மக்கள் பிரச்சனைகள் - பிரச்சாரத்தின் கோரிக்கைகள்
கேள்வி : ஜுன் 11 - 20 மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கத்தில் விலைவாசி உயர்வை முதல் பிரச்சனையாக முன்னிறுத்தியுள்ளீர்கள். இது அவ்வளவு முக்கியமான அரசியல் பிரச்சனையா?
பதில்: நிச்சயமாக, விலைவாசி உயர்வு என்பது நாட்டில் உள்ள சகல தரப்பு மக்களையும் பாதிக்கும் மிக முக்கியமான ஒன்று. இது மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. அந்த அளவுக்கு மிக மிக முக்கியமான பிரச்சனையாகும். அதிலும், குறிப்பாக ஜிஎஸ்டி என்ற பெயரில் அபரிமிதமான வரியால் ஒன்றிய பாஜக அரசாங்கம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. பாஜக அரசாங்கத்தால், வரி போடாத பொருளே நாட்டில் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குறைந்தது 5 சதவீதமும் அதிகபட்சமாக 28 சதவீதமும் வரி விதித்துள்ளனர். இத்தகைய கடுமையான வரி விதிப்பால் விலைவாசி என்பது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பெட்ரோல்-டீசல் விலையும் தாறுமாறாக உயர்கிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு வகையிலும் பாதித்துள்ளது.
வேலையின்மையை எப்படி முக்கிய பிரச்சனையாக முன்வைக்கிறீர்கள்? அதன் தற்போதைய நிலை என்ன?
வேலையின்மை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் முதன்மையான பிரச்சனையாக தற்போது முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகக் குறைவான ஆட்கள் மூலம் மிக அதிகமான உற்பத்தியில் ஈடுபடுவது, உற்பத்தி திறனை மேம்படுத்துவது என்பதை மட்டுமே இன்றைய முதலாளித்துவம் யோசிக்கிறது. உழைக்கத் தயாராக இருக்கும் எல்லோருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற முறையில் சிந்திக்க வில்லை. அதிலும் தற்போது, செயற்கை நுண்ணறிவு என்ற புதிய தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதையும் முழுமையாகப் பயன்படுத்தி எப்படி ஆட்களைக் குறைக்க முடியும் என்கிற முறையில்தான் முதலாளித்துவம் முயற்சிக்கிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பல லட்சக் கணக்கானோர் தற்போது வேலையை இழந்து வருகின்றனர். புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மாறாக, வேலையில் இருப்பவர் களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டுள்ளது. இதனால், இளைஞர்கள் மத்தியில் ஒரு விரக்தி ஏற்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு தேவையில்லை; ஏதாவது ஒரு வேலை கிடைத்தால்போதும்; கிடைக்கும் வேலையில் சேர்ந்து எப்படியாவது பிழைத்தால் போதும்; கொடுக்கும் குறைவான சம்பளத்திற்கு உழைத்தால் போதும் என்ற மிக மோசமான மனநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது பலவிதமான சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக இஸ்லாமியர்களின் சொத்துக்களை முடக்குவது, வக்பு சட்டத் திருத்தம் கொண்டு வருவதால் என்ன ஆபத்து? அது இஸ்லாமியர் பிரச்சனை மட்டும் தானா?
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பின்மையை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள நாடு. இதற்கு நேர் எதிரான மதச்சார்பு கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி (பாஜக) ஆட்சி அதிகாரத்தில் இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய கேடு. மதச்சார்பு உள்ள கட்சி ஆட்சியில் இருப்பதால்தான் இதர மதத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல், வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது. மேலும், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட ரீதியாகவும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது அந்த கட்சி. இஸ்லாமிய - கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் என்பது பாஜக அரசின் மதவெறி கொள்கை சார்ந்தது மட்டுமல்ல, வெறுப்பு அரசியல் சார்ந்ததும்கூட. எனவே, இஸ்லாமியர்களின் பிரச்சனை மட்டுமல்ல இது. ஒட்டுமொத்த தேசத்தின் மதச்சார்பற்ற, மதச்சார்பின்மையை நேசிக்கக்கூடிய அனைத்துப் பகுதி மக்களின் பிரச்சனையாகவே இதைப் பார்க்க வேண்டும். பாஜகவின் தாக்குதலை, சொத்துக்கள் முடக்குவதை, வக்பு சட்டத் திருத்தத்தை அனுமதித்தால் நமது இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தையே தகர்த்து எறியக்கூடிய ஒன்றாக அமைந்துவிடும்.
கிராமப்புற வேலை உறுதித் திட்டம் l
கிராமப்புற வேலை உறுதித் திட்டம் இல்லை என்றால் நாடு என்னவாகும்? அதை மோடி அரசு புரிந்துகொள்ளவில்லையா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது கிராமப்புற மக்களுக்காக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய திட்டம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இந்தத் திட்டம் வருவதற்கு அடிப்படைக் காரணமே, இடதுசாரிகள்தான். அன்றைக்கு இடதுசாரிகளின் ஆதரவுடன்தான் ஒன்றியத்தில் ஒரு ஆட்சி நீடிக்க முடியும் என்ற ஒரு அரசியல் சூழல். இதைச் சரியாகப் பயன்படுத்திய இடதுசாரிகள், குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கினர். அதன் அடிப்படையில், கொண்டுவரப்பட்ட சட்டமும் திட்டமும் தான் இது. விவசாய நிலங்களின் பரப்பளவு கிராமப்புறங்களில் குறைந்துகொண்டு வரும் நிலையில், கிராமப்புற மக்களுக்கான ஒரு மாற்று வேலைவாய்ப்பு என்ற முறை யில் கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டத்திற்காக ஒன்றிய அரசாங்கம் கடந்த பட்ஜெட்டில் 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்தத் தொகை முழுவதையும் கிராம மக்கள் வங்கியில் சேமிக்கப் போவதில்லை. அன்றாடச் செலவுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதை ஒரு சுழலும் பொருளாதாரம் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரச் சுழற்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது கிராமப்புற வேலை உறுதித் திட்டம். நாட்டில் தற்போது, புலம் பெயர்ந்து செல்வது கிராமப் புறங்களில் குறைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணமே இந்த கிராமப்புற வேலை உறுதித்திட்ட மாகும். மேலும் ஏராளமான நீர்நிலைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. கிராமப்புற வேலை உறுதித் திட்டம் இல்லாமல் போயி ருந்தால், கிராமப்புறங்களில் ஏராளமான தற்கொலைகள் நடந்திருக்கும். புலம் பெயர்ந்து செல்லுதல் இன்னும் அதிகமாகியிருக்கும். கிராமப்புற வேலை உறுதித் திட்டம் வந்தபிறகு, கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. காரணம், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இந்த வேலையில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.
விவசாயம் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் l
மோடி ஆட்சியில் விவசாயத்தின் வீழ்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
விவசாயத்திற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் அளிக்காத ஒரு ஆட்சி என்றால் அது மோடி தலைமை யிலான பாஜக ஆட்சிதான். விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவது என்பதுதான் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கையாகும். 2020ஆம் ஆண்டு மக்களவையில் எந்தவிதமான விவாதமும் இல்லா மல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களின் நோக்கம் முழுக்க முழுக்க விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிப்பது, விவசாயத்தையே பறிப்பது, பறிக்கப் பட்ட நிலம் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதே ஆகும். வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு பல லட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம், எந்த மோடி வேளாண் விரோத, விவசாயிகள் விரோத சட்டத்தை கொண்டு வந்தாரோ, அதை அவரே திரும்பப்பெற வைத்த வரலாற்று நிகழ்வு இந்தியாவில் நடைபெற்றது. இவ்வாறாக, அரசு விவசாயத்தையே முழுமை யாகக் கவனிக்காமல் விடுவதன் மூலமாகவும், விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டே வருவதன் மூலமாகவும் விவசாயிகள் தங்களுக்கு இனி விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இது மிக ஆபத்தானது. விவசாயம் இல்லை என்றால் உணவு இல்லை. விவசாயிகள் இல்லை என்றால் இந்த நாட்டுக்கு எதிர்காலமே கிடையாது. l
தொழிலாளர் வர்க்கத்தின் முதன்மை எதிரி பாஜக அரசு என எப்படி வரையறுக்கிறீர்கள்? '
பாஜக அரசு என்றால் அது முழுக்க முழுக்க கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கம். கார்ப்பரேட்கள் பாஜக அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பின்புலத்தில் இருந்து அவர்கள்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற பல்வேறு சட்டங்களை ஒழித்துக்கட்டி நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் என்ற பெயரில் முழுக்க முழுக்க முத லாளிகளுக்கு ஆதரவான, முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில், தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் பற்றி கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஒட்டுமொத்த தொழிற்சங்களின் ஒற்றுமையால் அந்த சட்டங்கள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்குக் காரணம், ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பாகும். l
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றத்தாழ்வு குறித்த உங்கள் பார்வை என்ன?
இந்திய நாடு பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் உள்ளதாக விளம்பரம் செய்கிறார்கள். அதில் துளிக்கூட உண்மையில்லை. நான்காவது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்றாலும் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகியிருக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் பொருளாதாரம், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏற்றத்தாழ்வு என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. முதலாளிகளின் சொத்துக்களும் பணச் சேமிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற நிலையில் சமநிலையான வளர்ச்சியை எப்படி எட்ட முடியும்? நாடு முழுவதும் கற்பனைக்கு எட்டாத வகையில் மிக குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதே பெரிய கேள்விக்குறியாகும். எனவே, தொழிலாளர்களின் உரிமை குறித்த இந்த பிரச்சனையில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவது போன்ற பிரச்சனைகளில் அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் முக்கியப் பிரச்சனைகள் l திமுக அரசு உடனே கவனிக்க வேண்டிய கோரிக்கைகள் என்ன? 1. சாதிய வன்கொடுமை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய வன்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். 2.பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். 3.வேலை வாய்ப்பு சிக்கல்: நிரந்தரமான அரசுப் பணிகளுக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களை ஒழித்துக் கட்டுவது, ஓய்வு பெற்ற வர்களை விதிமுறைகளுக்கு மாறாக பணியில் அமர்த்திக்கொள்வது, குறைந்தபட்சமாக ஊதியம் வழங்குவது என்பது தவறான நடவடிக்கைகள் ஆகும். 4.பஞ்சமி நில விவகாரம்: பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த மக்களிடம் நிலங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் அணுகுமுறை l
தமிழ்நாட்டில் மிக அதிகப் போராட்டம் நடத்துவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு என்பதையும் திமுக அரசுக்கு கோரிக்கை - வற்புறுத்தல் என்பதையும் கட்சி எப்படி வேறுபடுத்துகிறது?
திமுக அரசாங்கத்தைப் பொறுத்தவரைக்கும் கடந்தநான்கு ஆண்டுகளில் சொன்னதையும் செய்திருக் கிறார்கள். சொல்லாததையும் செய்துள்ளார்கள். சொன்னதில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். எனவே, இருக்கும் பத்து மாத காலத்தில் கடந்த முறை தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை எவ்வளவு வேகமாக நிறைவேற்ற முடியுமோ அதற்கு முன்வர வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
இதற்கு பிறகும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஏதாவது இருந்தால் அது குறித்து மக்களிடம் தெளிவு படுத்த வேண்டும். காரணம், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இயல்பாகவே ஆளும் கட்சி என்றால் அதன் மீது அதிருப்தி கொண்டு ஒரு பிரிவு எப்போதும் இருக்கத்தான் செய்யும். முதலில் அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். அடுத்ததாக, திமுக அரசு நிச்சயமாக செய்யும் என்கிற எதிர்பார்ப்புடன் மற்றொரு பிரிவு இருக்கும். இந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஆளும் திமுக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லை, இல்லை, நாங்கள் ஏற்கனவே செய்தது அதிகமாக இருக்கிறது என்ற மனநிலைக்கு சென்று விட்டால் அதனால் சில பாதகமும் ஏற்படும்.
திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடு
திமுக அரசாங்கத்தைப் பொறுத்தவரைக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை என்பது கோரிக்கை மற்றும் வற்புறுத்தல் என்ற முறையிலானது. ஆனால், ஒன்றிய பாஜக அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும் அது முழுமையான எதிர்ப்பு என்ற நிலைப் பாடாகும். திமுக அரசாங்கம் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதை எதிர்ப்போம். ஆனால், மக்கள் நலனுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்போம். இதுவே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வேறுபாடாகும்.
2026 தேர்தலுக்கான தயாரிப்பு
இத்தகைய எதிர்பார்ப்புகளை நிச்சயமாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இதுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கும் அதில், திமுக அணி மீண்டும் வெற்றி பெறுவதற்கும், வலுவான அடிப்படையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கும் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நில பயன்பாட்டுக் கொள்கை l
தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு வருவதையும், அதே நேரத்தில் விவசாயிகளின் பாதுகாப்பையும் எப்படி சமநிலைப்படுத்துவது?
தமிழ்நாட்டிற்கு அந்நிய மூலதனம் வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், அந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளை கட்டுவதற்கு தேவையான நிலம் யாரிடம் இருக்கிறது? அது முழுக்க முழுக்க விவசாயிகளிடம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது, அந்த விவசாயிகளை பாதுகாக்காமல், அந்நிய முதலாளிகள் பணத்தை கொட்டுகிறார்கள் என்பதற்காக நமது விவசாயிகளை நிலமற்றவர்களாக மாற்றிவிட முடியுமா? தமிழ்நாட்டில் விவசாய நிலங்களை வரைமுறையின்றி கையகப்படுத்துவதும் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நல்ல மகசூல் கொடுக்கும் நஞ்சை சாகுபடி நிலங்களை வேறு பணிகளுக்கு எடுத்துக் கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நஞ்சை நிலத்தை உருவாக்குவது என்பது பல நூற்றாண்டுகால உழைப்பு. நஞ்சை நிலத்தை கட்டிட நிலங்களாக மாற்றி பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பி விட்டால், மீண்டும் அந்த நிலத்தை ஒருபோதும் விவசாயம் செய்யக்கூடிய சாகுபடி நிலமாக கொண்டு வர முடியாது. l
நில பயன்பாட்டுக் கொள்கை மற்றும் 2013 நில கையகப்படுத்தல் சட்டம் குறித்த உங்கள் கருத்து என்ன?
ஒன்றிய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் இதுவரைக்கும் நில பயன்பாட்டுக் கொள்கை என்று ஒன்று கிடையவே கிடையாது. எனவே, நிலத்தை இழக்கும் விவசாயிகளின் எதிர்காலம், வாழ்வாதாரம், வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும் வகையில் நில பயன்பாட்டுக் கொள்கை ஒன்றை கொண்டு வர வேண்டியது மிக மிக அவசியமாகிறது. 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்துவதற்கு மாற்றாக, ஏற்கனவே மாநில அரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை பின்பற்றி நிலத்தை கையகப்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் சிப்காட், பரந்தூர் விமான நிலையம், நான்கு வழிச் சாலை. 2013 ஆம் ஆண்டு சட்டம் நிலம் உரிமையாளர்களுக்கு சில பாதுகாப்பு, நிவாரணம், மறுகுடியமர்வு போன்றவற்றை உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால், அந்த அந்த மாநில அரசுகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பயன்படுத்திக்கொள்கிறார்கள். l
பெல்ட் ஏரியா பிரச்சனை மற்றும் தமிழ்நாட்டின் நில கணக்கெடுப்பு தேவை குறித்து விளக்குங்கள்.
நகரமயமாதல் காரணமாக சென்னையைச் சுற்றி உள்ள 32 கி.மீ சுற்றளவில் அரசு நிலம், நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், எதிர்கால தேவையைப் கருதியும் 1962 ஆம் ஆண்டில் ‘பெல்ட் ஏரியா’ என குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அன்றைக்கு சைதாப்பேட்டை மாவட்டமாக இருந்தது. இதில் பொன்னேரி, செங்கல்பட்டு, திருப்பெரும்புதூர், சைதாப்பேட்டை என நான்கு முக்கிய தாலுகாக்கள் இந்த பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்டது. நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு, திமுக அரசு தற்போது பெல்ட் ஏரியா என்ற அந்த வரைமுறையை நீக்கி விட்டது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் பட்டா வழங்கு வது என்று முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கும் ஒரு திட்டத்தையும் திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு பக்கம், தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டு காலமாக பட்டா கொடுத்து வருகிறார்கள். மறுபுறத்தில், பட்டா கேட்டு 75 ஆண்டு காலமாக போராட்டமும் நடத்து கொண்டே வருகிறது. 1949 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்று அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டின் நிலப் பிரச்சனை l
தமிழ்நாட்டின் நிலப் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன? பட்டா வழங்கல் பிரச்சனையின் தற்போதைய நிலை என்ன?
தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள், அரசுக்கு சொந்தமான பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் பல்லாண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவை அனைத்தும் ஆக்கிரமிப்பான நிலம் என்று காரணம் காட்டி, பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில், மக்கள் வீடு கட்டி வாழ்ந்து கொண்டி ருக்கக்கூடிய அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல காரணங்களை காட்டி வெளியேற்றும் நடவடிக்கை, திமுக அரசு மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், 1986 ஆம் ஆண்டு, நிலப்பரப்பு தொடர்பான தகவல்களை புதுப்பிக்கும் பதிவேடு (Updating Data Register) (UDR) பட்டா வழங்கப்பட்டது. இதை தோராயப் பட்டா என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பணிகள் நடைபெற்று 40 ஆண்டுகளை எட்டிய நிலை யிலும், தமிழ்நாடு முழுமைக்கும் இதுவரை நிலத்தை மறு கணக்கெடுப்பு மற்றும் அளவீடு செய்யப்படவில்லை. இதனால், தமிழ்நாடு முழுவதும் இன்றைய சூழ்நிலையில், நிலங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து எந்த தகவலும், தரவுகளும் புள்ளி விபரமும் துல்லியமாக கிடையாது. கேரளா போன்ற சிறிய மாநிலத்தில் அனைவருக்கும் சொந்த வீடு என்ற ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்கிய இடது ஜனநயாக முன்ணணி அரசாங்கம், வேகமாக நிறைவேற்றி வருகிறது. இன்னும் ஓராண்டிற்குள் 100 சதவீதம் அனைவருக்கும் சொந்த வீடு என்கிற கனவை முழுமையாக நிறைவேற்றி சொந்தமாக வீடு இல்லாத வர்கள் ஒருவர்கூட இல்லை என்கிற நிலையை எட்டிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கேட்பது வீடுகூட அல்ல. அனைவருக்கும் சொந்தமாக ஒரு வீட்டுமனை என்பதுதான் பிரதான கோரிக்கையாகும். கிட்டத்தட்ட 70 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக தரிசு நிலம் உள்ள தமிழ்நாட்டில் ஒருவருக்கு 3 செண்ட் நிலம் தருவது என்பதும் முடியாதது அல்ல. இந்த திட்டம் சாத்தியமானதே ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் 2025 ஜூன் மாதம் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10 நாட்கள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நடைபயணம், இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இந்த பிரச்சாரம் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ‘தீக்கதிருக்கு’ அளித்த
சிறப்பு நேர்காணல்.