ஒரு சிறு பிரசுரம் என்று இந்த புத்தகத்தை புறந்தள்ளிவிட முடியவில்லை. அதன் தலைப்புக்கேற்றவாறு அடர்த்தியான கருத்தியல் விவரங்கள் –அதை யொட்டிய நமது பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிமையான விவரங்க ளோடு நமக்கு அளித்துள்ளார் தோழர் என்.குணசேகரன். இன்றைய அரசியல் பிரச்சாரம் முன்னாட் களை போல் அல்லாமல் புது தொழில்நுட்ப வசதிகளோடு கடைக்கோடி சாமானியனுக்கும் சென்றைடையும் வகையில் மாறியுள்ளது.இது ஒரு புறமிருக்க, சென்றடையும் கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு எண்ணங்கள், பொது சமூகம் வெறுக்கும் விசயங்கள், மக்களை பிளவுபடுத்தும் அரசியல், என தனக்கு சாதகமான கருத்தாக்கங்களை திட்டமிட்டு பரப்புகிறது. இதிலிருந்து மக்களை பிரித்தெடுக்க வேண்டிய பணி முற்போக்காளர்களான நமக்கு உள்ளது என்பதை சொல்லும் நூல் இது. தன்னுரையிலேயே இந்நூல் எழுதுவதற்கான கார ணத்தை இரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டார் நூலாசிரியர்.
ஆளும் வர்க்கத்தின் வரையறை:
இந்தியாவில் எந்தெந்த காலங்களில் யாரெல்லாம் ஆளும் வர்க்கங்களாக இருந்துள்ளனர் என்பதில் துவங்கி, அவர்களின் பெருங்குரல், எவ்வகையான அரசியல் மாற்றங்கள் உருவானது, அந்த கருத்தியல் தளத்தை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு ,அடக்குமுறைக் கருவியாக அதை தங்கள் வசப்படுத்தி, மக்களை எவ்வாறு ஒடுக்கினார்கள் என்பதை வரலாற்று குறிப்புகளோடு பேசுகிறது இந்நூல். சுரண்டப்படுகிறோம் என்பதே தெரியாமல் மக்களை அறியாமைக் கடலில் மூழ்க வைத்து, போராட்ட உணர்வுகளை மழுங்க வைத்து, தங்களுக்கு எதிராக எவ்வித போர்க்குரலும் எழும்பாத வண்ணம் மிகச் சாதுரியமாக ஆளும் வர்க்கம் கடந்த காலங்களில் செயல்பட்டது என்பதை சொல்கிறது. அதிகார மேலாதிக்கம் இந்தியாவில் செயல்படுகிறது, அதன் கருவிகள் பயன்படுத்தும் முறை, இதில் சொல்லப்படுகிறது. இந்த அடக்குமுறை கருவிகளுக்காக நாட்டின் மொத்த நிதியில் எவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுகின்றது என்பதை புள்ளி விவரங்களோடு புத்தகம் சொல்கிறது. அந்த அடக்குமுறை கருவிகளை வைத்து, மக்கள் எழுச்சியை, போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசு, அந்தக் கருவிகளை மட்டுமே நம்பியிருக்காமல், மிக முக்கியமாக “ கருத்தியல் கருவி”யை தான் பெரிதாக நம்புகின்றது. அந்தக் கருவி எந்தெந்தத் தளங்களில் மக்களின் அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று அரசியல் மாற்றங்களை உருவாக்கு கிறது என்பதை இதில் நூலாசிரியர் விளக்குகிறார்.
இந்தியாவின் மிக பிரத்யேகமான மதமும் அதனூடே பின்னிப் பிணைந்துள்ள சாதியும் எவ்வகையான கருத்தியல் தாக்கங்களை உருவாக்கி வருகிறது என பேசுகிறது இந்தப் புத்தகம். பிற்போக்குக் கருத்தி யலை முறியடிக்க முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டு செல்ல முடியாமல் தடைக்கல்லாக முன் நிற்பது சாதியம் தான். சாதியை அழித்தொழித்தல் எனும் இலக்கை நோக்கிப் பயணிக்க பெரும் பயணத்தை அனைவரும் நடத்திட வேண்டும். இந்த புத்தகம் அதில் ஒரு தெளிவை நமக்கு தருகிறது. இந்து சமயத்தில் மதமும் சாதியும் பிரிக்க முடியாதது.சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தை கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால் நால் வருணங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் நீடிக்கிறது. இருப்பை தக்க வைத்துக் கொள்கின்றது. இந்து மதம் என சொல்லும் போது சாதியை அதிலிருந்து பிரிக்க முடியாது. ஆனால் மதம் பற்றிய நமது புரிதலுக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கின்றது. கோடானு கோடி மக்கள் நம்பும் மதம், அதன் மூலம் அவர்களுக்கு (மக்களுக்கு) கிடைக்கும் சிறு நிவாரணம் என்பதை நாம் மறந்து விட இயலாது. அப்படி மதத்தின் மீதான நம்பிக்கை கொண்டவர் களுமே படும் துயரங்களுக்கும், சொல்லொண்ணா கஷ்டங்களுக்கும் முன் பிறப்பின் காரணமே எனச் சொல்லி பிற்போக்குக் கருத்தியலை மிக எளி தாக நம்ப வைக்கும் சாகசம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. எதிலும் ஈடுபட வைக்காமல், மக்களை தனிமைப்படுத்தும் வேலை களை மிக கச்சிதமாகச் செய்கிறது கருத்தியல் பரப்புரை. எனவே தான் பாதிக்கப்பட்டாலும் அதற்கான மூலகாரணத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல், புலம்பும் நிலையை நோக்கி மக்கள் திரளை தள்ளி விடும் வேலையைச் செய்கிறது. மதம் சுரண்டும் கூட்டத்தின் கருவியே எனும் நமது பேராசான் மார்க்ஸ் சொன்னதை நம் நினைவில் கொண்டு மக்களை அணுக வேண்டிய அவசியம் உள்ளது. மக்களை திரட்டும் போது நாம் தான் அறிவியல் சார்ந்த முற்போக்கு கருத்தியலை அவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கிட கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.
சாதி மற்றும் மதம் குறித்த நம் பார்வையை எளிதாக புரிய வைக்கவும் செய்திடல் அவசியம். சமூகத்தில் இருக்கும் பழமைவாதக் கருத்துக்களை தான் இந்துத்துவா சக்திகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்து கின்றன என்பதை இந்த நூல் தெளிவுபடப் பேசுகிறது. அவர்களின் செயல் திட்டம் ஒரு பக்கம் பிற்போக்கான பொரு ளாதாரக் கொள்கைகள் என்றாலும், எந்தெந்த தளங்களில் தங்கள் கருத்துக்களை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்பதை நம்மில் பல தோழர்கள் அறிந்திருந்தாலும், எவ்வளவு ஆழமாக தங்கள் கருத்தாங்களை பரப்புகிறார்கள் எனும் விசயத்தை மிக அழகாக நயம்பட விளக்குகிறார் தோழர் என்.குணசேகரன்.
“கடுமையான பணிச் சுமையில் உழலும் ஒரு தொழிலாளிக்கு எப்போதாவது தான் மதத்தை பற்றிய நினைவு வரும். வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் போதோ, அல்லது வழிபாடு செய்யும் போதோ தான், அவருக்கு மதம் பற்றிய நினைவே வரும். ஆனால் இந்துத்வா சக்திகள் சாதுரியமாக மதம் சார்ந்த விசயங்களையே எப்போதும் முன்னிறுத்தி விசம் கக்கும் வேலையைச் செய்கின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார். அதாவது உலகமே கொரோனா பெருந்தொற்று எனும் பேராபத்தை எதிர்கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் கூட அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமானத்தை பற்றிய பேச்சினை பேசுபொருளாக்கி, வெறுப்பு அரசியலை மேலோங்க வைத்து மதமாக இந்துக்களை ஒன்று திரட்டும் வேலையைச் செய்தார்கள். சமத்துவ கருத்தியலை எங்ஙனம் மக்களிடத்தில் கடத்துவது, அதன் மூலம் முற்போக்கு எண்ணங்களை வேர்விட வைப்பது என்பதையும் நூலாசிரியர் விளக்குகிறார்.
பிரெஞ்ச் நாட்டு மார்க்சியரான தோழர் அல்தூசர் சித்தாந்த அரசு கருவிகள் குறித்த அனுபவம் இந்த நூலில் இறுதியில் முக்கியப் பகுதியாக இருக்கிறது. சமூகத்தில் மேலோங்கும் கருத்துக்கள் சித்தாந்த ரீதியாக எந்தெந்தத் தளங்களில் பயணிக்கிறது, அதனால் உருவாகும் விளைவுகள் என்ன என அல்தூசர் சொல்கிறார்.1969 ஆம் ஆண்டில் அவரின் ஒரு கட்டுரை இந்த கருத்தியல் தளத்தை முதலாளித்துவம் எப்படியெல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தன்னை மறு உற்பத்தி செய்து கொள்கிறது என்றும் அரசின் கருவிகளை இரு வகையாகப் பிரித்து, அதில் எவ்வகையான வேலைகளைச் செய்கிறது என்றும் தெளிவுபட விளக்குகிறார்…பிரமிப்பாக இருக்கிறது. தோழர் அல்தூசர், அதன் வேலைகள், இரண்டு வகை கருவிகளின் வேறுபாடுகள் என அனைத்தையும் விளக்குகிறார். அதனூடே அவரின் சில மிக முக்கியமான ஆய்வுகளும், அதையொட்டிய நிலைபாடுகளும் நூலில் இருக்கின்றன. தற்போதைய சூழலில் இடதுசாரி அமைப்பு களில் முன்னணி பொறுப்பில் இருக்கும் அனைவரும் இந்த புத்தகத்தை அவசியம் வாசித்து, முழுமையாக உள்வாங்கிக் கொண்டு களப்பணியாற்றி மக்களிடம் நமது கருத்துக்களை கொண்டு செல்ல இந்நூல் நிச்சயமாக உதவும்.