அரசின் “பல்வேறு பொருளாதார கருவிகளில்” ஒன்று தான் பட்ஜெட். ஆனால் ஊடகங்கள் அதை மிகைப்படுத்தி, அதை ஒரு பெரிய சர்வரோக நிவாரணி போல ஆக்குகின்றன. ஆனால் உண்மையில் பார்க்கும் பொழுது அந்த அளவுக்கு அதில் உள்ளடக்கம் ஒன்றும் இல்லை.
கொள்கையைத் தீர்மானிப்பது யார்?
பட்ஜெட் உரை என்பது உண்மையில் ஒரு அரசியல் நிகழ்வே. ஒன்றிய அரசின் ஒரு வருட வரவுகள் மற்றும் செலவுகள் பற்றிய மதிப்பீடாக அது வெளி வருகிறது. அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளை புறந்தள்ளி விட முடியாது. நாட்டில் பெரும்பகுதி செல்வங்கள் ஒரு சிலரிடம் இருக்கிறது. அவர்கள் தான் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள். அவர்கள் தான் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். அரசியல் கொள்கைகளை அவர்கள் தான் நிர்ணயிக்கிறார்கள். ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுக்கும் இவர்களிடமிருந்து தான் நிதி கிடைக்கிறது. உற்பத்தி சார் சொத்துக் களின் விநியோகமும் வருமான விநியோகமும் யார் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதை நிர்ணயம் செய்கிறது. அந்த வரம்புகளுக்கு உட்பட்டு தான் பட்ஜெட் அமையும் என்பது எதார்த்தம்.
பொருளாதாரக் கணக்கு அல்ல; அரசியல் கணக்கு
கடந்த 30 ஆண்டுகளாக தாராளமயக் கொள்கைகள் பின்பற்றப்படுவதால் இந்திய பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பெருமளவு இணைப்பு ஏற்பட்டு இருக்கிறது. 1991இல் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் இறக்குமதி - ஏற்றுமதி இரண்டும் சேர்ந்தே ஏழில் ஒரு பங்கு தான் இருந்தது. ஆனால் இன்று அது தேச உற்பத்தி மதிப்பில் 50 % க்கு மேல் இருக்கிறது. பன்னாட்டுச் சூழலை புறக்கணித்து பட்ஜெட் போடுவதிலும் சிரமம் இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதாரச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்வதற்கு பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது ஒரு முயற்சி. ஆனால் இது பொருளாதாரம் மட்டுமல்ல, அரசியலும் கூட. வரும் ஆண்டில் ஒன்பது மாநில தேர்தல்கள் வருகின்றன. 2024 இல் அகில இந்திய பொதுத் தேர்தல் வருகிறது. எனவே ஆளும் கட்சி இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் பட்ஜெட்டை உருவாக்கும்.
பட்ஜெட்டுக்கு முந்தைய நாடகம்
இந்த அரசாங்கம் அவ்வப்பொழுது சுங்க வரியை உயர்த்தி இருக்கிறது. அவ்வப்பொழுது பெட்ரோல் விலையையும் உயர்த்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தை கேட்காமலே அன்றாடம் அரசு பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் பண மதிப்பு நீக்கம் ஆகியவை பயங்கரமான நடவடிக்கைகள். இதற்காக யாருடைய ஒப்புதலும் பெறப்படவில்லை. பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனை என்ற ஒரு நாடகம் நடக்கிறது. அதற்கு பெரு முதலாளிகளை அழைக்கிறார்கள். தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களை அழைப்பதில்லை. அரசு அந்நிய, இந்தியப் பெருமுதலாளிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மக்களுடைய பங்கு இதில் என்ன இருக்கிறது. தேர்தல் ஏன் நடத்துகிறீர்கள் என்ற கேள்விகள் இதைப் பேசும் போது வருகிறது. ஒன்றிய அரசின் மொத்த செலவு மற்றும் வரவு தேச உற்பத்தி மதிப்பில் ஏழில் ஒரு பங்கு -அதாவது, கிட்டத்தட்ட 14 சதவீதம் வருகிறது. தற்போதைய ஒன்றிய அரசாங்கம் செலவுகளை வெட்டிக் கொண்டே வருகிறது. ஐமுகூ-1 அரசாங்கத்தில் இடதுசாரிகள் மக்கள் நலனுக்காக அழுத்தம் கொடுத்தார்கள். எனவே அரசின் வரவு மற்றும் செலவு 14 சதவீதத்திற்கு மேல் இருந்தது. தற்போதைய அரசு அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றுகிறது. எனவே செலவுகளை வெட்டி வருகிறது. இந்தப் பொதுவான சூழலுக்கு உட்பட்டு, இந்த பட்ஜெட்டினால் யார் பயன்பெறப் போகிறார்கள்; இது வளர்ச்சிக்கான பட்ஜெட்டா என்ற கேள்விகள் வரும்.
‘பட்ஜெட் அற்ற பட்ஜெட்’
தொடர்ந்து இரண்டு வருடங்களாக நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டை ‘Non budget’ அதாவது “பட்ஜெட் அற்ற பட்ஜெட்” என்றே கூறலாம் பெரும்பாலும் பல அறிவிப்புகள் மற்றும் ஆளுங்கட்சிக்கு ஊக்கம் தரும் முனைவுகள் தான் பட்ஜெட்டில் உள்ளன. இந்த முறை தனிநபர் வருமான வரியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசின் மொத்த செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மொத்த செலவுகள் ரூ.41.5 லட்சம் கோடியிலிருந்து 45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 7 சதவீதம் பண வீக்கத்தை கணக்கில் கொண்டால் இது உயர்வே அல்ல. 2022-23 திருத்திய மதிப்பீட்டிற்கும், 2023-24 பட்ஜெட் முன்மொழிவுகளுக்கும் வித்தியாசம் இல்லை. பட்ஜெட்டில் சொல்லப்படுவது மதிப்பீடுகள் தான். இறுதி செய்யப்பட்ட தொகை அல்ல. ஆனால் பட்ஜெட் மதிப்பீட்டுக்கும் உண்மையான செலவுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. நிலையற்ற பன்னாட்டு சூழல், உலக அளவிலான விலைவாசி நிலைமைகள், மேலை நாடுகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவற்றை இணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.
7 சதவீதம்... உண்மையான வளர்ச்சியா?
ஆனால் உலகத்திலேயே இந்தியா தான் ஒளிமயமான நாடு என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றும், 7 சதவீத வளர்ச்சி என்றும் பாஜக அரசு வீராப்பாக சொல்கிறது. அது தேர்தலை மனதில் வைத்துச் சொல்லப்படுவது. 2019-20 லேயே வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. 2020ல் பெருந்தொற்று வந்தது. 2020-21 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பெருமளவு சரிந்தது (10.5%). அதனுடைய மீட்சிதான் 2022-23ல் ஏற்பட்டது. ஆகவே 7 சதவீதம் வளர்ச்சி என்பது உண்மையானது அல்ல. இது மீட்சியின் பகுதியாக வருகிற வளர்ச்சி விகிதம் என்றே கூற வேண்டும். 2022-23 இல் தான் முதல் முறையாக 2019-20ஆம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தி அளவை எட்டி, சற்று தாண்டி இருக்கிறது. அதனால் 7 சதவீதம் வளர்ச்சி என்பதை விமர்சனமே இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியாது. தனிநபர் வருமான வரியில் கூட அரசு சொல்லக் கூடிய விஷயங்களுக்கும், எதார்த்த நிலைமைக்கும் வேறுபாடு உள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது வரி அடுக்குகளும் மாறித்தான் ஆக வேண்டும். எனவே அதைப் பெரிய சலுகை என்று கூற முடியாது.
கார்ப்பரேட்டுகளின் லாபமும் உழைப்பாளியின் வருமானமும்
கார்ப்பரேட்டுகளின் லாபம் உடைமையின் அடிப்படையில் கிடைக்கிறது. உழைப்பாளி மக்களின் வருமானம் உழைப்பின் அடிப்படை யில் கிடைக்கின்றது. உழைப்பின் அடிப்படையில் வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை கொடுத்தால் தவறில்லை. ஆனால் இந்த சலுகையால் 35000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று நிதி அமைச்சர் கூறுகிறார். இது ஒரு பெரிய தொகை அல்ல. ஆனால் 2019 லேயே அப்போதைய தொய்வு நிலையை காரணம் காட்டி, நிதி அமைச்சர் கார்ப்பரேட்டு களுக்கான வரியை 30 % லிருந்து 22 % ஆகக் குறைத்தார். இதனால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு அன்றைய தேதியில் ஏற்பட்ட இழப்பு 145000 கோடி ரூபாய். 2020ல் நேர்முக வரியில் 64,000 கோடி ரூபாய் இழப்பு. இதற்கிடையில் மந்த நிலையை காரணம் காட்டி ஏற்றுமதிக்கு 50,000 கோடி ரூபாய், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு 10000 கோடி ரூபாய் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு என்று மொத்தம் 300000 கோடி ரூபாயை விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் 2020ல் அரசு ஒதுக்கியது.
பங்குகளை விற்றுத் தின்பதா?
இதனை ஈடுகட்ட மக்களின் சொத்துக்களாகிய பொதுத்துறை யின் பங்குகளை விற்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அரசால் நினைத்த அளவிற்கு பங்குகளை விற்க முடிய வில்லை. இந்த பட்ஜெட்டில் மூலதன வருவாய் என்பது கடன் வாங்குவது மற்றும் சிறுசேமிப்புகள் மூலம் வருகிறது. அது போக பிற மூலதன வரவுகள் என்பது பங்கு விற்பனை மூலம் வருவது. இதற்காக பெரும் இலக்குகளை அரசு நிர்ணயித்தாலும் அதில் சிறு பகுதியைத்தான் நிறைவேற்ற முடிந்துள்ளது. வலுவான பொதுத்துறைகளை, அவற்றில் உள்ள உபரியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அரசுக்கு வரவில்லை. அப்படியானால் மக்களுக்கான கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு ஆகியவற்றை யார் செய்வார்கள்? லாப நோக்கில் செய்தால் அது மக்களை சென்றடையாது. செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிப்பதாக இருக்கும். இது அரசின் கடமை என்று நினைத்த ஒரு காலம் உண்டு. இன்றைய தாராளமய சிந்தனையில், மக்களுக்கான தேவைகள் பின்னுக்குச் சென்று விட்டன. எல்லாமே தனியார்மயம் என்று ஆகிவிட்டது.
எளிய மக்கள் செலுத்துவது இரண்டு பங்கு வரி
ஜிஎஸ்டி மாதத்திற்கு ரூ.1லட்சம் கோடி என்ற அளவிற்கு அதிகமாக வசூல் ஆகிறது என்று அரசு பெருமையாக சொல்கிறது. அடுத்த வருடத்திற்கு 9 லட்சம் கோடி ரூபாய் வரும் என்று அரசு சொல்கிறது. கார்ப்பரேட்டுகளிடம் வசூலிக்கும் மொத்த வரி 9லட்சம் கோடி ரூபாய். ஆனால் கலால் வரி, சுங்க வரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி ஆகியவை சேர்ந்து இதைவிட அதிகமாக உள்ளது. ஒன்றிய அரசுக்கு மறைமுக வரி மூலமாக 6% நிகர வருவாய் வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் சேர்த்து வசூலிக்கும் வரி மொத்த தேச உற்பத்தி மதிப்பில் 16 % அளவுக்கு உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மறைமுக வரி ஆகும். அதாவது மக்களை பாதிக்கின்ற வரி. மூன்றில் ஒரு பங்கு தான் செல்வந்தர்கள் தரும் வரி. இந்த வரிமுறை யானது பெரும்பான்மை மக்களுடைய வாங்கும் சக்தியை பாதிக்கும். இன்னொரு அம்சம், அறிவிக்கப்பட்ட சலுகைகள் என்னவாயிற்று? அதன் மூலம் கிடைத்த பயன்கள் என்ன என்று கேள்வி உள்ளது. பெரு முதலாளிகளுக்கு சலுகைகள் அளித்தால் அவர்கள் முதலீடு செய்வார்கள். அதனால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற கதை யாடல் இருக்கிறது. ஆனால் அதற்கான எந்த தரவுகளும் இல்லை.
வெட்டப்பட்ட நிதி
2020-21ல் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது 90ஆயிரம் கோடி ரூபாய். 2022-23 பட்ஜெட் மதிப்பீடு 73 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் செலவழிக்கப்பட்டது 89 ஆயிரம் கோடி ரூபாய். வேலை நாட்களும் குறைந்துள்ளன. ஆனால் 2023-24 இல் பட்ஜெட் மதிப்பீடு 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஊதியம் மற்றும் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ள இந்த சூழலில் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாகாது
பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்கள் அறிவிப்புகளாகவே உள்ளன. ஒதுக்கீட்டுத் தொகை இல்லை. திட்டம் இல்லை. காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அண்மைக்காலங்களில் அரசின் தரவுகள் நம்பிக்கையை இழக்கின்றன என்பதுதான் நிலைமை. அமலாக்கத்துறை எந்த அளவுக்கு பலப்படுத்தப்பட்டு இருக்கிறதோ அந்த அளவுக்கு முதன்மையான முதலீட்டுத் துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. ஒவ்வொரு துறையிலும் இதே நிலைதான். எனவே வேலைவாய்ப்பு உருவாகாது.
நிரப்ப முடியாத பள்ளம்
மேலை நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் பொழுது நமது ஏற்றுமதி பாதிக்கப்படும். பொருட்களுக்கான ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இது 2019-20 இல் தேச உற்பத்தி மதிப்பில் 10.4% ஆக இருந்தது. ஆனால் சேவைத் துறையில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக உள்ளது. இது ஓரளவு பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. எனினும் அது போதுமான அளவு இல்லை. வெளிநாட்டில் வாழும் இந்திய உழைப்பாளி மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணம் ஓரளவு நமக்கு சாதகமாக உள்ளது. இதை கணக்கில் கொண்ட பின்னரும் ஒரு பள்ளம் உள்ளது. அதற்குப் பெயர் தான் ‘அந்நிய செலாவணி யில் நடப்பு கணக்கு பற்றாக்குறை’ என்பதாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-யில் 3% வரை இருக்கலாம் என்ற வரம்பு உள்ளது. கெஞ்சிக் கெஞ்சி அந்நிய மூலதனத்தை வரவழைக்கிறோம். அவர்களுக்கு சலுகைகள் அளிக்கிறோம். வரும் காலங்களில் மேலை நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்தால் நமது ஏற்றுமதி பாதிக்கப்படும். அந்நிய செலாவணி இடைவெளி அதிகரிக்கும். அது ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். இதைப் பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட பட்ஜெட்டில் இல்லை. மோடி சொல்லும் ‘அமிர்த காலம்’ பட்ஜெட் உரையில் மட்டுமே உள்ளது.
- தமிழில் தொகுப்பு மகாதேவன், அம்பாசமுத்திரம்