articles

img

சந்தானம் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்தல் பத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் -எஸ்.என்.சாஹூ

‘நான் காந்தியின் தேசத்திலிருந்து வந்திருக்கி றேன்’ என்று கூறுகிறவர்கள், 1931 செப்டம்பர் 17 அன்று தேர்தலுக்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்வது குறித்து காந்தி என்ன சொன்னார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். காந்தி, இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு வேட்பாளர் 60 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்வது என்பது அநியாயம் என்று கூறினார். லண்ட னில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின்போது மகாத்மா காந்தி இவ்வாறு தெரிவித்திருந்தார். 

மகாத்மாகாந்தியின் இந்தக் கூற்றுகள் இப்போது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் மோடி அரசாங்கம் 2017இல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியபின்னர், பாஜக 52 ஆயிரம் கோடி ரூபாய்களும், காங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகள் 952 கோடி ரூபாய்களும் பெற்றிருக்கின்றன. மகாத்மா காந்தி மேலே கூறியவாறு கூறி 92 ஆண்டு களுக்குப் பின்னர், தேர்தலை மேலாண்மை செய்வ தற்காக மோடி அரசாங்கத்தின் கீழ் பாஜக இவ்வாறு அதிர்ச்சியூட்டும் விதத்தில் பணத்தை வாரி வீசிக்கொண்டிருக்கிறது.

ஊழலைத் தடுக்க  அமைக்கப்பட்ட குழு

பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேருவையும், இந்திரா காந்தியையும் விமர்சித்ததைப் போல் லால் பகதூர் சாஸ்திரி குறித்து ஒருவார்த்தைகூட உதிர்த்திட வில்லை. லால் பகதூர் சாஸ்திரி உள்துறை அமைச்ச ராக இருந்த சமயத்தில், இந்தியாவில் ஊழல் அதிக ரித்திருப்பதைக் கண்ணுற்ற அவர், அதனைத் தடுப்ப தற்குத் தேவையான பரிந்துரைகளைச் செய்வதற்காக சந்தானம் என்பவர் தலைமையில் குழு ஒன்றை நியமித்தார். அந்தக்குழுதான் நாடு சுதந்திரம் அடை ந்தபின் அதிகரித்துவரும் ஊழல் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட முதல் குழுவாகும். 

இந்தக்குழு இதுகுறித்து ஆய்வு செய்து, “அனை த்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிக்கு வருகின்ற அனைத்து வரவினங்கள் குறித்தும் செலவினங்கள் குறித்தும் முறையாகக் கணக்குகள் நிர்வகித்திட வேண்டும்” என்றும், “தாங்கள் தனிநபர்களிடமி ருந்தும் பெறும் வரவுகள் குறித்து விவரங்களை அளித்திட வேண்டும்” என்றும் “அவற்றை ஒவ்வோராண்டும் தணிக்கை செய்து அறிக்கை வெளி யிட வேண்டும்” என்றும் தெள்ளத்தெளிவாகப் பரிந்து ரைத்திருந்தது. உச்சநீதிமன்றத்தால் தேர்தல்  பத்திரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டி ருக்கும் பின்னணியில் இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அட்டர்னி ஜெனரலின்  வினோத நிலைப்பாடு

அரசியல் கட்சிகள் பெறும் நிதியின் ஆதாரம் மற்றும் அளவை அறிய குடிமக்களுக்கு அடிப்படை உரிமை இல்லை என்று இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் வினோதமான நிலைப்பாட்டை எடுத் துள்ளார். சந்தானம் குழுவோ, அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நிதிகளின் விவரங்களை கட்டாயம் வெளிப்படுத்திட வேண்டும் என்றும் அதற்காக ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பரிந்து ரைத்திருந்தது. சந்தானம் குழு மேலும் கூறியிருந்த தாவது: “இதனை எந்தக் கட்சியும் ஆட்சேபிக்கும் என்று நாங்கள் பார்க்கவில்லை. எந்த அரசியல் கட்சியும் தாமாகவே முன்வந்து இதனை ஒப்புக் கொண்டு நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதால், இவ்வாறு கணக்குகள் பராம ரிக்கப்பட வேண்டும் என்றும், அதனை வெளியிட வேண்டியது அவசியம் என்றும் கட்டாயப்படுத்தி எளிய சட்டம் கொண்டுவருவதென்பது அவசியமாக இருக்கலாம்.”

இவ்வாறு சந்தானம் குழு, 1960களின் முற்பகுதி யிலேயே ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாங்கள் பெறும் பணம் தொடர்பான கணக்குகளை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்றும் அதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியுள்ள அதே சமயத்தில், மோடி அரசாங்கமோ எவ்வளவு பெற்றோம் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தாது மூடிமறைத்திடும் தேர்தல் பத்திரம் பெறும் முறையை சட்டத்தின்மூலம் பாதுகாத்து வருகிறது.

சந்தானம் குழுவின் அறிக்கையை மேலும் சற்றே ஆழமான ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருந்திடும்.  “அரசியல் கட்சிகள், குறிப்பாக தேர்தல் நேரத்தில் நிதி சேகரிக்கும் முறையால்தான், உயர் அரசியல் மட்டங்களில் ஊழல் அதிகமாக உள்ளது என்று பொதுவாகவே மக்கள் மத்தியில் கருத்து நிலவு கிறது,” என்று அது சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும், “அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் செலவு செய்யாமல் வெற்றி பெற முடியாது” என்று வெளிப்ப டையாகவே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், “இந்த நிதிகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் ஆதரவா ளர்கள் அல்லது அனுதாபிகளிடமிருந்து வெளிப் படையாக வர வேண்டும்” என்று அது சந்தே கத்திற்கு இடமின்றி வலியுறுத்தியது.

அரசியல் கட்சிகள் தாங்கள் தனிநபர்களிடமிருந்து பெறும் அனைத்து நிதிக்கும் கணக்குகள் அளிப்பது கட்டாயம் என்றும், அது மக்களுக்குத் தெரிவித்தி டும் விதத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும்  சந்தானம் குழு வலியுறுத்தியிருப்பதை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்களும் வாதிட்டிருக்கிறார்கள்.  

கார்ப்பரேட் நிறுவனங்கள்  நிதி வழங்கிட தடை...

சந்தானம் குழு, “இந்தியாவில் உள்ள நிலைக ளின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைகள் மூல மாக அரசியலில் பங்கேற்க அனுமதித்திடக் கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம்,” என்று கூறி, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதிஅளிப்பதைத் தடை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.   

“1960ஆம் ஆண்டின் கம்பெனிகள் (திருத்தச்) சட்டம் தொடர்பாக நீண்ட நெடிய விவாதத்திற்குப் பின், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நன்கொடைகள் அளித்திடத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், இது போது மானது என்று நாங்கள் கருதவில்லை. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்திடும் அனைத்துவிதமான நன்கொடைகளுக்கும் முழுமை யாகத் தடை விதிப்பதைத் தவிர வேறெதுவும் செய்யக் கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம்” என்று அது கடுமையான நிலை எடுத்திருந்தது.

மக்கள் நிதி அளிக்கப் பரிந்துரை

சந்தானம் குழு, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்ப ரேட்டுகள் நிதிஅளிப்பதற்கு மாறாக மக்கள் நிதி அளிப்பதற்குப் பரிந்துரைத்திருந்ததை இங்கே  சுட்டிக்காட்டுவது நலம் பயக்கும். மக்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதிஅளித்தால், தேர்தல் செல வினங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் ஒழித்துக் கட்டப்படும் என்று அது பார்த்தது.   

“மூன்றில் ஒரு குடும்பம் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் செலுத்தினால்கூட, மொத்த வருடாந்திர பங்களிப்பு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் அனைத்து நியாயமான நோக்கங்களுக்கும் தேவையானதை விட அதிகமாக இருக்கும்,” என்று அது கூறியிருக்கிறது.  உண்மையில் இது ஒரு சிறந்த சிந்தனைதான். 

ஊழலின் ஊற்று...
விரிவான அடிப்படையில் சிறிய அளவில் வசூல் செய்வதற்கு அரசியல் கட்சிகள் முகம் சுழிப்பதை யும் அவ்வாறு வசூலித்திட அவை திறனற்றிருப்பதை யும் குறிப்பிட்டுள்ள குழு, பெரிய நன்கொடைகள் மூலம் குறுக்கு வழிகளை நாடும் விருப்பத்தை சித்தரித்து, இதுதான் ஊழலுக்குப் பெரிய அள விலான ஊற்று என்றும் சித்தரித்திருக்கிறது.

பாஜக, மிகப்பெரிய அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைச் சேகரித்துக்கொண்டிருக்கும் பின்னணியில்,  அதன் காரணமாக கணிசமான அளவிற்கு ஊழலும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள நிலையில், சந்தானம் குழு இவ்வாறு மிகவும் ஆழமான முறையில் ஊழலின் ஊற்றை ஆய்வு செய்திருக்கிறது.

சந்தானம் குழுவின் இத்தகைய பொருள் பொதிந்த கூற்றுகளை மனதில் கொண்டு, தேர்தல் பத்திரங்கள் சட்டரீதியாகவும், அரசமைப்புச்சட்ட ரீதியாகவும் செல்லுபடியாகுமா என்பதை ஆய்வு செய்திட வேண்டும்.

நன்றி: தி ஒயர் இணைய இதழ், 
கட்டுரையாளர்:  குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு, சிறப்புக்  கடமை அலுவலராகப் (Officer on Special Duty) பணியாற்றியவர்.  
தமிழில் : ச.வீரமணி