articles

img

சட்டவிரோதத்திற்கு துணை போகும் ஜனாதிபதியின் கேள்விகளுக்கு செவி சாய்க்காதீர்! - கே. பாலகிருஷ்ணன்

சட்டவிரோதத்திற்கு துணை போகும் ஜனாதிபதியின் கேள்விகளுக்கு செவி சாய்க்காதீர்! 

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் மூன்றாண்டுகளுக்கு மேல் இழுத்தடித்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பினை வழங்கியது. சவுக்கடி தந்த தீர்ப்பு இத்தீர்ப்பில் ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட  வேண்டுமென்பதற்கான தெளிவான வழிகாட்டுதல் களை வழங்கியதுடன், சட்டமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்தது தவறானது; சட்ட விரோதமானது என அழுத்தமாக குறிப்பிடப்பட்டது. மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை

 எனவும் குறிப்பிட்டது. அரசியல் சாசனப் பிரிவு 200 மற்றும் 201ன் படி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஒரு காலவரையறையும் தீர்மானித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் கிடப்பில் போடப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கி சட்டமாக அறிவித்தது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களை ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்களை பயன்படுத்தி ஆட்டிப்படைக்கும் ஒன்றிய அரசுக்கு இத்தீர்ப்பு சவுக்கடியாக இருந்தது எனலாம்.  இவ்வழக்கினை தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த போதிலும் நாடு முழுவதிலும் உள்ள மாநில அரசுகளின் உரிமைகளுக்கு பாதுகாப்பு அரணாக தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.   ஆத்திரத்தின் உச்சத்தில் மோடி அரசு ஆனால், மாநில உரிமைகளை கபளீகரம் செய்யும் ஒன்றிய பாஜக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இத்தீர்ப்பினை எதிர்த்து குடியரசுத் துணைத் தலைவர் பகிரங்கமாகவே கண்டனம் முழங்கினார். பாஜக தலைவர்கள் கொந்தளித்து அறிக்கை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக இத்தீர்ப்பினை கொல்லைப்புற வழியாக நிர்மூலமாக்கும் நோக்கோடு குடியரசுத் தலைவர் மூலம் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரியுள்ளது ஒன்றிய அரசு.  தீர்ப்பை சீர்குலைக்கும முயற்சி அரசியல் சட்டப்பிரிவு 143ன் படி சில பிரச்சனைகளில் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் உரிமை குடியரசுத்தலைவருக்கு உண்டு. ஏற்கனவே  சில பிரச்சனைகளில் குடியரசுத் தலைவர்கள் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.  ஆனால், இந்தப் பிரச்சனையில் குடியரசுத் தலைவர் கேட்டுள்ள 12ஆவது கேள்வியே, ஆட்சி யாளர்களின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. “அதாவது உச்சநீதிமன்றத் தீர்ப்பில், அரசமைப்புச் சட்டம் தொடர்பான விளக்கம், அது தொடர்பான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என முடிவு செய்ய 5 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு பரிந்துரைக்க வேண்டாமா? எனக் கேட்டுள்ளார். இதன் மூலம் இப்போதாவது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கினை உட்படுத்திட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் நோக்கம். இந்த தீர்ப்பின் மீது முறைப்படி சீராய்வு (ரிவியூ) மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். ஆனால், இவ்வாறு தாக்கல் செய்தால்  வழக்கை விசாரித்த அதே நீதியரசர்களே அம்மனுவை விசாரிப்பார்கள். இதை புரிந்து கொண்ட ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரி யுள்ளது. இதன் மூலம் புதிய நீதிபதிகள் முன்னால் பிரச்சனையை கிள

ப்பி வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.  ஆனால் ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சம்பந்தமான விளக்கங்களைக் கேட்க முடியுமா என்பதே கேள்வி. ஏற்கெனவே 2ஜி வழக்கிலும், காவிரி தொடர்பான வழக்கிலும் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட போது உச்சநீதிமன்றம் இவற்றுக்கு விளக்கமளிக்க முடியாது என மறுத்துவிட்டது. மேலும் ஏற்கெனவே இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது விளக்கமளிக்க 143 வது பிரிவில் இடமில்லை எனக் கூறியதுடன், இப்பிரிவு மேல் முறையீட்டு தன்மை கொண்டதல்ல எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விபரங்கள் தெரியாத அறியாக் குழந்தைகள் அல்ல ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவர் அலுவலகமும் எனினும் ஒன்றிய அரசே இவ்வாறு செய்வதன் உள்நோக்கம் எத்தனை ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை. தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள குடியரசுத் தலைவர் பொறுப்பை பகடைக் காயாக பயன்படுத்தும் ஒன்றிய அரசின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும். குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்வி களுக்கும் மேற்கண்ட தீர்ப்பில் மிகத் தெளிவான வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கங்கள்  அளிக்கப் பட்டுள்ளன. இருப்பினும், இக்கேள்விகளையே எழுப்புவதன் நோக்கம் விளக்கம் பெற வேண்டும் என்பதல்ல; மாறாக, தீர்ப்பை சீர்குலைக்க வேண்டுமென்பதே! தெளிவான விளக்கங்கள்  தீர்ப்பிலேயே உள்ளன எழுப்பப்பட்டுள்ள பல கேள்விகள் ஆளுநர், குடியரசுத் தலைவர்  ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பானதாகும். இக்கேள்வி களுக்கு வரலாற்று ரீதியான விளக்கங்கள் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, அரசியல் சாசனப் பிரிவு 200ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்குவது, திருப்பி அனுப்புவது, குடியரசுத் தலைவருக்கு முன்மொழிவது ஆகிய மூன்று வழிகள் மட்டுமே உள்ளன. மேலும், மாநில சட்டமன்றங்கள் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அம்மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர ஆளுநருக்கு வேறுவழியில்லை என்பது உள்ளிட்ட பல விளக்கங்கள் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இக்கேள்விகளை திரும்பத் திரும்ப எழுப்பியுள்ளதன் உள்நோக்கம் அறிந்ததே. காலவரம்பு தீர்மானிக்க முடியும்! மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அதிகபட்சம் மூன்று மாத கால வரம்பு தீர்மானித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைக் கேள்வி எழுப்பி, இவ்வாறு கால வரம்பு தீர்மானிக்க முடியுமா என விளக்கம் கோரப்பட்டுள்ளது. நீதியரசர்கள்  தங்களது தீர்ப்பில் இதற்கு நீண்ட விளக்கங்கள் அளித்துள்ளனர். கால வரம்பு தீர்மானிக்கப்பட்டது நீதியரசர்களின் தனிப்பட்ட விருப்பம் அல்ல என்பதற்கு  ஆதாரமாக ஏற்கனவே இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகக் கடிதங்களை தங்களது தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர். மாநில அரசுகள் முன்மொழியும் மசோதாக்களை கால தாமதம் செய்யாமல் உடனடியாக ஒப்புதல் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 2016ஆம் ஆண்டு இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அலுவலக கடிதங்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. இக்கடிதங்களில் இப்பிரச்சனை நீண்ட காலமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 1992ம் ஆண்டு உள்துறை அமைச்சகம்  மசோதாக்களை கால தாமதம் செய்யக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் அளித்திருந்த போதும் அவை  செயல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இதனை தவிர்க்கும் பொருட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க அதிகபட்சம் மூன்று மாத காலம் அவகாசம் தீர்மானித்து உள்துறை அமைச்சகம் 2016ம்

ஆண்டு அலுவலக கடிதம் அனுப்பியுள்ளது. இதனடிப்படையிலேயே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு கால வரம்பு நிச்சயிக்கப்பட்ட விபரத்தினை நீதிபதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். சட்டவிரோதம் இல்லையா? ஆனாலும் கூட, கால வரம்பு தீர்மானித்துள்ளதை கேள்வியெழுப்பும் குடியரசுத் தலைவர் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து சட்ட மன்றங்களை முடக்கியது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் இல்லையா? ஆளுநரும் குடியரசுத் தலைவரும் எந்த அதிகாரமும் இல்லாமல் மசோதாக்களை முடக்கி வைத்தது அரசியல் சாசன பிரிவு 200 மற்றும் 201க்கு விரோதமான தில்லையா? இவ்வாறு செய்தது சட்டவிரோதமானது  என்ற உச்சநீதிமன்றத்தின் இடித்துரைக்கு எந்த விளக்கமும் சொல்லாமல், தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிப்பது கூட்டாட்சி முறையைத் தகர்த்துவிடும். உச்சநீதிமன்றம் மறுக்க வேண்டும்! குடியரசுத் தலைவரின் விளக்க கடிதத்தின் மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு குடியரசுத் தலைவர் விளக்கம் கோரும் அனைத்திற்கும் பதில் அளிக்க வேண்டுமென்ற கட்டாயம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. கடந்த காலங்களில் கேட்கப்பட்ட சில விளக்கங்களுக்கு பதில் அளிக்க மறுத்த நிகழ்வுகளும் உண்டு. அதிலும் நாடாளுமன்ற, சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனநாயக அமைப்பின் உரிமை களைப் பாதுகாக்கும் தீர்ப்பின் மீது கேட்கப்படும் விளக்கங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், அது எதிர்காலத்தில் எண்ணற்ற குழப்பங்களுக்கு வித்திடுவதாக அமைந்திடும்.  உச்சநீதிமன்றம் அளிக்கும் விளக்கங்கள் ஆலோசனை திறன் கொண்டவை - அதாவது நீதிமன்ற

 தீர்ப்புக்கு ஒப்பானதல்ல என்ற போதிலும் இப்பிரச்ச னையில் உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவரின் விளக்கங்களுக்கு பதில் அளிக்காமல் நிராகரித்திட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப்போக அல்லது சீர்குலைக்கும் எந்த முயற்சிக்கும் உச்சநீதிமன்றம் இடமளித்திடக் கூடாது.