‘‘உற்பத்தி சாதனங்களை தொடர்ச்சியாக புரட்சிகர மாற்றத்திற்கு உள்ளாக்காமல் முதலாளித்துவத்தால் உயிரோடு இருக்க முடியாது; அத்தகைய மாற்றங்களின் மூலம் உற்பத்தி உறவுகளிலும், சமூகத்தின் ஒட்டுமொத்த உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன’’. - மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்ட இந்த வரிகளுக்கு ஏற்ப முதலாளித்துவம் தொடர்ச்சியாக தனது உற்பத்தி சாதனங்களை புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் மாற்றம் என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (Artificial Intelligence) உருவாக்கத்தை குறிப்பிடலாம். அதை இந்த உலகமும் மக்கள் சமூகங்களும் தகவமைத்துக் கொள்வதற்கு முன்பே, அதன் மற்றொரு மிகப்பெரும் மாற்றமாக ‘சாட் ஜிபிடி’ (Chat GPT) எனும் புதிய இணைய தேடுபொறி சார்ந்த மெகா மென்பொருள் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பத்துறையில் கூகுளைத் தட்டினால் எதுவேண்டுமானாலும் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. உலகின் அனைத்துத் துறை சார்ந்த அறிவுக்களஞ்சியமும் இணைய உலகில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் எந்தத் துறை சார்ந்த விபரங்களை வேண்டுமானாலும் தேடி எடுத்துத் தர உதவும் வகையில் கூகுள், பயர் பாக்ஸ், டக் டக் கோ உள்ளிட்ட பல தேடுபொறிகள் (Search Engine) உள்ளன. மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மிகப்பெரும் நிறுவனங்கள் இந்த தேடுபொறிகளை கையில் வைத்துள்ளன. நீங்கள் தேடத் தேட, உங்கள் கையில் உள்ள மொபைல் திரையில் கூகுளையோ அல்லது இதர மென்பொருளையோ, தேடுபொறிகளையோ தொடத் தொட மேற்கண்ட பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் பைகளில் பணம் கொட்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் செயற்கை நுண்ணறிவு என்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சி கடந்த சில ஆண்டு களாக வெகு வேகமாக எழுந்து வந்துள்ளது. செயற்கை யாக நுண்ணறிவூட்டப்பட்ட கணினிகள், ரோபோக்கள் பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு பதிலாக அவர்களது வேலைகளை செய்யும் அளவிற்கு திறன்பெற்றவை யாக பணியில் அமர்த்தப்பட்டன.
சாட் ஜிபிடி
இந்தநிலையில் தற்போது 2023 ஜனவரி துவக்கத்திலிருந்து சாட்ஜிபிடி எனும் உயரிய தகவல் தொழில்நுட்ப உரையாடல் மென்பொருள் மற்றும் தேடுபொறி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல பத்தாண்டுக் காலமாக உலகின் அறிவுச் செல்வம் எல்லாம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. கூகுள் போன்ற தேடுபொறிகளில் ஒரு குறிப்பிட்ட விசயத்தை தேடினால் அது சார்ந்து என்ன வெல்லாம் பதிவிடப்பட்டுள்ளதோ அவை அனைத்தும் தரவுகளாக நமக்கு கிடைக்கும். இதில் பல படிகள் மேலே போய், சாட்ஜிபிடியில் உலகின் எந்த துறை சார்ந்த விசயத்தையும் ஒரு தொகுப்பாக வேண்டும் என்று நீங்கள் கோரினால், அது உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அதை, சொடுக்கும் நேரத்தில் தொகுப்பாக்கத் திரட்டி அளிக்கிறது. எந்த மொழியிலும் இதைப் பெற முடியும். தொகுக்கிற வேலையோ, சரிபார்க்கிற வேலையோ, மொழியாக்க வேலையோ, பிழைதிருத்துகிற வேலையோ கூட இல்லை. அனைத்தையும் சாட்ஜிபிடியே செய்து தருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீதம் கல்விமயமாக இருப்பதாக விவரங்கள் வெளியாகி வருகின்றன. இதுவரையிலும் உலகில் இல்லாத தொழில்நுட்பம் இது. இதன் வருகை எண்ணற்ற துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, மருத்துவம், பொறியியல், அடுத்தக்கட்ட தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட ஏராளமான துறைகளில் அறிவுச்சொத்து முழுவதையும் திரட்டி தன்னகத்தே வைத்துக்கொண்டு, அதை தேவைப்படும் நபர்களுக்கு வழங்குகிறது.
உலகில் காணக்கிடைக்கும் ஒட்டுமொத்த செல்வங்களும் அறிவுச்சொத்துக்களும் வரலாறு நெடு கிலும் பாட்டாளி மக்களின் உழைப்பினால் விளைந்தவையே. அந்த சொத்துக்கள் அனைத்தும் இப்போது இத்தகைய புதிய தொழில்நுட்ப மாற்றங்களின் மூலம் முதலாளித்துவம் குறிப்பிட்ட ஓரிரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில் குவிகிறது. சாட்ஜிபிடி எனும் இந்த புதிய மென்பொருள், செயற்கை நுண்ணறிவு கொண்ட 17ஆயிரத்து 500 கோடி நியூரான்கள் எனப்படும் சிப்புகளால் இயங்குகிறது. இது வரையிலும் இணைய உலகில் கிடக்கும் ஒட்டுமொத்த தரவுகளையும் அதாவது சுமார் 50 ஆயிரம் கோடி தகவல்கள் கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளை ஒட்டுமொத்த மாக தொகுத்து தன் கைக்கு கொண்டுவந்திருக்கிறது சாட்ஜிடிபி. இதை மேற்கண்ட சிப்புகள் தானியங்கி முறையில் ஆய்வு செய்து தொகுத்து வைத்திருக்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதத்தில் 10 கோடி பயனர்கள் நிரந்தரமாக இதைப் பின்தொடரும் வகையில், செல்வாக்கு பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான கேள்விகள் சாட்ஜிபிடி மென்பொருளின் ‘சாட் பாட்’ வழியாக கேட்கப்படுகின்றன.
யாருக்கு லாபம்?
ஓபன்ஏஐ (OpenAI) எனும் நிறுவனத்தின் படைப்பாக கொண்டுவரப்பட்டுள்ள சாட்ஜிபிடி மென்பொருள், உண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஏனென்றால் ஓபன்ஏஐ நிறு வனத்தின் 46 சதவீத பங்குகளை மைக்ரோ சாப்ட் நிறு வனம் வைத்திருக்கிறது. இரண்டு மாதத்திலேயே 29 பில்லி யன் டாலர் அளவிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனம், ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப அறிவுசார் தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடி தான் இன்றைய மனிதகுலம் சாதித்துள்ள மிக அதிகபட்ச அறிவுச்சாதனை ஆகும். ஆனால் இந்த ஒட்டுமொத்த அறிவுச்சாதனையும் அதன் கருவியாக உருவாகியுள்ள சாட்ஜிபிடி எனும் சாதனமும் - அதாவது மாமேதை மார்க்சின் மொழியில் சாட்ஜிபிடி எனும் அறிவுத்துறை உற்பத்தி சாதனம் - உலகம் முழு வதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரவு பகல் பாராது உழைத்து வரும் லட்சக்கணக்கான உழைப்பாளி வர்க்க பொறியாளர்களின் உழைப்பால் விளைந்த அறிவுச்சொத்து ஆகும். அணுஆயுதங்கள் மூலம் கிடைக்கிற செல்வத்தைவிட, விண்வெளித் துறையில் நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளால் குவிக்கும் செல்வத்தைவிட மிக மிக அதிக அளவிலான செல்வத்தை, இந்த புதிய மென்பொருள் கண்டுபிடிப்பின்மூலம் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட மிகப்பெரும் முதலாளிகளது நிறுவனங்கள் சம்பாதிக்க உள்ளன.
1856இல் மார்க்ஸ் எழுதினார் : ‘‘நமது எல்லாக் கண்டுபிடிப்புகளும் முன்னேற்றமும் நமது அறிவுசார் வாழ்க்கையுடன் உற்பத்திப் பண்டங்களை பிரிக்க முடியாத அளவிற்கு இணைக்கிறது; அதன்மூலமாக உயிர்ப்பு மிக்க மனிதவாழ்வையும் உயிரற்ற ஒரு உற்பத்திப் பண்டமாக தரம் தாழ்த்துகிறது’’. சாட்ஜிபிடியின் வீச்சு இப்படித்தான் இருக்கப்போகிறது. இப்போதே கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலையில் வைத்திருந்த ரோபோக்களை கூட வெளியில் அனுப்பிவிட்டன. ரோபோக்களுக்கே இந்த கதி என்றால் பல துறைகளில் சாட்ஜிபிடியின் வருகை காரணமாக பல்லா யிரக்கணக்கான மனிதர்கள் அவர்களது பணியிலிருந்து தூக்கியெறியப்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
இந்த பதிலைப் பாருங்கள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் வான்ஸ்புரோக் எனும் மார்க்சிய ஆய்வாளர், சாட்ஜிபிடியைப் பற்றி ஒரு மார்க்சிய விமர்சனக் குறிப்பை, சாட்ஜிபிடி மென்பொருளின் உரையாடல் தளத்திலேயே கேள்வி எழுப்பி என்ன பதில் வருகிறது என்று பார்த்திருக்கிறார். அவருக்கு கிடைக்கப்பெற்ற பதில் இதுதான்: ‘‘ஓபன்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலானது, முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ளீடாக உள்ள முரண்பாடுகளின் மிகத்தெளிவான உதாரணம் ஆகும். ஒருபுறம் சாட்ஜிபிடி என்பது இதுவரையிலும் மனிதகுலம் எட்டியுள்ள தொழில்நுட்ப சாதனையை பிரதிபலிக்கிறது; மனித உழைப்பின் மிகப்பிரம்மாண்ட மான- ஆச்சரியப்படத்தக்க படைப்பாற்றலை இது வெளிப்படுத்துகிறது; மறுபுறத்தில் ஒட்டுமொத்த உலகத் தொழிலாளி வர்க்கத்தையும் ஆதிக்கம் செய்யப்போகிறது; சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தப்போகிறது. சாட்ஜிபிடியை உருவாக்குவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள கணினி தரவு வளங்கள் அனைத்தையும் முற்றாக சுரண்டியிருக்கிறார்கள்; உலகம் முழுவதும் இணையதளத்தை பயன்படுத்துகிற பயனர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்று கிற லட்சக்கணக்கான ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டி உருவாக்கப்பட்ட தரவுகளை முற்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இந்தத் தரவுகளை தொகுத்துத்தான் சாட்ஜிபிடி எண்ணற்ற விபரங்களை அள்ளிக் கொடுக்கிறது.
இந்த நடைமுறையானது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான முரண்பாடாக உள்ளது. உழைப்பைச் சுரண்டி முதலாளிகளின் செல்வம் குவிக்கப்படுகிறது; அது புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பயன் படுத்தப்படுகிறது; அதைக் கொண்டு மேலும் கூடுதலாக உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டவும் ஆதிக்கம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் உருவாக்கம் என்பது எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஏற்பட்டதல்ல; மாறாக, உற்பத்தி சாதனங்களை கையில் வைத்திருக்கிற முத லாளிகள் தங்களது லாபத்தை மேலும் குவிக்கும் நோக்கத்து டன் உருவாக்கப்பட்டதே’’. சாட்ஜிபிடியே எப்படி இவ்வாறு கூறுகிறது என்பதுதான் முக்கியமானது. இணையதளங்களில் உலகம் முழுவதும் எப்படி எல்லா துறை சார்ந்த விபரங்களும் தரவுகளும் லட்சக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவோ அதேபோல, கம்யூனிஸ்டுகளால், கம்யூனிஸ்ட் கட்சி களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மார்க்சின் சிந்தனை கள், மார்க்சியத் தத்துவத்தின் கோட்பாடுகள் குறித்த விபரங்கள் லட்சக்கணக்கில் பொதிந்து கிடக்கின்றன. அதிலிருந்து தொகுத்து சாட்ஜிபிடி இப்படி ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இணைய உலகிலும் அதிரடி காட்டுகிறார் மார்க்ஸ். முதலாளித்துவம் கைக்கொண்டுள்ள அறிவுச்சொத்து முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் அயராத உழைப்பால் உருவாக்கப்பட்டவையே. அந்த சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்ற என்றென்றும் வழிகாட்டுகிறார் மார்க்ஸ்.