articles

img

அண்ணல் அம்பேத்கருக்கு காவி பூசும் கயமைத்தனம்! - டாக்டர் என்.ஆர்.கிராமப்பிரகாஷ்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் இல்லாத சங்பரிவார் அமைப்புகளின் குறிப்பாக ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய தந்திரம் என்பது, தேசியப் போராட்டத்தில் பெரும் பங்களிப்புகள் செய்த மகத்தான தலைவர்களை தங்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்வதாகும். பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்டும், உளவாளி வேலை செய்தும் தப்பித்துக் கொண்டவர்களைப் புனிதர்களாக ஆக்கும் முயற்சியும் இதில் உண்டு.  இந்தியா அறிந்த இந்துத்துவாவுக்கு எதிரான மிகப்பெரிய விமர்சகராகிய பாபா சாகேப் அம்பேத் கரை காவி பூசும் சமகால முயற்சி என்பது இதில்  மிகவும் பரிகசிக்கத் தக்கதும், சர்ச்சைக்குரியது மாகும். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வப் பத்திரிகை யாகிய ஆர்கனைசர் இந்தக் குறிக்கோளுடன் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.  இவற்றில் விசித்திரமான ஒன்று, 1939-இல் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமுக்குச் சென்று அங்கு ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவருடன் ஒன்றாகச் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் என்றும்,  ஆர்எஸ்எஸ் ஊழியர்களைக் கண்டு வாழ்த்தினார் என்றும், சாகாவில் சாதி முரண்பாடு இல்லை என்பதைப் பார்த்து வாழ்த்தினார் என்றும் ஆர்கனைசர் எழுதியது. இது உள்ளிட்ட செய்திகளைத் தந்தும், அம்பேத்கர் சொல்லாதவற்றைச் சொன்னதாகவும் அவர்கள் சமூக ஊடகங்களில் பெரும் பிரச்சாரம் நடத்துகிறார்கள்.

அம்பேத்கரை அவமதிக்கிறார்கள்

ஜம்மு-காஷ்மீர்க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவுக்கு எதிராக அம்பேத்கர் பேசினார் என்றும், ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது அவரது கருத்தாக இருந்தது என்றும் தவறான மேற்கோள் காட்டி ஆர்கனைசரில் பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறு மக்களிடம் தவறான பிரச்சாரம் நடத்துவது மட்டு மல்ல, உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராகிய அம்பேத்கரை இவ்வாறு அவமதிக்கவும் செய்கிறார்கள். 2014-இல் ஆர்எஸ்எஸ்ஸின் வலுவான ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அம்பேத்கரை இந்துத்துவக் கருத்தியலின் பிரமுகராக ஆக்குவதற்கு பல விதங்களில் முயற்சி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர் இந்துத்துவக் கருத்தியலுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியுள்ளார் என்று சொல்வதன் மூலம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கிடையே அம்பேத்கர்க்கு உள்ள செல்வாக்கைத்  தங்களுக்குச் சாதகமாக ஆக்கப் பார்க்கிறார்கள். நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்பைத் தோல்வியுறச் செய்வதற்கு முன்வந்து, சமுதாயச் சீர்திருத்தப் பணிகளுக்குத் தலைமை வகித்தவர்களை இந்துமத சீர்திருத்தவாதிகளாக முத்திரை குத்துவதற்கான திட்டமிட்ட முயற்சி 1980களில் ஆரம்பமானது.

மறுமலர்ச்சி நாயகர்கள்

நாராயணகுரு முதல் அம்பேத்கர் வரையான பிராமணர் அல்லாத மறுமலர்ச்சி நாயகர்களையே இவர்கள் குறிவைத்துள்ளனர். உயர்சாதி இந்துக்கள் உயர்த்திப் பிடிக்கிற  மனுஸ்மிருதி போன்ற நூல்களையும், புறக்கணிக்கத்தக்க கருத்துகளையும் அந்த மகான்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். கேரளத்தில் நாராயணகுரு மட்டுமல்லாமல் அய்யங்காளியும் சட்டம்பி சுவாமிகளும் எல்லாம் இவர்களைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது முக்கிய மாகப் பார்க்கவேண்டியது வைக்கத்தில் உள்ள தனி பழமைவாதியாகிய இண்டம்துருத்தி மனையில்  உள்ள நம்பூதிரியின் இந்த வாரிசுகள் வைக்கம் சத்தியா கிரக நூற்றாண்டைக் கொண்டாடி நடைபயணம் மேற்கொண்டதுதான்.  ஆர்எஸ்எஸ் உடன் அம்பேத்கர் நெருக்கமாக இருந்தார் என்பது குறித்த கூற்றுக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய  சான்றுகள் வழங்க முடியவில்லை என்பது  வரலாற்றாசிரியர்களின், தலித் ஆதரவு எழுத்தாளர் களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பிரமுகர்களும் எழுதிய கட்டுரைகளும், உண்மையென்று அவர்கள் சொல்லுவதும் அவர்களே பரஸ்பரம் பின்னிய கட்டுக்கதைகளாகும். 

அம்பேத்கரின் முக்கிய அறிவிப்பு

சாதிவேற்றுமைகள், தீண்டாமை, இந்துமதத்தில் உள்ள கட்டுக்கதைகள் முதலானவற்றை ஏராளமான நூல்களிலும், நிறைய பரப்புரைகளிலும் அம்பேத்கர் இந்துத்துவத்தை கிழித்தெறிவதைக் காணலாம். பிராமணிய மேலாதிக்கம் உள்ள இந்துமதத்திலிருந்து வெளியேறி வாழ்நாள் முழுதும் புத்தமதத்தில் சேர்ந்திருந்தவர் அம்பேத்கர். அவரது முக்கியமான ஓர் அறிவிப்பு இவ்வாறு இருந்தது: ‘‘நான் இந்துவாகப் பிறந்தது நான் தேர்வு செய்தது அல்ல. ஆனால், நான் ஒருபோதும் இந்துவாக இறக்க மாட்டேன். இது எனது தேர்வாகும்’’. இந்தச் சொல்லை  அவர் கடைசிவரை காப்பாற்றினார். அம்பேத்கர் வெளியிட்ட பகிஷ்கிருத பாரத். ஜனதா, பிரபுத்தபாரத் ஆகிய பத்திரிகைகளெல்லாம் தலித் மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கிற இந்துமகாசபை-ஆர்எஸ்எஸ் தலைமைக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சித்து வந்தது. 1934 ஜனவரி 13-ஆம் தேதிய ஜனதா பத்திரிகையில் நாக்பூரைச்  சேர்ந்த தலித் ஊழியர் பி.டி.ஷெலாரே என்பவர் ஆர்எஸ்எஸ் சகாகளில் நிலைபெற்றுள்ள சாதி  முரண்களை வெளிப்படுத்தியதுடன், இந்த முரண் களைக் கண்டுகொள்ளாமல் இந்துமகாசபையும் ஆர்எஸ்எஸ்ஸும் கண்ணை மூடிக்கொண்டுள்ளன என்று எழுதவும் செய்தார். பிராமணியமும், முஸ்லிம் எதிர்ப்பும் கொண்ட  இந்து தேசிய அரசியலை  ஜனதா பத்திரிகை உதறித் தள்ளவும் செய்தது. மேலும்  சாதி, தீண்டாமை முதலான தலித் மக்கள் எதிர்கொள்கிற ஆபத்துகளுக்கு எதிராக இவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் அந்த ஏடு அதிரடியாகக் கூறியது. முஸ்லிம்களை எதிர்ப்பது மட்டுமே ஆர்எஸ்எஸ்ஸின் இலட்சியம் என்று அழுத்த மாகக் கூறிய அம்பேத்கர் எவ்வாறு ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவாக இருக்க முடியும்?

சாவர்க்கருக்கு பதிலடி

இந்தியா பிரிவினை குறித்த கட்டுரையில் அவர் அகாலிதள், ஆர்எஸ்எஸ் அமைப்புகளை ஆபத்தான வை என்று கூறுவதற்குத் தயங்கவில்லை. சங்சாலக்  ஆக மாறிய சாவர்க்கர் 1956-இல் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியது பயனற்றது என்று அன்று விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலடியாக சாவர்க்கரை ‘வீர்’ என்று சிறப்பிப்பது பற்றிக் கேள்வி  எழுப்பியிருந்தது ஜனதா பத்திரிகை. வரலாற்றா சிரியர்கள் இத்தகைய பல தெளிவான பதில்களை ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வாதத்திற்கு எதிராக முன்வைத்தனர். அம்பேத்கரின் முன்முயற்சியில் 1951-இல் ‘ஷெட்யூல்டு காஸ்ட் ஃபெடரேஷன்’ தயாரித்த  அறிக்கை யில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “பிற்போக்கு அமைப்புகளாகிய இந்துமகாசபை, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் ஷெட்யூல்டு காஸ்ட் ஃபெடரேஷன் என்ற அமைப்புக்கு எவ்விதத்திலும் தொடர்பு இருக்கவில்லை.”

அம்பேத்கர் மீது வீசிய அவதூறுகளும் வெறுப்பும்

அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தின்போது 2016-இல் ஆர்கனைசர் அம்பேத்கரைப் போற்றிப் புகழும் கட்டுரைகளுடன் சிறப்பு இதழ் வெளியிட்டது. வாழ்ந்த காலம் முழுவதும் அம்பேத்கர்க்கு எதிராக அவதூறு பொழிந்த பத்திரிகைதான் ஆர்கனைசர். 1949 நவம்பர் 30-ஆம் தேதிய ஆர்கனைசர் பத்திரி கையின் தலையங்கம், அம்பேத்கர் தயாரித்த இந்திய  அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கேலி செய்திருந்தது. மிகமோசமான விஷயம் என்னவென்றால், அரசியல் அமைப்புச் சட்டத்தில் பாரதியத் தன்மை எதுவுமில்லை என்றும், பழங்கால பாரதத்தின் அரசாங்க ஏற்பாடுகளையும், அதன் அமைப்புகளையும் இவர்கள் பார்க்காதது போல்  நடிக்கிறார்கள் என்றும் ஆர்எஸ்எஸ்ஸின் ஆர்கனை சர் குற்றம்சாட்டியது. மனுஸ்மிருதி போன்ற புராதன பாரதிய சட்டத் தொகுப்புகள் பற்றி இந்த அரசியல் அமைப்புச் சட்டப் பண்டிதர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் ஆர்கனைசர் குற்றம்சாட்டியது.  விருப்பத்துடன் முன்வைத்த ‘இந்து சட்ட மசோதாவை அம்பேத்கர் நிறைவேற்றாமல் இருந்தது இந்துக்களுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்தது. அம்பேத்கர் வெளிநாட்டுக்குச் சென்று படித்துவிட்டு வந்தது பற்றிய குற்றச்சாட்டையும் அவர் கேட்கவேண்டி வந்தது. அம்பேத்கர் தமது வாழ்நாள்  முழுவதும் இந்துதர்ம முறையின் கொடூரமான வெறுப்புக்கு உள்ளானார். பாஜக தலைவரும் பிறகு ஒன்றிய அரசின் அமைச்சராகவும் இருந்த அருண்ஷோரி, அம்பேத்கரை வஞ்சகர் என்றும், பிரிட்டிஷ் வேலைக்காரர் என்றும் அவதூறு பேசினார். பிறகு அவர் தனது பழைய அவதூறுகளையும், மோதல் போக்கையும் மறைத்துக் கொண்டார்.

தந்திரங்களும் வெட்கமின்மையும்... 

அண்மைக் காலமாக அம்பேத்கர் மீதான பற்று முறைகேடாகியுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கையும், அதற்கு எதிரான பிராமணியக் கலவரமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தலித் மற்றும்  பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் அதிருப்தியையும், அவர்கள் ஒன்றுபடுவதையும் சிதைக்க ஆர்எஸ்எஸ் அறிவாளி மையங்கள் வெளிப்படுத்திய தலித் மக்கள் மீதான போலி நேசத்தின் தொடர்ச்சிதான் இது. பாஜகவின் ஆதிக்கமுள்ள முதலாவது ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்துத்துவ அரசியல் என்பது அதிகார மையத்திற்குரிய தந்திரங்களுக்கு மாறியதன் அடையாளமாக இதைக் காணலாம்.

இந்துக்களை ஒன்றுபடுத்துவதும், ராமஜென்ம பூமி பிரச்சனையைக் கொளுத்திவிடுவதும், தலித் தலைவர்களைப் பதவிக்குக் கொண்டுவருவதும், தலித் மக்களிடையே செல்வாக்கு உள்ளவர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதும் இதன் ஒரு பகுதியாகும். நாடாளுமன்ற ‘சீட்’ வெற்றி வாய்ப்புள்ள உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இவர்கள் அம்பேத்கர்க்கு பூஜை செய்வது அதிகரித்து வருகிறது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் இதை வலுவான அளவில் எதிர்கொண்டு வருகின்றன. அம்பேத்கர் ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று அதன் தற்போதைய சர்சங் சாலக் மோகன் பாகவத் அண்மையில் மீண்டும் கூறினார். மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடிதான் இந்தியாவின் தேசியக் கொடியாக ஆகவேண்டுமென்று அம்பேத்கர் சொன்னதாகவும் மோகன் பாகவத் பிரச்சாரம் செய்தார். ஹெட்கேவரின் படத்தையும் அம்பேத்கரின் படத்தையும் ஒன்றாக உயர்த்திப் பிடித்து ஊர்வலம் நடத்தவும் இவர்கள் கொஞ்சமும் வெட்கப்படவில்லை.  ராமச்சந்திர குஹா, ராம் புனியானி, ஆனந்த் டெல்டும்டே, பத்ரி நாராயணன், தபன்பாசு முதல் வரலாற்றில் குறிப்பாக அம்பேத்கர் பற்றிய ஆய்வுகளில் திறன்பெற்ற பெரும் எழுத்தாளர்கள் உள்பட  ஏராளமானோர் சங்பரிவார்களின் பொய்க்கதைகளை அடித்து நொறுக்கிய பிறகும் அதை அவர்கள் தொடர்கிறார்கள். பொய்களைக் குவித்து அவற்றை  உண்மையென ஆக்குவதற்கு முயற்சிசெய்கிற சங்பரிவாரின் பாசிச முறைகளை நிரந்தரமாக அம்பலப்படுத்துவதுதான் ஜனநாயக நம்பிக்கை யாளர்களின் முன்னுள்ள ஒரேவழி.  

நன்றி : ‘‘சிந்தா’’ மலையாள வார இதழ் (23.5.2023)
தமிழில்: தி.வரதராசன்