articles

img

சிறு,குறு, நடுத்தரத் தொழில்களை மீட்க என்ன திட்டம்? - கே.சி.கோபிகுமார்

நவீன தாராளமய காலத்தில் பெரும் முதலாளிகளின் நடவடிக்கைகளினால் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு தொடரும். ஆகவே உள்நாட்டு மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் கொண்டு இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் உத்திகளை  அரசு செய்திட வேண்டும்.

2023-24 ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை யில் நகர்ப்புற வேலை விகிதம் குறைந்து வரு கிறது என்றும், பொது டிஜிட்டல் தளங்களின் விரிவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி அதி கரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்துள்ளார். இந்த பின்னணியில் ஒன்றிய, மாநில அரசுகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கைகளை அறிவிக்க உள்ளன.  இந்தியாவில் 2020-21 இல் கணக்கிடப்பட்ட 1.37 கோடி பதிவு செய்யப்பட்ட சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், கிட்டத்தட்ட 35% மூன்று மாநிலங்க ளில் அமைந்துள்ளன. உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவைதான்  அந்த மாநிலங்கள். இந்தியாவில் இந்த துறை  6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு நடுத்தரத் தொழில்களின் பங்கு 45சதவீதம்; நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 41 சதவீதம். அரசின் நவீன தாராள மயக் கொள்கைகளினால் இந்த தொழில் துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.  

ஒன்றிய அரசு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம், அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS), சிறப்பு கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத் திட்டம் (SCLCSS) போன்ற திட்டங்கள் மூலம் கடன் வழங்கி வருகிறது. செயல் பாட்டு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் 40.5 லட்சம் யூனிட்டுகளுக்கு (மொத்த சிறு, குறு நடுத்தர நிறுவனங்களில் 7%) உதவுவதற்காக ரூ. 3 லட்சம் கோடி பிணையில்லா கடன்களை வழங்குவதாக அரசாங்கம் கூறியது. குறு மற்றும் சிறு தொழில் நிறு வனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்ட ளைக்கு அரசாங்கம் ரூ. 4000 கோடி கூடுதல் நிதி ஆதரவை வழங்கியது,  இருப்பினும், ரூ.100 கோடி ஆண்டு வருவாய் கொண்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டங்களில் கடன் பெற தகுதியுடையவர்கள் என்றும்  சேர்த்து அறிவித்தது. சிறு, குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 99% நிறு வனங்கள் ஆண்டு வருமானம் 5 கோடி ரூபாய்க்கும் குறைவான குறு தொழில்களாகும். இதன் பொருள், வெறும் 1% மட்டுமே அரசின் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் நிவாரணம் என்ற பெயரிலான பலன்க ளைப் பெற தகுதி பெற்றுள்ளன. கோவிட் காலத்திலும் அரசு, சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்கு நிவாரணம் என்று அறிவித்த 20லட்சம் கோடி ரூபாய் உரியவர்களுக்கும் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் சென்றடையவில்லை.

தமிழ்நாட்டில்... 

தமிழ்நாட்டில் 12.94 லட்சம் குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழிற் கூடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தொழிற்கூடங்கள் ஏறத்தாழ 80.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளன. 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் ஏறத்தாழ 8340 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம், 2006 இயற்றப்பட்டதன் மூலம், பல பிரச்சனைகள் களையப்படும் என்று கருதப்பட்டது. அந்த நம்பிக்கைகளும் பொய்யாகி விட்டன. சிறிய நிறுவனங்கள் கடுமையான சிக்கல் களை எதிர்கொள்கின்றன. தமிழகத்தில் உள்ள கேந்திரமான கனரக தொழில்கள் - குறிப்பாக ஒன்றிய அரசின் பிஎச்இஎல், சேலம் உருக்காலை போன்ற நிறுவனங்களுக்கு தேவையான இணை மற்றும் உதிரி பொருட்களை உற்பத்தி செய்து வந்த பல நூற்றுக்கணக்கான நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசுகளின் தொழிற் கொள்கையின் காரணமாக-  அதாவது உற்பத்தி ஆணைகள் (ஜாப் ஆர்டர்கள்) இல்லாததன் காரண மாக நலிவடைந்துள்ளன. ஒன்றிய அரசு சேலம் உருக்காலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் பொருட்டு  சிறு, குறு நடுத்தர தொழிற் கூடங்கள் அமைக்க திட்ட மிட்டது. அதனை இன்று வரை அமல்படுத்தவில்லை. 

அதே போல தொழிற்நுட்ப அபிவிருத்தி நிதி திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம் பெரு முதலாளிகளுக்குத்தான் பெரியளவில் உதவி புரிந்தது. உதாரணத்திற்கு திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர்  பகுதிகளில் உள்ள விசைத்தறித் தொழிலில் லட்சக்கணக்கான சிறு, குறு விசைத்தறி கூடங்கள் அமைத்து உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிற்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் (Technology Upgradation finance Scheme) திட்டத்தில் உதவி என்று அறிவித்தது. ஆனால் இந்த திட்டத்தில் குறைந்த பட்ச நிதி என்பது ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அறிவித்தது. இந்த தொழிலில் ஈடுபட்டி ருக்கும் இவர்களுக்கு தறி கூடங்கள் அமைத்திட அதிகபட்சமாக ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் போதும். எனவே இவர்களுக்கு இந்த திட்டம் பொ ருந்தாமல், ஏற்கனவே பெரும் தொழிற்சாலைகள் வைத்திருக்கும்  முதலாளிகள் பலன் தான் பெற்று வருகின்றனர்.  பெரிய அளவிலான உற்பத்தியின் பொருளாதா ரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; அரசாங்க திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளின் பலனைப் பெற முடியாததால் விரிவாக்கத்திற்கான திட்டங்கள் இருந்தும் அதை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது; அரசு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெறுவது கடினமாக உள்ளது; இதனால் தனியார் நிதி நிறுவனங்களை இவர்கள் அணுகுகின்றனர்; 

இதன் விளைவாக பெருமளவிலான தொழிற் கூடங்கள் நலிவடைந்து மூடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இந்தியாவில் சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் நிதி பற்றாக்குறை, ,நவீன தொழில்நுட்பம் இல்லாதது, மூலப்பொருட்களின் பற்றாக்குறை, மின் பற்றாக்குறை, தொழிலாளர் ஊதியம் மற்றும் பற்றாக்குறை பிரச்சனை, சந்தைப் படுத்தல் பிரச்சனை, நிர்வாகத் திறன்கள், தரம்,  உற்பத்திச் சிக்கல்கள், தொழில்நுட்பச் சிக்கல்கள்,  நிதிச் சிக்கல்கள், திறன் குறைவாகப் பயன்படுத்து வதில் உள்ள சிக்கல்கள், ஏற்றுமதி தொடர்பான பிரச்சனை உட்பட பல முக்கியப் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உலகமய தாக்கம்

‘ஒபன் லைசன்ஸ்’ என்று அறிவித்ததன் விளைவு, சிறிய நிறுவனங்கள் மூலப்பொருள் பற்றாக்குறைப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இரும்பு மற்றும் எஃகு, பிக் இரும்பு, ‘ஏ’ கிரேடு கரி, ரசாயனங்கள் போன்ற மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை உள்ளது, சிறு தொழில்கள் நிதி நிலையில் பல வீனமாக உள்ளன. அவர்கள் கடனில் மூலப்பொருட்க ளைப் பெற இடைத்தரகர்களின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இத்தகைய ஏற்பாடு அதிக செலவுகளை விளைவிக்கிறது; மூலப்பொ ருட்களை இறக்குமதி செய்யும் போது பாதகமாக இருக்கிறது.  நவீன தாராளமய காலத்தில் பெரும் முத லாளிகளின் நடவடிக்கைகளினால் மூலப்பொ ருட்களின் தட்டுப்பாடு தொடரும். ஆகவே உள்நாட்டு மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் இறக்கு மதி செய்யப்படும் மூலப்பொருட்களின் கொண்டு இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் உத்திகளை அரசு செய்திட வேண்டும். மாநிலக் கிடங்குகளில் இருந்து மூலப்பொருட்களை தாராளமாக விநியோகிக்க உத்தரவாதம் அளிப்பதன் மூலமும், உற்பத்திக்குத் தேவையான நியாயமான அளவு வெளிநாட்டு மூலப்பொருட்களுக்கு இறக்கு மதி உரிமங்களை வழங்குவதன் மூலமும் தற்போதுள்ள தொழில்களின் அனைத்து தேவைக ளையும் பூர்த்தி செய்வது அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

சந்தை தான் நிர்ணயிக்கும் என்று நிலை இருக்கும் போது போட்டிகள் மற்றும் திறன் மீது அடுக்க டுக்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிறிய நிறுவனங்கள் பெரும் நிறுவனங்களைச் சார்ந்து அல்லது இணையும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.  தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளின் காரணமாக சிறுதொழில்கள் இப்போது இந்திய அளவிலான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று உலகளவில் நமது நாட்டை விட மற்ற மூன்றாம் உலக நாடுகளில் திறன் பெற்ற இளம் தொழிலாளர்கள் உள்ளனர்.  நமது நாட்டு இளைஞர்களின் திறனை வளர்க்க அரசு முன்வர வேண்டும்.  தற்போது ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் சிறு, குறு நடுத்தர தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளன. அறிவிக்கப்படும் கொள்கை ஆவணத்தில் இந்த தொழிற் பிரிவினர் தொழிலை வளமாக நடத்திட,  கிராமப்புற பொருளாதாரம் மேம்பட, வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணும் விதமாக திட்டங்கள் அறிவிக்க வேண்டும். அந்த திட்டப் பலன்கள் அனைத்தும் உரிய நேரத்தில் உரியவர்க ளுக்கு கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும்.

கட்டுரையாளர்: சிஐடியு மாநிலச் செயலாளர்