articles

செயலில் காட்டு கோவி.பால.முருகு

உண்டு கொழுப்பவன் முதலாளி  

 உயிர்வாட உழைப்பவன்

தொழிலாளி-

இதைக் கண்டு மிருந்திடல் தீதாம்    

கண்ணி ருந்துமது பழுதாம்!

 அள்ளிக் கொடுத்தநீ அலைவதா?      

 ஆண்டியாய் நின்று திரிவதா?!-

இதைக் கிள்ளி எறிந்திட அறிந்திடு    

      கீழ்நிலை கண்டு  வருந்திடு!

மாற்றார் உயர்ந்திட வாழ்வதா?    

மண்டியிட்டே அங்குத் தாழ்வதா?-

பகை உற்றவர்க் கேநீ இருப்பதா?  

   ஓயாது செத்துப் பிழைப்பதா?!

 ஆதியும் அந்தமும் ஏழையாய்    

   ஆனது  உன்விதி என்பதா?-

அட நீதியும்  இதுவென கழிப்பதா?    

   நீள்நிலம் உன்னைப் பழிப்பதா?  

பாரியும் ஓரியும் வாழ்ந்தநம்  

  பாரினில் பஞ்சையாய் வாழ்கிறாய்-

இங்கே சேரியை மாடமாய் மாற்றிடு      

   செயலில் அதைநீ காட்டிடு!