடம் 1 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்தனர். இது உலகத்தில் எந்த மூலையிலும் இல்லாத ஒரு கொடூர அடக்கு முறை யாகும். இதற்கு அரசு அதிகாரிகளும் துணை நின்றது கொடுமையிலும் கொடுமை. வேறு வழியின்றி 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி குமார் வழக்கு தொடர்ந்தார்.

மக்கள் மன்றமும் சட்ட போராட்டமும்!

அரசின் 511 இ-சேவை மையங்கள், 383 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தரவு உள்ளீட்டாளர்கள் பணி புரிந்து வந்த நிலையில், எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முன்வர வில்லை அரசு கேபிள் டிவி நிறுவனம். மேலும் அரசு மற்றும் தனிநபர் தரவுகள் ரகசியமானது மட்டுமல்ல பாதுகாக்க வேண்டியதாகும். ஆனால், தனிநபர் மூலமாக 20,000 ஆதார் சேர்க்கை மற்றும் இ-சேவை மையங்கள் அமைப்பது என்று முடிவு எடுத்து 16,000க்கு மேற்பட்ட நபர்க ளுக்கு வழங்கியது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.  தனியார் வசம் இ - சேவை மையங்களை தாரை  வார்த்ததால் தரவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறி யானது. அது மட்டுமல்ல. சாதாரணமாக, ஒரு சான்றிதழ் கேட்டு பதிவு செய்ய தனியார் மையங்களுக்கு 200 ரூபாயும், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், உதவியாளர்கள் என்று பலருக்கும் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று கிடைக்கும் என்றும் நிலை உருவானது. மேலும், வசதி படைத்தவர்கள், பணம் உள்ளவர்கள் சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவழித்தால் வேறு ஒருவர் நிலத்தின் பட்டாவை தங்கள் பெயருக்கு எளிதில் மாற்றிக் கொள்ளும் மாபியா கும்பலின் ‘மையமாக’ மாறிவிட்டன.

உண்மை நிலவரம் இப்படி இருக்க, அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வந்த இ-சேவை மையங்களில் பரிவர்த்தனை, வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர் என்று 96 மையங்களுக்கு மூடுவிழா நடத்தியது தமிழ்நாடு அரசு. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 66 மையங்கள் அடங்கும். இது, ஊழியர்களுக்கு மேலும் மன  உளைச்சலை ஏற்படுத்தியது. இத்தகைய பின்னணியில், சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, பேறு கால விடுப்பு, பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதியம் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார் தலைமையில் அரசு கேபிள் டிவி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் இ-சேவை மைய ஊழியர்கள் எங்கள் நிறுவன ஊழியர்கள் இல்லை என்று கையை விரித்து விட்டது நிர்வாகம். அதோடு, பல்வேறு மாவட்டங்களில் பரிவர்த்தனை இல்லாத அரசு இ- சேவை மையங்களை அருகிலுள்ள மையங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் அந்த மையங்களிலுள்ள பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு கேபிள் டிவி அரசு நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயசீலன், மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். 

மேலும் 74 மையங்கள் மூடல்

இந்த நிலையில்,மூடப்பட்ட இ-சேவை மையங்களை மீண்டும் திறக்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் திரும்பவும் வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு கேபிள் டிவி தலைமையகம் நோக்கி ஊர்வலம் நடத்தினர்.கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு ரெண்டு கொடுமை என்ற கதையாக, மேலும் 74 அரசு கேபிள் டிவியின் இ-சேவை மையங்களை கடந்த மாதம் 31ஆம் தேதியோடு மூடுவதற்கு உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.   இந்த உத்தரவையும் ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வரும் இ-சேவை மையங்க ளை மூடுவதற்கு இடைக்காலமாக தடை விதித்த நீதிபதி, ஏற்கனவே 2022 -ஆம் ஆண்டில் தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் தாக்கல் செய்திருக்கும் வழக்குகள் மீதும் பதிலளிக்க வேண்டும் என்றும் கேபிள் டிவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

நிரந்தர உத்தரவாகும்: நம்பிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர் சங்கத்தின் தலைவர் கோபி குமாரிடம் கேட்டபோது, “நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்காலமாக இருந்தாலும், அந்த உத்தரவு நிரந்தரமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட இ-சேவை மைய ஊழியர்கள் தொடர்ச்சியாக 480 நாட்க ளுக்கும் மேலாக பணி செய்துள்ளனர். அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதுடன் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடரப்பட்ட வழக்கிலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்ப தால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.