-கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
►சமூகத்தில் சரிபாதியாக இருக்கிற பெண்கள் மீது அடுக்கடுக்கான தாக்கு தல்களும் பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சொல்லப்போனால், பெண் அடிமைத் தனத்தை உயர்த்திப் பிடிக்கிற மனுவாத ஆர் எஸ் எஸ் - பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் பெருமளவிற்கு அதிகரித்துள்ளன. இது தொடர்பான புள்ளி விவரங்கள் நமக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கின்படி பெண்கள் மீதான வன்கொடுமைகள் 46 சதவீதம்அதிகரித்துள்ளது. அதில் 35 சதவீத வன்கொடுமைகள் குடும்ப வன்முறைகள். கணவர் அல்லது உறவினர்களால் நடத்தப்படுகிற குரூரமான கொடூரமான தாக்குதல்கள். தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் 2019 விவரங்களின்படி நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 10 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 87 வல்லுறவு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு 16 நிமிடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் ஏதேனும் ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியிலே அக்கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் துவங்கி சாதாரண உறுப்பினர்கள் வரையிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களை - வன்முறைகளை - பாலியல் வன்கொடுமைகளை பல பகுதிகளில் ஏவியிருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகளையும் கூட தினந்தோறும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அதற்கு ஒரு உதாரணம் தான், உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் என்னும் இடத்தில் 17 வயது பட்டியலினச் சிறுமியை அப்பகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம். அதே போல உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண், கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை. வரதட்சணையின் பெயரால்; இன்னும் வேறு பல காரணங்களின் பெயரால் குடும்பங்களுக்குள் பெண்கள் மீது, குழந்தைகள் மீதும் கூட வன்முறை ஏவப்படுவது சமீப காலத்தில் அதிகரித்து இருக்கிறது.
குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் நமது சமூகத்தில் குடும்ப வன்முறை கடுமையாக அதிகரித்ததாக கவலை தருகின்ற விபரங்கள் வெளியாகின. சமீப காலத்தில் குடும்ப வன்முறை 53 சதவீதம் அளவிற்கு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற பதிவு ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. குறிப்பாக 18 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்கள் உடல் ரீதியாக பாலியல் ரீதியாக அல்லது மனரீதியாக தனது கணவனிடம் இருந்தும் அல்லது அவரது உறவினர்களிட மிருந்தோ வன்கொடுமையை எதிர்கொள்கிறார்கள். 32 சதவீதம் பெண்கள் அத்தகைய கொடுமையை அனுபவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 28% உடல் ரீதியான வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். உலக அளவில் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா என்ற அளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது. “பெண்கள் வாழ்வதற்கு லாயக்கட்ட நாடாக” இந்தியா அடையாளப்படுத்தப்பட்டிருப்பது மோடி ஆட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய வெட்கக்கேடு ஆகும். நாடு தழுவிய அளவில் இத்தகைய வன்முறை அதிகரித்துள்ளது என்ற போதிலும் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது பெரும் கவலையும் வேதனையும் அளிக்கிறது. தமிழகம் அதிக அளவு குடும்ப வன்முறை நடக்கிற மாநிலம் என்று பதிவாகி இருப்பதை தமிழக மக்கள் சமூகம் கவலையோடு பார்க்க வேண்டும். சமூகத்தின் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண்கள் என்றால்; பெண் குழந்தைகள் என்றால் ஏதேனும் ஒரு வடிவத்தில் ஆணாதிக்க வன்முறைக்கு இலக்கு ஆகக்கூடிய நிலைமை நீடிக்கிறது. உயர் அதிகாரிகள் கூட பாதிக்கப்படுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் காவல்துறையில் பணியாற்றக்கூடிய மாவட்ட கண்காணிப்பாளர் பதவி அந்தஸ்தில் இருக்கக்கூடிய பெண்ணாக இருந்தாலும், அவருக்கு மேல இருக்கிற ஆண் உயர் அதிகாரியின் பாலியல் வன்முறைக்கு இலக்காகும் சம்பவங்களை நாம் பார்க்கிறோம். பள்ளிக் குழந்தைகள் முதல் ஆசிரியைகள் வரை பெண்களின் மீதான இந்த வன்முறை பற்றிப் பரவிக் கொண்டிருக்கிறது. வீடுகள் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று நாம் கருதுகிறோம். ஆனால் தொடர்ச்சியாக வெளியாகிற பல்வேறு சம்பவங்களைப் பார்த்தால், வீடுகளும் கூட பெண்களுக்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இல்லை. உறவினராக அறிமுகமானவர்கள்; சில இடங்களில் பெற்ற தந்தையே கூட பெண் குழந்தைகளை பாலியல் சீண்டலுக்கு, வன்முறைக்கு இலக்காக்குவதைப் பார்க்கிறோம். அதேபோல இன்றைக்கு நவீன இணையதள உலகில் பெண்களுக்கு எதிரான; பெண் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள், வலைதள பாலியல் வன் குற்றங்கள், எண்ணிலடங்காத அளவிற்கு வளர்ந்து நிற்கின்றன. இணையதள உலகை பெண்கள் சுதந்திரமாக அணுக முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இணையதள பாலியல் குற்றங்களால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. தினந்தோறும் அத்தகைய செய்திகள் வருகின்றன. அதேபோல உள்ளூர் மட்டத்தில் குடும்பங்களின் வறுமை நிலையால் தங்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக உடலை விற்றுப் பிழைக்க வேண்டிய அவலமான நிலைக்கு தள்ளப்படுகிற சகோதரிகளின் துயரத்தையும் கூட வியாபார பொருளாக மாற்றக்கூடிய பாலியல் வணிகம் என்பது சர்வதேச வலைப்பின்னல்களை கொண்டதாக மாறி இருக்கிறது. இதற்கு உள்ளூர் அளவிலும் சர்வதேச அளவிலும் போதைப் பொருள் கடத்தல் வணிகம் பெரும் உந்து சக்தியாக மாறி இருக்கிறது. பாலியல் வணிகத்திற்காக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல் என்பது தீவிரமடைந்துள்ளது.
► இது ஒரு புறம் இருக்க ஏன் இத்தகைய தாக்குதல்கள், கொடுமைகளுக்கு பெண்கள்தொடர்ந்து உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை வரலாற்று ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. மனித குலத்தின் வரலாறு பல கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது. குடும்பம், வாரிசுகள் சொத்துரிமை உள்ளிட்ட நீண்ட நெடிய வரலாற்றுக் கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது. அதில் ஆதி காலத்தில் ஒரு வரன்முறையற்ற பாலியல் உறவு என்கிற சூழல் இருந்தது. அந்த சமூகத்தில் வாரிசுகள் தங்களை தாயின் மூலமாகத்தான் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய தாய் வழிச் சமூகமாக அது இருந்தது. தாய் தான் அன்றைக்கு தலைமை தாங்கக்கூடியவராக இருந்தார். தாய் வழிச் சமூகத்தின் மிச்ச சொச்சம் தான் இன்றைக்கும் நாம் பார்க்கிற தாய்மாமன் உரிமை என்கிற விஷயங்கள் எல்லாம். தாய் வழிச் சமூகம் மாறிய பிறகு, உடமைச் சமூகம் ஒன்று உருவான பிறகு, ஆண்டான் - அடிமை சமூக அமைப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த பிறகு; குடும்ப அமைப்பு முறை எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி மாமேதை ஏங்கெல்ஸ் தனது, “குடும்பம், தனிச்சொத்து, அரசு, ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலில் விளக்குகிறார். ஆதிப்பொதுவுடைமை சமூகத்தின் வாழ்நிலையிலிருந்து தொடங்கி, வர்க்க சமூகங்களாக அவை வளர்ந்த அம்சங்களையும், சொத்துடைமையைப் பாதுகாக்க குடும்ப அமைப்பு எவ்வாறு வரைமுறைப்படுத்தப்பப்பட்டது என்றும், அதற்காக பெண்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் அவர் பேசுகிறார். வரலாற்றின் போக்கில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகள் என்பதில் துவங்கி பலதார மணம் என்பதாக மாறி அதற்குப் பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையை நோக்கி நகர்ந்தது. அப்போது அது மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகமாக முழுமையாக மாறியது.
இந்த ஆணாதிக்க முறையை நிலை நிறுத்துவதற்கான விதிகள், வரையறைகள் எல்லாம் பின்னால் உருவாக்கப்பட்டன. ஆணாதிக்கத்தின் முக்கிய அம்சமாக தனி உடமை என்பது உருவானது. பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. படிப்படியாக பெண்களுக்கு இருந்த எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்படி பெண்களின் உரிமையை முற்றாக பறிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சூத்திரங்கள் தான் மனு ஸ்மிருதியின் சுலோகங்கள் உட்பட பல மதங்களில் நிறுவப்பட்ட பெண்ணடிமைத்தனக் கருத்துக்கள். மனு ஸ்மிருதியின் சுலோகம் 9.3 இல், ‘’குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள் எனக் குறிப்பிடுகிறது.” அதேபோல மனு, பெண்ணுக்கு சொத்துரிமை கிடையாது; விவாகரத்து உரிமை கிடையாது; கல்வி உரிமை கிடையாது என்று அனைத்தையும் மறுத்துள்ளதை நாம் காண முடியும். மனு ஸ்மிருதி உள்ளிட்ட இந்துத்துவா கருத்தியலின் அடிப்படையில்தான் சில காலம் முன்பு, வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி இழிவுபடுத்தி காஞ்சி சங்கராச்சாரியார் பெண்ணடிமைத்தன கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்துத்துவா கருத்தியல் மட்டுமல்ல, ஆண்டான் அடிமை மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனையின்மீது கட்டப்பட்ட அனைத்து மதங்களுமே பெண்ணை அடிமையாகவே வைத்திருக்க முயல்கின்றன. இப்படி அடுத்தடுத்த கட்டத்தை அடைந்த ஆணாதிக்க சமூகத்தினுடைய குணம் எந்த அளவிற்கு சென்று விட்டது என்றால், ஆணினுடைய மரபணுவிலேயே ஆணாதிக்க வெறி என்பது குடி கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக ஆண் வர்க்கத்தின் ரத்தத்திலேயே பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்முறை என்கிற வெறி உணர்வு ஏற்றப்பட்டு, அது தீவிரமாக மாறி உள்ளது.
► நவீன சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் ஏற்பட்டுள்ள பின்னணியில் சில நல்ல வரவேற்கத்தக்க முன்னேற்றங்களும் ஏற்பட்டன என்பதை மறுப்பதற்கு இல்லை. உதாரணத்திற்கு கணவன் இறந்து விட்டால் மனைவியும் அந்தச் சிதையிலேயே விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உடன்கட்டை ஏறுதல் (சதி) பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. அதற்காக வரலாற்றில் ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. அதேபோல ஆணாதிக்க சமூகத்தில் குழந்தைத் திருமணம் என்கிற கொடிய பழக்கமும் இருந்து வந்தது. அதுவும் கூட நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்றே கூறலாம். விதிவிலக்காக ஆங்காங்கே சில திருமணங்கள் நடக்கக்கூடும். அவையும் தடுக்கப்பட வேண்டும். அதேபோல முன்பு மிகத் தீவிரமாக இருந்த வரதட்சணை சார்ந்த கொடுமைகளும் பலவிதமான ஜனநாயக போராட்டங்கள் மற்றும் சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டதன் விளைவாக தணிந்திருக்கின்றது என்று சொல்ல முடியும். அதுமட்டுமல்ல, நாகரிக வளர்ச்சி, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் போக்கு பெண் கல்விக்கான போராட்டங்களும் பெரும் வெற்றியைப் பெற்று புதிய புதிய தளங்களில் பெண்கள் சாதனை படைத்தவர்களாக மிளிர்வதையும் பார்க்கிறோம். சமூகத் தளைகள் அறுக்கப்பட்டு பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் மிகப்பெரிய சாதனைகளை எட்டுவார்கள் என்பது திண்ணம். ஆனால் அதற்கான நீண்ட நெடிய போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
அத்தகைய தொடர் போராட்டங்களின் வீச்சை இன்னும் நாம் தொடர வேண்டி இருக்கிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற ஆணாதிக்க வெறியை, அதன் இடைவிடாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களை சமூகத்தில் ஒரு பேரியக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. பள்ளிப் பருவம் முதலே குழந்தைகளுக்கு பாலின சமத்துவத்தை கற்றுக் கொடுப்பது; ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை மதிக்க கற்றுக் கொடுப்பது என்பதில் துவங்கி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தக்கூடிய, வற்புறுத்தக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகிறது . ஆணும் பெண்ணும் சமமான உரிமைகள் கொண்ட குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது என்பதை தொடர்ச்சியாக நாம் சமூகத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய பணி அவசியமாகிறது. அத்தகைய விழிப்புணர்வை; பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒரு சமூக இயக்கமாக- ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் சென்னையில் இன்றைய தினம் (ஜூலை 19) “குடும்ப வன்முறை தடுப்போம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் சிறப்பு மாநாட்டினை நடத்துகிறது.