articles

img

“அய்.. ஆப்பிள்”னு சாப்பிட்டுருந்தா..?” - கணேஷ்

“சார்... ஒரு சந்தேகம்”
“என்ன..?”
“ஆப்பிள் கீழே விழுந்தப்ப அய்.. ஆப்பிள்னு நியூட்டன் சாப்பிட்டுருந்தா என்ன ஆயிருக்கும்..?”
“வேற யாராவது புவியீர்ப்பு விசையக் கண்டுப்பிடிச்சுருப்பாங்க”
“என்ன சார்... இப்புடி சொல்லிட்டீங்க.. இப்ப வரைக்கும் யாருமே கண்டுபிடிச்சுருக்க மாட்டாங்கன்னு நெனச்சுட்டோம்”
“ரேடியோ அலைகள் பயன்பாடு கூட முதல்ல நம்ம ஜகதீஷ் சந்திர போஸ்தான் பண்ணுனாரு... ஆனா அவரு ரேடியோவக் கண்டுபிடிக்கல”
“மார்கோனிதான சார் கண்டுபிடிச்சாரு”
“ஆமா, 1895ல கண்டுபிடிச்சாரு”
“சார்.. இப்புடித்தான் நீங்களும் சந்தேகம் கேட்டுட்டே இருப்பீங்களா”
“ஆமா... ஆனா எனக்குக் கிடைச்ச டீச்சர்ஸ், எங்க கிட்ட கேட்டுட்டே இருப்பாங்க”
“ஏதாவது ஒண்ணு சொல்லுங்களேன்”
“வானம் பொழிகிறது, பூமி விளைகிறது
உனக்கேன் கொடுப்பது ____________.. கோடிட்ட இடத்தை நிரப்புக என்றார்”.
“இதுதான் எங்களுக்கே தெரியுமே சார்... கிஸ்தி”
“நாங்களும் சத்தமா சொன்னோம்”
“இது யாரு பேசுனதுனு கேட்டார்”
“இன்னும் சத்தமா, வீரபாண்டிய கட்டபொம்மன்னு சொன்னோம்”
“அவர் அமைதியா இல்லனு சொல்லிட்டார”
“சிவாஜி கணேசன்னு சொன்னாரா சார்” சிரிப்பு அறையை நிறைத்தது.
“எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியா இருந்துச்சு.. கட்டபொம்மனுக்கு தமிழே தெரியாதுனு சொன்னது கூடுதல் அதிர்ச்சி.. ஆனா இந்த மாதிரித் தகவல் 1700களின் பிற்பகுதில நடந்த போர்கள், சம்பவங்கள நல்லா நினைவுல வெச்சுருக்க உதவுச்சு.. சந்தேகம் கேக்குறது அறிவியல் கண்ணோட்டமும்தான்”
“அறிவியல் ஒரு பாடம்தான சார்”
“அறிவியல் கண்ணோட்டம்ன உடனேயே டெஸ்ட் டியூப், பிப்பெட், பியூரெட்னு யோசிக்க வேண்டியதில்ல.. இது ரெண்டு வார்த்தை. அறிவியல்னா கோட்பாடு, கொள்கைனு வெச்சுக்கலாம். கண்ணோட்டம்னா அதன்படி நடக்குறது”
“மார்க் வாங்குறதுக்கு கோட்பாடு... நடக்குறது நம்ம இஷ்டம்தான்.. அப்புடித்தான சார்” 
“சார்... இத, இதச் செஞ்சா அறிவியல் கண்ணோட்டம்னு யாராவது சொல்லிருக்காங்களா.”
“கேள்வி கேக்குறது, கவனிக்குறது, சோதிச்சுப் பாக்குறது, அனுமானித்தல், பகுப்பாய்வு செய்வது, தகவல் தொடர்புனு சரியாச் செஞ்சா அதுதான் அறிவியல் கண்ணோட்டம்”
“இப்புடி யார் சொன்னா சார்.”
“சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. தன்னோட டிஸ்கவரி ஆஃப் இந்தியாங்குற புத்தகத்துல எழுதிருக்காரு.”
“இதத்தான் பின்னாடி அரசியலமைப்பு சட்டத்துல சேத்தாங்களா சார்.”
“ஆமா.. பிரிவு 51(ஏ)(எச்)ல இருக்கு.”
“அது சரி சார்... யாராவது இதச் செஞ்சுருக்காங்களா..”
“நிறையப் பேர் பண்ணிருக்காங்க... ஒரு தடவை திடீர்னு பிள்ளையார் பால் குடிக்க ஆரம்பிச்சாரு.. பிள்ளையார் சிலைல அவரோட உதட்டுக்குப் பக்கத்துல வெச்சா, பாலை உறிஞ்சு எடுத்துர்ராருன்னு செய்தி பரவுச்சு.”
“உங்க வீட்லயும் செஞ்சீங்களா சார்.”
“எங்க அம்மா உணவுப் பொருட்கள வீணாக்கி எப்பவுமே பாத்ததுல்ல. ஆனா தெருவே பால எடுத்துட்டுப் போச்சு... பால் இல்லாதவங்க பக்கத்துல இருந்த பண்ணைல வாங்குனாங்க... பண்ணைலயும் பால் தீர்ந்து போயிருச்சு. இல்லேனு சொன்னா மக்கள் அடிச்சுருவாங்களோன்னு பயந்து போய் வெள்ளையா எதைஎதையோ கலக்கிக் குடுத்தாங்க.”
“அய்யய்யோ.. அதக் குடிச்சு பிள்ளையாருக்கு ஒண்ணும் ஆகலியா சார்.” எல்லோரும் சிரித்தனர்.
“அப்பல்லாம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்லாம் இல்லைல... மறுநாள்தான் சிங்கப்பூர்ல தெரிஞ்சு அங்க இருக்குற பிள்ளையாரும் பால் குடிக்க ஆரம்பிச்சாரு. மூணாவது நாள் லண்டன்ல.”
“உண்மைலயே குடிச்சாரா சார்.”
“தமிழ்நாடு அறிவியல் இயக்கம்னு ஒரு அமைப்பு இருக்கு. அது காந்தி சிலைய வெச்சு பாலை உதட்டுக்கிட்ட கொண்டு போனாங்க... பால் சிலைக்குப் போச்சு. உண்மைல சிலை பால் குடிக்கல. எல்லாம் கீழ வடிஞ்சுதான் போச்சு. உதடு, பாலை ஈர்த்ததுக்கு பரப்பு இழுவிசைதான் காரணம்னு அந்த அமைப்பு சொன்னாங்க.”
“இன்னிக்கு எங்க வீட்ல பிள்ளையார் பால் குடிச்ச கதைய சொல்லப் போறேன்” என்று ஒரு மாணவி சொன்னதும், “நானும்தான்... நானும்” என்று இரண்டு, மூன்று குரல்கள் கேட்டன.