articles

img

பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவுக! - பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவுக! இரு நாடுகளின் கிரிக்கெட் மரபை பாதுகாத்திடுக!

இன்றைய கிரிக்கெட் விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டு, கூட்டத்தை ஈர்க்கவும் வீரர்களை ஊக்கப்படுத்தவும் சியர்லீடர்கள் தேவைப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சூதாட்டப் புகார்களும் செய்திகளாக வெளிவருகின்றன. ஒரு காலத்தில் “பண்பாளர்களின் விளையாட்டு” என்று அறியப்பட்ட கிரிக்கெட், தனது புகழைக் கிட்டத்தட்ட இழந்து வருகிறது.  இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கோப்பைப் பெயரை மாற்றியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.  

பட்டோடி கோப்பையின் வரலாற்று முக்கியத்துவம்  

இங்கிலாந்தில் இந்த டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பைக்காகவும், இந்தியாவில் அந்தோணி டி மெல்லோ கோப்பைக்காகவும் விளையாடப்பட்டு வந்தது.  2007 முதல், இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பயணங்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் விளையாடப்பட்டு வந்தன. இஃப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவரது மகன் மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் இவ்வாறு பெயரிடப்பட்டிருந்தது.

 ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை: வரலாற்றை அழிக்கும் முயற்சி  

பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து, பட்டோடி கோப்பையை விலக்கிவிட்டு, 2025 ஜூனில் தொடங்கியுள்ள டெஸ்ட் தொடருக்கான கோப்பையின் பெயரை “ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை” என்று மாற்றியுள்ளனர்.  திருவாளர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ, இசிபி ஆகிய அமைப்புகளுக்கு சச்சின் டெண்டுல்கர் விடுத்த வேண்டுகோள்களுக்குப் பிறகு, தொடரை வெல்லும் அணியின் தலைவருக்குக் கோப்பையுடன், “சிறந்த ஆட்டத்திற்கான பட்டோடி பதக்கம்” வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவமதித்ததற்கான ஒரு ஆறுதல் ஏற்பாடாகவே தெரிகிறது.

 பன்மைத்துவ இந்தியாவின் சின்னம்  

கோப்பைக்குப் பெயர் சூட்டுவதென்பது தனி ஒருவருக்கான அல்லது குடும்பத்திற் கான கௌரவம் அல்ல. ஒரு மரபைக் கொண்டாடுகிற செயல் அது.  பட்டோடி கோப்பை உண்மையான இந்தியாவை, பன்முகப் பண்பாட்டு இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளிலும் போற்றப்படும் கிரிக்கெட் மரபையும், அரசுறவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  மூத்த பட்டோடி இந்தியாவுக்காகவும், இங்கிலாந்துக்காகவும் விளையாடியவர். இளைய பட்டோடி இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.

 இந்தியாவின் தத்துவத்தை விளக்கும் பெயர்கள்  

இஃப்திகார் அலி கான் பட்டோடி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியவை வெறும் பெயர்கள் மட்டுமல்ல. இவ்விரண்டு பெயர்களும் இந்தியா எனப்படுவதன் கருத்தியலை விளக்குகின்றன. இந்தியா வெறுமனே ஒரு புவியியல் பகுதியல்ல. பன்மைத்துவ சமூகத்தில்தான் தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும் என்பதற்கு ஒரு சான்றாக நிற்பது இந்தியா.  பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் இந்தியா தனித்துவமானது.

 காரணமற்ற பெயர் மாற்றம்  

பட்டோடி கோப்பையை ஏற்படுத்தியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்தான். இப்போது அதே வாரியம் தொடருக்கு “ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை” என பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இதில் மற்றவர்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்ற வாதத்தை ஏற்கவியலாது.  பட்டோடி கோப்பையை நீக்குவதற்கு என்ன காரணம்? எந்தக் காரணமும் சொல்லாமல், மிகச் சாதாரணமாக, இசிபி நிர்வாகம் பட்டோடி குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, போட்டித் தொடருக்கு மறுபெயரிடும் முடிவைத் தெரிவிக்கிறது.

 ஐசிசி தலைவரின் பொறுப்பு  

கோப்பையின் பெயர் மாற்றம் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) தலைவரான ஜெய் ஷாவிடமிருந்து பொதுமக்களுக்கான எந்த அறிக்கையும் வரவில்லை. ஐசிசி தலைவராக அவர், எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் மறு பெயரிட வேண்டிய அவசியம் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.  ஐசிசி தலைவரான ஜெய் ஷா இந்திய மக்களுக்கும் கிரிக்கெட்டை நேசிக்கும் சமூகத்திற்கும் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.

 வரலாற்றை அழிக்காமல் புதியோரை கௌரவிக்க வேண்டும்  

சாதனை வீரர்களை கௌரவிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமேயன்றி வரலாற்றை அழிக்கக் கூடாது. மறுபெயரிடுவது என்பது வரலாற்றை அழிக்கிற வேலைதான்.  சச்சின் டெண்டுல்கர், ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களின் பங்களிப்பு வேறொரு பொருத்தமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். கோப்பையின் பெயரை மாற்றுவது அவர்களின் பங்களிப்புக்கு நீதி செய்யவில்லை.

 குழந்தைகளுக்கான பாடம்

 பல்வேறு பண்பாடுகள் கொண்ட ஒரு தேசத்தில் அனைவரும் ஒன்றெனும் உணர்வு எப்படி அடையப்பட்டது என்பதை நமது குழந்தைகள் அறிய வேண்டும். பன்முகத் தன்மையை அங்கீகரிப்பது ஒற்றுமையைப் பாதுகாப்பதாகும். பட்டோடி கோப்பையைத் தக்கவைப்பது இந்தியப் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதாகும்.

 நமது வேண்டுகோள்

 பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN), கோப்பையின் பெயர் மாற்றத்தை இந்தியாவின் பன்முகப் பண்பாட்டுத் தன்மையை அழிக்கும் ஒரு சதித் திட்டத்தின் பகுதியாகவே கருதுகிறது. கிரிக்கெட் வீரர்களும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் இந்தக் கோப்பையின் பெயர் மாற்றத்தைத் திரும்பப் பெறும்படி இசிபி-யை வலியுறுத்த வேண்டும்.  பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவி, இரு நாடுகளின் கிரிக்கெட் மரபையும் பாதுகாத்திடுமாறு இசிபி, பிசிசிஐ இரு நிர்வாகங்களுக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுக்கிறது.  இஃப்திகார் அலி கான் பட்டோடியும், மன்சூர் அலி கான் பட்டோடியும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிப்பவர்கள். இசிபி அந்த உணர்வைக் கொன்றுவிடக்கூடாது.