articles

img

குழந்தைத் திருமணம் செய்து கொண்ட ஆளுநர் குழந்தைத்தனமாக பேசலாமா? - மதுக்கூர் இராமலிங்கம்

சனாதனத்தின் சந்நிதானமாக தம்மைக் கருதிக்கொள்கிற ஆளுநர் ஆர்.என்.ரவி வாயைத் திறந்தாலே பிற்போக்குக் கருத்தியல்கள் பீறிட்டு வழிகின்றன. அண்மையில்  ஆளுநர் மாளிகையில் பீகார் மாணவர்களைச் சந்தித்து உரையாடிய ஆர்.என்.ரவி, “எனது திருமணம் குழந்தைத் திருமணம். திருமணத்தின் போது எனது மனைவி சிறு மியாக இருந்தார். அவர், கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால், எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார்” என்று திருவாய் மலர்ந்துள்ளார். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலேயே 1930-ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் நடை முறைக்கு வந்துவிட்டது. அநேகமாக அதற்குப்பிறகு தான் இவருக்குத் திருமணமாகி இருக்க வேண்டும். அது  கூடப் பரவாயில்லை. இவர் அதற்கு பொறுப்பேற்க முடி யாது. ஆனால் நீங்கள் யாரும் இவ்வாறு குழந்தைத் திருமணத்தை செய்து கொள்ளாதீர்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். ஆனால் மாணவர்கள் மத்தியில் என் மனைவி கல்லூரிக்கே செல்லவில்லை என்றும்  எனக்கு பக்கபலமாக இருந்தார் என்றும் கூறவேண்டியதன் அவசியம் என்ன? பெண்கள் கல்லூரிக்குப் போக வேண்டாம். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு கொண்டவனுக்கு பக்கபலமாக இருந்தால் போதும் என்று கூறவருகிறாரா? அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் மாநிலம் தமிழ்நாடு என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர் குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை வேறொரு விவகாரமும் எடுத்துக்காட்டுகிறது. சிதம்பரம் தீட்சிதர்கள் இன்னமும் கூட குழந்தைத் திருமணத்தை மறைமுகமாக நடத்தி வருகின்றனர். அண்மையில் இவ்வாறு நான்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப் பட்டு சிதம்பரம் நகர் காவல்நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.  தீட்சிதர்கள் உள்ளிட்ட பெண் குழந்தைகளை கன்னித்தன்மையைச் சோதிக்க இருவிரல் சோதனை நடத்தப்பட்டதாக பொய்ப்புகார் எழுந்தது. ஆளுநர் உடனடியாக தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதினார். பாஜகவின் நாராயணன் ஆவேசமாக கூக்குரலிட்டார். இருவிரல் சோதனை நடத்தப்பட்டிருந்தால் அது தவறுதான். ஆனால், அவ்வாறு எந்தச் சோதனை யும் சிதம்பரம் தீட்சிதர் வீட்டுச் சிறுமிகளுக்கு நடத்தப்பட வில்லை என்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் இத்தகைய சோதனை எதுவும் நடைபெறவில்லையென்றும் மருத்துவர் மற்றும்  நீதித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சில சோதனைகள் நடைபெற்றது. குழந்தைத் திரு மணத்தை தடுத்து நிறுத்துவது அரசின் கடமையென்றும் கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் ஆளுநர் கூறியதை நினைத்துப் பார்க்கிற பொழுதுதான் குழந்தைத் திருமணம் எனும் கொடிய பழக்கத்திற்கு இவர் முட்டுக் கொடுக்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. குழந்தைத் திருமணம் எனும் நாகரீகமற்ற பழக்கத்திற்கு முடிவு கட்ட  போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், சனாதனிகள் இப்போதும் கூட அதை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.  மூத்த பத்திரிகையாளர் இரா.விஜயசங்கர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சில செய்திகள் ரத்தத்தை உறையச் செய்வதாக உள்ளன. ‘டைம்ஸ் ஆப்  இந்தியா’ பத்திரிகையில் அங்க்ளேசரிய ஐயர் எழுதியுள்ள  கட்டுரையில், 1927-ஆம் ஆண்டு வெளியான காத்தரின் மேயோ-வின் நூலிலிருந்து சில செய்திகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

1. திருமணம் செய்து வைக்கப்பட்ட மறு நாளே வயோதிக  கணவனின் பாலியல் வன்முறைக்கு ஆளான இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய தொடை எலும்பு பிறழ்ந்திருந்தது. இடுப்புப் பகுதி முற்றிலும் சேதமடைந்திருந்தது. சதை பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது.

2. ஒன்பது வயது சிறுமி குழந்தையொருவர் அறுவைச் சிகிச்சையால் குணப்படுத்த முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்தார். அவருடைய கணவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உண்டு.

3. பத்து வயது  சிறுமி குழந்தையின் பின் பகுதியி லிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

4. ஏழு வயது சிறுமி குழந்தைக்கு அவரது கணவர் இழைத்த கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மூன்றாவது நாள் இறந்து போனார்.

5. பத்து வயது சிறுமி ஒருவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அடுத்த நாளே அவரது கணவர் அவரைப் பயன்படுத்த எனக்கு உரிமையுண்டு எனக் கூறி அழைத்துச் சென்றுவிட்டான்.

6. பத்து வயது சிறுமி மருத்துவமனைக்கு கைகளாலும் முட்டியாலும் தவழ்ந்து கொண்டே வந்தார். திரு மணத்திற்குப் பிறகு அவர் நேராக நிற்கவே முடிய வில்லை.

ஒரு மருத்துவர் கூறுகிறார். அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை. அவளுடைய உள்ளுறுப்புகளில் புழுக்கள் ஊர்ந்தன.  அனுமதிக்கப்பட்ட பல நாட்களுக்கு அவர் பேச்சின்றிக் கிடந்தார். அவருடைய விவாக உரிமையை மீட்க கணவன்  வழக்கு தொடுத்திருந்தான். அப்போது அந்தச் சிறுமி யின் வயது ஏழு. குழந்தைத் திருமணத்தால், பாலியல் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏராளம். இத்தகைய கொடுமைகள், பண்பாடு, புனிதம், பாதுகாப்பு, கற்பு என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருந்த சூழலில் தான் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1891-ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமுன்வடிவாக முன்வைக்கப்பட்டு 1929-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சட்டமாக நிறை வேற்றப்பட்டு, 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்  சார்தா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, பெண்ணுக்கு 14 வயது பூர்த்தியான பின்பும் ஆணுக்கு 18 வயது பூர்த்தியான பின்பும் தான் திருமணம் செய்துவைக்க வேண்டுமென இந்தச் சட்டம் கூறியது.

இந்தச் சட்டம் வந்தபோது பாலகங்காதர திலகர்  கடுமையாக எதிர்த்தார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்றார். ஆனால், திலகரின் சீடர் என்று கூறிக்கொண்டா லும் வ.உ.சிதம்பரனார் இந்தச் சட்டத்தை வரவேற்றார். ஆனால், இப்போதும் கூட சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் தங்களை அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதிக்கொண்டு குழந்தைத் திருமணங்களை செய்து வைக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கிறார் சனாதன ஆளுநர். சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள தீட்சிதர்கள் இந்து அறநிலையத்துறையிடம் அதை ஒப்படைக்க மறுக்கின்றனர். நந்தனார், வள்ளலார் என பல அறிஞர்களிடம் தங்களது தடித்தனத்தைக் காட்டிய அவர்கள் இன்னமும் கூட அதைத் தொடர்கின்றனர்.

கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி, காணிக்கைகளில் கையாடல், தேவாரம் உள்ளிட்ட தமிழ்ப் பாயிரங்களை பாட விடாமல் தடுப்பது. அந்த கோவிலிலுள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்யவிடாமல் தடுப்பது. நடராஜர் சந்நிதிக்கு அருகே இருந்த நந்தனார் சிலையை அகற்றியது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துதர மறுப்பது. ஆயிரங்கால் மண்டபத்தை ஆடம்பரத் திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு, துட்டு பார்ப்பது என தீட்சிதர்கள் அட்டூழியம் தொடர்கிறது. அவர்கள் போடும் தப்புத்தாளத்திற்கு நாட்டியமாடு கிறார் மேதகு ஆளுநர் ரவி. குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறாரா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சனாதனம் என்ற பெயரில் விதவைத் திருமணத்தை மறுப்பது, உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்துவது என்பதெல்லாம் கூட நடந்துவருகிறது. காலச்சக்கரத்தை பின்னுக்குத் தள்ள ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. காலாவதியான ஒரு பதவியில் அமர்ந்துகொண்டு காலாவதி தத்துவத்திற்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்திக்கொள்வது ஆளுநருக்கு நல்லது.