புதுதில்லி, ஜன. 3 - அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டு களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கத் தேவையில்லை; ஹிண்டன்பர்க் ரிசர்ச், அல்லது ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ஓசிசிஆர்பி அமைப்புகள் வெளி யிட்ட அறிக்கைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, அதானிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அதானி வழக்கை ‘செபி’யே தொடர்ந்து விசாரிக்கலாம் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ‘செபி’ நடத்தும் விசாரணையை சந்தேகிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, அதானி யின் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்தவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ரூ. 17.80 லட்சம் கோடி அதானி குழுமம் ஊழல்
2023 ஜனவரி 24 அன்று, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் வெளியிட்ட 106 பக்கங் களில், 32 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட ஆய்வறிக்கை, அதானி குழும வளர்ச்சி ஊழல் - மோசடிகளால் ஏற்பட்டது என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்தது. அதானி குழுமமானது, ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு பங்குச் சந்தை முறைகேடு செய்திருக்கிறது; அதானி, தனது குடும்ப உறவினர்கள் மூலம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்; அதிகப்படியான வரிச்சலுகை கொண்ட வெளிநாடுகளில் பணத்தை முறை யற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷார்ட் பொசிஷன் (Short Position) என்ற நிலையில் வைத்து, தனது நிறுவனங்களின் பங்கு மதிப்பை மோசடியாக உயர்த்திக் காட்டியுள்ளார். 3 ஆண்டுகளில் அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களின் பங்குமதிப்பு 819 சதவிகிதம் உயர்ந்துள்ளது” என்று கூறி, அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டது.
உச்ச நீதிமன்றத்திடமே உண்மையை மறைத்த ‘செபி’?
இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானியின் இந்த ஊழல் முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, எம்.எல். சர்மா மற்றும் ஜெயா தாக்கூர், அனாமிகா ஜெய்ஸ்வால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) கடந்த மார்ச் 2 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் ‘செபி’, கடந்த ஆகஸ்ட் 25 அன்று உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால், அபராதம் விதிக்கக்கூடிய அள விலான - அதானியின் சிறிய முறைகேடு களையே ‘செபி’ கண்டுபிடித்த நிலையில், “அதானி குழுமத்தை ‘செபி’ காப்பாற்ற முயற்சிப்ப தாகவும், ‘செபி’யின் அறிக்கை நம்பகமானதாக இல்லை” என்றும் கூறிய மனுதாரர்கள் அது தொடர்பான ஆதாரங்களை முன்வைத்தனர்.
வருவாய் புலனாய்வு இயக்குநரக அறிக்கை என்ன ஆனது?
அதானி குழுமத்தின் நிதி கையாளுதல்கள் குறித்து, 2014-ஆம் ஆண்டில் வருவாய் புல னாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence - DRI) எச்சரிக்கை விடுத்திருந்தது. அதானி குழுமம், ரூ. 2 ஆயிரத்து 323 கோடி ரூபாய் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தாங்கள் விசாரித்து வரும் வழக்கு குறித்த குறிப்புகள் அடங்கிய சிடி-யையும் கடிதத்துடன் டிஆர்ஐ இணைத்திருந்தது. ஆனால், இதனை அப்போது ‘செபி’ முறையாக விசாரிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் (2014-ஆம் ஆண்டு) ‘செபி’ இயக்குநராக இருந்த யு.கே. சின்ஹா, பின்னா ளில் 2022-ஆம் ஆண்டு அதானி குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ‘என்டிடிவி’-யின் செயல் அல்லாத இயக்குநராக்கப்பட்டார் என்பது குறிப் பிடத்தக்கது. ஆனால், டிஆர்ஐ விடுத்திருந்த எச்சரிக்கை உள்ளிட்ட இந்த தகவல்கள் எதை யுமே உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் ‘செபி’ மறைத்துள்ளது. அதானியைக் காப்பாற்று வதற்காகவே, 2023 ஜனவரியில் வெளியான ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கையை கணக்கில் எடுக்காமலேயே ‘செபி’ அமைப்பு விசாரணை நடத்த முயற்சிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் அதானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி எளிதாக வழக்கை முடித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறது.
பங்குச் சந்தை ஒழுங்குமுறை விதிகளிலும் திருத்தம்
மேலும், அதானி குழுமத்திற்கு பலன் அளிக்கும் வகையில், பங்குச் சந்தை சார்ந்த ஒழுங்குமுறை விதிகளை ‘செபி’ தொடர்ந்து மாற்றி யமைத்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அதானி குழுமத்தை முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து பாது காக்கும் கவசங்களாக இருந்துள்ளன. 1. பங்குச் சந்தையில் நியமிக்கப்பட்ட முதலீட்டு பங்கேற்பாளர்கள், வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (FPI) ரகசிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்தக் கடமைப்பட்டுள்ளனர் என்பது விதிமுறை யாகும். இது 2018-இல் ‘செபி’யால் திருத்தப் பட்டது. அதாவது, ரகசிய அமைப்பை கொண்டி ருக்கக் கூடாது என்ற நிபந்தனை முற்றிலுமாக நீக்கப்பட்டது. பின்னர், 2002-இல் கொண்டு வரப்பட்ட பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் (Preven tion of Money Laundering Act) அனைத்து விதி முறைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது. 2. அதேபோல பட்டியலிடும் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைக்கான (Listing Obligations and Dis closure Requirement - LODR) நிறுவனச் சட்டத்தின் பிரிவு 2(76)-இன் கீழ் குறிப்பிடப்பட்ட அதே அர்த்தத்தை ‘தொடர்புடைய தரப்பு’ என்று வரையறுத்துள்ளது. ஆனால், இந்த ‘தொடர்புடை ய தரப்பு’ என்பதன் வரையறையை 2018-இல் ‘செபி’ திருத்தியது. பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் விளம்பரதாரர், குழுவின் உறுப்பினர் அல்லது நிறுவனத்தில் அந்த நபரின் பங்கு குறைந்தது 20 சதவிகிதமாக இருந்தால் மட்டுமே, அந்த நபர் தொடர்புடைய தரப்பாக கருதப்படுவார் என்று மாற்றியது. இதன்மூலம் அதானி குழுமத்தின் ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வராமல் செபி பார்த்துக்கொண்டது.
ஊழல் முறைகேட்டை செபி கண்டுபிடிக்காது
இவ்வாறு அதானிக்கு சாதகமாக மற்றும் அதானியின் மோசடிகளுக்கு துணைபோன குற்றச்சாட்டுகளுக்கு ‘செபி’ அமைப்பே உள்ளாகி யிருக்கும்போது, அது அதானியின் ஊழல் முறைகேடுகளை எவ்வாறு கண்டுபிடிக்கும்? மூடி மறைக்கவே முயலும். எனவே, சிறப்பு புல னாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தினர். நவம்பர் 24 அன்று விசாரணையை ஒத்திவைத்திருந்த நிலையில், புதனன்று (ஜன.3) வழக்கின் விசாரணையை ‘செபி’யிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்றும், விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற எந்த அவசியமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதானிக்கு சாதகமாக அமைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு
‘செபி’ விசாரணையில் சந்தேகம் ஏற்படுத்தும் (ஓசிசிபிஆர் OCCPR) அறிக்கை யைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது; ஊட கங்கள் உள்ளிட்ட 3ஆம் தரப்பு விசாரணை அறிக்கைகளை எந்தச் சரிபார்ப்பும் இல்லா மல் உண்மையெனக் கருத முடியாது; அத்துடன், எப்பிஐ மற்றும் எல்ஓடிஆர் விதிமுறைகள், அதன் கட்டமைப்பு செபி விசாரணைக்கு எவ்விதமான தடையாகவும் இல்லை, உண்மையில் குற்றச் சாட்டுக்குரிய திருத்தங்களால் எப்பிஐ மற்றும் எல்ஓடிஆர் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள் ளன. எனவே, இந்த வழக்கின் விசாரணையைச் ‘செபி’யிடம் இருந்து எஸ்ஐடி-க்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை ‘செபி’ தொடர்ந்து விசாரணை செய்யும். 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை ‘செபி’ முடித்துவிட்டது” என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியிருக்கும் நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை ‘செபி’ 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்திய முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிபு ணர் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசாங்க மும், ‘செபி’யும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘செபி’யும், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு களும், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் அறிக்கையால் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் குறுகிய நிலைப்பாட்டை எடுத்த பிற நிறுவனங்கள் (அதானி குழும நிறு வனங்கள்) ஏதேனும் சட்ட மீறலில் ஈடுபட்டிருந்தால் அதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதானி வழக்கு: ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு
அதானி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அதானி மீதான வழக்கில், பாரபட்சமற்ற முறையில் விசார ணை நடத்த வேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு மனுக்களையும் நிராகரித்து, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், துரதிர்ஷ்டவசமானதாகவும் இருக்கிறது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (‘செபி’) போன்ற ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு, அதானி குழுமத்திற்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் அனைத்தின் மீதும் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுத்திடவில்லை. 2014இல் டிஆர்ஐ எனப்படும் வருவாய்ப் புலனாய்வு இயக்கு நரகம் அதானிக்கு எதிராக நேரடியாகவே குற்றச்சாட்டு ஒன்றை ‘செபி’-க்கு அனுப்பியிருந்தது. 2021இல் நாடாளுமன்றத்தில், அதானிக்கு எதிரான புகார்களை செபி விசாரணை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ‘செபி’ சமர்ப்பித்திருந்த உறுதிவாக்கு மூலத்தில் இதனை மறுத்திருந்தது. அதானிக்கு எதிராக அளிக்கப் ்பட்ட புகார் மனுக்கள் மீது செபி ஏன் செயல்படவில்லை என எவ்விதமான கேள்வியையும் எழுப்பாமல் உச்ச நீதிமன்றம் இவ்வாறு முடிவினை எடுத்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
இரண்டாவதாக, செபி தன்னுடைய சொந்த விதிகளையே மாற்றியமைத்து, அதனை மூடு மந்திரமாக மாற்றியிருந்தது. மேலும் இறுதிப் பயனாளி யார் என்பதை மறைக்கவும் செய்தது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவானது, ஆட்சியாளர்களுக்கு சார்பாக செபி செய்துகொண்டிருந்த திருத்தங்களின் அடிப்படையிலேயே விசாரணையை நடத்திக்கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் “இறுதிப் பயனாளிகளுக்கும்” இடையே உள்ள தொடர்புகளின் அடையாளத்தை மறைத்திடும் ஒரு சுவராகவே செயல்பட்டது என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், இப்போது உச்ச நீதிமன்றம் இந்தத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. மூன்றாவதாக, ‘ஹிண்டன்பர் ரிசர்ச்’ நிறுவனம் அளித்திட்ட குற்றச்சாட்டுகள், “விதிகளைப் புறக்கணித்து” மேற்கொள்ளப்பட்டனவா என்றும், அப்படி எனில் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் விசாரணை செய்திட, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுத்திட அரசாங்கத்திற்கு வெளிப்படையாகவே உரிமம் அளித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் மீதான நம்பகத்தன்மையை உயர்த்தும் விதத்தில் அமைந்திடவில்லை. (ந.நி.)