25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இரவில் உடல் முழுவதும் வெட்டுப்பட்ட குமாரின் உடலை சுமந்த என்னுடைய கைகளில் இரத்த கறை அழிந்தாலும் நினைவுகள் ஒடிக்கொண்டே இருக்கிறது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரட்டைத் தியாகிகள் குமார் - ஆனந்தன் கொல்லப்பட்ட தினம் இன்று. நினைவுகள் ஊற் றெடுத்துக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் நல னுக்காக உழைத்து மறைந்து போகும் எவரும் எப்போதும் மறக்கப்படுவதில்லை. அதிலும் தியாகி களாய் வீழ்ந்தவர்கள் எப்போதும் தாரகைகளாக மின்னிக்கொண்டே இருப்பார்கள். அடுத்து வரும் தலைமுறைக்கு வழிகாட்டி நிற்பார்கள். 09.05.1974 இல் பிறந்த குமார் காட்டுநாயக்கன் என்ற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு இளைஞன். கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை ரீத்குப்பம் அவர்களது பூர்வீகம். தலைமுறை தலை முறையாக சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குடும்பம் அவர்களுடையது. கலிவரதன் மற்றும் சாவித்திரி தம்பதியரின் மூத்த மகன் குமார், அவனுக்கு மாரிமுத்து மற்றும் கோவிந்தராஜ் என்ற இரண்டு தம்பிகள் அவர்கள் குடும்பம் பன்றிகளை வளர்த்து அதை விற்பனை செய்வதில் வருமானம் பெற்று வந்தனர். வறுமையும் கொடுமையும் நிறைந்த வாழ்க்கை அது. இருப்பினும் சாவித்திரி அம்மாள் தங்களது குழந்தைகளுக்கு கஷ்டத்தைச் சுமத்தாமல் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார்கள். இவர்கள் தங்களது பூர்வீக கிராமத்தை விட்டு பிழைப்பதற்காக கடலூர் நகரம் வந்தனர். கடலூர் நகரம் புதுப்பாளை யத்தில் பென்னை ஆற்றங்கரையில் வீடுகட்டி வாழ்ந்த னர். அங்குதான் அவர்களது பிள்ளைகள் படித்தனர். அனேகமாக காட்டுநாயக்கள் இனத்தில் கல்லூரி படித்த தலைமுறையில் இவர்கள் முதல் தலைமுறையாய் இருப்பர்.
07.07.1977 இல் பிறந்த ஆனந்தன் கடலூர் சிப்காட் சங்கொலி குப்பம் கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப் பட்ட பிரிவு குடும்பத்தின் நான்காவது வாரிசு. நடராஜன் மயிலாம்பாள் தம்பதிக்குப் பிறந்த ராஜேந்திரன், வனிதா, வரலட்சுமி, ஆனந்தன், அருணா என்ற ஐந்து குழந்தைகளும் பிறக்கும் முன்பே இந்தக் குடும்பம் கடலூர் நகரம் புதுப்பாளையத்தில் குடியேறியது. இந்தக் குழந்தைகளின் சிறுவயதிலேயே அவர்களது தந்தை இறந்துவிட்டதால் அந்தக் குடும்பத்தின் பாரம் முழுவதும் அந்தத் தாயின் தோளில்தான் விழுந்தது. இதனால் ஆனந்தன் தனது பள்ளிப் பருவத்தில் வேலை செய்யும் கட்டாயத்திற்குச் சென்றான். கிடைக்கும் வேலையைச் செய்து கையில் கிடைக்கும் வரு மானத்தைக் தாயிடம் கொடுத்து வந்தான். தங்கைகள் மீது அளவற்ற பாசம் கொண்டவன். குமாரும் ஆனந்தனும் இளைஞர்களாகப் பரிண மித்த 1994 ஆண்டில், புதுப்பாளையத்தில் தாமோதரன் என்கிற இளைஞன் பொறியியல் படிப்பை முடித்து மின்சாரவாரியத்தில் தொழிற்பயிற்சி பெற்றுவந்தான். அவனும் குமாரும் நண்பர்களானார்கள். இருவரும் ஆர்.எஸ்.எஸ் எனும் மதவெறி இயக்கத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்று வந்தனர். தினமும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகாவில்பயிற்சி பெற்று வந்தனர். இஸ்லாமிய மக்களின் மீது விஷத்தைக் கக்கும் அந்த இயக்கம் இவர்களையும் அப்படியே வளர்த்தது.
தாமோதரன் தம்பி அமர்நாத்தும் (இவர் தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர்) குமாரும் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய 15 நாள் ஷாகாவில் கலந்துகொண்டு திரும்பிய சமயம் அது. புதுப்பாளையம் வந்த குமார் அங்கு இருந்த ஒரு முஸ்லீம் வீட்டையும், சில கடை களையும் அடித்து நொறுக்கினான். காரணம் கேட்ட போது ‘அவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டி யவர்கள்’ என்றான். இந்த அளவு வெறி ஊட்டப்பட்ட அந்த இளைஞன்தான் இஸ்லாமிய மக்களுக்காக அவர்களைப் பாதுகாக்க பல இயக்கங்கள் நடத்திய வாலிபர் சங்கத்தின் தலைவராக உயர்ந்தான். 1995 ஆண்டு அந்த வான்மயில் நற்பணி மன்றம் குமாரைத் தலைவராகக் கொண்டு செயல்பட்டது. ஆனந்தன் உள்ளிட்ட பல இளைஞர்கள் தெருவைச் சுத்தம் செய்வது, அங்குள்ள பள்ளிக்கு வெள்ளை யடிப்பது, தெருப் பிரச்சனைகளுக்காக மனு அனுப்பு வது, அப்பகுதியில் நடக்கும் எல்லாவித காரியங் களுக்கும் முன்னணியாக நின்று செயலாற்றுவது என பகுதி மக்களின் அன்புக்குப் பாத்திரமாய் திகழ்ந்தார்கள்.
அப்பகுதியில் எந்த நிகழ்வு நடந்தாலும் அந்த இளைஞர்கள் அங்கு பம்பரமாய்ச் சுழன்று பணி யாற்றியதால், அப்பகுதியில் மக்கள் வாழ்க்கையைப் சீரழித்த தினம், தினம் அப்பகுதி மக்களின் அமைதி யை சீர்குலைத்து வந்த சாராயக் கடையை எதிர்த்து அவர்களின் கவனம் திரும்பியது. அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்த கூட்டம் இவர்கள் மீது கொலைவெறி கொள்ள இது ஒன்றே போது மானதாக இருந்தது. ஆனால் ஒரு தெருவில் உள்ள இளைஞர் அமைப்பால் அந்த சாராயக்கடையை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனிடையே தெருப் பகுதியை சுத்தம் செய்த இளைஞர்கள் இந்த தேசத்தில் மண்டிக்கிடக்கும் வறுமை, கல்வியின்மை, வேலையின்மை, தீண்டாமை போன்ற குப்பைகளை அகற்றுவது குறித்து சிந்தனை செய்தனர். ஒரு தெருவில் அல்லது ஒரு நகரத்தில் செய்யும் நற்பணிகளால் மட்டும் இந்த தேசத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இந்த தெருவோ அல்லது நகரமோ தேசத்தின் ஒரு பகுதி, எனவே தேசம் தழுவிய மாற்றம்தான் தெருவின் மாற்றத்தைச் சாதிக்கும். உதாரணமாக தெருவின் பள்ளி கேட்பா ரற்றுக் கிடப்பதை அரசின் கல்விக்கொள்கையுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். மாநிலம், அல்லது நாடு தழுவிய மக்கள் போராட்டம்தான் முழுமையான மாற்றத்தை உருவாக்கும் என புரிந்து கொண்டனர்.
குமார், ஆனந்தன் உள்ளிட்ட அப்பகுதி இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் 1997ஆம் ஆண்டு இறுதி மாதத்தில் இணைந்தனர். அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி என முழக்கமிடும் ஒரு தேசம் தழுவிய வாலிபர் அமைப்பில் பணியாற்றுவது அந்த இளைஞர் களுக்கும் பிடித்திருந்தது. மக்கள் நலன் என்ற மையப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைந்தனர். 1998ல் புதுப்பாளையம் பகுதியில் சுப்பிரமணிய கோயில் தெரு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கிளைத் தலைவராக தாமோதரனும், செயலாளராக குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் கள்ளச்சாராயத்தை எதிர்த்தும் போராடி வந்தனர். இவர்கள் வாலிபர் சங்கத்தின் மூலம் போராடியதால் இத்தனை ஆண்டு காலம் சாராய ‘மாமூல் வாழ்க்கை” வாழ்ந்து வந்த காவல்துறை வேறு வழியின்றி அந்தக் கடைக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கத் துவங்கியது. இதனால் சாராயக்கடை நடத்திய சமூக விரோதிகளின் கோபம் உச்சத்தை அடைந்தது. அவர்கள் கோபம் அவர்கள் பார்வையில் நியாயமானது. எந்த எதிர்ப்பும் இல்லாமல், மாத மொரு முறை மாமுல் கொடுத்தவர்கள் வாலிபர் சங்கம் தட்டிக்கேட்டதால் காவல்துறை வாரம் ஒருமுறை சோதனை நடத்தியது. வாரம் ஒரு முறை மாமுல் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. கள்ளச் சராய கடை மூடப்பட்டதால் கெடிலம் ஆற்றங்கரைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர். வாலிபர் சங்க இளைஞர்களை வாழ்த்தி னர். சமூகத்தின் அமைதிக்கு, கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடி வாலிபர் சங்க தோழர்களை பலிகொள்ள கூலிப்பட்டாளம் திட்டமிட்ட நாள் 1999 ஜூன் 26 ஆகும். காவல்துறையினருக்கு நாம் பலமுறை எச்சரிக்கை செய்தும் காவல்துறை நமது எச்சரிக்கை யை அலட்சிய படுத்தியதன் விளைவாக அன்று இரவு குமாரும் - ஆனந்தனும் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.
வட மாவட்டங்களில் சாதி கலவரங்கள் உச்சத்தில் இருந்த பொழுதில் சாதிகளை கடந்து ஒற்றுமை யாய் களமாடிய குமாரும் ஆனந்தனும் ஒன்றாய் விதைக்கக்பட்டனர். 25 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அவர்கள் தமிழக இளைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வாழ்ந்த கடலூர் புதுப்பாளையம் பகுதியில் பல கட்சிகளை சேர்ந்த, பல சாதிகளை சேர்ந்த அனைத்து இளைஞர்களும் ஒன்று திரண்டு இந்த நாளில் அந்த மாவீரர்களுக்கு சிலை திறக்கின்றனர். அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தின் வீர வணக்க நிகழ்ச்சி நடத்துகின்றனர். மனித குலம் உள்ளவரை தியாகிகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்! நீடுழி வாழ்க தியாகம்! அவர்கள் நினைவு தினத்தில் அவர்களது போராட்ட குணத்தை நமதாக்குவோம்.