மோடி ஆட்சியில் பெரு முதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரி இறைக்கப்பட்டு வராக் கடன் என்று நிலுவையில் இருப்பது 67.66 லட்சம் கோடி ரூபாய். இதில் இவர்களால் ஏப்பம் விடப்பட்டது 12 லட்சம் கோடி ரூபாய். இக்கட்டுரையில் மிக விரிவாக அலசுகிறார் இந்திய அரசின் கலாச்சாரத்துறை செயலாளராக பணியாற்றிய ஜவஹர் சிர்க்கார். தமிழில் : கடம்பவன மன்னன்.
திருவாளர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு பதவிக்கு வந்த பின்பு, கடந்த எட்டே முக்கால் வருட காலத்தில் இந்தியாவில் வங்கிகள் கடன் வழங்கி திரும்பப் பெற முடியாமல் போயுள்ள பெரும் தொகை 12,09,606 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. ஒன்றிய அரசின் நிதி அமைச்ச கத்திடமிருந்து எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட ஒரு ஆவணத்திலிருந்தே மேற்சொன்ன தொகையை அறிய முடிந்தது. இவ்வளவு கணிசமான தொகையை இந்திய வங்கிகள் இழந்து நிற்கும் போதிலும், ரிசர்வ் வங்கி உள்பட வங்கித்துறையை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்புகள் யாவும் ஆழ்ந்த உறக்கத்தில் அமர்ந்திருப்பது ஏன் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஜனவரி 16, 2023 அன்று, “நரேந்திர மோடி அரசின் முதல் எட்டு ஆண்டு களில் 12 லட்சம் கோடி ரூபாய் வரை மாயமாய் மறைந்து போனது எவ்வாறு நிகழ்ந்தது?” என்று தி வயர் இணைய இதழ் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டி ருந்தது. அப்போது, மோடி அரசின் முதல் ஐந்தாண்டுக ளில் வங்கிகள் சந்தித்த நெருக்கடி குறித்து நாடாளு மன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட்ட அறிவிப்பிலிருந்தும், எஞ்சிய மூன்றாண்டுகளுக்கு வெளி அமைப்புகளிலிருந்து திரட்டிய மதிப்பீடுகள் மற்றும் தகவல்களிலிருந்தும் மேற்சொன்ன 12 லட்சம் கோடி ரூபாய் என்கிற தொகை உத்தேசமாக நிர்ண யிக்கப்பட்டது. அரசின் புள்ளிவிவரங்கள் கிடைக்காத நிலையில் அனுமானங்கள் வாயிலாகவே இந்தத் தொகை தோராயமாக வரையப்பெற்றது.
ஆனால் தற்போது ஒன்றிய அரசின் நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கராட் இடமி ருந்தே 15.06.2023 தேதியிட்ட கடிதம் நேரடி யாக வந்துள்ளதால், மேலதிகத் தகவல்களை வெளியி லிருந்து திரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இக் கடிதம் 2013-14 நிதியாண்டிலிருந்து டிசம்பர் 31, 2022 முடிய இந்தியாவில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து கடனை மீட்க முடியாமல் இழந்துள்ள மொத்த தொகையைச் சரியான புள்ளிவிவரத்துடன் தெரியப் படுத்துகிறது. இந்தக் கடிதத்தின்படியே கடந்த எட்டே முக்கால் வருட காலத்தில் வங்கிகள் இழந்துள்ள தொகை ரூ.12,09,606 லட்சம் கோடி என்பதை அறிய முடிகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், 12 லட்சம் கோடி ரூபாய் மறைந்து போயுள் ளது என்று தி வயர் இதழ் கணித்திருந்த அதே தொகையை அதிகாரப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் முதன் முதலாக நிதி அமைச்சகம் எழுத்து வடிவில் ஒப்புக் கொண்டிருப்பது தான்.
ரிசர்வ் வங்கியின் வினோதமான சுற்றறிக்கை
இந்திய வங்கிகளில் மிகப்பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, வஞ்சக எண்ணத்துடன் அவற்றைச் சுருட்டிக் கொண்டு மோசடி செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கையை அரசு எடுக்கப் போகிறது என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, இந்தப் பிரச்சனை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, அனைத்து மட்டங்களிலும் இன்று விவாதப் பொருளாகியுள்ளது. வங்கிக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்கள் வங்கியை அணுகி “சமரசம்“ செய்து கொள்ள அழைப்பு விடுத்து ஜுன் 8, 2023 அன்று புதுமையான சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு வங்கி தொழிற் சங்கங்கள், நிதி முதலீட்டு ஆலோசகர்கள் மட்டு மன்றி, பொது மக்கள் மத்தியிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மோடி அரசு வங்கிக் கடனை விழுங்கிய மோசடிப் பேர்வழிகள் மீது சலுகை மழை பொழிந்து கொண்டிருக்கிறது. செங்கற்களை ஓரிடத்தி லிருந்து எடுத்து மற்றோரிடத்தில் சொருகி நாடகமாடு வதைப் போல, ஏதோ பெரிய நடவடிக்கை எடுப்பதாகப் பாசாங்கு செய்கிறது. மக்களின் சேமிப்புப் பணம் 12 லட்சம் கோடி ரூபாய் காணாமல் போய்விட்ட கொடுமை குறித்து எந்தவித அசைவுமின்றி வெற்றுப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் வங்கிகள் கடனை மீட்க இயலாமல் இழந்துள்ளதில் மிகக் கணிசமான தொகை இதுவேயாகும்.
சமீபத்திய சர்ச்சைக்குரிய ஜுன் 8 சுற்றறிக்கை க்கு முன்பு வரை, ரிசர்வ் வங்கியானது, கடன் மோசடி யாளர்களைக் கருப்புப் பட்டியலில் வைத்திடுமாறு அனைத்து வணிக வங்கிகளுக்கும் அவ்வப்போது வழிகாட்டுதல்களும், உத்தரவுகளும் வழங்கிக் கொண்டே வந்துள்ளது. இதற்கு முந்தைய ரிசர்வ் வங்கி ஆணை, ஜுன் 7, 2019-இல் வெளியிடப் பட்டுள்ளது. அந்த ஆணையில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத வர்கள் (Wilful Defaulters) தான், இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானவர்கள் என்று ரிசர்வ் வங்கி அறி வுறுத்தியுள்ளது. ஏனெனில், இவர்களில் பெரும்பா லானோர், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவ தற்கான முழு தகுதியும் இருந்தும், அதைச் செய்யா மல் வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் கடன் கட்ட மறுப்பவர்கள். ஒரு சிலர் வங்கியில் வாங்கிய கடனை உரிய முறையில் பயன்படுத்தாமல் வேறு பணி களுக்கு மடைமாற்றம் செய்பவர்கள். வேறு சிலரோ, கடன் தொகை முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்ட தோடு, வங்கிக்குப் பிணையாகவும், கூடுதல் பாதுகாப் பாகவும் சமர்ப்பித்த சொத்துக்களையும் முறை கேடாக விற்றுவிட்டு, வங்கியைத் திட்டமிட்டு அலைக் கழிப்பவர்கள். இத்தகையவர்களையே கருப்புப் பட்டியலில் வைத்திட வேண்டிய ஆபத்தான வாடிக்கை யாளர்கள் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது.
காகிதப் புலியாக...
இவ்வாறு உத்தரவுகள் பிறப்பித்த போதிலும், அவை மீறப்படும் போது மேல் நடவடிக்கை எடுக்க இயலாத ஒரு காகிதப் புலியாக ரிசர்வ் வங்கி தற்போது மாறிவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்க ளோ, ‘பரஸ்பரம் கைம்மாறு’ என்கிற தன்மையில் ஒரு சில ‘வேண்டியவர்களுக்குச்‘ சாதகமான முடிவு களை வெளிப்படையாக அறிவிக்கின்றனர். அரசியல் பின்புலத்தோடு நிரப்பப்படும் கண்காணிப்பு அமைப்புகளோ, ‘கண்டுகொள்ளாத அமைப்புகளாக‘ மாறி நீண்ட நித்திரைக்குச் சென்றுவிட்டன. இப்ப டிப்பட்ட பின்னணியிலேயே வங்கிகள் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்ப்பாடுகளுக்கும் ஆட் படுத்தப்படுகின்றன. மேற்கூறிய அம்சங்களோடு, ‘கார்ப்பரேட் மேலாண்மை‘ என்கிற மயக்க நிலையும் சேர்ந்து கொள்ள, நேர்மையும் தகுதியும் இல்லாத மனிதர் கள் பலர் திடீர் செல்வந்தர்களாக உருமாறி விடுகின்ற னர். இவ்வாறு குறுக்குவழியில் வாழ்வு தேடிக் கொள்ளையடிக்கும் கும்பல், கணக்கு வழக்குகளில் பல தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதும், வங்கிக் கடனைக் கட்டாமல் அப்படியே விழுங்குவதும், அயல் நாடுகளுக்கு ஓடிச்சென்று அங்கே உல்லாச வாழ்க்கை யை மேற்கொள்வதற்குத் தான் என்று கூறினால் அது மிகையல்ல. உண்மையில் இந்தியாவில் வங்கித்துறையின் பல்வேறு விதிகளும், நடைமுறை செயல்பாடுகளும் மேற்சொன்ன மோசடிப் பேர்வழிகள் மீது உடனடியா கப் போதிய நடவடிக்கைகள் எடுக்கக் கூடியதாக இல்லை. ஆனால் இதே வங்கி முறைமைகள், பொருளா தார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுதொழில் முனைவோர், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களைச் சந்திக்கும் எளிய விவசாயிகள் ஆகியோர் தாங்கள் வாங்கிய சிறுசிறு கடனைத் திருப்பிச் செலுத்த முடியா மல் போனால், அவர்கள் மீது கருணைக்குப் பதிலாக கடுமையையே காட்டுகின்றன.
ஓடிப்போகும் மோசடிக்காரர்களுடன் உள்ளார்ந்த உறவு
சமீப ஆண்டுகளில் நாடு முழுவதும் பேசப்பட்ட நிதி மோசடியாளர்கள் குறித்து நாம் இங்கு சற்றே பேச வேண்டியுள்ளது. நீரவ் மோடி, மெகுல் சோக்சி, நிஷாந்த் மோடி, ஆமி மோடி என்று இந்தப் பட்டிய லில் இடம் பெற்றுள்ளவர்கள் அத்தனை பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அவ்வப்போதைய காலகட்டங்களில் இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பிரதமர் மோடியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள் என்ப தையும், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற கடன் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து இவர்கள் கொள்ளையடித்த தொகை ரூ.11,400 கோடி என்பதை யும், தற்போது வட்டி சேர்த்து இந்தத் தொகை ரூ.16,000 கோடிக்கும் மேலாக அதிகரித்திருக்கும் என்பதையும் இங்கு எல்லோருக்கும் நாம் உறுதிபட நினைவூட்ட வேண்டியுள்ளது. நாம் ஏற்கனவே கூறியவாறு “பரஸ் பரம் கைம்மாறு (Quid pro-quo)” என்கிற தன்மை யில் இவை அரங்கேற்றம் பெறுகின்றன என்பதை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். இன்னொரு மோசடியாளர் ஜதின் மேத்தா. இவரும் நமது பிரதமருடன் நெருக்கமான நட்பை நெடுங்காலமாகப் பேணி வந்தவர் தான். இவரது வின்சம் டயமண்ட்ஸ் (Winsome Diamonds) நிறு வனம் 7,000 கோடி ரூபாய் வரை முறைகேடுகளில் ஈடு பட்டது அம்பலமானவுடன் 2014-ஆம் ஆண்டில் தன் குடும் பத்தினரையும் “பத்திரமாக அழைத்துக் கொண்டு”, இந்தியாவை விட்டே ஓடிப்போய் தலை மறைவாகிவிட்டார். இந்த வரிசையில் குஜராத்தை அடித்தளமாகக் கொண்ட இன்னொரு நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் மருந்துக் கம்பெனி, மோசடி நடவடிக்கைகள் மூலம் 8,100 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது.
வங்கிக் கடன்கள் வேட்டையாடப்படுகிற இப்படிப் பட்ட நிகழ்வுகளைக் கண்டு கொதிப்புறும் ஒருசில வங்கி மேலாளர்கள், தங்களது “செல்வாக்கையும்”, “பிரதமரோடு தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை யும்” தற்பெருமையுடன் வெளிக்காட்டும் விதமாக, அவ ருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரப் படுத்துவதை வழக்கமாகக் கொண்ட நீரவ் மோடி, மெகுல் சோக்சி, ஜதின் மேத்தா போன்றோரால் பாதிக்கப்படாமல், அவர்தம் நிர்ப்பந்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருந்து வந்தது பற்றி நிறையவே கூறியுள்ளார்கள். வங்கிக் கடன் மோசடிகள் நடப்பதும், மோசடி மன்னர்கள் வலம் வருவதும் குஜராத்திலிருந்து மட்டும் தான் என்று நாம் நிச்சயமாகக் கூற முடியாது. பெங்க ளூரைச் சேர்ந்த உலகறிந்த மதுபான வர்த்தகரும், கிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிக ளிலிருந்து அபகரித்த பணம் ரூபாய் 10,000 கோடிக் கும் மேல். இது போன்றே, தொழிலதிபர் ரிஷி கம்லேஷ் அகர்வாலுக்குச் சொந்தமான ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் இந்திய வங்கிகளை ஏமாற்றிப் பறித்த தொகை ரூ.22,842 கோடி ஆகும். இந்தப் பின்னணியில், அரசின் திவால் நிலை சட்டங்களின் (Insolvency Laws) பின்னால் ஓடி ஒளிந்து கொள்கி றவர்கள், சொத்துக்கள் மேலாண்மை நிறுவனங்க ளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான உரை யாடலை இத்தருணத்தில் இங்கு நடத்தாமல் இருப் பதே நன்று.
மிக மோசமான வராக்கடன் விகிதம்
பொதுவாக வங்கிகளில் திருப்பிச் செலுத்தப் படாத ஒவ்வொரு கடனும் உடனடியாக, செயல்படாத சொத்து (Non Performing Asset -NPA) என்ற பெயரில் வராக்கடன் ஆகிவிடுவதில்லை. வங்கி விதி முறைகளின் கீழ் 90 நாட்களுக்கும் மேலாக, கடன் / வட்டி நிலுவை இருந்துவரும் எந்தக் கடனையும், என்பிஏ என்று வகைப்படுத்தலாம். ஆனால் நடைமுறையில் வங்கிகள், ஒவ்வொரு கணக்கையும் சீர்படுத்தவும், கடன் பாக்கியை செலுத்தச் செய்யவும் பல கட்ட நட வடிக்கைகளை மேற்கொள்கின்றன. இவை எதுவும் பலனளிக்காமல் போனால் மட்டுமே அத்தகைய கணக்குகள் “இழப்பு சொத்துக்கள் (Loss Assets)” என்று வகைப்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக வங்கிகள் ஒரு கணக்கைச் சரிசெய்து , அதிலிருந்து கடன் தொகையை முறையாக மீட்கவும், நிலுவையில் நிற்கும் வட்டி தொகையை வசூலிக்கவும் 4 வருடங் கள் வரையிலும், ஏன் அதற்கும் கூடுதலாகவும் முயற்சியை மேற்கொள்கின்றன. இவ்வளவுக்கும் பிறகு கடனை மீட்கவோ, கடனைச் சரி செய்யவோ இயலாத நிலை நீடித்தால், வங்கிகள் வேறு வழியின்றி கடனைத் தள்ளுபடி செய்ய (Write-off) முற்படுகின்றன.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத எல்லா நடவடிக்கைகளுமே குற்றச் செயல் சார்ந்தது தான் என்று நாம் ஒற்றை வரியில் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவ்வப்போது திடீரென நிகழும் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஒரு சில தொழில்/வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய நட்டங்களைச் சந்திக்க நேர்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தியாவிலும், புவிக்கோளத்தின் தென் பகுதியில் உள்ள இன்ன பிற நாடுகளிலும் வங்கி களிலிருந்து மிகக் கணிசமான அளவு பணத்தை உறிஞ்சிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவ தற்கென்று ஏராளமான திட்டமிட்ட வழிமுறைகள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. அரசியல் தலை யீடுகள், தொழில் முதலீடு குறித்த போலியான திட்ட அறிக்கைகள், வேண்டுமென்றே கூடுதல் விலை நிர்ணயம் அல்லது குறைவான விலை நிர்ணயம், நிறு வனத்தின் நிதியையும், சொத்துக்களையும் உள் நோக்கத்துடன் திட்டமிட்டு மடைமாற்றம் செய்வது ஆகிய முறைகள் மூலம் தொழிலை நஷ்டமடைந்து நலிவடைய அனுமதிப்பது, அதைக் காரணம் காட்டி வங்கிக் கடனை ஏப்பம் விடுவது என்பதே பலரது எண்ணப்போக்காக உள்ளது.
... தொடர்ச்சி நாளை...
2014-க்குப் பின் மொத்த வராக்கடன் தொகை ரூ.67.66 லட்சம் கோடி!
மொத்த கடன் தொகையில் வராக் கடன் விகிதம் என்பது ஒருபுற மிருக்க, இந்தப் பிரச்சனையில் தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்டுள்ள அனைவரது ஆதங்கமும், ஆவேசமும் என்ன வெனில், நிதி அமைச்சகம் நமக்கு வழங்கியுள்ள விவரங்களின்படியே, நரேந்திர மோடி தலை மையிலான அரசு பதவியில் இருக்கிற இந்த 9 ஆண்டுகளில் நாம் இழந்துள்ள மிகக் கணிச மான தொகை தான்.
அரசு வழங்கியுள்ள தரவுகளின்படி செயல் படாத சொத்து (வராக்கடன்) என்று அடையா ளம் காணப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.67.66 லட்சம் கோடி. இதில் பொதுத்துறை வங்கிகளின் என்பிஏ தொகை ரூ.54.33 லட்சம் கோடியாகவும், எஞ்சிய தொகை தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகளுடையதாகவும் உள்ளது. இவற்றை கடனாளிகள் பிணையாக சமர்ப் பித்துள்ள சொத்துக்களைக் கொண்டு மீட்பதற் குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆமை வேகத் தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பெரும் தொகையில், இனி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்று கைவிரிக்கப் பட்டது (Write-off) மட்டும் ரூ.12.10 லட்சம் கோடி. அதாவது மோடியின் ஒன்பதாண்டு ஆட்சிக் காலத்தில் காற்றோடு கலந்து மாயமாய் மறைந்து போன தொகை - உலக அளவில் மிகவும் அதிகமானதாக உள்ள இந்த ரூ.12.10 லட்சம் கோடி!.