ஒன்றிய பாஜக அரசாங்கம் 2024 தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. அந்த பட்ஜெட்டில் 10 வருட பாஜக ஆட்சியில் நாடு பல துறைகளில் முன்னேறி இருப்பதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டிருப்பதாகவெல்லாம் அளந்து விட்டிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் மேல் பேசும்போது, தேசிய கல்விக் கொள்கை 2020 நாட்டின் கல்வியில் பல முக்கியமான மாற்றங்களை செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் அதனை பொய்யென நிரூ பித்துள்ளன.
நீண்ட காலமாக இந்தியாவின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் 6 சதவீதம் அளவீட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென 1960 கோத்தாரி கமிஷன் உள்ளிட்டு பலரும் பரிந்துரை செய்தும் கோரிக்கை விடுத்துமுள்ளனர். பாஜக கூட 2019 தேர்தல் அறிக்கை யிலும், தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்க ளில் ஒன்றாகவும் கல்விக்கு 6சதவீதத்தை வலியுறுத்தி யதை, தற்போது அதே அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் புறக்கணித்திருக்கிறது.
பள்ளி கல்விக்கான நிதி
பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 2023-ஐ விட சிறிதளவு கூடுதலாக (1சதவீதம்) ஒதுக்கியிருக்கிறது. ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை, பண வீக்கத்தை கணக்கிலெடுத்தோமானால் உண்மையில் 5 சதவீதம் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று விளைவினால் விளிம்பு நிலை சமூகத்தில் வாழக்கூடியவர்களின் கற்றல் நிலை, தொடர் கல்வி இடை நிறுத்தம் என வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. அந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கான சிறப்பு முன்னேற்றத் திட்டங்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இல்லை.
உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு வருடமும் பாஜக அரசாங்கம் வெட்டியே வந்திருக்கிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் அதனையே கையாண்டதோடு கடந்த 2023 ஆம் ஆண்டை விட 17சதவீதம் கிட்டத்தட்ட 9,600 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கியிருக்கிறது. பொதுக் கல்வியை பொறுத்தவரையில் 20 சதவீத அளவில் நிதிவெட்டும், தொழிற்கல்விக்கான ஒதுக்கீட்டில் 22 சதவீத அளவில் நிதி குறைப்பையும் பாஜக அரசாங் கம் செய்திருக்கிறது.
முக்கியமாக பல்கலைக்கழக மானிய குழுவிற்கு (UGC) கடந்த ஆண்டு ரூ.6409 கோடி ஒதுக்கியது. இந்தாண்டு வெறும் ரூ.2,500 கோடி ரூபாயென 60 சதவீத நிதியினை வெட்டிச் சாய்த்திருக்கிறது மோடி அரசு. நாட்டின் உயர்க்கல்வித்துறையின் மீதான இந்த தாக்குதல் IITs, IIMs போன்ற கல்வி நிறுவனங்க ளுக்கான நிதி ஒதுக்கீட்டில் குறைவாகவே இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. இதனால் தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவதில் பெரும் சிக்கல் எழுந்திருக்கிறது.
ஜம்மு- காஷ்மீர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்த பட்ஜெட் புறக்கணித்திருக்கிறது. மிக முக்கியமாக நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கென புதிதாக எவ்வித நிதியையும் இடைக்கால பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் விடுவிக்கவில்லை. கல்வியே நாட்டின் தூண் என பாஜக அரசாங்கம் பேசிவரும் நிலையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறைகள் சந்தித்துவரும் சவால்களையும், பிரச்சனைகளையும் பட்ஜெட் கணக்கிலெடுக்கவில்லை.
பணவீக்கத்திற்கு ஏற்ப ஒதுக்கீடுகள் இல்லை
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமான அளவில் அதலபாதாளத்தில் தொங்கிக் கொண்டி ருக்கிறது. பணவீக்கம் நிலைகளையெல்லாம் கணக்கில் கொண்டால், உண்மையில் 5-7 சத வீதத்திற்கும் உள்ளாகவே பொருளாதார வளர்ச்சி யென்பது இருக்கும். சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதலான அளவில் நிதி ஒதுக்கீடு செய்தாலே இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். அதன் மூலமே இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 12 சதவீத அளவில் உயரும்.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறை, கல்வியறிவு மற்றும் உயர்க்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் ஏறத்தாழ ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்திய நாட்டின் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்ப திலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறைவான சம்ப ளத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக் காண்டு அதிகரித்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கு கல்வியை வழங்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளதையே இது காட்டுகிறது.
புறக்கணிக்கப்படும் தொழிற்கல்வி
உலகளவில் கல்விக்கென செலவு செய்வதே பொருளாதார, சமூக முன்னேற்றங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதிக மான இளைஞர்களை கொண்ட நாடு என பாஜக அரசு மார்தட்டிக் கொண்டு, அதற்கான மனித வள மேம்பாட்டு நிதியை ஒதுக்காமல் இருந்து வருகிறது. ஒன்றிய அரசாங்கம் தொடர்ச்சியாக மேல்தட்டு பிரிவினர் பயிலும் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவ னங்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி அதற்காக அதிகமான நிதியினையும் செலவழித்து வருகிறது. ஆனால் நாட்டில் பெரும்பான்மையானோர் பயின்று வரும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கான நிதியில் ரூ.25 ஆயிரம் கோடி அளவில் குறைவாக ஒதுக்கியிருக்கிறது.
தொழிற்கல்வியே நாட்டில் அதிகமான அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பங்கு செலுத்துகிறது. ஆனால் அதற்கான நிதி அளவினை வெட்டிவிட்டு மேல்தட்டு பிரிவினர் பயிலும் கல்வி நிறு வனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மேலும், தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், இந்திய தொழிற்கல்வி ஆராய்ச்சி துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினையும் கடுமையாகக் குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடுகள் பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறைகளுக்கான ஒதுக்கீடு களில் பாரபட்சம் காட்டி இருக்கிறது. நாட்டின் பொருளா தார முன்னேற்றத்தில் முக்கியப் பங்களிப்பாக இருந்துவரும் இளைஞர்களுக்கான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்