தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களுக்காக அணி திரள்வோம்!
41 வயதான ரமேஷ் குமார், பகலில் ஒரு ஆன்லைன் உணவு டெலிவரி நபராகவும், மாலையில் அவர் அருகிலுள்ள பால் தொழிற் சாலையில் பாதுகாப்பு காவலராகவும் வேலை செய்து வருகிறார். “நான் வழக்கமாக ஒரு நாளைக்கு 13-14 மணி நேரம் வேலை செய்கிறேன். நான் நோய் வாய்ப்பட்டால், என் எந்த முதலாளிகளிடமிருந்தும் எனக்கு எதுவும் கிடைக்காது. விபத்து ஏற்பட்டு இறந்து போனால் என் முதலாளிகள் எனக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் என்னை தங்கள் பணி யாளராகவே அங்கீகரிக்கவில்லை. ஒன்றிய மாநில அரசுகளும் எங்களை தொழிலாளர் என்று அங்கீ கரிக்கவில்லை. இது போன்ற ஆன்லைன் ஆப் மூலமாக ஏராளமான மக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த வேலை முறைகளை முறைசாரா தன்மையா கக் கூட அரசுகள் கருதவில்லை. குறிப்பாக வேலை நேரம் என்பதே இல்லை என்றாகி விட்டது. 24 மணி நேர மும் உழைக்க வேண்டியதாக மாறியுள்ளது,” என்கி றார் அவர். இது ரமேஷ் குமார் மட்டுமல்ல, கோடிக்கணக் கான தொழிலாளர்களின் நிலைமை. அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் எளிதாக வர்த்தகம் செய்தல், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அம லாக்குவதன் காரணமாக நாட்டின் செல்வத்தை உரு வாக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகள் மற்றும் சலுகைகள் புதிய தொழிலா ளர் தொகுப்புச் சட்டங்களால் பறிக்கப்பட்டு வரு கிறது.
வரலாற்றுப் பார்வை
1349-இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட தொழி லாளர் சட்டம் வேலை நேரத்தை அதிகரித்ததுடன் கூலியையும் குறைத்தது. அரசு நிர்ணயித்த கூலி தான் அதிகபட்ச கூலி என்று அறிவித்தது. அதற்கு மேல் கூலி கேட்பதும் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அச்சட்டம் கூறியது. சட்டத்தை மீறினால் இரு தரப்பினருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படும். அதாவது அதிக சம்பளம் தருவோருக்கு பத்து நாள் சிறைத்தண்டனை, பெறுவோருக்கு 21 நாள் சிறைத் தண்டனை என்று அச்சட்டம் கூறியது. சட்டப்படியான கூலிக்கு தான் வேலை செய்ய வேண்டும், மறுத்தால் கசையடி என்று சட்டம் கடுமையாக்கப்பட்டது. இத்தகைய சட்டங்களின் நீட்சிகளை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தித்தான் இந்தியாவில் பின்னாளில் குறைந்தபட்ச கூலிச் சட்டம் இயற்றப்பட்டது. அதை இன்றைக்கும் முதலாளிகள் அமலாக்க மறுக்கின்றனர். முதல் தொழிலாளர் சட்டம் 1349-இல் இங்கிலாந்தின் 3ஆவது எட்வர்டு காலத்தில் இயற்றப்பட்டது. 1350-களில் பிரான்சின் மன்னர் ஜான் பெயரால் வேலைநேரத்தை நீட்டிக்கும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1496-இல் 7ஆவது ஹென்றி யின் காலத்தில் மூன்று மணிநேர இடைவெளியுடன் மொத்தம் 15 மணிநேர வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. தொழிலாளர் இயக்கம் தோன்றிய பிறகு தான் வேலை நேரத்தை குறைக்கும் நிலைமை ஏற்பட்டது. 1848-இல் பிரான்சில் அனைத்து துறைகளுக்கும் 12 மணிநேர வேலைச்சட்டம் இயற்றப்பட்டது. வேலை நேரத்தை குறைக்கத் தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாகத்தான் வேலைநேரம் குறைக்கப்பட்டது. அதாவது 8 மணிநேர வேலை நேரத்தினை அடைவதற்கு 20ஆவது நூற்றாண்டு வரை தொழிலாளி வர்க்கம் போராட வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட தியாகம் நிறைந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள் நடத்திப் பெற்ற, 8 மணி நேர வேலை நேரத்தை எந்தவித சலன முமின்றி 12 மணிநேரமாக மாற்றி அமைத்து தொழி லாளி வர்க்கத்தை பின்னோக்கித் தள்ளப் பார்க்கின் றனர்.
மோடி அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்
2019-20 ஆம் ஆண்டில், தொழில் செய்வதை எளி தாக்குவதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துவது என்ற பெயரிலும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றம் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 29 தொழி லாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக ஒருங்கி ணைத்து அறிவித்தது. அவை - ஊதியத் தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு தொகுப்பு, தொழில் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு மற்றும் தொழில்துறை உறவுகள் தொகுப்புச் சட்டங்கள் ஆகும். மாநில அரசுகள் இதற்கான விதிகள் இயற்றிட வேண்டும் என அறிவித்தது. ஊதியம், கூடுதல் நேர வேலை, சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதையும் மிக முக்கியமான நோக்கமாக மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மத்திய தொழிற்சங்கங்களின் தொடர் கண்டனம் மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்த சட்டத் தொகுப்புகளை அமலாக்க முடியவில்லை. ஆனால் மறைமுகமாக மாநில அரசுகள் அம லாக்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. முதலா ளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலை யில் இந்திய முதலாளிகள் கூட்டமைப்பிலிருந்து ஆரம்பித்து, இந்திய பணியாளர் கூட்டமைப்பு, பிஃக்கி, நாஸ்காம் உள்ளிட்ட பல்வேறு முதலாளிகள் அமைப்புகள் இந்த தொழிலாளர் “சீர்திருத்த “ நடவடிக்கைகளை அமலாக்கிட ஒன்றிய - மாநில அரசுகளை நிர்பந்தித்து வருகின்றனர்.
மாநில அரசுகளின் அணுகுமுறை
அதற்கேற்ப தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் என பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வேலைநேர சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தம்) மசோதா 2023-ஐ அதில் ‘நெகிழ்வான வேலை நேரம்’ என்ற ஒரு பிரிவைச் செருகிய பின்னர் நிறைவேற்றி யது, இதன் மூலம் வாராந்திர 48 மணிநேரம் மாறாது, ஆனால் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் 12 ஆக நீட்டிக் கப்படலாம். பின்னர் தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சட்ட அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைந்தது 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்கள் அரசாங்க ஒப்புதல் இல்லாமல் பணிநீக்கம் செய்வதற்கான வரம்பை 100 இலிருந்து 300 தொழி லாளர்களாக அதிகரித்துள்ளன. இதேபோல், 19 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தொழிற் சாலைகள் சட்டத்தின் கீழ் வரம்பை இரட்டிப்பாக்கி யுள்ளன. 31 மாநிலங்களில் பெண்களுக்கான இரவு பணி நேர வேலை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 25 மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட கால வேலைக்கான (Fixed Term Employment) சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் அப்போ தைய பாஜக அரசு கர்நாடக தொழில்துறை தகராறு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டத்தை திருத்தி ஒரு அவசரச் சட்டத்தை வெளியிட்டது. அதன் மூலம் 12 மணி நேர வேலை நாளைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநி லமாக கர்நாடகா மாறியது. இதோடு கர்நாடக அரசு கர்நாடக கடைகள் மற்றும் நிறுவனங்கள் 1963 சட்டத்தை திருத்துவது என்ற பெயரில் மாநிலத்தில் தினமும் பத்து மணி நேர வேலை, வாரத்திற்கு 48 மணி நேர வேலை யை அமலாக்கியது; மிகைப்பணி நேரம் தற்போது மூன்று மாதத்திற்கு இருக்கும் 50 மணி நேரங்களி லிருந்து 144 மணி நேரமாக மாற்றியுள்ளது.
தொழிலாளர் எதிர்ப்பும் போராட்டமும்
தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் தொடர்பாக மத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த முதல் வேலைநிறுத்தம் நவம்பர் 21, 2020 அன்று நடை பெற்றது. இது மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத் துடன் இணைக்கப்பட்டது. அப்போதிருந்து, விவசாய சங்கங்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டு இயக்கங்கள் நடத்தி வருகின்றன. முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும் சிஐடியு பொதுச் செயலாளருமான தபன் சென், “அரசாங்கம் மிக வேகமாக சூழ்ச்சிகரமாக நகர்ந்து வருகிறது” என்றும், மாநில அரசுகள் தங்கள் தொழிலாளர் சட்டங்க ளில் மாற்றங்களைச் செய்ய ஊக்குவிக்கிறது என்றும் கூறினார். “தொழிலாளர் சட்டங்கள் வெறும் தொழி லாளர் சட்டங்கள் அல்ல. தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்படுகிறது” என்றார். முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளர் சட்டங்கள் அல்லது தொழில் தகராறு சட்டங்கள் என்பதெல்லாம் பொதுவாக தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் தான் அமையும். அதை தொழிலாளி வர்க்கம் தனது வர்க்கப் போராட்டத்தின் மூலம் தான் வென் றெடுக்க முடியும் என்பது தான் விதி மற்றும் அனுப வமும் கூட என்று மார்க்ஸ் கூறினார். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)-சார்ந்த பாரதிய மஸ்தூர் சங்கத்தைத் தவிர்த்து, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பத்து மத்திய தொழிற் சங்கங்களை உள்ளடக்கிய மத்திய தொழிற்சங்கங்க ளின் கூட்டு மேடை, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை அமல்படுத்துவதற்கு எதிராக வரும் ஜூலை 9 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதனை வெற்றிகரமாக்கிட வேண்டியது உழைக்கும் மக்களின் கடமையாகும்.