எதிர்பாராதது
நமது பூமண்டலமான பால்வீதியின் அருகிலுள்ள மற்றொரு பெரிய சுழலும் மண்டலம் ஆண்டிரோமெடா ஆகும். இதற்கு அருகில் காணப்பட்ட பெரும் பிளாஸ்மா வளைவை மூன்று பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்துள்ளனர். இது விண்வெளி புகைப்படக்காரர்களுக்கான 2023ஆம் ஆண்டு பரிசை பெற்றுள்ளது. இந்தப் போட்டியை நடத்தும் லண்டன் அரச விண்வெளி நிலையம் “இது ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு. பூவுலகில் நமக்கு அருகிலுள்ள மிகப் பெரும் அமைப்பாக இது இருக்கலாம்” என்று கூறுகிறது. பொதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் பிம்பம் தெளிவற்ற கருப்பு வெள்ளையாகவும் புரிந்துகொள்ள முடியாத அளவில் கண்ணுக்கே தெரியாத மங்கலான புள்ளியாகவோ ஒளிக்கதிராகவோ இருக்கும் என்கிறார் இதன் நடுவரும் விண்வெளி புகைப்படக்காரருமான லாஸலோ பிரான்ஸிக்ஸ். ஆனால் இந்த புகைப்படம் அற்புதமாகவும் அதே சமயம் மிகவும் மதிப்புள்ளதாகவும் இருக்கிறது. ஆண்டிரோமெடாவை புதிய வழியில் காட்டுகிறது. விண்வெளி புகைப்படக் கலையை புதிய நிலைக்கு உயர்த்துகிறது என்று அவர் மேலும் கூறுகிறார். இந்த புகைப்படத்தின் தலைப்பு ‘ஆண்டிரோமெடா, எதிர்பாராதது’ என்பதாகும். புகைப்படத்தின் இடது கீழ்ப்பகுதியில் காணப்படும் தெளிவற்ற நீல மேகத்திரளின் காரணமாகவே அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது. அதிகம் புகைப்படமெடுக்கப்படும் ஆழ்வானப்பகுதி பொருட்களில் ஆண்டிரோமெடாவும் ஒன்றாகும். ஆனால் இந்த புகைப்படம் இதுவரை காணாத ஒரு அம்சத்தை காட்டுகிறது. சாதாரண பார்வையில் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான பிளாஸ்மா வளைவை காட்டுகிறது. அந்த நீல மேகத் திரள் இதுவரை காணாத அயனியாக்கப்பட்ட ஆக்சிஜன் வாயு என்கிறார் புகைப்படக் கலைஞர்களும் ஒருவரான மேக்ஸல்.
மொழி கற்றலும் அறிதிறனும்
பேச்சு மொழியை கற்றுக் கொள்வது அதாவது ஒலிகளை கற்றுக்கொண்டு அது போல திரும்பச் செய்யும் திறனானது பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் பெரிய மூளை அளவு ஆகியவற்றோடு தொடர்புடையது என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தஆய்வு பாடும் பறவைகள் இனத்தில் செய்யப்பட்டது. குரல் ஒலிகளை கற்பது அறிவாற்றல் திறனோடு தொடர்புடையது என்பது இதற்கு முன் அறியப்படவில்லை. குரல் ஒலிகளை கற்கும் சிக்கலான திறனானது மனித மொழி பேசுவதில் முக்கியமான பங்காற்றுகிறது. இது உயர்ந்த அறிதிறனோடு தொடர்புடையது என ஊகிக்கப்பட்டது. மனிதஇனத்திற்கு அப்பால், பாடும் பறவைகள் உட்பட சிறிய எண்ணிக்கையிலான விலங்குகளிலேயே இது அவதானிக்கப்பட்டது.
வெப்பத்தால் அழியும் இலைகள்
மனிதர்களைப்போலவே இலைகளுக்கும் வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் உயர்ந்த அளவு ஒன்று உள்ளது. 1864இல் முதன் முதலாக விஞ்ஞானிகள் சில தாவரங்களின் இலைகள் 50 டிகிரி செல்ஸியஸ் வரை பிழைக்கக்கூடியவை என்று தெரிவித்தார்கள். இப்போது 147 வெப்ப மண்டல தாவர வகைகளை ஆய்வு செய்து சராசரியாக 46.7 டிகிரிக்கு மேல் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. பூமியின்வெப்ப மண்டலக் காடுகளின் கனோப்பி என்று சொல்லப்படும் மேற்பரப்பிலுள்ள இலைகளில் சுமாராக 10000இல் ஒன்று ஆண்டில் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வெப்பத்தை எதிர்கொள்கின்றன என்று செப்டம்பர் 7 தேதியிட்டு நேச்சர் இதழில் இந்த ஆய்வு கூறுகிறது. இலை சூடேற்றம் எனும் சோதனையில் கிடைத்த தரவுகளை ஆய்வு செய்ததில் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பு இலை வெப்பத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக அமேசான் இலைகள் 2 டிகிரி சுற்றுப்புற வெப்ப அதிகரிப்பிற்கு 43 டிகிரியிலிருந்து 51 டிகிரியாக உயர்ந்தது. செயற்கைக்கோள் மற்றும் நிலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனை தரவுகளை பயன்படுத்தி காலநிலை மாற்றத்தில் வெப்ப மண்டலக் காடுகளின் எதிர்கால நிலை உருவகப்படுத்தப்பட்டது (சிமுலேஷன்). இப்போதுள்ள வெப்பம் மேலும் 4 டிகிரி உயர்வு வரை பெரும்பாலான காடுகள் தாக்குப்பிடிக்கும். அதற்கு மேல் இலைகளை இழந்து மரங்கள் இறந்துவிடக்கூடும். இந்த நூற்றாண்டில் பசுமைக் குடில் வாயுக்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போனால் 2100க்குள் இந்த நிலை ஏற்படக்கூடும். இதில் பல நிச்சயமற்ற விஷயங்கள் உள்ளன. வெவ்வேறு மரங்களின் தகவமைத்துக் கொள்ளும் திறன்கள், தனி ஒரு இலையின் அழிவு அந்த மரத்தின் மரணத்தில் செலுத்தும் தாக்கம் போன்றவை தெளிவாக புரிந்துகொள்ளப்படவில்லை. இந்தக் காடுகளின் எதிர்காலத்தை கணிப்பதற்கு காடுகளின் மேற்பரப்பின் கீழே எத்தகைய மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் வேல்ஸிலுள்ள பங்கர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சூழலியலாளர் மரியேலி ஸ்மித். அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பரப்பு அமேசான் காடுகளாக இருக்கும். அங்கு 10 அல்லது 20 வருடங்களுக்கு முன் அழிந்த மரங்களைவிட அதிக மரங்கள் இப்போது அழிகின்றன. “திருப்புமுனையாக அமையும் வாய்ப்பின் ஒரு துளியை இது காட்டுகிறது. நாளையே வெப்ப மண்டலக் காடுகள் சவான்னாக்களாகிவிடும் (திறந்த வெளிக் காடுகள்) என்று கூறவில்லை. இந்த நுட்பமான இயக்கத்தை பார்க்க முடிந்துள்ளது. அதனால நடவடிக்கை எடுக்கவும் இயலும்” என்கிறார் சேப்மேன் பல்கலைக்கழக சூழலியலாளர் ஜோஷுவா பிஷர்.