articles

img

அத்வானி எடுத்த முடிவும் மோடி எடுக்க வேண்டிய முடிவும் - பேரா.மு.நாகநாதன்

அதானிகளால் சறுக்கி விழுந்து கொண்டிருக்கும் சந்தைப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி விரைவு பயணத்தைத் தொடங்கியுள்ளது.‌ ஒன்றிய அரசின் நிதி மேலாண்மை முழுமையாகத் தோல்வியைத் தழுவிவிட்டது. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய பிரதமர் மோடி தடுமாறுகிறார். பொறுப்பிலிருந்து நழுவுகிறார்.

பெரும்பான்மையான மக்கள்வறுமையில் வாடுகின்றனர்.பெரும்பான்மையான இளைஞர்கள்வேலையின்மையால் நிலைகுலைந்து நிற்கின்றனர். ஒன்றிய அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை முதலாளிகள் -பணக்காரர்கள் சார்பு நிலை அறிக்கையாகத்தான்   வடி வமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும்நிதிநிலை அறிக்கை வந்த நாளில் பங்குச் சந்தையில் இறக்கம் காணப்பட்டது‌.அதானி குழுமத்தின் மோசடியின் விளைவே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது. ஏழை நடுத்தர மக்களின் மீது தான் வரிச்சுமை  ஏற்றப்பட்டுள்ளது. சரக்கு சேவை வரி விதிப்பு மறை முக வரிக்கொடுங்கோன்மையின் அடையாளமாகும். 66 விழுக்காடு ஏழை‌ நடுத்தர மக்களின்குறைவான வரு மானத்தையும் சீரழித்து வருகிறது.என்றும் இல்லாத அளவிற்குக் குடும்பச் சேமிப்பு 7 விழுக்காடு அளவிற்குக் குறைந்துள்ளது.இது மூலதனப் பெருக் கத்தின் மேல் விழுந்த பேரிடியாகும்.

ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிறிய அளவிலான, வருமானப் பாதுகாப்பாக  இயங்கி வருகிற மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் பல இலட்சம் இந்தியர் கள் ‌இந்தியக் குடியுரிமையைத் துறந்து , வெளிநாடு களில் வாழ முடிவு எடுத்து விட்டனர். 2022  ஆம் ஆண்டில் மட்டும் 2-1/4 லட்சம் இந்தியர்கள் குடியுரி மையைத் துறந்துள்ளனர்.

கடன் மோசடி, வரிஏய்ப்பின்  உச்ச மோசடி

இச்சூழலிலும் பெரும் முதலாளிகளின் நலனைப் போற்றுவதில், அவர்களின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில், வரிச்சலுகைகளை வாரி வழங்கு வதில் பாஜக ஒன்றிய அரசு சிறிதும் பின் வாங்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிட்ட 100 பெரும் முதலாளிகளின் செல்வமும், சொத்தும் பன்மடங்கு பெருகியுள்ளது. எப்படி இந்தியப் பெரும் முதலாளிகள் உலகப் பெரும் முதலாளிகளானார்கள் என்பதை அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலஅதானி அடித்த கொள் ளையை, மோசடியை அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது.  இன்று வெடித்துக் கிளம்பும் அதானி குழும மோசடி நீண்ட காலமாகவே  முதலாளித்துவக் குழுமங்கள் செய்து வரும் பொதுத்துறை வங்கிகளின் கடன் மோசடி,  வரி ஏய்ப்பு மோசடிகளின் இன்றைய உச்ச மோசடி யாகும்.

வரி ஏய்ப்பின் சொர்க்கபூமி

ஒன்றிய அரசு, இந்திய மைய (ரிசர்வ்) வங்கி ஆகியவற்றின் கீழ்ப் பல நிலைகளில் பல  விழிப்பு ணர்வு  கண்காணிப்பு நிறுவனங்கள் இயங்கி வரு கின்றன. நிதி பொருளாதார குற்றங்களைக் கண்கா ணித்து உரிய, விரைந்த, உடனடியான  நடவடிக்கை களை மேற்கொள்ள வருமான வரித்துறை,ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை ஆகிய துறைகள் உள்ளன.அரசியல் காரணங்களால் இத்துறைகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன.வரி ஏய்ப்பவர்களின் சொர்க்க பூமியாக இந்தியா மாறி வருகிறது. 1957 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் வழியாக நேர்முக வரிகளைச் செலுத்தாதவர்கள் தாங்களே முன்  வந்து வரிச் செலுத்தும் திட்டம்  (Voluntary Disclosure Scheme) கொண்டு வரப்பட்டது.இத் திட்டம் பல முறை பல ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட தால் கயமை அல்லது கள்ளப்பணம் வைத்திருந்தோர் தாங்களே முன்வந்துதண்டக்கட்டணத்தைச் செலுத்தி விட்டு வெள்ளைப் பண முதலாளிகளாக வெளியே உலா வந்தார்கள். கள்ளக்கடத்தல் மன்னர்கள், கள்ளச் சாராய சிற்றரசர்கள், கள்ளச்சந்தை குறுநில மன்னர் கள், திரையுலக மினுக்கிகள், சுயநிதி கல்வி தந்தை யர்கள், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை விற்ப வர்கள் ஆகியோரின் கூட்டணிதான் கயமைப் பணத்தைப் பன்மடங்காக இந்தியாவில் பெருக்கம் செய்து வருகிறது.

இந்தக் கள்ளப் பணப் பொருளாதாரச் சுழற்சி தான் இந்தியப் பொருளாதாரத்தின் மீது சுனாமி தாக்குதல் செய்து வருகிறது. 1997 ஆம் ஆண்டு வரை வரிச் சலுகையைப் பெற்றவர்கள் 35000 நபர்கள். செலுத்திய மொத்த தொகை ரூபாய் 78000 ஆயிரம் கோடி.

கள்ளப்பணம் நல்ல பணமாவது... 

எனது மாணவர்- பேராசிரியர் ராம் கோபாலின் தந்தை மறைந்த  முனைவர் சிவசாமி ஒன்றிய அரசின் நேர்முக வரி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி யவர்.  28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த போது ஓர் அறக்கட்டளை சொற்பொழிவிற்கு எனது  அழைப்பின் பேரில் வந்து சிறந்த உரையை ஆற்றினார். சென்னை, பெங்களூர் போன்ற முதன்மையான நகரங்களில் தலைமை வருமான வரி ஆணையராகப் பணியாற்றிய நேர்மையாளர். அப்போது, தானே முன் வந்து வருமான வரிச் செலுத்தும் முறை பற்றிச் சில கேள்விகளைக் கேட்டேன்.சிரித்துக் கொண்டே சொன்னார், பெங்க ளூரில் வருமான வரி தலைமை ஆணையராக இருந்த போது கள்ளக்கடத்தலில் ஈடுபட்டுப் பல கோடி ரூபாயை இத்திட்டத்தின் வழியாக அளித்து வெள்ளைப் பணக் காரராக ஒருவர் மாறினார்.பல ஆண்டுகளுக்குப் பின்பு சென்னைக்குப் பணி மாறுதல் செய்யப் பட்டேன். மீண்டும் அதே நபர் பெரும் முதலாளியாகி இதே திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் கள்ளப் பணத்தைக் கணக்குக் காட்டி, தண்டத் தொகையைச் செலுத்தி “நல்ல” பணக்காரராகச் சென்றார்.  வருமான வரி உச்ச வரம்பு 75 விழுக்காடாக இருந்த போது நேர்முக வரி வழியாக அதிக அளவில் ஒன்றிய அரசுக்கு நிதியாதாரம் கிடைத்தது. வருமான வரி உச்ச வரம்பு 30 விழுக்காடாகக் குறைக்கப்பட்ட பின்பு வரி ஏய்ப்புப் பன்மடங்கு உயர்ந்தது எனவும் முனைவர் சிவசாமி குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்பவர்களுக்கு வாய்ப்பு

1997 ஐக்கிய முன்னணி ஆட்சியில் ப.சிதம்பரம் ஒன்றிய நிதியமைச்சர் பொறுப்பு வகித்தார்.1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தானாக முன்வந்து வரு மான வரிச் செலுத்தும் திட்டம் இரத்துச்   செய்யப்படும் என அறிவித்தார்.முன்னதாக ஒரு வாய்ப்பும் வரி ஏய்ப்புச் செய்பவர்களுக்கு அளிக்கப்பட்டது.ஒரு முறை வாய்ப்பு அளித்தால் இந்திய மக்கள் கயமை பணத்தை உருவாக்கத்தை விட்டுவிடுவார்கள் என்பது எனது நம்பிக்கை எனவும் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் அப்போது குறிப்பிட்டார். மக்கள் எங்கே கள்ளப்பணம் வைத்திருந்தார் கள்? முதலாளிகள் எனக் குறிப்பிடுவதற்கு ப.சி க்குப் பயமா? தயக்கமா? இப்படித்தான் ஒன்றிய  அரசின் நிதி அமைச்சர்கள் வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகளைப் பாதுகாத்தார்கள். 2014 ஆம் ஆண்டு  “லோக குரு” நரேந்திர மோடி பிரதமராக ஆனார்.2016ஆம் ஆண்டு மனதின் குரல் நிகழ்ச்சியில் - (மன்கி பாத்) வருமான வரிக் கட்டாதவர்களுக்குத் தண்டம் அளித்து வரியைச் செலுத்தும் திட்டம் வரப்போகிறது என அறிவித்தார்.தேர்தலுக்கு நிதி அளித்த பெரும் முதலாளிகள் மனம் குளிர வேண்டாமா?வருமானம் அறிவிக்கும் திட்டம் எனும் பெயரில் வரிஏய்ப்பு செய்யும் பணக்காரர்க ளுக்கு மீண்டும் வரிச்சலுகை அளிக்கப்பட்டது.

பெரும் பணக்காரர்களின் பழைய ‘கள்’ளப்பணம் புதிய மொந்தையில். சிதம்பரம் திரும்பப் பெற்ற திட்டம் புதிய பெயரில் மீண்டும்  உயிர்த்து எழுந்தது. இந்த வருமான வரிச்சலுகை திட்டத்தின் வழியாக 64,274 நபர்கள் ரூபாய் 65,250 கோடி வருமானத்தைத் தெரிவித்தார்கள். சராசரியாக ஆளுக்கு ரூபாய் ஒரு கோடியைக் கணக்குக் காட்டினார்கள். ஆனால் 2015 ஆம் ஆண்டில் இந்த வரி ஏய்ப்புச் செய்பவர்கள் தங்களின் பணத்தைப் பதுக்கும் திருவிளையாடல் களை முடித்து விட்டார்கள்.

பன்மடங்கான  பங்குச்சந்தை மூலதனம்

2014 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் மூலதனம் திடீரென்று பன்மடங்கானது.மும்பாய் பங்குச் சந்தை யிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வணிகம் ரூ. 32 லட்சம் கோடியிலிருந்து ரூ.66 லட்சம் கோடியாக உயர்ந்தது.வருமான வரித்துறையின் ஆய்வின் படி இந்த ஆண்டில் 1,21,423 முதலீடு செய்த நபர்கள் எப்படி இந்த வருமானத்தை ஈட்டினோம் (Source of Income) எனக் குறிப்பிடவில்லை.இதில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்தவர்கள் போலியான வருமான வரித்துறை அட்டையைப் (PAN Card) பயன்படுத்தி யுள்ளனர். ரூபாய் இரண்டு கோடி தொடங்கி ரூ.10,000 கோடி ரூபாய் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்‌. மொத்த முதலீடு செய்தவர்களில் 3 விழுக்காட்டினர் 61 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் பெருமளவில் செல்வத்தை வைத்து இருக்கும் தனிநபர்கள் என அடையாளப்படுத்தப்படு கிறார்கள். (High Net Worth Individuals- HNIs) இவர்கள் தான் இந்தியக் குடியுரிமையைத் துறந்து  மேற்கத்திய நாடுகளுக்குச் செல்கிறார்கள் என   20-2-23 ஆங்கில இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

எதிராகச் செயல்படுபவர்கள்  மீது சோதனை 

வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பவர்களை விட்டுவிட்டு ஒன்றிய அரசிற்கு எதிராகச் செயல்படும் ஊடகங்கள் மீது சோதனை எனும்பெயரில் அச்சுறுத்தல் செய்கின்றனர் என இன்றைய இந்து நாளிதழில் புள்ளிவிவரப் பகுதியில் சில விவரங்கள் வெளியிட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையின் முதன்மை அலுவலராகவும், நிர்வாக இயக்குநரா கவும் பணி புரிந்த அஷிஷ்குமார் செளகான் ஒரு கட்டுரையில் பங்குச் சந்தையில் வரி ஏய்ப்பு, மோசடி செய்பவர்கள் குறித்து எழுதியிருந்தார். மும்பை பங்குச் சந்தையில் 5700 குழுமங்கள் உள்ளன.பல நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வரி கட்டாத பணத்தை முதலீடு செய்து சட்டப் பூர்வமான சொத்தாக மாற்றுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.இது போன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்த இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியம் அமைக்கப்பட்டது. அங்கும் சித்ரா சுப்பிரமணியம் போன்றவர்கள் நுழைந்து பங்குச் சந்தை மோசடிகளுக்குத் துணை நின்றார்கள் என்பதும் அம்பலமாகியது.

குடும்பமே குழுமமாக மாறி...

அதானி குடும்பமே ஒரு குழுமமாக மாறி அனைத்து வகையான நிதி மோசடிகளைச் செய்ததை  ஹிண்டன் பர்க் வெளியிட்டுள்ளது.ஆனால் இந்த மோசடி நிறுவனத்தில் பொதுத்துறையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் முதலீடும்இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் முதலீடும் உள்ளது.யார் பணம்! மக்க ளின் பணம்! மக்களின் சேமிப்புச் சூறையாடப்படு கிறது. நாடாளுமன்றக்  கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனையை எழுப்பிய போது, இது வரை பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை.ஆஸ்திரேலியா தொடங்கி இலங்கை வரை பன்னாட்டு ஒப்பந்தங்கள் அதானிக்குக் கிடைப்பதற்கு வழிவகுத்தது எனும் குற்றச்சாட்டுகள் அந்தந்த நாடுகளின் ஊடகங்களில் வெளி வந்து கொண்டேயிருக்கிறது.அதானி குழு மத்தின் வளர்ச்சி உச்சம் தொட்ட காலம் 2014 ஆண்டு  ஆண்டிற்குப் பிறகு தானே!இது போன்ற பண இரட்டிப்பு மோசடிகளைச் செய்வதால் தான் நாட்டின் பொருளாதாரத்தில் வெள்ளைப்பணமும், கள்ளப் பணமும் சம அளவிற்கு வந்துவிட்டது.

முழுத்தோல்வியும்  மோடியின் நழுவலும்

இந்திய மைய (ரிசர்வ்) வங்கியின் வட்டி உயர்வு மாற்றங்கள், நிதித்துறையின் கட்டுப்பாடு நடவ டிக்கைகள் முழுமையாகத் தோற்று வருகின்றன.பணத்தின் சுழற்சி அளவும், வேகமும் குறைய வில்லை. பண வீக்கத்தையும் கட்டுப் படுத்த முடிய வில்லை. அதானிகளால் சறுக்கி விழுந்து கொண்டி ருக்கும் சந்தைப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி விரைவு பயணத்தைத் தொடங்கியுள்ளது .‌ஒன்றிய அரசின் நிதி மேலாண்மை முழுமையாகத் தோல்வி யைத் தழுவிவிட்டது. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய பிரதமர் மோடி தடுமாறுகிறார். பொறுப்பி லிருந்து நழுவுகிறார். 1996 ஆம் ஆண்டின் ஹவாலா பண மோசடி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எஸ்.கே.ஜெயின் நோட்டுப் புத்தகத்தில் 65 கோடி ரூபாய் அளவிற்கு 115 அரசியல் தலைவர்களுக்கு ஹவாலா பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. அரசு ஒப்பந்தங்களைக் குறிப்பாக எரிசக்தித் துறையில் சில தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு இந்தப் பணம் தரப்பட்டது எனவும் கூறப்பட்டது.

ஜெயின் டயரியில் அன்றைய பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பெயர் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார் கூறியவுடன் நாடாளு மன்ற   உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். “என் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கிய பின்னர் தான் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என்றார் அத்வானி”.இதைத் தொடர்ந்து வடநாட்டுத் தலைவர்களான சரத் யாதவ், ஜஸ்வந்த் சிங்,  ஆளுநராக இருந்த காங்கிரஸ் தலைவர் சிவசங்கர், மோதிலால் வர்மா ஆகியோர் தங்க ளின் பதவிகளைத் துறந்தனர். அப்போது பாஜக தலைவர் அத்வானி பதவியை விட்டு விலகியது என்னுடைய முடிவு. அரசியல் நம்பகத்தன்மை தேவை என்பதை உணர்கிறேன்.வாக்கு அளிக்கும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் மனசாட்சிப் படி நடந்துள்ளேன். ஆனால் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். எனவே எனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்று கூறினார். 2002 ஆம் ஆண்டு, குஜராத் முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள். இராஜ தர்மத்தைக் கடைப் பிடியுங்கள் என வாஜ்பாய் கூறிய போது மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி. எனவே பிரதமர் மோடி எல்.கே.அத்வானி வழிப்படி பதவியிலிருந்து விலகுவாரா? அத்வானி கருத்தின் படி அரசியல் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவாரா?
 

நாடும் மக்கள் மன்றமும் தக்க விடையை அளிக்கும். இது தான் அரசியல் வரலாறு சொல்லும் படிப்பினை.