articles

img

இலங்கை மலையகம் - 200-நெல்லை ஜெயசிங்

200 வருடங்களுக்கு முன் உலகின் பல நாடு களை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டு இருந்த கால கட்டத்தில் இலங்கை இந்தியா நாடு களும் அதன் கட்டுப் பாட்டில் இருந்தன. அன்றைய சூழலில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வறுமை, சாதிய ஒடுக்குமுறை, நிலவுடமை ஆதிக்கம் பரவலாக காணப்பட்டன. இதே காலகட்டத்தில் இலங்கையில் பிரித்தானியர் உருவாக்கிய பெருந் தோட்டங்களில் வேலை செய்திட தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். 

லட்சக்கணக்கானவர்கள் தமிழ் நாட்டில் இருந்து இலங்கை மலை நாட்டில் குடியமர்த்தப்பட்டனர். வேலை செய்வதற்கு தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் நூற்றுக்கணக்கானவர்கள் கடலில் படகு கவிழ்ந்து இறந்தனர். அடர்ந்த காடு களை கடந்து மலைநாட்டிற்கு நடந்து செல்லும் வழியில் ஆயிரக்கணக்கா னவர்கள் வனவிலங்குகள் மற்றும் கொடிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தனர். இவ்வாறு இலங்கை சென்ற வர்களின் 200 வருட காலத்தை நினைவு கூரும் வகையில் தமிழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை சென்ற இந்திய தொழிலா ளர்கள் அடர்ந்த மலைப் பிரதேச காடு களை வெட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் காப்பி, தேயிலை, இரப்பர் போன்ற பெருந்தோட்டங்களை உருவாக்கினர். குறைந்த கூலியில் போதிய வசதிகள் இன்றி லயின் எனப் படும் ஒற்றை அறைகளில் வாழத் தொடங்கினர். துரைமார்களின், கங்காணிமார்களின் அடக்குமுறை களில் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

பெருந்தோட்ட உற்பத்தி மட்டு மல்லாமல் ரயில் பாதைகள், போக்கு வரத்து வழித்தடங்கள், மின்சார திட்டங்கள் என ஏராளமான உள் கட்ட மைப்பு வசதிகள் இந்தியாவில் இருந்து சென்ற தொழிலாளர்களால் மேற்கொள் ளப்பட்டன. இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் இவர்களின் பங்களிப்பு அதிகமாகும். இலங்கை யின் அடிப்படை வசதிகள் அனைத்திற் கும் தேவையான முதலீட்டை திரட்டிய வர்கள் இவர்கள். பெருந்தோட்ட வரு மானம் இலங்கையின் அனைத்து கிராமப்புற வளர்ச்சிக்கும் அபிவிருத்திக் கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. 

இன்று வரை இலங்கைத் தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் இத்தொழிலாளர்களின் கடந்த கால வாழ்க்கை சுகமானதாக இருக்கவில்லை. சோக வரலாற்றின் 200 வருடங்களை நிறைவு செய்யும் 2023 ஆம் வருடம் வரையிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் தோட்ட நிர்வாகிகளால், இடைத்தர கர்களாக இருந்த கங்காணிகளால் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். ஆரம்பத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி இன்றி வாழ்ந்தனர். இதனால் இளம் வயதிலேயே பலரும் இறந்து போயினர். இதனாலேயே ‘‘தோட்ட தொழிலாளர்கள் இலங்கை யில் நடத்தப்படும் விதம் வெட்கக் கேடாக இருக்கிறது’’ என நூற்றாண்டுக்கு முன்பே டொரிங்டன் என்ற ஆங்கிலே யர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு சென்றுள்ளார்.

கசங்கிய சேலை, இடுப்பில் படங்கு சாக்கு, முதுகில் தேயிலை கொழுந்து கூடை இதுவே 200 வருட மலையக தோட்டப் பெண்களின் அடையாளம். உரிய கூலி வழங்கப்படாதது மட்டு மல்ல வேலை தளத்தில் சிறுநீர் கழிக்க எந்த வசதியும் இல்லாத நிலை. இதனால் தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடிக்க முடியாத கொடுமை. கடும் குளிரில் இரத்தம் உறிஞ்சும் அட்டைக் ்கடியின் வலியோடு பெண்கள் இன்றும் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குடியுரிமை பறிப்பு
மலையக மக்களும் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்பதை இனவாதம் பேசும் மக்கள் மட்டுமல்ல படித்த அரசியல் வாதிகளும் கூட உணரவோ ஏற்கவோ முன்வரவில்லை. இலங்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இம் மலையக மக்கள் ஆற்றிவரும் பங்களிப்பை கவனத்தில் கொள்ளாத இனவாத சந்தர்ப்பவாத வலதுசாரி அரசியல் வாதிகள் கடந்த 200 வருடமும் மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்கு தடையாகவே  இருந்து வந்துள்ளனர். 

இலங்கை நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு முழுவதும் அவர்கள் அனுபவித்த சிரமங்கள், வேதனைகள் அதிகம். அதற்கு பிரதி உபகாரமாக இனவாத அரசியல் வாதிகள் நன்றி மறந்து அவர்களின் குடியுரிமையை வாக்குரிமையை பறித்து அவர்களை நடுத்தெருவில் அநாதைகளாக நிறுத்தியமை இலங்கை வரலாற்றில் கறைபடிந்த பக்கங்களாகும்.

இலங்கையில் வாக்கு வங்கி அரசியலில் இனவாதம் முக்கிய புள்ளி யாக மாறத் தொடங்கியது. 1948, 1949 இலங்கை குடியுரிமை சட்டங்களால் 10 லட்சம் மலையக மக்கள் குடியுரி மையுடன் வாக்குரிமையும் இழந்து நாடற்றவர்களாக்கப்பட்டனர். இது உலக வரலாற்றில் தொழிலாளர் சமூ கத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகச் செயலாகும். இதன் விளை வாக அம்மக்களின் அடிப்படை உரிமை கள் பறி போயின. அரசு வேலைகள் மறுக்கப்பட்டன. உயர் கல்வி தடுக்கப் பட்டது. நில உரிமை, வீட்டுரிமை பிரச்ச னைக்குள்ளானது. 200 வருடங்களுக்கு முன்னர் வலியோடு வந்தவர்களின் வலி எந்த கட்டத்திலும் குறையவில்லை.

குடியுரிமை பறிப்பின் தொடர்ச்சியாக அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற குரல் பேரினவாத வலதுசாரிகளிடம் ஆக்ரோஷமாக ஒலிக்கவும் தொடங்கியது. இது நாடெங்கும் பேசுபொருளாகியது. ஆங்காங்கே இடதுசாரிகள் மேற் கொண்ட எதிர்ப்பு, தொழிற்சங்கங்களின் போராட்டம் போன்றவை எந்த பயனும் தரவில்லை. முடிவில் பேரினவாத அரசியலே வெற்றி பெற்றது . அதன் விளைவாக 1964-ஆம் ஆண்டில் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தமும் 1974-ல் சிறிமா - இந்திராகாந்தி ஒப்பந்தமும் கையெழுத்தாகி 600000 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தவும் 375000 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதெனவும் முடிவாகியது. பல தலைமுறைகளாக ஆலமரமாக வாழ்ந்து வந்தவர்கள் வேருடன் பிடுங்கி இந்திய மண்ணில் எறிந்த இச் செயல் மலையக மக்களின் வாழ்வில் மிகவும் கொடூரமான வலி மிகுந்த பக்கங்களாகும்.

இவ்வுடன்படிக்கையால் பல குடும்பங்கள் சிதறுண்டன. குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டார்கள். தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வு திட்டங்களும் திருப்தி கரமாக இல்லாத நிலையில் வலியோடு அவர்களும் அவர்களின் சந்ததியினரும் இந்திய மண்ணில் வாழ்ந்து வரு கின்றனர் என வரலாற்று பதிவுகள் தெரி விக்கின்றன. உடன்படிக்கை வாயி லாக இலங்கையில் தங்கியவர்க ளுக்கான குடியுரிமையும் கூட உடனே வழங்கப்படவில்லை. பல படிநிலை களை கடந்து 2009 அளவிலேயே முடிவுக்கு வந்தது.

இலங்கையின் அரசியல் நகர்வா னது பெரும்பான்மை சிறுபான்மை என்ற இன வாதத்தை மையமாகக் கொண்டு இருப்பதால் சிறுபான்மை என்ற வகையில் மலையக மக்கள் காலத்துக்கு காலம் பெரிதும் பாதிப்பு களுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 1956, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இனக்கலவ ரங்களால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதே போன்று 1972-ல் நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் பெருந் தோட்டங்கள் தேசியமய மாக்கப்பட்ட  வேளையில் தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பிரிவினை வாதத்தை எந்த கட்டத்திலும் முன் வைக்காத மலையக மக்கள் 1983 இனக் கலவரத்தில் மிகப் பெரும் அழிவை சந்தித்தனர். 3000 பேர் கொல்லப்பட்டனர். 25000-க்கு மேற் பட்டோர் காயம் அடைந்தனர். இக் கல வரமானது மலையக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எனலாம். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. பலவீனமான சிறுபான்மை என்ற ஒரே காரணத்தினால் ஒவ்வொரு கலவரத்தின் போதும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது கொடுமையான செயலாகும்.

வடக்கு நோக்கி நகர்ந்த மலையக மக்கள்
கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், தோட்டங்கள் தேசியமய மாக்கப்பட்டு பெரும் பான்மை சிங்கள மக்களுக்கு தோட்டங்கள் பிரித்தளிக்கப்பட்டதால் வேலை இழந்த தோட்ட தொழிலாளர்கள் என பலரும் வடக்கே தமிழ் பகுதிகளை நோக்கி நகர்ந்தனர். பாதுகாப்பு கருதி அப்பகுதிகளில் நிரந்தரமாக குடியேற வும் விரும்பினர்.

வடக்கே குடியேறியவர்கள் அங்கே யும் காடுகளை வெட்டி பயிர் செய்த னர். இவ்வாறு காணிகள் பெற்று பலர் பயிர் செய்தபோதும் பெரும்பாலா னவர்களுக்கு சட்டப்பூர்வ காணி உரிமை வழங்கப்படவில்லை என கூறப்படு கிறது. காணி இல்லாத பெரும்பாலோர் விவசாய கூலிகளாக வாழத் தொடங்கினர்.

இவர்களால் காடழித்து உருவாக்கப் பட்ட விவசாய பண்ணைகள் இலங்கை  இராணுவத்தின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி வரும் வலிமிகுந்த துயரங்க ளை இன்று வரையும் எதிர் நோக்கி வாழ்ந்து வருகின்றனர். கிராமங்களின் எல்லையோரப் பகுதிகளில் பெருமளவு குடியமர்த்தப்பட்ட இவர்கள் உள் நாட்டு யுத்தத்தின் போதும் இராணுவ தாக்குதலின் போதும் பெரிதும் பாதிப்பு க்கு உள்ளாகினர். அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வந்து தற்போது  அகதி முகாம்களில் வாழ்ந்து வரு கின்றனர். இந்தியாவின் தொப்புள் கொடி  உறவுகளான இவர்கள் 35 வருடங்க ளுக்கு மேலாக குடியுரிமை இன்றி தமிழ் மண்ணில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற போது மலையக மக்கள் இலங்கை மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்தனர். குடியுரிமை இழந்து 1964 சிறிமா சாஸ்திரி உடன் படிக்கைக்கு பின் அவர்கள் மக்கள் தொகையில் நான்காம் இடத்தில் இருக்கின்றனர். 200 வருடங்களாக இலங்கையில் வாழும் அவர்கள் அண்மைக் காலங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
1 இன்று பெருந்தோட்டங்களில் வாழும் அவர்களில் 99.9 சதவீதமானவர்கள் லயின் எனப்படும் அடிப்படை வசதிகள்அற்ற ஒற்றை அறைகளி லேயே வாழ்ந்து வருகின்றனர். தனி வீடு அவர்களின் நிறைவேறாத கனவாகும்.இந்திய அரசின் உதவியுடன் ஒரு சில வீடமைப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அவை மிக மிக குறை வாகும். 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சேதமடைந்த லயின்வீடு களிலேயே இன்றும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

2தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டு சிங்கள பெரும்பான்மையினருக்கு 75 சதவீத காணிகள் பகிர்ந்தளிக்கப்பட இத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன் பெரும் சிர மத்திற்கும் ஆளானார்கள்.

3மலையக பெருந்தோட்ட காணிகளை அரசு பகிர்ந்தளிக்கப்பட்டபோது இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து 200 வருட காலம் நம்பிக்கையுடன் உழைத்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட னர். 75 சதவீத நிலம் 99.99 சதவீத பெரும்பான்மை சிங்களவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அரசு இனவாத அடிப்படையில் காணி பகிர்ந்தளிப்பை கைவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கும்  உரிய காணிகள் பகிர்ந்தளிக்க முன் வர வேண்டும்.

4 மலையக மக்களின் கல்வி இடை நிற்றல் அதிகமாகி வருவது கவலை தரும் விசயமாகும். வேலை இழப்பு, கொரோனா பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, குறைந்த வருமானம் போன்ற பல காரணிகளினால் தோட்ட தொழிலாளர்களின் கல்வி பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி யது. தோட்டப் பகுதிகளில் இருந்து உயர் பாடசாலைகள் தொலைவில் அமைந்துள்ளன. இதனால் வாகனங்களில் சென்று படிக்க வேண்டிய நிலையில் அதற்கான பண வசதி இன்றி பலரும் படிப்பை இடையில் கைவிடலாயினர்.          

   5 நூற்றுக்கணக்கான தோட்டப் பாடசாலைகளின் தரம்  உயர்த்தப் படாததால் தோட்ட குழந்தைகளின் உயர் கல்வி பாதிக்கப்படுகிறது

. 6 தேசியமயமாக்கப்பட்ட பிறகு பெருந்தோட்டங்களில் போதிய வேலை இல்லாத நிலையில் சிறு காணி உரிமையாளர்களிடம் வேலை  செய்ய வேண்டிய அவசியம் உருவாகி றது. அதே நேரம் அவ்வேலைக்கு உத்தரவாதமோ பாதுகாப்போ இல்லாமல் போய் விடுகிறது. அவர்களின் குடியிருப்பும் கேள்விக் குள்ளாகிறது.

7 பெருந் தோட்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வும் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை.

8 அதிகார பரவலாக்கலின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளில் தோட்டப் பகுதிகளை இணைத்து அம்மக்க ளுக்கும் ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

9 மலையகத்திற்கு வெளியில் வாழ்வா தாரம் தேடி லட்சக்கணக்கானவர்கள் நகரப் புறங்களில் வாழ்ந்து வரு கின்றனர். வீட்டு வேலை செய்ப வர்களாக கடை  சிப்பந்திகளாக பணி புரியும் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசி யமாகும்.

10 பெருந்தோட்ட மலையக மக்கள் போதிய மருத்துவ வசதி இல்லாது வாழ்ந்து வருகின்றனர். இதனால் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அரசு விரைந்து கவனம் செலுத்த வேண்டும்.

11   -200 வருடங்களாக இலங்கையில் வாழும் மலையக மக்கள் தங்களை மலையக தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரு கின்றனர். தாங்கள் ஒரு தனி தேசிய இனமாக இருப்பதன் மூலம் தங்க ளுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெற முடியும் என்று நம்புகின்றனர். இவர்களின் இக்கோரிக்கை நியாயமானதும் அவசியமானதும் ஆகும். இன்றைய நிலையில் தேசிய அடையாளம் மிகவும் அவசியமான ஒன்று என அரசியல் ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு கடந்த 200 வருடங்க ளுக்கு முன்னர் இலங்கை மலைய கத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் அதனை நினைவு கூர்ந்து எதிர்கால எழுச்சி பயணத்துக்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, குடியுரிமை இழப்பு, பலவந்த மாக நாடுகடத்தும் 1964-ஆம் ஆண்டு உடன்படிக்கை, 1971 உள் நாட்டு கிளர்ச்சி, 1972-ல் பெருந் தோட்ட தேசிய மயம், உணவுப் பஞ்சம், 1956, 1958, 1977, 1981, 1983 ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட இன வன்முறை போன்ற விரும்பத்தகாத பல்வேறு நிகழ்வுகள் மலையக மக்களின் தனி தேசிய இன உணர்வை அதிக அளவில் எழுச்சி பெறச் செய்துள்ளன. தலை நிமிர்ந்து நிற்கும் உரிமையும் தகுதியும் மலையக மக்களுக்கு நிச்சயம் உண்டு. கடந்த காலங்களில் முல்லோயா கோவிந்தன் தொடங்கி பல போராளிகளை உரிமைக்காக பலி கொடுத்த வரலாற்றை உடையவர்கள் மலையக மக்கள். உரிமைகள் உள்ள வாழ்வுக்காக காத்திருக்கிறார்கள். கதவுகள் திறக்கப்பட வேண்டும். விடியல் விரைந்து வர வேண்டும்.

கட்டுரையாளர் : முன்னாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்