articles

img

11 கோடி கூலித் தொழிலாளரின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு - ஏ.லாசர்

ஒன்றிய பாஜக அரசு சமீபத்தில் 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடிப் பேர் மட்டுமே நூறு நாள் வேலைக்கு செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள்; குறைந்த நாட்களோ,  அதிக நாட்களோ - இவர்கள் மட்டுமே அந்தப் பணி யில் ஈடுபட்டுள்ளனர்; மீதமுள்ள சுமார் 11 கோடி பேர் கடந்த மூன்று வருட காலத்தில் நூறுநாள் வேலைக்கு போகவில்லை; எனவே, இவர்கள் நூறுநாள் வேலைக் கான தகுதியில்லாதவர்கள்; அவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நிறுத்துவது என்றும், மீதமுள்ள 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்றும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மொத்த தொழிலாளிகளில் 11 கோடிப் பேரை வெளியேற்றுவதற்கான ஒரு புது வழியை பாஜக அரசு கண்டுபிடித்துள்ளது. 

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் வந்த காலத்திலிருந்து இதை சிதைப்பதற்கும், இதற்கென ஒதுக்கப்படும் நிதியை தடுக்க வேண்டும் என்றும் ஒரு கூட்டம் தொடர்ந்து சதி செய்து வரு கிறது. இருப்பினும், பெரும்பகுதியான மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட இச்சட்டத்தை அவ்வளவு எளிதாக ரத்து செய்துவிட முடியாது; தடுத்து நிறுத்திட வும் முடியாது என்ற நிலை நிலவி வருகிறது.

 2014 இல் மோடியின் தலைமையில் பாஜகவின் ஆட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், பாஜக என்பது பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகளின் நலனைப் பாதுகாக்கக் கூடிய ஒரு கட்சி. கூலித் தொழிலாளிக ளுக்காக எந்தக் காலத்திலும் குரல் கொடுத்தது இல்லை. அப்படிப்பட்ட கொள்கையும் பாஜகவுக்கு கிடையாது.  முதலில், இதற்காக ஒதுக்கப்படுகிற நிதியைக் குறைப்பதற்கு முயற்சி செய்தார்கள்.

பின்பு, இந்த திட்டத்தினால் எந்தப் பொருளாதாரப் பலனும் தேசத்திற்கு இல்லை என்றார்கள். பெரும் பணம்  விரயமாகிறது என்றார்கள். உற்பத்திப் பெருக்கமோ, மூலதன பெருக்கமோ இதன் மூலமாக ஏற்படப் போவதில்லை என்றார்கள். தேச வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் உதவாது என்றார்கள். இதில் அதிகபட்ச மான முறைகேடுகள் நடக்கிறது என்றார்கள். இது, வேலை செய்யாமலேயே கூலியை வாங்கும் ஒரு சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்குகிறது என்றார் கள். மொத்தத்தில், அரசுப் பணம் பெருந்தொகை விரயமாக்கப்படுகிறது என்று பஜனை பாடினார்கள். இவர்களுக்கு ஆதரவாக முதலாளித்துவ பத்திரிகை கள், ஊடகங்கள் இதுபோன்ற கருத்துகளை பரப்பின. 

திட்டத்தை ஒழிக்க எத்தனை முயற்சிகள்
பல முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் இதுகுறித்து கட்டுரைகளைக் கூட எழுதினார்கள். இருப்பினும், பெருந்திரளான உழைப்பாளிகள் வாழ்க்கை இத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால், அவ்வளவு எளிதில் இதை இவர்களால் ரத்து செய்ய முடியவில்லை. பின்பு, இதை சிதைப்பதற்கு புதிய புதிய முறைகளை கண்டுபிடித்தார்கள்.

இத்திட்டத்தை நவீனப்படுத்தப் போகிறோம், டிஜிட்டல் மயமாக்கு கிறோம், இதில் உள்ள முறைகேடுகளை களைவ தற்காக, ஆள்மாறாட்டம் செய்து பணக் கையாடலைத் தடுப்பதற்காக, அதில் பணிபுரியக் கூடிய ஒவ்வொரு தொழிலாளியையும் இரண்டு முறை, மூன்று முறை வேலைத்தலங்களிலேயே புகைப்படம் எடுத்து அதை ஆன்-லைன் மூலமாக பதிவு செய்து, அதில் ஆள்மாறாட்டம் செய்வதையும், அதன் மூல மாக முறைகேடுகள் செய்வதையும் தடுக்கப் போகி றோம் என்றார்கள்.  தொழிலாளிகள் எந்த இடத்தில் வேலை செய்தாலும் அந்த இடங்களில் ஆன்-லைன் மூலமாக கணினிமயப்படுத்துகிற ஏற்பாடுகள் இல்லா மல் இருந்தாலும், அவ்விடங்களுக்கும் கணினிகளின் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்யப் போகிறோம் என்று கூறினார்கள்.

இதையும் முழுமையாக செய்ய முடியவில்லை. அந்தளவிற்கு கிராமப்புறங்கள் வரை நவீனப்படுத்துகிற ஏற்பாடுகள் நம்மிடம் இல்லை. அது தெரிந்திருந்தும், இதைச் செய்வோம் என்று கூறினார்கள். ஒவ்வொரு தொழிலாளியும் தங்களுடைய வேலை அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றார்கள். ஆதார் இணைக்கப்படாத வேலை அட்டை (Job Card) செல்லுபடியாகாது.; அவர்களுக்கு வேலை கொடுக்கப்பட மாட்டாது என்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்கள். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி புரியக் கூடியவர்கள் பெரும் பகுதியானவர்கள், கூடுதல் படிப்பறிவு இல்லாத சாதாரண தொழிலாளிகள். அந்தப் பணிகளே தொழில்நுட்பத்தோடு இணைந்ததல்ல.

காடு மேடுகளை வெட்டுவதற்கும், வாய்க்கால்களை சீரமைப்பதற்கும், மரம், செடி கொடிகளை வெட்டு வதற்கும், கடப்பாரை, மண்வெட்டி, கூடை போன்ற  சாதாரண கருவிகளே போதுமானது. இவைகளை கொண்டு வேலை செய்வதற்கு எந்தத் தொழிலா ளியும் டிஜிட்டல்மயமான தொழில்நுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதுபோன்ற புதுப்புது விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்ள முடியாத கடினமான நடை முறைகளைச் சொல்லி பயமுறுத்துவதோடு நமக்கு இனிமேல் நூறுநாள் வேலையே கிடைக்க வாய்ப்பி ருக்காது என்ற நிலைக்கு அந்த மக்களை தள்ளுகின்ற காரியத்தை பாஜக மோடி அரசு திட்டமிட்டு செய்தது. இதையும் மீறித்தான் கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான கிராமப்புறத்து உழைப்பாளிகள் நூறுநாள் வேலையின் மூலமாக உயிர்ப் பிழைத்துக் கிடந்தார்கள்.

அட்டை கிடைத்தது; வேலை கிடைத்ததா?

25.35 கோடி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் துவக்கத்தி லேயே வேலை அட்டை கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை ஒதுக்கீடோ அல்லது 25 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளிகளுக்கு நூறுநாள் செய்வதற்கான நிதி ஒதுக்கீடோ செய்யப்படவில்லை.  

14.35 கோடி தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை, நிதி ஒதுக்கீடு, வேலை அட்டை கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 10.80 கோடி (சுமார் 11 கோடி) தொழிலாளி களுக்கு வேலை அட்டை மட்டும் கையில் இருந்தது; வேலைகள் தரப்படவில்லை. அதனால்தான் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், வேலை அட்டை உள்ள அனைத்துத் தொழிலாளிகளுக்கும் வேலையை உறுதிப்படுத்த வேண்டும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வந்தது. அத்தோடு, வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறது.

ஒன்றிய அரசின் திடீர் உத்தரவு
25 கோடி தொழிலாளிகளுக்கு வேலை என்பது ஒரு சாதாரணமான விசயமல்ல. கணிசமான பகுதி மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டது. இருப்பினும், இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த காலத்தில், 2014 இல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு வேலை தரப்படாத, ஆனால், வேலை அட்டை வைத்திருந்த 11 கோடி தொழிலாளர்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. அதை அப்படியே நிறுத்திவிட்டு, வேலை கொடுக்கப்பட்டு வந்த 14.35 கோடி தொழிலாளர்களை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு கண்டுபிடித்த புதிய வழி முறைதான் ‘வேலை அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும்’ என்ற முடிவு. கடந்தாண்டு திடீ ரென்று உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்தது.

மாநில அரசுகள் ஆதார் அடிப்படையிலான ஊதிய முறை தரவுகளை 2023 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும் என்று உத்தரவிட்ட சூழலில், இதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத தால், அவை வேக வேகமாக நாடு முழுவதும் நிறை வேற்ற முயற்சி செய்தன. சில மாநில அரசுகள், கூடுதல் முயற்சி செய்து, அதிகபட்சமான தொழிலாளி களுக்கு ஆதார் பதிவேற்றம் செய்தார்கள். சில இடங்க ளில் கவனக்குறைவு இருந்தது. இருப்பினும், டிசம்பர்  31 வரை 12.7 சதவீதம் பேர் ஆதார் அடிப்படையிலான பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதற்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது; அதை அப்படியே நிறுத்திவிட வேண்டுமென்று மோடி அரசு உத்தரவு பிறப்பித்தது. அப்படி நிறுத்தப்பட்ட வேலை அட்டை களின் எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சம். இவர்க ளுக்கு இனிமேல் அரசால் வேலை வழங்கப்பட மாட்டாது. 

முற்றிலும் தொழிலாளர் விரோதம்
இது திட்டமிடப்பட்ட, தொழிலாளிகளுக்கு விரோத மான நடவடிக்கையே. 14 கோடிப் பேருக்கு மட்டும் கிடைத்து வந்த சூழ்நிலையில், இப்போது 1.80 கோடி  பேர் ஆதார் பதிவேற்றம் இல்லாததினால், வேலை  தரப்பட மாட்டாது என்றால், ஏற்கெனவே வேலை கிடைக்காத 11 கோடிப் பேருடன் இன்னும் சுமார் 2 கோடி பேருக்கு வேலை கிடைக்காத அபாயத்தை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது.

இது அப்பட்டமான உழைப்பாளிகளுக்கு விரோதமான நடவடிக்கை. பெரும்பகுதியான மக்களை வாழ்விப்பதற்கான திட்டங்களை தீட்டுவதும், அதை முறையாக அமல் படுத்துவதும் அதன் மூலமாக மக்களுக்கு பலன் கிடைக்கச் செய்ய வைப்பதுமே ஒரு மக்கள் அரசாக இருக்க முடியும். கூலித் தொழிலாளிகளுக்கென இருந்து வந்த ஒரு சட்டத்தையும் முற்றாக அழிப்பது என்கிற இந்த கொடூரமான நடவடிக்கை, பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையினால்தான்.  

இன்றைக்கு 11 கோடிப் பேரின் வாழ்வை பலப் படுத்த வேண்டிய அரசு, அவர்களைப் பாதாளத்தில் தள்ளுவதற்கான காரியத்தை செய்திருக்கிறது. இதற்கு எதிராக- இருக்கும் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக- நாடு முழுவதும் இருக்கும் மக்களை களத்தில் இறக்கி டும் பணிகளை ஜனநாயக இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் வலுவாக செய்வதன் மூலம்தான் மோடியின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முடியும். 

கட்டுரையாளர் : துணைத் தலைவர், 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்