articles

img

தம்முயிர் போல்... - மா.முத்துச்சாமி

தம்முயிர் போல்...

சீரியல் பல்புகள் தெருவெங்கும் கண்ணடிக்கின்றன. வண்ண வண்ண நிறங்களில் விளக்குகள் ஜொலிக்கின்றன. மரங்களிலும் வீட்டின் மாடிகளிலும் கூம்பு வடிவுக் குழாய்கள். அதிலிருந்து காதைப் பிளக்கும் சத்தத்துடன் பாடல் ஒலிக்கின்றது.

தெருக்கள் சுத்தமாக இருக்கின்றன. வீட்டின் முன் வண்ணக் கோலங்கள் வரவேற்கின்றன. கோயில் முன்பும் வீதிகளில் பல இடங்களிலும் பந்தல்கள் போட்டு வேப்பிலை தோரணங்கள் வெளியூர் உறவினர்களை வரவேற்கின்றன. மூன்று நாட்கள் சாமி கும்பிடு. சாமி சாட்டிய உடனே முளைப்பாரி போட்டு அதை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள் இளம்பெண்கள். மாவிளக்கு எப்படி எல்லாரையும் கவரும்படி ஜோடிப்பது என்றும் யோசிக்கிறார்கள். தீச்சட்டி எடுப்பதற்கு சிறு சிறு துண்டு விறகுகள் சேகரிப்பது பற்றியும் மக்களிடம் பேச்சு அடிபடுகிறது. இளவட்டப் பையன்களும் பெண்களும் உரியடித்து பரிசை வாங்குவது எப்படி என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தாகிவிட்டது. புதுத்துணிகள், பொங்கல் வைக்க வெண்கல புதுப் பானை மற்றும் வீட்டு சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி தயார் நிலையில் உள்ளன. உறவினர்களுக்கு கறி விருந்து இல்லாமலா சாமி கும்பிடு! விருந்தாளிகள் அதிகமாக வரும் வீடுகளில் ஆடுகளும் வாங்கி கட்டியாச்சு. நேர்த்திக்கடனுக்கு கிடா வெட்டுபவர்கள் ஆடு வாங்கி விட்டார்கள். “ஏப்பா! நம்ம வீட்டுல கட்டி இருக்கிற சின்ன ஆடு வாங்கிட்டு வந்த நாளிலிருந்து கத்திக்கிட்டே இருக்குது.அதுஏப்பா அப்பிடி” என்று அந்த ஐந்து வயது பஞ்சவர்ணம் கேட்டதற்கு “அதுக்கு நம்ம வீடு புதுசுதானே பாப்பா. அதனோட அம்மாவ விட்டுட்டு வேற வந்திருக்குது .இப்ப உன்னைக் கொண்டு போய் தெரியாத ஒரு வீட்டில விட்டுட்டா என்ன செய்வெ.அழுகுவ இல்லையா .எங்க அம்மா கிட்ட போகணும். என்னெக் கொண்டு போய் விடுங்க. என்னெய கொண்டு போய் விடுங்கன்னு கத்துவே இல்லையா. அது போல தான் இந்த ஆடு. அதுக்கும் உன்னப் போல வாய் இருந்தா சொல்லும். இப்போ கத்துது அவ்வளவு தான்” என்றார் அந்த குட்டிப் பாப்பா பஞ்சவர்ணத்தின் அப்பா பெரியசாமி. “சரிப்பா. அந்த ஆடு எது குடுத்தாலும் திங்க மாட்டேங்குதே ஏ.அகத்திக் கீரையானாலும் சரி, அருகம்புல்லானாலும் சரி மோந்து கூட பாக்க மாட்டேன்கிது ஏப்பா. தீனிய காலில உதைத்து உதறி உதறி தள்ளி விட்றுதேப்பா. குடிக்கிறதுக்கு வைக்கிற தண்ணியெக் கூட மூஞ்சில முட்டி கவுத்துட்றுது. இதையெல்லாம் பாத்தா என்னமோ நம்ம வீடு பிடிக்கலை போல தெரியுதுப்பா. கத்திக்கிட்டே கெடக்குது எப்ப பாத்தாலும். அது என்ன உண்ணாவிரதம் இருந்தாலும் சரி, என்ன போராட்டம் பண்ணினாலும் சரி. நமக்கு என்ன கவலை. அது பசி எடுத்தா தானா திங்கும் பாப்பா. பாரேன் என்று பெரியசாமி கூறியதை கேட்டதும் ஆடு பெரியசாமியையே பார்த்துக் கொண்டே இருந்தது. “அப்பா, அப்பா பாருங்க அந்த ஆட.... உங்களையே மொறைச்சு, மொறைச்சு பாக்குது பாரேன்” என்றாள் குட்டிப் பாப்பா. “அதுக்கு நாம பேசறது தெரியாது பாப்பா. சரி, சரி நீ போய் வெளில வெளையாடு” என்றான் பெரியசாமி. அந்த ஆட்டுக்குட்டி கத்திக் கத்தி வீதியில போறவங்க வர்றவங்க எல்லாரையும் நம்ம வீட்டையே திரும்பி பாக்க வெச்சுருதப்பா. “இவள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது” என்று மனதிற்குள் முணு முணுத்தான் பெரியசாமி. பெரியசாமி வீட்டுக்கு விருந்தாளிகள்  இருபது பேர் முதல் நாளே வந்து விட்டார்கள். வந்திருந்த விருந்தாளிகளுடன் பெரியசாமி மற்றும் அவனுடைய மனைவி அனைவரும் தீச்சட்டி எடுத்து வருவதை வேடிக்கை பார்ப்பதற்காக கோயில் பக்கம் சென்று விட்டனர். பஞ்சவர்ணம் மட்டும் “கோயில் பக்கம் நான் இன்னைக்கு வரல. வெளையாட்டு நடக்கிற அன்னைக்கு வந்து வேடிக்கை பாக்கிறேன்” என்றாள். அதோ அந்த ஆட்டுக்குட்டி வேற தனியா இருக்குது. நான் இங்கேயே இருக்கிறேம்பா. பாவம் அது” என்றாள். இரண்டு நாட்களாக கத்திக் கொண்டே பட்டினி கிடந்த ஆட்டைப் பார்த்தாள் அந்த குட்டிப் பாப்பா.அது ம்மே,ம்மே,ம்மே என்று தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தது. “ம்மே ம்மே என்றால் அம்மா என்று தானே அர்த்தம். அம்மா கிட்ட கொண்டு போய் விடச் சொல்லி கத்துது. பாவம்! இந்த ஆட்டுக் குட்டியை அம்மாகிட்டேயிருந்து பிரிச்சதால தா அது சாப்பிடாம தண்ணி குடிக்காம இருக்குதுன்னு” அப்பா சொன்னாரே. அந்த ஆடு ஏதோ ஒரு ஏக்கத்தோடு பஞ்சவர்ணத்தையே பார்த்தது. பஞ்சவர்ணம் அந்த ஆட்டுக்குட்டியின் கண்களில் இருந்து வடியும் கண்ணீரையும் அதன் ஏக்கத்தையும் புரிந்து கொண்டாள். இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள். பஞ்சவர்ணம் ஆடையும் ஆடு பஞ்சவர்ணத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். நான் இருக்கிறேன்.நீ ஒன்றும் பயப்படாதே ஆடே என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு கட்டிருந்த கயிற்றை கழற்றி விட்டாள் பஞ்சவர்ணம். உடனே காலை தூக்கி பஞ்சவர்ணத்தின் தலையை தடவி விட்டு பாய்ந்து ஓடிவிட்டது அந்த ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று....