articles

img

கண்ணீரில் மிதக்கும் கதைகள்

பாலத்தீனத்தில்
நிலாவின்
உடம்பிலிருந்து
பிணவாடை     கசிகிறது இரவுகளில்;

குழந்தைகள் கேட்ட கதைகளில்
பாத்திரங்களாய் வந்தவரும்
வந்தவையும் இறந்துவிட்டதால்
கதைகள் கண்ணீரில்
மிதக்கின்றன

எந்தப் பாட்டின் எலும்புகளும்
மிச்சமாகவில்லை.
அம்மாவின் தாலாட்டுகளில்
துப்பாக்கி துளைத்த
ஆயிரம் காயங்கள்

குழந்தைகள் தொண்டைகளில்
கோடைக் கொப்புளங்கள்
அப்பாவின் சிரிப்பால்
அலங்கரிக்கப்பட்ட நாள்கள்     நிகழ்வுகள்
அடித்துச் செல்லப்பட்டன
 

குருதிவெள்ளத்தில்
கொல்லப்பட்ட அவர்முகத்தைத்
தொட்டுத்தொட்டு
அண்ணன் அழுகிறான்;பார்த்து
அக்கா அழுகிறாள்
அதைப்பார்த்துப்பார்த்து
ஊன்றுகோல்மேல் தன்தாடையைச்
சாய்த்துப் பாட்டி அழுகிறாள்.
 

பாலத்தீனத்தில்
உடல் நடுங்கியபடி
இரவுகள்
அஞ்சிஅஞ்சி     ஊருக்குள்நுழைகின்றன.

வெப்பத்தால் வெடித்த
பகல்
இறந்தவர்கள் உடம்புமேல்
சவத்துணியாகப் படிந்து
மூடுகிறது.

திடுக்கிட்டு நிற்கும்
வரலாற்றின் பக்கங்களிலிருந்து
விம்மலும் வேதனை முனகலும்     பெருகிவர,
 

இட்லர் முசோலினி ஜார்
மிச்சம் வைத்துப்போன
மதுக்கோப்பைகளோடு
இசுரேலியப் படைவீரர்களின்
வெற்றிக்கூத்து
அரங்கேறுகிறது
 

பாலத்தீனக் கல்லறைக் காட்டில்.
காலம்
இன்னும் நான் ஏன்
காலமாகாமல் இருக்கிறேன்என்று
பிசையும் அசைவுகளுக்குள்பிறந்த
வினாவைக்
கேட்டுக்கொண்டேஇருக்கிறது.