வகுப்பிற்குள் நுழைந்தவுடன் வழக்கம் போல மாணவர்கள் வணக்கம் சொன்னார்கள். ஒரு மாணவன் மட்டும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
‘எழுப்ப வேண்டாம்’ என்று சைகை காட்டினார் ஆசிரியர்.
“நேத்து நைட்டுதான் ஊர்லருந்து வந்தாங்களாம், சார்..”
“வர்றப்ப “ஜூவாலமுகி-2” படம் பாத்தானாம் சார்”
சிரிப்பலை எழுந்தது. “சார்... சந்திரமுகியத்தான் இவன் ஜூவாலமுகின்னு உளர்றான்.”
“ஆமா.. ஆமா சார்... எங்கப்பா நேத்து வாட்ஸ்அப்ல பாத்து சொல்லிட்டு இருந்தார்... அதான் அத சொல்லிட்டேன்”
“என்ன சொன்னாரு..?”
“இமாச்சலப் பிரதேசத்துல ஒரு கோவில் இருக்காம்.. அதுல அணையாம நெருப்பு எரிஞ்சுகிட்டே இருக்கு.. மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அந்த நெருப்ப அணைக்க முயற்சித்தாங்களாம்... முடியல. அது எப்புடி விடாம எரியுதுன்னு நாசா விஞ்ஞானியால் கூட கண்டுபிடிக்க முடியலையாம்.. எண்ணெய் இல்லாம பல நூற்றாண்டுகள் அந்த ஜோதிகள் எரியுதுன்னு அதுல போட்டுருந்துச்சு”
“கடைசியா, குறைஞ்சது 20 பேருக்காவது அனுப்புங்கன்னு இருந்துருக்குமே”
“ஆமா சார்.. இந்தப் புண்ணிய பூமில பொறந்தவங்களா இருந்தானு வேற போட்டுருந்துச்சு”
“இமயமலைல பல இடங்கள்ல இயற்கை எரிவாயுக்கள் இருக்கு.. நாம பாடத்துல படிச்சுருக்கோம். இந்த ஜூவாலமுகின்னு சொல்ற இடத்துல மீத்தேன், ஈத்தேன், புரோபேன்லாம் இருக்குறதுனாலதான் நெருப்பு இருக்கு... திடீர்னு அணையவும் செய்யும்.. அப்புறம் அதுவா எரிய ஆரம்பிச்சுரும்”
“அப்போ விஞ்ஞானிகளுக்கு தெரியுமா”
“இந்திய விஞ்ஞானிகளுக்கு நல்லாவே தெரியும்... ஆனா, இது மாதிரி விஷயங்கள்ல மக்களோட நம்பிக்கைனு சொல்லி, விரிவா பேச விடாம பண்ணிருவாங்க”
“ஆனா சில சாமியார்லாம் யாரும் செய்ய முடியாதத செஞ்சு காமிக்குறாங்களே சார்”
“ஒரு சாமியார் என்ன பண்ணாருன்னா. மேடைல ரெண்டு டம்ளர்ல தண்ணி வெச்சுருந்தாரு. ஒரு டம்ளர்ல கை விட்டாரு. அதுல இருந்த தண்ணி பெட்ரோலா மாறிடுச்சு. அத எடுத்துட்டுப் போய் ஒருத்தர் வண்டில போட்டு ஓட்டிக் காமிச்சாரு. உடனே கூட்டம், அடுத்த டம்ளர்ல கை வைங்கனு கூச்சல் போட்டுச்சு.. அவரும் கை வெச்சாரு. அந்தத் தண்ணி டீசலா மாறிடுச்சு”
“சார்.. உண்மையாவா சார்” மாணவிகள் மிரட்சியோடு கேட்டனர்.
“டம்ளர்கள்ல இருந்தது தண்ணியா இல்ல பெட்ரோலானு யாரும் செக் பண்ணிப் பாக்கலையே.”
“முன்னாடி இருந்தவங்க நம்பிட்டாங்களா”
“அவரோட பக்தர்கள்தான... ஆனா ஒரேயொரு ஆள் மட்டும் எந்திரிச்சு ஒரு வேண்டுகோள் வெச்சாரு”
“என்ன சார்”
“சாமி... உங்களோட ஒரு கைய கோதாவரிலயும், இன்னொரு கைய கிருஷ்ணாவுலயும் வைங்க... இந்தியா வல்லரசாகிரும்”
“சிரிச்சுக்கிட்டே இடத்தைக் காலி செஞ்சாரு அந்த சாமியார்”
“அப்போ அது டகால்டி வேலைதானா”
தூங்கிக் கொண்டிருந்த மாணவன் திடீரென்று உலுக்கியவாறு எழுந்தான்.
“சந்திரமுகி மாதிரியே பாக்குறான் பாருங்க சார்”
வகுப்பறை சிரிப்பால் நிறைந்தது.
“இல்ல சார்... அலாரம் வெச்சேன்... அணைச்சிட்டு தூங்கிட்டேன்.”
“சார்... இவன் என்ன பண்ணுவான் தெரியுமா.. Snooze பண்ணிட்டே இருப்பான்”
“அப்படின்னா என்ன சார்.”
“அம்மா எழுப்புவாங்க... இரும்மா.. ஒரு அஞ்சு நிமிஷம்னு சொல்லிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவோம்ல அதுதான்”
“அது சோம்பேறித்தனமில்லையா சார்”
“ஸ்வீடன் ஆய்வாளர்கள் வேற மாதிரி சொல்றாங்க.. குட்டித் தூக்கம் போட்டு எந்திரிக்குறவங்களோட மூளை படுவேகமா வேலை செய்யுதாம்.”
மணியடித்தது. மாணவனின் அம்மா எட்டிப் பார்த்தார். புன்முறுவலுடன் உள்ளே வந்தார்.
“காலைல எழுப்புறதுதான் பிரச்சனையா இருக்கு சார்”
குழந்தைகள் எதிர்பார்ப்புடன் ஆசிரியரைப் பார்த்தன.
மாணவனோ, “அம்மா... இப்பதான் சார் சொல்லிட்டு இருந்தார். குட்டித் தூக்கம் நல்லதுன்னு”
“சார் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளோட ஆய்வச் சொல்லிருப்பாரு... குட்டித் தூக்கம் குட்டியா இருக்கணும்.. அதுவே 40 நிமிடத்துக்கு மேல நீளமாப் போகக்கூடாதுன்னும் அவங்க ஆய்வுல சொல்லிருக்காங்க.. நானும் படிச்சேன்”
ஆசிரியர் ‘ஆமாம்’ என்பதற்காக தலையசைத்துக் கொண்டிருந்தார்.