தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த வன உரிமைச்சட்டம் பத்தாண்டு காலமாக வழக்கிலே இழுத்தடிக்கப்பட்டது. அதன் பின்னர் மலைவாழ் மக்களின் மனுக்களை முழுமையாக பரிசீலிக்காமல் தள்ளுபடி செய்வதும், கிடப்பில் போடுவதும் என்பது
தான் தொடர்கிறது.
இருப்பினும் கடந்த ஆண்டில் மட்டும் 4,868 பட்டாக்கள் வழங்கப்பட்டதாக சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறை அமைச்சர் அறிவித்தது ஓரளவு மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றும் திருப்பத்தூர் ஜவ்வாது மலை, திருமூர்த்தி மலை, கொல்லிமலை, கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை, பச்ச மலை, கன்னியாகுமரி மோதிர மலை போன்ற மலைப்பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன.
நிலம்
வன உரிமைச் சான்று ஒரு புறமிருக்க சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இரு ளர், காட்டுநாயக்கன், பணியர், எரவலர், மலமலசார், ஊராளி, மலைக்குறவன், வேட்டைக்காரன் போன்ற பழங்குடியின மக்களில் 90 சதமானத்திற்கும் மேலான வர்கள் நிலமற்றவர்களே ஆவர்.
நிலமற்றவர்களுக்கு 2007 - 2008 ஆம் ஆண்டுகளில் தலா 2 ஏக்கர் நிலம் எடுத்து அவர்களுக்கு “நிலப்பட்டா” வழங்கப்படும் என்ற திட்டம் வரவேற்பு பெற்றாலும் அவை பழங்குடி மக்களின் கதவுகளை தட்டவில்லை. பழங்குடி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இன்றைக்கும் தினக் கூலிகளாகவே பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு போன்ற இடங்களில் இருளர் பழங்குடி மக்களுக்கு அவர்களின் அனுபவ நிலத்திற்கு 50 ஆண்டு காலமாக நிலப் பட்டா வேண்டி போராடிக் கொண்டே இருக்கவேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசு நிலமற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்கிட முன்வர வேண்டும்.
இனச்சான்றிதழ்
பழங்குடியின பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இனச்சான்றுபெற முடியாமல் தவிக்கும் அவலம் நீடிக்கிறது. இதற்காகவே, வட்டாட்சியர் அலுவலகம் முன்னே தேசிய கொடி கம்பத்தில் தூக்கி லிட்டு இறந்து போன திருத்தணி சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக தன் பிள்ளைக்கு இனச்சான்று கோரி மனமுடைந்து வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையில் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டதால் பிஞ்சு உள்ளம் மனமுறிந்து தற்கொலை செய்தது.
உச்சநீதிமன்றங்களும், உயர்நீதி மன்றமும் வழங்கிய தீர்ப்புகளின் படி பெற்றோர்களுக்கு இனச்சான்றிதழ் இருப்பின் பெற்ற பிள்ளைகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்திட தமிழக அரசு பிறப்பித்த ஆணையையே அமல்படுத்திட மறுத்திடும் வருவாய் கோட்டாட்சியர்கள், சாராட்சி யர்கள் தான் ஏக அரசியல் சாசன அதிகாரம் பெற்றவர்களா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரே மாவட்டமாக இருந்த மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பிரிந்த காலத்திலிருந்து திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் மட்டும் மலைவேடன் இனச்சான்று வழங்கிட திட்டமிட்டு மறுத்துவரும் அதிகாரிகள் அதே மாவட்டத்தில் பழனி வருவாய் கோட்டத்தில் மலைவேடன் இனச்சான்று வழங்கி வருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் மேட்டூர் பகுதி கொண்டா ரெட்டிஸ் மக்களுக்கு இனச்சான்றிதழ் நபர்களுக்கு வழங்கிட உத்தரவிட்டதை வருவாய்த்துறை நிர்வாகம் அமுல்படுத்துவதற்கு பதிலாக உயர் நீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதித்து, உச்சநீதிமன்றத்திற்கு சேலம் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மேட்டூர் சார் ஆட்சியர் வழக்கை அப்பீல் செய்தி ருக்கிறார். மானுடவியல் துறை, பழங்குடி யினர் ஆராய்ச்சி மைய இயக்குனர், இவர்களெல்லாம் உறுதி செய்தும் சான்றிதழ் வழங்கிட மறுப்பது என்ன நீதி?
அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே 1997 ஆம் வருடம் வரையில் பழங்குடி யினர் பட்டியலில் இருந்த பிழையன், வேட்டைக்காரன் என்ற பழங்குடிகளை திடீரென்று பழங்குடிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தனர். மீண்டும் இவர்களை பழங்குடி பட்டியலில் இணைத்திட சட்ட மன்றத்தில் 2011 பேசி பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மீண்டும் ஆய்வு செய்து இவர்கள் பழங்குடியினர் தான் என்று ஒப்புதல் அளித்தும் பட்டியலில் இணைத்திட 27 வருடங்கள் கடத்திவிட்டனர்.
மேலும் கடந்த இரண்டு வருட கால மாக ஆன்லைன் மூலமாக இனச்சான்றி தழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆன்லைனில் பழங்குடி இன மக்கள் விண்ணப்பிப்பதில் பெரும் சிரமம் உண்டு என்பதால் நேரடி மனு பெறும் முறையையே வலியுறுத்தி வரு கிறோம். தமிழ்நாட்டில் பல நூற்றுக் கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகையை (ஸ்காலர்ஷிப்) பெறுவதற்குக் கூட விண்ணப்பித்திட முடி யாமல் ஏற்கனவே வழங்கிய அட்டை வடிவிலான இனச் சான்றிதழ் அரசின் சிஸ்டத்தில் ஏற்றிட முடியாமல் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்ட காட்டு நாயக்கன் இன மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
பின்னடைவு காலிப்பணியிடங்கள்
தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் கடந்த 10 ஆண்டு காலமாக நிரப்பப்படாமலே, கூடுதல் பொறுப்பு என்று அப்படியே அப்பணியிடங்களை கணக்கில் வைத்து விட்டனர். அனைத்து துறைகளிலும் சுமார் 6000க்கும் மேற்பட்ட பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் துணை திட்டங்களை அமல்படுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது வரவேற்கத் தக்கதாகும். இவ்வாண்டின் 2024/2025 மானிய கோரிக்கையில் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்திற்கு 1736.40 கோடி அதாவது 1.17 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1.42 சதமான மக்கள் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
வீடற்ற பழங்குடிகள்
திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களில் சரி பாதி பேர்களுக்கு மேல் ஓலைக் கூரை வைத்தோ அல்லது தார்ப்பாய் (படுதா) போர்த்தியோ நூற்றுக்கணக்கான இருளர் இன பழங்குடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சொந்தமாக வீடோ, வீட்டுமனையோ அற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுபழங்குடி மக்களுக்கு நிலம் கையகப்படுத்தி வீட்டு மனை பட்டா வழங்கி, 10 லட்சம் ரூபாயில் தரமான வீடுகளை கட்டித்தர முன் வர வேண்டும். குடிசை வீடுகளற்ற தமிழ்நாடாக - வீடற்ற பழங்குடி மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.
பழங்குடியினத்தவர்களின் வாழ்க்கை யில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டி ஜூலை 2 தேதியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து பழங்குடி இன மக்களும் பங்கேற்று நமது கோரிக்கையை வெற்றி பெறச் செய்வீர்!
-பி.டில்லிபாபுமாநிலத்தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்